குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

விக்கிமூலம் இலிருந்து

3. சைவ சித்தாந்தமும் சமுதாய
மேம்பாடும்

மானிட வாழ்க்கை விபத்துக்களால் வந்ததன்று. மானிட வாழ்க்கை திட்டமிடப் பெற்ற குறிக்கோளுடையது; உயர் நோக்கமுடையது. மானிட வாழ்க்கை உறுப்புக்களாலாய வாழ்க்கை மட்டுமன்று; உணர்வுகளாலாய வாழ்க்கையுமாகும்.

உணர்வுகள், ஒழுக்க நெறிகளாகி உறவுகளை வளர்த்து உறுதிப்படுத்த வேண்டும். உறவார்ந்த மானிட வாழ்க்கையில் நயத்தக்க நாகரிகம் இடம் பெறுதல் வேண்டும். பண்பாடு நிலைபெற்று நிலையிலா உலகத்திற்கு நிலையான தன்மை நல்க வேண்டும். மானிட வாழ்க்கை முழுமையடைவது சான்றாண்மையிலேயாம். சான்றாண்மையே வாழ்க்கையின் இலக்காகிய தூய இன்ப அன்பினில் திளைத்தலைத் தரும்.

இன்ப அன்பை அடைவதற்குரிய வாயிலே வாழ்க்கை. உடல், உயிர் உணர்வு ஆகிய அனைத்திற்கும் நற்பயன்கள் கிடைக்குமாறு செயல்கள் செய்து வாழ்வதே வாழ்க்கை இவற்றுள் ஒன்றிற்குப் பயன் கிடைத்து, ஒன்றிற்குப் பயன் கிடைக்காது போனாலும் வாழ்க்கை வாழ்க்கையன்று; குறையுடைய வாழ்க்கையால் பயன் இல்லை. உடலின் திறம் வளர்ந்து உணர்வுகள் சிறந்து உயிர் சிறப்புறு நலம் பெற வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல்.

மனித குலத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழி நடத்தவே சமயங்கள் தோன்றின; முயன்றன. இத்துறையில் சமய நெறிகள் வெற்றிகள் பெற்று வாழ்வித்த, வரலாறுகளும் உண்டு; தோல்விகளை அடைந்ததும் உண்டுச்மயநெறிகளின் தோல்வியால் மானிட சாதி அடைந்த துன்பங்கள் அளப்பில் பொதுவாக,

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

என்ற பாரதியின் வாக்கு, சமயநெறிக்கும் பொருந்தும்,

மானிட வாழ்க்கையை அணுகுவதில் உலகச் சமயங்களிடையில் மாறுபாடுகள் உண்டு. “உயிரினத்தைக் கடவுளே படைத்தான்” என்று கூறும் சமயங்கள் உள. உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்ற இக்கொள்கை ஆபத்தானது; அறிவியல் அறிவுக்கு, ஈடுகொடுக்க இயலாதது. கடவுள், நிறைநலம் உடையவன், பரிபூரணன்.

இறைவனால் படைக்கப்பெற்ற உயிரினங்களில் குறை ஏன்? என்ற வினாவிற்கு விடை காண்பது கடினம். அடுத்து, உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்றால் குறை நிறைகளுக்கு அவனே பொறுப்பு என்றாகும். இதனால் பொறுப்புணர்வற்ற, சமுதாயம் தோன்றும்; கொலைகளும், தீமைகளும்-குறும்புகளும் வளரும்.

சில சமயநெறிகள் வாழ்க்கையைத் துன்பச் சுமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நெறிகள் வாழ்க்கையில் துய்த்து மகிழ்தல் கூடாது; கடுத்துறவு நெறி நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இயற்கை யோடிசையாத இந்நெறிகளால் மறைவு ஒழுக்கமும், பொய்ம்மையும்தான் மிகுதியாகத் தோன்றின.

வாழ்க்கையைச் சைவ சித்தாந்தம் அணுகும் முறை அறிவுக்கு இசைந்தது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியது; நடைமுறைக்கு இசைந்தது. வாழ்க்கையை வாழ்த்தி வரவேற்பது சித்தாந்தச் செந்நெறி. சைவ சித்தாந்த வாழ்க்கை முறை இயற்கையோடிசைந்தது.

உயிரினத்தில் இயல்பு, தனித்து வாழ்வதன்று. கூடி வாழ்தலே இயற்கையிலமைந்த வாழ்க்கைமுறை. “Man is a Social Animal” என்பது வழக்கு. மானிடச் சாதி, அன்பில், உணர்வில் கூடிவாழும் கூட்டமைப்பே சமுதாயம். கூடும் அன்பினில் கூடாமல், வெறும் பயனற்ற கூட்டத் தொகுதிக்குச் சமுதாயம் என்று பெயர் பொருந்தாது.

தனி மனிதர்கள் மாமழையின் சிறு துளிகளைப் போல விளங்கித் துளிகள் பல சேர்ந்து பேராறாக விளங்குதல் போலச் சமுதாய அமைப்பு, பேராற்றலும் தண்ணளியும் உடையதாக அமைய வேண்டும். அலைகடலின் தண்ணீர்ப் பரப்பில் கோடானு கோடி தண்ணீர்த்துளிகள்! அத்துளிகளின் கூட்டமைப்பால் கடல்நீர்ப் பெருக்கம்.

ஆனால் அக்கடல் நீர்ப் பெருக்கத்திலிருந்து ஒரு துளி பிரிந்து கரையில் விழுந்தால், அது அடுத்த வினாடியே வற்றி மறைந்து போகிறது. மானிடச் சமுதாயம் கடல் நீரைப் போலக் கூடிவாழ்தலை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். வேற்றுமைகளுக் கிடையிலும் ஒருமை காண வேண்டும் ஒத்த உணர்வுகளைப் பெற்றுக் கூடித் தொழில் செய்ய வேண்டும். வையம் உண்ண உண்ண வேண்டும்; வையம் உடுத்த உடுத்த வேண்டும்.

சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை ஒப்புரவு நெறியாக மலர்தல் வேண்டும். ஆக்க வழியில் சேர்ந்து, வாழ்ந்து, வரலாற்றுக்கு வளம் சேர்த்துச் சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற உயர்கொள்கை, சமுதாய வாழ்க்கையின் உயிர் நிலையாகும்.

வாழ்க்கை அருமைப்பாடுடையது; பயன்பாடுடையது; சிறப்பினைத்தருவது; மனித வாழ்க்கையின் அனைத்துச் சிறப்புகளுக்கும் வாயிலா அமைவது. ஆனாலும் அது, இயல்பில் எந்தவொரு குணமும் இல்லாதது. மண்ணினைச் சேராத மாமழைத்துளிபோல, மனம், சாரும் பொருள்களுக்கேற்பவும், வாழும் சமுதாய அமைப்புக்கேற்பவும், கற்று அறியும் நூல்களுக்கு ஏற்பவும், கேட்டு அறியும் செய்திகளுக்கு ஏற்பவும், உற்று அறியும் உணர்வுகளுக்கு ஏற்பவும் சிறப்பை அல்லது சிறப்பின்மையை அடைகிறது.

மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஓயாது தொழிற்படும் இயல்பினது; உறக்கத்திற்கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில் அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.

மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம்; நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமைப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
(அடங்கன். 1908)

என்று வேண்டுகிறார் திருஞானசம்பந்தர்.

பேரறிவும் பேராற்றலும் உடைய இறைநெறியின் வழியில், வழிபடுதலே வழிபாடாகும் ஆனால் இன்று பலர், கடவுளுக்காக வழிபாடு என்று கருதுகின்றனர். உண்மை அதுவன்று. வழிபாடு, கடவுளை முன்னிலைப்படுத்திச் செய்யப் பெறுவதேயாம். ஆனால், பயன் கடவுளுக்கன்று.

கடவுள், வழிபாட்டை ஏற்றுக்கொண்டு வழிபாட்டின் பயன்களைக் கைம்மாறாகத் தருபவனும் அல்லன். வழிபாட்டு நெறிகளில் உயிர் நிற்றல் மூலம் அது பெறும் தகுதிகளே வழிபாட்டின் பயன்களாகின்றன. அத்தகுதிகள் அல்லது பயன்கள் தப்பாது வந்து சார்வதற்குத் துணை நிற்பது இறைவனின் நியதி.

மனம் அல்லது மனத்தின் செயற்பாட்டுக்குத் துணை நிற்கும் உறுப்புக்களாகிய சிந்தனை, புத்தி ஆகியன சிறந்த முறையில் தொழிற்பட, புலன்கள் துணை செய்கின்றன. உயிரைச் செழுமைப்படுத்தும் வாயில்கள் முறையே பொறிகள், புலன்கள், சித்தம், புத்தி, மனம் என்ற படிமுறையில் அமைந்துள்ளன. இவை தம்முள் ஒன்றுக் கொன்று முரண்படாமல் உயிரை நலப்படுத்தும் உயரிய நோக்கத்தொடு முரண்பாடின்றி நன்னெறியில் தொழிற்படும் பொழுது, உயிர் ஆக்கத்தினை எய்துகிறது; சிறப்புறுகிறது; இன்புறுகிறது. இவைகளுக்கிடையே ஒரோ வழி மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அவ்வாழ்க்கை குறையும் நிறையும் கலந்ததாக அமைந்து விடுகிறது. அங்ஙனம் நிகழாமல் தடுக்க ஒன்றினை ஒன்று உணர்த்திக் கொள்ளுதலும் உண்டு. அந்த உணர்வுகள் பயன்பட்டுத் திருத்தமுறுவதும் உண்டு; திருத்தமுறாமல் போவதும் உண்டு. இத்தகைய சிறந்த செயற் பாடுகளுக்குரிய வாழ்க்கை நெறியில் எப்பொழுதும் விழிப்புத் தேவை; நன்று எது? தீது ஏது? என்று பகுத்தாராய்ந்து எடுத்துக் கொள்ளும் பாங்கு தேவை.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கு இனனா கிலியர்

(புறம் - 29; 11-12)

என்பதறிக. உடலும் பொறிகளும் எப்பொழுதும் தற்சார்பு இயல்பின; சுகத்தை நாடும் இயல்பின; உயிர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்கூடத் தொந்தரவு செய்வன. இவைகள் நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும்கூடக் காட்டும்; உணரச்செய்யும். அவைகளை யெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து தெளிந்து எவை உயிரின் நெடிய ஆக்கத்திற்குப் பயன்படுமோ அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்துறையில் தெளிவு இல்லாது போனால் சிவத்தைக் காண்பது அரிது. தெளிவில்லாத வாழ்க்கையை அப்பரடிகள்,

“வளைத்துநின் றைவர்கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்தநீரில்
திளைத்துநின் றாடுநின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடுகின்றேன் என்செய்வான் தோன்றி னேனே”

(அடங்கன்முறை நாலாம்திரு. பா.4927)

என்று அருமையாக விளக்குகிறார். உடலின் இதமான சுகத்தைக் கருதிப் பின்விளைவை அறியாமல் ஆமை மகிழ்ந்தாடுவதைப் போலப் பிணியும், மூப்பும், பகையும் அழிவும் சேர்க்கும் நன்னெறி சாரா உலகியலைப் பயன் எனக் கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் வெப்ப நிலை மாற்றத்தால்-கொதி நிலையால் அழியும் ஆமையைப் போல அழிவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு அழிவது என்பது நீங்காத துன்பத்தில் அழுந்தி அல்லலுறுவதேயாம். சிறந்த தெளிவுமிக்க வாழ்க்கையில் சிவனைக் காணலாம். அதில் சிந்தையே சிவமாக விளங்கிக் காட்சியளிக்கும்.

சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி

என்று அப்பரடிகள் அருளியுள்ளமை அறிக.

உயிர், அறியும் தன்மையது; அறிவாகவே மாறி விளங்கும் தன்மையது. ஆதலால் உயிர் சிந்தனை, கற்றல், தெளிதல் ஆகிய செயல்முறைகள் வாயிலாக நன்னெறியில் நிற்றற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வாழ்க்கைக்குக் கற்றலும் கேட்டலும் இன்றியமையாதன. நாள்தோறும் முறையாகக் கற்றல், கேட்டல் செயல் முறைகளில் ஈடுபடுவோர், பெருமைகள் பல பெற்று விளங்குவர்; பெரியோர் ஆவர். இதனைத் திருநெறிய தமிழ்,

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் -
(அடங்கன்முறை முதல் திரு.2)

என்று கூறுவதால் அறியலாம்.

“இறைவனைப் பூசித்தல் மட்டும் பூசையன்று. பேரறிவைத் தந்து சிவத்தைக் காட்டிடும் ஞான நூல்களை ஓதுதலும் பூசனையோடொக்கும்” என்று சிவஞான சித்தியார் செப்பும்.

ஞான நூல்தனை ஓதல், ஓதுவித்தல்

நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா

ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞானசித்தியார் : எட்டாம் சூத்.23)

என்பது திருப்பாடல். இங்ஙனம் கற்றல், கேட்டல் உடையோராகி ஞானநூல்களை ஓதும் வேள்வியில் ஈடுபட்டால், பொறி, புலன்களின் முக்குணம் மாறும்; ஆற்றல்களைக் குவிக்கும்; புலால் உடம்பினோடேயே சிவமாம் தன்மையை அடையலாம்.

