கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பண்பாட்டு வீரன் பயிலஸ்

விக்கிமூலம் இலிருந்து



19. பண்பாட்டு வீரன் பயிலஸ்

வீரர்களைப் பார்த்த பின்னால், அவர்களைப் போலத் தானும் வரவேண்டும் என்ற லட்சிய வேகம் கொண்டு, வீரர்களாக ஆனவர்கள் எத்தனையோ பேர் வரலாற்றிலே உண்டு. அத்தகைய வரிசையில் தலையாய இடம்பெற்றவன் பயிலிஸ் (Phayllus) ஆவான்.

ஒலிம்பிக் பந்தயத்தில் போய் பயிலஸ் பங்கு பெறவில்லை. போட்டியிடவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் வெற்றி பெறாமலேயே, தன் நாட்டு மக்களிடையே மல்யுத்த வீரன் மிலோவை விட, பெரும் புகழ் பெற்றவனாக பயிலஸ் விளங்கினான் என்றால், அவனது சிறப்பாற்றலை என்னென்பது!

பயிலஸ் தாண்டும் ஆற்றல் மிக்க வீரன் ஆவான். அவன் வெகு விரைவாக ஓடிக்கடக்கும் விரைவோட்டக் காரனும் ஆவான். ஆனால், மற்ற நிகழ்ச்சியான மல்யுத்தம் செய்வதில் சுமாரான ஆற்றல் உள்ளவன். தட்டெறியும் போட்டியில் அதிக தூரம் எறிகின்ற ஆற்றலும் இல்லாதவன். ஐந்து நிகழ்ச்சிப் போட்டிகளில் வெற்றி பெறத்தக்க வல்லமை அவனுக்கு இல்லாவிட்டாலும், ஒரு சில உள்நாட்டுப் பந்தயங்களில் பெற்ற வெற்றியையும் அதனால் அவனுக்குக் கிடைத்த பாராட்டையும் ஆசையையும் வைத்துக் கொண்டு, கி.மு. 480ம் ஆண்டு, கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச் செல்ல விரும்பினான். ஆசை வேகத்தின், ஆவேசத்தில் புறப்பட்டும் விட்டான்.

நாம் முன் கதையில் கூறியபடி, ஒலிம்பிக் பந்தயம் நடப்பதற்கு முன், எல்லிஸ் என்னும் இடத்தில் ஒரு மாதத் தனிப் பயிற்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய கப்பலிலே பயிலஸ் பயணமானான். கிரேக்க நாட்டை பயிலஸ் அடைந்த பொழுது, ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்கின்ற காரியத்தை விட, வேறொரு முக்கியமான கடமை அவனுக்காகக் காத்திருந்தது போல, அவசரமாக அமைந்திருந்தது.

பாரசீக நாட்டின் கப்பல் படையானது, கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து, அதனை வென்று விடுகின்ற நிலைமையில போர் மூண்டிருந்த நேரம் அது. தான் எதற்காக வந்தோம் என்பதை பயிலஸ் மறந்தான். தாயகம் காக்கின்ற பெரும் பணியே அவன் தலையாய நோக்கமாக இருந்ததால், தான் வந்த சொந்த வேலையை மறந்தான்.

கிரேக்கக் கப்பல் படையுடன் தன் கப்பலையும் ஒன்றாக சேர்த்தான். மேற்குக் கிரேக்கப் பகுதியின் ஒரே பிரதிநிதியாக, கிரேக்கத்திற்காகப் பயிலஸ் போரிட்டான். இறுதியில், ஆட்டிப் படைத்த அச்சத்திற்கு ஆளாகி நின்ற கிரேக்கம், வெகுண்டு வந்த பகைவர்களை விரட்டியடித்து வெற்றி பெற்றது. கப்பல் படையுடன் வந்த பாரசீகத்தார், கதிகலங்கி கடலிலே கலம் செலுத்தி, விரைந்தோடி மறைந்தனர்.

போர் முடிந்து, ஒலிம்பிக் பந்தயக் களம் நோக்கிப் புறப்பட்டான் பயிலஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள பரபரப்புடன் சென்று பார்த்தால், பந்தயங்கள் நடந்து முடிவு பெற்றிருந்தன. எழுச்சியுடன் வந்த வீரனுக்கு, ஏமாற்றமே பரிசாக அமைந்தது. அதற்காக அவன் கலங்கவோ, தன் விதியை சபித்துக் கொள்ளவோ இல்லை; நற்றவ வானினும் நனி சிறந்தத் தாயகத்தைப், போரிட்டுக் காத்தோம் என்று பரம திருப்தியடைந்து போனான் பயிலளல். என்றாலும், பந்தயங்களில் தான் கலந்து கொள்ள வேண்டும். பரிசு பெற வேண்டும் என்ற ஆசையு வேகமும் வெறியும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேதான் இருந்தன.

இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பறந்தோடின. கி.மு. 478ம் ஆண்டு பிதியன் பந்தயங்கள் நடந்தன அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பயிலஸ் மீண்டும் புறப்பட்டான். ஒரு தாண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, தவறி விழுந்து காலை காயப்படுத்திக் கொண்டான். அத்துடன் அவனது பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஆசையின் சகாப்தம் முடிவு பெற்று விட்டது.

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டுவெற்றிபெற்று, ஆலிவ் மலர் வளையம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆவல். அவன் வாழ்நாளில் கடைசிவரை நிறைவேறாமலே போய் விட்டது. பாவம்!

சுய நலத்தில் அவன் ஊறியிருந்ததால், நாடுபோனால் எனக்கென்ன என்று கூறி விட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டிருப்பான். வெற்றியும் பெற்றிருப்பான். ஆனால், பொது நலம் நிறைந்த, தியாகப் பண்புள்ள, கடமை வீரனாக இருந்ததால், அவன் நாடு காக்கும், நல் வீரனாகப் போரிட்டான். விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றிபுெறா விட்டாலும், வெற்றித் திருமகனாகத் திரும்பி வந்த பயிலசை, அவனது சேவையைப் புகழ்ந்து, அவனை ஏற்றுக் கொண்டு நாடே வாழ்த்தியது.

வரலாற்றில் தலையாய இடம் தந்தது. வளமான தேகம் தனி மனிதன் வாழ்க்கையை மட்டும் உயர்ந்த அல்ல, வாழ்விக்கும் நாட்டிற்கும் சேவை செய்யத்தான், என்ற இனிய மொழிக்கு என்றும் சான்றாக அல்லவா பயிலஸ் திகழ்கிறான்! நாடு காத்த தீரனுக்கு ஏடுகள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தன. அதைவிடவேறு பரிசு என்ன வேண்டும்?