சீவிக்கின்ற பெத்தநிலையில் (இருள்மல நிலையில்) அதாவது அறியாமையில் பிழைப்பு நடத்தும் நிலையில் உயிர், அறிவும் நலனும் பெற்றுச் சிவமாம் தன்மையை எய்தி விளங்கலாம்; கொடிய துன்பங்களையும் வெற்றிபெறலாம்; இயற்கைகளை வென்று ஆட்சி செய்யலாம். சமய ஆசிரியர்கள் இத்தகைய அரிய செயல்களைச் செய்திருக் கின்றனர். அவர்கள் தம் பொறி, புலன்களைச் சிவத்தினைச் சார்ந்திருக்கச் செய்ததால்தான் அந்த ஆற்றல் கைவரப் பெற்றார்கள். தோற்ற அளவில் சீவாத்மாக்களின் தோற்றத்திற்கும்-சிவஞானிகளின் தோற்றத்திற்கும் யாதொரு வேறு பாடும் தெரியாது. ஆனால் தன்மை வேறுபாடு உண்டு. இதனை,

பாலை, நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்,
காலனையன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்பேர்ல் அல்லாமை காண்,
(திருக்களிற்றுப்படியார் - 12)

என்ற திருப்பாடலால் அறியலாம். ஆதலால் சமயம் சார்ந்த வாழ்க்கை முறையில் கற்றலும் கேட்டலும் முதற் கடமை.

உயிர்க் குலத்தை, ஊற்றாகி நின்று வளர்க்கும் ஆற்றலுடையது அன்பு; உயிர்க் குலத்தையும், விண்ணையும் மண்ணையும், இறைவனையும், உயிர்த் தொகுதியையும் இணைப்பது அன்பேயாம். அன்பு, ஆற்றல் மிக்கது; தூய்மையானது; தற்சார்பற்றது; தன்னலம் துறப்பது; பிறர்நலம் கருதுவது; பேணுவது. பிறர் நலம் கருதி- துன்பங் களையும், துயர்களையும் தாங்கிக் கொள்வது; தியாகங்களைச் செய்யத் தூண்டுவது. இந்த அன்பைத் துய்த்துத் துய்த்து மகிழ்வதன் மூலம் உயிர்க்குலம் தழைத்து வளர்கிறது. அதனாலன்றோ திருமந்திரம் “அன்பே சிவம்” என்று கூறியது. சிவமாகிய பரம்பொருளுக்கு உயிர்க் குலத்தின் அன்புதான் பொருள். இதனைத் திருநாவுக்கரசர்,

அன்பலால் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே
(அடங்கன்முறை நாலாம் திரு - 4557)

என்று கூறியுள்ளார். “அன்பே அன்பே என்று அரற்றுவதில் அறிவழியும்”. அத்தகைய அன்பிலே திளைத்து நின்று வாழ்தலே சிறந்த சமய வாழ்க்கை. பத்திமை நிறைந்த வாழ்க்கை. அன்பினில் கரைந்துருகும் பத்தியால் உயிர்க் குலம் தழைத்து வளரும். அன்பின்றிச் செய்யும் சடங்குகள் பயன்தாரா. அன்பினால் தவறு செய்தாலும் நிறையாகும். அன்பில்லாமல் அறமே செய்தாலும் பாவமாகும்.

தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்திடாமை
தெரிப்பிக்கும் அதன்மம்எனப் பெயர்செய்யு மால்எம்
பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால்
விருப்பற்றவர் செய்அற மும்மறமாக்கு விப்பாய்

(காஞ்சிப்புராணம் : பாடல் 77 தழுவக்குழைந்த படலம்)

என்று காஞ்சிப்புராணம் பேசும்.

திருக்களிற்றுப்படியார்,

அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்-அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

(திருக்களிற்றுப் – 55)

என்று பாடல் உணர்த்துகிறது.

சிவகோசரியார் இயற்றிய விதிமுறைப் பூசையினும் கண்ணப்பர் பூசை ஏன் சிறப்புற்றது? அன்பினால் அன்றோ! கண்ணப்பருக்கு முன்பு அன்பு உவமையாக இருந்தது. கண்ணப்பருக்குப் பிறகு கண்ணப்பர் அன்புக்கு உவமையாகி விட்டார். அதனாலன்றோ ஞானத்தின் திருவுருமாகிய ஞானசம்பந்தர் அன்பின் பிழம்பாகிய கண்ணப்பர் சந்நிதியில் “கும்பிட்ட பயன் காண்பார் போல” வீழ்ந்தெழுந்தார். இதனைச் சேச்கிழாரடிகள்,

தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுதுகொண்டே தடஞ்சிலா
தலசோப னத்தால் ஏறி
வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உள்புகுந்து வளர்பொற் கோயில்

சூழ்ந்துவலங் கொண்டுஇறைவர் திருமுன்பு எய்தித் தொழுதுதலை
மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர்
பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

(திருத்தொண்டர் புராணம் பா. 2925)

ஆக ஞானத்தின்-பூசனையின் பயன் அன்பேயாதல் பெறப்படுகிறது. அறியாமையால் கொச்சைப்பட்ட ஆசைகளைச் சிலர் அன்பு என்பர்; அஃது அன்புபோலக் காட்டும். ஆனால் வணிக நோக்குடையது. அது அன்பேயன்று; இதனை அன்பு என்று கூறுவது பாவம். இது ஆசை. ஆசை நிர்வாணத் தன்மையுடையது; வெட்கம் அறியாதது. மற்றவர்களும் வாழவேண்டும் என்ற உணர்வு ஆசைக்கு இருக்காது; ஆசை தற்சார்பு நிலையிலேயே தொழிற்படும்; காரியத்திலே கண் வைக்கும். அதனாலன்றோ திருமூலர்,

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

(திருமந்திரம் - 2570)

என்று கூறினார். ஆசை மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாது. எங்கும் எதிலும் எப்போதும் ஆதாயம் தேடி அவலத்தை அணைத்துக் கொள்ளும் சிறுமைக் குணம் ஆசைக்கு உண்டு. ஆதலால் உயிரைத் தழைக்கச் செய்து வளர்க்கும் அன்பினையே உயிர்ப்பாகக் கொள்ள வேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற வள்ளுவம் வாழ்க்கையாக மலர்தல் வேண்டும்.

உயிர்க்கு நலம் தரும் அறிவும், அன்பும் இயங்கும் தன்மையன; இயக்கும் தன்மையன. இவையிரண்டும் தொழிற்படுத்தப்படுவதன் மூலம்தான் மேலும் மேலும் வளரும்; நிலையான வளர்ச்சி பெறும். உயிர்க்கு உறுதி பயக்கும். தொழிற்படுதல் உயிரின் இயற்கை.

சமயநெறியின் சீலம், உயிர் நலம் காக்கும் பாங்கு ஓயாது தொழிற்படுவதில்தான் இருக்கிறது. தற்சார்பு நிலையில் தொழிற்படுவது “தொழில்” ஆகும். சமயச்சார்பில் திருவருள் சிந்தனையுடன் உயிர்க்குலத் தொகுதி நலம் பெற வேண்டும் என்று செயற்படுதல் தொண்டு ஆகும். தொண்டு நெறி நிற்றலே உயிர்க்கு ஊதியம் பெறும் நெறி.

தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
(அடங்கன்முறை பாட்டு)

என்பது அப்பரடிகள் வாக்கு. செய்யும் செயல்கள் உயிர்க்குப் பயன்தந்து விடுவனவல்ல. உயிர்க்குப் பயன்களைத் தந்து வாழ்விப்பது செய்யும் செயல்களின் நோக்கமேயாகும். தீய நோக்கத்தோடு-நற்செயல் செய்தாலும் தீமையே விளையும். இறைவன் மீது மலர்க்கணை தொடுத்த காமவேள் தண்டனையையும், மறவாது கல்லெறிந்த சாக்கிய நாயனார் இன்புறுதலையும் பெற்றமை இதற்குச் சான்று செயலுக்குரிய நோக்கமே முதன்மையானது. ஆதலால் நல்நோக்கத்தோடும், சிவசிந்தனையோடும் அயர்விலாது தொண்டு நெறியில் நின்று வாழ்தலே சமய வாழ்க்கை தொண்டு நெறியில் நின்று வாழ்தல் உயிரை வளர்க்கும்; பாதுகாக்கும். தொண்டின் நெறி, வாழும் சூழ்நிலையையும் இனியதாக அமைக்கும்.

உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

(புறநானூறு - 182)

இது சிறந்த சமய வாழ்க்கையின் பயன் கூறும் பாட்டு. எந்த நாட்டில் மனிதகுலத்தினிடையில் அன்பும் ஆர்வமும் நட்பும் வளர்ந்து ஒப்புறவு நெறி கால் கொள்கிறதோ ஆங்குப் பணியும், தொண்டும் சிறப்புற்று விளங்கும். ஆங்கு மனித குலத்தை வருத்தும் பகையில்லை. பிணியில்லை; களவும் காவலும் இல்லை. ஓர் அருமையான கூட்டுச் சமுதாயம் நிலவும். ஆதலால் “திருநாவுக்கரசு வளர்திருத் தொண்டின் நெறி நிற்றல்” சமயநெறியாளர் கடமை.

உயிர் துய்க்கும் இயல்பினது. துய்த்தலில் பொருள்களைத் துய்த்தல், காதலைத் துய்த்தல் மட்டும் அடங்காது. பிறர் மகிழ்தலைக் கண்டு, தான் இன்புறுதலும், துய்த்தலுமேயாம். இதுவே சிறந்த துய்த்தல்.

உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்

என்ற குறள் அறிக உயிர்க்கு உய்யும் நெறி துய்த்தல் நெறியேயாம்.

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ

என்ற அப்பரடிகளின் அருள்மொழி அறிக.

பொன்னும் மெய்ப்பொளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன்என் றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத் தணி
ஆரூரானை மறக்கலுமாமே

(அடங்கன்முறை ஏழாம் திருமுறை)
என்ற ஆரூரர் அருட்பாடலாலும் அறிக.

துய்ப்புக்குரிய பொருள்களைப் படைத்தலும், பலரோடு கூடித் துய்ப்பித்துத் துய்த்தலும் சிறந்த சமய வாழ்க்கை துய்த்தல் மட்டுமே நிகழும் வாழ்க்கை குறையுடையது. துய்ப்பித்துத் துய்த்தல் வாழ்க்கையே சிறப்புடைய வாழ்க்கை. துறவு என்பது, எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக அமைந்தது. பழந்தமிழர் வாழ்வுமுறை துறத்தல் வழித் துய்க்கும் வாழ்க்கையே. அதுவே சைவ வாழ்க்கை; திருத்தொண்டர் புராணத்தின் சாரம் இதுவே. “பொருள்கள் நிலையில்லாதன” என்பது, பொருள்கள் அழியும் என்ற கருத்தில் தோன்றியதன்று. பொருள்களுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு நீங்கும் என்பதே அதன் பொருள். பொருள்களைப் படைத்தலும் துய்த்தலும் சமய வாழ்வுக்குத் தடையன்று. உண்பதற்காக வாழ்ந்து கழுபிணி தேடிக் கொள்ளுதல் கூடாது. வாழ்வதற்காக உண்ண வேண்டும். முறையாக நற்குணங்களைத் தரக்கூடிய சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆதலால், உலகியல் துய்ப்புகளை உய்யும் நெறிகள் எனக்கொண்டு சிவ சிந்தனையோடு துய்ப்பித்தும் துய்த்தும் வாழ்தலும் ஒரு தவமேயாகும். துய்க்கும் பொருள்கள் எல்லாவற்றையும் சிவமாகவே கருதிப் போற்றியிருக்கிறார் அப்பரடிகள்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய்என் செஞ்சம்து றப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

(அடங்கன்முறை : ஆறாம் திரு. 1173)

சுந்தரர் வாழ்ந்த காதலின்ப வாழ்க்கை-துறவியரும் தொழும் வாழ்க்கையாயிற்று. எப்படி? சுந்தரரும் சேக்கிழாரும் கூறுமாறு அறிக.

ஆதலால், பொருள் நிலையில்லாதன என்று கருதிப் பொருள் நெறியை அலட்சியப்படுத்துதல் வாழும் நெறியன்று. அத்தகையதொரு மனப்போக்கு இந்தியாவில் வளர்ந்ததால் தான் இந்தியா ஏழை நாடாகியது. பற்றி நின்று படரும் கொம்புகள் அழியுமாயின் கொடியும் அழியத்தானே செய்யும். அதனாலன்றோ வறுமையை மாணிக்கவாசகர்,

நல்குரவென்னும் தொல்விடம்

(திருவாசகம் போற்றித் திரு.40)

என்று கூறுகின்றார். திருமந்திரமும்,

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

(திருமந்திரம் 704)

என்று அழகுபடக் கூறுகிறது. பொருளை, பொருளுக்காக நெறியில்லாத நெறியில் ஈட்டுவது தவறு. பொருளை, பொருளின் பயன் கருதித் துய்ப்பித்துத் துய்க்க ஈட்டுதல் நெறி சார்ந்த வாழ்க்கை. இதுவே சைவ சித்தாந்தச் செந்நெறியின் சிறப்புடைய வாழ்க்கை. இங்ஙனம் துய்த்தலுமாகிய அறம் நிகழ, காதல் மனையறத்தைச் சிவநெறி ஏற்றுப் போற்றி நடத்துகிறது. தமிழர் சமயநெறியின் மனையறம் அன்பையே உயிர் நிலையாகக் கொண்டது.

............எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொரு மித்து-ஆதரவு
பட்டதே இன்பம்

(தனிப்பாடல் திரட்டு : ஒளவையார் - 105)

என்ற வாக்கு அறிக. அன்பும் இன்பமும் பிணைக்கும் ஆற்றலுடையவை. தமிழரின் சமயம் சார்ந்த வாழ்க்கை நெறியில் காதல் மணமே பெருவழக்காக இருந்தது. தமிழரின் வாழ்வியலில் இயல்பாக மலர்ந்த உள்ளங்கள் காதலிற் சேர்ந்து களித்து மகிழ்ந்தன. இதற்குத் தடையாகச்-சாதி பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நின்றதில்லை.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

(குறுந்தொகை 40)

அயல்வழக்கு நுழைந்தபின் திருமணங்கள் நிகழ்வனவாக இல்லை; செய்து வைப்பனவாகி விட்டன. சுந்தரர் வரலாற்றில் திருமணங்களே நிகழ்ந்தன. திருமணம் காதல் திருமணமாக அமைந்தால் தான் சிறப்புடைய வாழ்க்கையாக அமையும். இங்ஙனம் சமயம் சார்ந்த வாழ்க்கையில் கால்கொள்ளும் குடும்பம், சமுதாயத்தை நோக்கி விரிவடைகிறது.

சமுதாயம் என்பது மொழி, சமயம் அடிப்படையில் பலர் கூடி ஒத்ததறிந்து வாழ்க்கையை நிகழ்த்தும் கூட்டு அமைப்பாகும். உயர்ந்த-சமுதாய அமைப்புத் தோன்றின் வானகம் வையகத்தில் தென்படும். சிவநெறி இயல்பிலேயே சமுதாயம் தழுவிய அமைப்புடையது. ஒருமை நலம் சிறந்த, சமுதாயம் தோன்றத் தடையாய் அமைவதில் பெருந்தடைகளாய் உள்ளவை, சாதி, குல, கோத்திர வேற்றுமைகளே. இந்தப் புன்மைகள் அயல் வழக்கின் வழியதாகவே தமிழ்நெறியில் ஊடுருவின.

தூய ஒரு குல நெறியாகிய சிவநெறியை இடையில் வந்து கலந்த அயல் வழக்குக் கெடுத்து விட்டது. வடபுலத்தில் வாழ்ந்த, ஆரிய வேதகாலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் செய்த உபநிடதத்தில்கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஆயினும் எப்படியோ அந்தத் தீமை, பரவி மனித உலகத்தை உள்ளீடழித்து உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. சில தமிழ் நூல்களும்கூடச் சூழ்நிலையின் காரணமாக இந்தச் சாதி முறைகளை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளன. அவை வெறுத்து ஒதுக்கத்தக்கன.

உயிரியல் விஞ்ஞான அடிப்படையிலும் இயற்கை நியதிகளின்படியும், சித்தாந்தச் செந்நெறியின்படியும், திருமுறையின் நெறி வழியும் சாதி வேற்றுமைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்ட வேற்றுமைகள் நிலவலாம். ஆனால், அயல்வழியின் மூலம் புகுந்து, வளர்ந்துள்ள சாதிமுறை பிறப்பின் பாற்பட்டது. இந்த வேற்றுமைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவல்ல. சித்தாந்தச் செந்நெறியின் ஞானாசிரியர் மெய்கண்டதேவர்,

“அவன், அவள், அது எனும் அவை மூவினைமையில்”

(சித்தாந்த சாத்திரம்: சிவஞானபோதம் - 1)

என்று மூவகைப்படுத்திப் பொதுமை நலம் கெழுமிய வகையில் அருளியுள்ளமை அறிக தனி உடைமை உணர்வு களும் அவ்வழிப்பட்ட ஆதிக்க உணர்வுகளும் தோன்றிய பிறகுதான், சாதிமுறைகள் தோன்றின. “பழைய வேதங்களிலும்கூட சாதிமுறைகள் இருந்ததாக இல்லை” என்று மறைமலையடிகள் நிலைநாட்டுவார். இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்களில்கூட சாதிமுறைகளைக் குறிக்கும் சொற்கள் பயிலவில்லை.

வேதங்களின் சாரமாகத் தோன்றிய உபநிடதங்களிலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்தனவாகத் தெரியவில்லை. வேத உபநிடத கால முனிவர்கள் திருமணங்கள்கூட, சமுதாயத்தின் பல நிலைகளிலும் நிகழ்ந்திருக்கின்றனவே தவிரச் சாதிமுறைகள் பின்பற்றப் பெற்றனவாகத் தெரிய வில்லை. “கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை” என்று வாயு புராணம் கூறும்.

“மாபாரதத்திலும் கூட ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்தோர். தொல்காப்பியத்தில் பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் சாதிமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தொழில்முறைப் பாகுபாடு இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தை அடியொட்டித் தோன்றிய தமிழ் மறையாகிய திருக்குறளிலும் சாதி வேற்றுமை இல்லை.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
(திருக்குறள் 972)

என்பது திருக்குறள். அதனையொட்டித் தோன்றிய சமயத் திருமுறைகளும் சாதி வேற்றுமைகளைக் கடுமையாகக் கடிந்துள்ளன. மாணிக்கவாசகர்,

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழி
(திருவாசகம் 5)

என்று கூறுவது அறிக. அப்பரடிகள்,

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்

(அடங்கன் முறை : ஐந்தாம் திரு - 582)

என்று சாதி வேற்றுமை மனப்பான்மையைக் கடுமையாகக் கண்டித்ததோடு உயிர்க்குலம் அனைத்தையும் சிவமெனக் கருதிப் போற்ற வேண்டும் என்று அருளியுள்ளமையும் அறிக. ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித் துணையாக, தமிழகத்தில் சைவத் தமிழ் ஞானப் புரட்சி செய்த திருஞானசம்பந்தர்,

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்அடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே

(அடங்கன்முறை : இரண்டாம் திரு - 1900)

என்றருளிய பாடலும்

குலவ ராகக்குல மிலரு மாகக் குணம் புகழுங்கால்
உலகின் நல்லகதி பெறுவ ரேனும்மல ரூறுதேன்

புலவ மெல்லாம் வெறி கமழும் அந்தண் புகலுர்தனுள்
நிலவ மல்குசடை அடிகள் பாதம் நினைவார்களே

(அடங்கன்முறை : இரண்டாவது திரு - 27.19)

என்ற பாடலாலும் அறிக. பார்ப்பனக் குலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு கொண்ட தோழமையை அறிந்து உணர்க. சுந்தரர் ஆதி சைவ குலத்தில் தோன்றி, ஷத்திரிய குலத்தினராகிய மன்னரால் வளர்க்கப் பெற்று, உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய பரவையாரையும், வேளாளர் குலத்தில் தோன்றிய சங்கிலி யாரையும் திருமணம் செய்து கொண்டமையையும் அறிக..

சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் வழக்கிலிருந்த குலங்களைக் குறிப்பிட்டுக் கூறினாரேனும் அக்குலங்களிடையில் வேறுபாடின்றிக் கலந்து பழகியதைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருக நாயனார் மூவரும், முருகநாயனார் திருமடத்தில் உடனுறைந்து இருந்தனர் என்று கூறும் நெறியினையும் அறிக. திருவாரூரில் பலரோடு பழகியதால் ‘தீட்டு’ வந்துவிட்டது என்று கருதிய நமிநந்தி அடிகளுக்கு,

மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான்தாம்
ஞான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
ஞானமறையோய் ஆரூரில் பிறந்தார்எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

(திருத்தொண்டர் புராணம் : நமிநந்தி - 27)

என்று இறைவர் இவ்வாறு உணர்த்திய ஒருகுல நெறியை ஓர்க: ஒழுகலாறாக்குக. இன்று சிவநெறி மக்கட் சமயமாக மலர்ந்து வளரவில்லை. ஏன்? சாதி வேற்றுமைகளின் கொடுமையே தடை. திருக்கோயில்களில் சாதி, திருமடங்களில் சாதி, எங்கும் சாதிகளைக் காப்பாற்றும் சிறுநெறிகளே ஆட்சி செய்கின்றன.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இது பஜனை மடத்துப் பாட்டு, ஒழுகலாறோ சின்னஞ்சிறு வட்டத்தில். சாதிச் சக்திகளில் சிக்கிய சைவம் வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது.

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சமயத் தலைவர்களின் பின்னால், ஆயிரக் கணக்கில் அடியவர்கள் திரண்டனர். நாடு முழுதும் சைவப் படையெழுச்சி! எப்படி இயன்றது? அவர்கள் சாதி நெறிகளைக் கடந்து விளங்கினார்கள். “கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பரெலாம் ஒருகுலம்” என்றனர். ஏன்? சந்தானாச்சாரியார்களிடத்திலும் கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஞானத்திற்கு ஏது சாதி?

சைவ வேளாளர் திருமரபில் தோன்றிய மெய்கண்ட தேவரை ஞானாசிரியராக ஆதிசைவர் மரபில் தோன்றிய அருணந்தி சிவாசாரியார் ஏற்றுக் கொண்டார். பெற்றான் சாம்பானுக்கு, உமாபதி சிவத்தின் மூலம் தீக்கை அளிக்கச் செய்து இன்ப அன்பினை இறைவன் வழங்கினான் என்றால் சித்தாந்தச் செந்நெறிக்குச் சாதி ஏது? குலம் ஏது? கோத்திரம் ஏது? சிவநெறி நிற்பவர் எல்லாம் நம்மவரே என்று பெரு நெறி பற்றி ஒழுகுதலே சித்தாந்தச் செந்நெறியின் சமுதாய வாழ்க்கை நெறி.

இன்று அடியார்களுக்குப் பஞ்சம். ‘கட்டளைகள்’ இல்லாது போனால் இருக்கும் ஒரு சிலரும் இருக்க மாட்டார்கள். சிவநெறியை நாடு கடந்து இனங்கடந்து உலகப் பொதுநெறியாக வளர்க்க இன்று தேவை ஆயிரம் ஆயிரம் அடியவர்கள். அடியார்களுக்குத் தடையாக இருக்கின்ற சாதிமுறைகளை நீக்கினாலொழிய சிவநெறி - சைவம் எந்த முகத்துடன் “மனிதர்காள் இங்கே வம்மின்” என்றழைக்க இயலும்?

மனித குலத்தை ஒரு குலமாகக் கருதாதபோது யாத்திரை ஏன்? பாதகாணிக்கைகளை வாங்கிக் குவிக்கவா? பிழைப்பின் பெயரால் பெட்டகங்களை நிரப்பிக் கொள்ளவா? ஊரார் செல்வத்தை அடித்து ஒரு குலத்தின் வயிற்றில் போடவா?

“உலகத்து வாழ்க்கை துன்பமானது; துன்பமானதாகத் தான் இருக்கும்” என்று கருதும் புன்மைநெறி சிவநெறிக்கு இருந்ததில்லை; துன்பம் துடைத்து வாழ்க்கையை இன்ப மயமாக்குதல் சிவநெறியின் கோட்பாடு

சிவநெறியின் கோட்பாடு பழந்தமிழர் காலந்தொட்டு வழிவழியாக வளர்ந்து வருகிறது. சங்க காலக் கவிஞர் “பக்குடுக்கை நன்கணியார்” ஓரில்லத்தில் காதல் களியாட்ட மகிழ்ச்சி, பிறிதோர் இல்லத்தில் இறப்பு வழிப்பட்ட துன்பம்! ஏன் இந்த வேறுபாடு? என்று கொதித்துக் கேட்கிறார். இப்பாடலில் பேசப்பெறும் இன்ப துன்பங்கள், சாதி வேற்றுமை, கற்றார், கல்லாதார், வளமுடையார், வறுமையுடையார் என்ற செயற்கை வேறுபாடுகளல்ல. ஊழி ஊழியாக இயற்கையில் நிகழ்ந்து வரும் வேறுபாடு. மரணத்தை வென்றார் யார்?

மரணத்தை வெல்ல முடியும் என்ற கருத்து இருக்கிறது. கதைகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. வளர்ந்து வரும் வாழ்நாளின் அளவைப் பார்த்தால் எதிர்காலத்தில் வெற்றி பெற்றாலும் பெறலாம்? ஆயினும் இன்று வரையில் சாதலும் பிறத்தலும் புதியனவல்ல என்று கூறியாங்குச் சுழற்சி முறையில் நடைபெறும் இயற்கை வழியினாலான துன்பத்தைக்கூட-மரணத்தைக்கூடக் கடிந்துள்ளார். இதே உணர்வைச் சுந்தரர் வரலாற்றில் அவிநாசியில் காண்கின்றோம்.

அவிநாசியில் ஒரு இல்லத்தில் குழந்தைக்கு நாண் மங்கல மகிழ்ச்சி! ஆரவாரம்! பிறிதோர் இல்லத்தில் குழந்தையை இழந்த துயரம், ஆரூரர், பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தையை மீட்டுப் பெற்றோரை மகிழ்வுறுத்தினார் என்பது பெரியபுராணம். ஆதலால் துன்பம் உலக இயற்கையன்று. இன்பமே உலகத்து இயற்கை என்று கருதி இன்புற்று வாழ்தல் சித்தாந்தச் செந்நெறியின் வாழ்க்கை முறை.

அடுத்து, சமுதாயத்தை நலிவுறச் செய்யும் சாதி வேற்றுமைகளைப் போலவே பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கொடுமையானவை. இன்று மானிடச் சாதியை- உடை யாரையும், இல்லாதாரையும் ஒருசேர வருத்துவது பொருளுடமை ஏற்றத் தாழ்வுகளேயாம். உடையாரைக் களவும் காவலும் வருத்துகின்றன. இல்லாதாரை வறுமை வருத்துகிறது; உடையார் இல்லார் வேற்றுமை, அவ்வழி கொடிய வறுமை முதலியன நிலையாகக் கால்கொள்ளு மானால் மனித மதிப்புகள் குறையும்; அறநெறியின் அடித் தளங்கள் ஆட்டம் கொடுக்கும்; சமய நெறியின் சீர்மைகள் சிதையும்; நரகத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டாம். இவ்வேற்றுமை களுக்கிடையில் மானிடர் வாழும் வாழ்க்கையே நரகமாகும்.

சிவநெறியின் சீலம் உயிரிரக்கத்தில் இருக்கிறது. யாதானும் ஒரு உயிர் துன்புறுவதைச் சிவநெறி தாங்காது. அதனாலன்றோ, குடிக்கு ஒரு ஆள் கொற்றாளாக அனுப்ப, மகவில்லாது கவலைப்பட்ட வந்திக்கு, ஆலவாய் அண்ணல் ஆளானார். நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்ற மதுரையில், அரச வீதியில் பன்றிக் குட்டிகள்-கண் திறவாக் குட்டிகள் தாய்ப் பன்றியை இழந்து பாலின்றிப் பரிதவித்தன. பரமாய சிவத்திற்குப் பன்றிக்குட்டிகளின் துயர் உறுத்திற்று. பாற்கடலை வழங்க முடியாது. நக்கிக் குடிக்கும் பருவம் வரவில்லை. அந்தணராக, சேவகனாக வந்து பால் வழங்கவும் முடியாது. உருவத்தைக் கண்டு அஞ்சும் குட்டி நிலையில், தாயையே அணையும் இயல்பின. ஆதலால் தாய்ப் பன்றியாய்த் தோன்றி முலை தந்து காப்பாற்றிய மூவாப்புகழ் சிவத்திற்கு உண்டு.

தந்தையடிக்க அழுத குழந்தைக்கு அம்மையைக் கொண்டு பாலூட்டச் செய்தான் திருத்தோணியப்பன். திருவிழிமிழலையில் பஞ்சம் வந்துள்ளபோது படிக்காசுகள் தந்தருளி அடியார்களைக் கொண்டு சோறிட்டான். பஞ்சத்தின் துன்பத்தை மாற்றினான். இவையெல்லாம் கருணையின் பெருக்கம்! கருணையின் காட்சி!

சிவநெறியில் நின்றொழுகிய நாயன்மார்கள்தாம் என்ன? காதலனை நச்சரவம் தீண்டப் பிரிந்து அழுத செட்டிப் பெண்ணுக்குக் காதலனை மீட்டுத் தந்து கடிமணம் செய்வித்தது ஞானசம்பந்தப் பெருமானின் அருட்செயல். சைவத்தில் உயிர்களின் துன்பத்தை நீக்கும் பணி அறம் என்று வற்புறுத்தப் பெற்றுள்ளது. ஏன்? திருமூலர் நடமாடும் மானிடர்களை-நடமாடும் கோயில்கள் என்று அறிமுகப் படுத்துகின்றார். ஆம், அவர்கள் “நடமாடும் கோயில்கள்”. அங்கும் இறைவன் உள்ஒளிந்து நிற்கின்றான். நாளை மறுநாள் விளங்கியும் தோன்றலாம். உடலிடம் கொண்டருளுதல் இறைவனின் அருட்செயலன்றோ! திருக்கோயிலைப் பட மாடும் கோயில் என்று பகர்கின்றார். படமாடும் கோயிலுக்கு ஈவது பரமனுக்கு ஆகாது என்று எதிர்மறையாகக் கூறுகின்றார். நடமாடும் கோயிலுக்கு ஈவது மக்களுக்கும் ஆம், பரமற்கும் ஆம், என்பது திருமூலர் செய்த சைவப் பொருளியல் புரட்சி, சிவநெறி பொருளியல் ஒப்புரவு நெறியை உணர்த்துகிறது.

அப்பரடிகள் பொருளுடைமை-தனி உடைமை நிலையுடையதன்று என்று கூறுகிறார். அப்பர் வாக்குப்படி பொருளை உடையவர் பொருளுக்குரியவர் அல்லர். அவர் ஒரு அறங்காவலர்; சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர். அதன் காரணமாக அச் சமுதாயத்திற்குரிய பயன்படும் பொருள் அவரிடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. அப்பொருள்பயன் அவர் துய்ப்பதற்கன்று. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதற்கேயாம்.

இந்தத் தூயஉணர்வுடன் பெற்ற பொருள்களைப் பாதுகாத்து இல்லாதார்க்கு வழங்குபவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும். வழங்காது காத்து வைத்து வாழும் வன் கணாளர்க்கு நரகமே கிடைக்கும். இது அப்பரடிகளின் பொருளியல் கொள்கை.

இப்பொருளியல் கொள்கையைத் ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்று பிற்காலத்தில் பொருளியலறிஞர்கள் கூறினர். அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கொள்கையை ஆதரித்தார். அப்பரடிகள் இந்தக் கொள்கையை வகுத்துக் கூறும் பாடல் இதோ,

இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர்க் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம்வைத்தார்
அரக்கனுக் கருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே”

- (அடங்கன்முறை நாலாந்திரு. - 454)

சிவநெறி, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிறது. உண்மையான சிவநெறியைச் சார்ந்த சமுதாயத்தில் பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மறையும்; மறைய வேண்டும். அங்ஙனமின்றேல் மார்க்சீயம் வாழ்வியல் நெறியாக இடம் பெறுவதைத் தடுக்கும் சக்தி யாதும் இல்லை. உண்மை உணர்க.

மார்க்சீயத்திற்கும் சிவநெறிக்கும் தத்துவ இடைவெளி மிகக்குறைவு. இதனை மார்க்சீய நெறியோடு ஒத்திட்டுப் பார்க்கவேண்டும். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் மனித உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுப்பொறுப்பானவன் அல்லன். அவன் ஒரு இயக்குநன். அவன் ஒரு தேர்வாளன்; காட்சி மதிப்பீடுகளுக்குத் தகுந்தவாறு புள்ளிகள் வழங்குபவன். அவ்வளவுதான்.

இன்னும் கொஞ்சம் அயரா அன்பில் இறைவனை அணுகினால் அறிவிப்பான்; உணர்த்துவான் வழி நடத்துவான். நடந்து வாழவேண்டியது மானுடச் சாதியேதான். சிவநெறியின் பார்வையிற் கடவுள் ‘Creater’ம் அல்ல. ‘Electric life'ம் அல்ல. சிவம் ஒரு வழித்துணை. அறிவார்வலர்களுக்கு ஆசிரியன். அவன் எந்த உடைமைகள் விவகாரத்திலும் தலையிடுபவனல்லன். அவன் காரணங்களாக இருப்பவனே தவிர, காரியங்களாக இருக்க மாட்டான். அவன் உணர்வுகளாக நின்றருள் புரிவான்.

ஆதலால் சித்தாந்தச் செந்நெறி, ஏழை பணக்காரன் தன்மைக்கு, உயர்சாதி, இழிசாதி அமைப்புக்குத் துணை போகக்கூடியதன்று. சித்தாந்தச் சிவநெறி சார்ந்த சமுதாயம் எல்லாரும் எல்லாம் பெற்று வாழும் சமுதாயமேயாகும். அத்தகு சமுதாயத்தைக் காண்பதே, இன்றுள்ள முதல் கடமை.

இன்று சிவநெறிச் சமுதாயம் தனித்தன்மையுடையதாக இல்லை. சித்தாந்தச் செந்நெறி தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். அயல்வழி வந்த கலப்புக்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். சிவநெறி அனுபவத்திற்குப் பயன்படுவன திருக்கோயில்கள். திருக்கோயில்களில் தமிழ் முனிவர்களால் செய்யப்பெற்ற ஆகமங்கள் வழி, பூசனைகள் நடைபெற வேண்டும்.

“ஒருவர், சிவநெறியில் நிற்றற்குரிய தீக்கைகளை முறையே பெறாமல் சமயப் பணிகளில் ஈடுபடக் கூடாது” என்பது ஆகம விதி. ஆனால் தீக்கையின்றியே திருவமுது படைக்கும் பணியிலும், மந்திரங்கள் ஓதும் பணியிலும் இடம்பெற்றுச் செய்கின்றனர். சிலர் திருக்கோயில்களின் பூசகர்களாகக் கூட இடம் பெற்றிருக்கின்றனர். திருக்கோயில் இறைவன் திருமுன்பு சமய ஒழுக்கத்தால் ஒன்றுபட்ட எல்லாரும் உடனிருந்து உண்ணும் சிறந்த பழக்கம் தடைப்பட்டுப் போயிற்று.

சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்த ஆதீனகர்த்தர்களின் சமயத் தலைமையைச் சுமார்த்தக் கலப்பின் மூலம் அடையத் துடிக்கிறார். தீக்கை பெறாத, ஐந்தெழுத்தை எண்ணாத, ஆகமங்களை நம்பாத-ஏற்றுக் கொள்ளாத சங்கராச்சாரி யாரிடம் சமய, விசேட நிர்வாண தீக்கைகள் பெற்று சிவாச்சாரியராகிப் பெருமானை அர்ச்சிக்கும் பேறு பெற்றவர்கள் “சான்றிதழ்” வாங்க வேண்டி இருக்கிறது.

ஆகமங்களின் வழியும் தமிழ்த் திருமறைகளின் வழியும் நமது திருக்கோயில்களில் பூசனைகளும் நடைமுறைகளும் அமைய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் கட்டணங்கள் விதித்து வாங்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அத் திருக்கோயில் பெருமானை ஆன்ம நாயகனாக ஏற்று வழிபடுவோர் பட்டியல் தயாராக வேண்டும்.

தமிழர்-சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்கள் சிவத்தை யாதானும் ஒரு பெயரில்-சிறப்பாக அவர்கள் ஊரில் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மநாயகனாக ஏற்றுக்கொள்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்; வழக்கப்படுத்த வேண்டும். இங்ஙனம் அந்தத் திருக்கோயில்களில் வழிபடுவோர் ஆண்டுதோறும் முறையாக வழங்கும் நன்கொடையிலிருந்தே திருக்கோயில்கள் பேணப்பெற வேண்டும். பூசனைகள் செய்விக்கப் பெறவேண்டும்.

வழிபடுவோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே நடத்தப் பெற வேண்டும். அங்ஙனம் நடக்கும் நிகழ்வுகளுக்கும் காணிக்கைகள் வாங்கலாம்; வழிபடுவோரிலிருந்து தெரிவு செய்யப் பெற்ற ஒரு சிலர் கொண்ட குழுவைக் கொண்டே திருக்கோயில் ஆட்சிமுறை நடைபெற வேண்டும்.

திருக்கோயிலின் வழிபாட்டுச் சடங்குகள் எளிமை யானவையாக அமைய வேண்டும். இனிய தமிழிலும் அமைய வேண்டும். திருக்கோயில்களில், ஆகமங்களிலும் திருமுறை களிலும் தோய்த்த புலமையும், பழுத்த மனமும் கொண்ட சிவாசாரியர்கள் நியமனம் செய்யப் பெறுதல் வேண்டும். அவர்கள் மூர்த்திகளைத் தூய்மை செய்து, நாள்தோறும் பெருமானை வழிபடுவோர் வழிபட்டுய்ய எழுந்தருளச் செய்யும் செய்முறைகள் நிகழ்த்தி, வருகிற பக்தர்களுக்கு ஆச்சாரியனாக இருந்து, பெருமானைக் கண்டும் காட்டியும் வழிபாடு செய்து கொள்ளும் நெறியில் வழிபடுத்தியும் துணை செய்ய வேண்டும்.

தீக்கை பெற்று, அத்திருக்கோயிலில் வழிபடுவோர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அவர்கள் தாமே பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். திருக்கோயிலின் சிவாசாரியர்கள் ஆசிரியப் பணியைத்தான் செய்ய வேண்டும்; புரோகிதர்களாக விளங்கக் கூடாது; தரகர் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

எல்லாரும் திருக்கோயில் சென்று பெருமானை வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்பதற்கு நமது திருக்கோயில் புராணங்களே சான்று. நண்டும், எறும்பும் பூசித்திருக்கும் போது மனிதன் பூசிக்கக் கூடாதா? கண்ணப்பர் வரலாறு எதைக் காட்டுகிறது?

கண்ணப்பர், காளத்தியண்ணலைத் தொழ யாதொரு தடையும் இருந்ததில்லையே! சிவாசாரியார் கூட, யார் வழிப்பட்டது என்று கவலைப்படவில்லை. அவருக்கு இருந்த கவலை, சந்நிதியில் கிடந்த புலால் துண்டுகள் பற்றியதுதான். ஆயினும் கண்ணப்பர் பூசனையே சிறந்தது என்று காளத்தியண்ணலே விடையெழுதிய பிறகும்கூட நாம் தகுதியுடைய எல்லாருக்கும் வழிபாட்டுரிமையை வழங்கவில்லை.

கண்ணப்பர் வரலாறு நிகழாத காசியில் எல்லாரும் வழிபடலாம். ஆனால் கண்ணப்பர் வரலாறு நிகழ்ந்த தென்புலத்தில் எல்லாரும் வழிபட முடியாது. அப்பரடிகள் அருளிச் செய்துள்ள ஐயாற்றுப் பதிகத்தில் எல்லாரும் போதொடு நீர் சுமந்து வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக ஐயாறப்பனை வழிபட்டனர் என்ற செய்தி கிடைக்கின்றது.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுப டாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

(தேவா. நான். திரு. 3ஆம் பதிகம் பாடல்.1)

ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் தகுதியும் உரிமையும் உடையவர் அனைவருக்கும் வழிபடும் உரிமை வேண்டும். இதைச் செய்தால்தான் சாதி வேற்றுமைகள் அகலும். பூசனையைச் செய்வதன் மூலம்தான் உயிர்க்கு அனுபவம் கிடைக்கும்.

தாமே வழிபாடு செய்து கொள்ள இயலாதாருக்கும் சிவாசாரியர்கள் செய்து தரலாம். அங்ஙனம் செய்யும் பொழுதும் திருமுறைத் தமிழிலேயே செய்யப் பெற வேண்டும். பக்தி என்பது உயிரின் அனுபவத்திற்குரியது. உயிரின் அனுபவம் தாய்மொழியில்தான் எளிதில் அமையும்.

சுமார்த்தக் கலப்பு, நமது சமயத்துக்கு ஏற்பட்ட பிறகு, தமிழ் வழிபாட்டு முறைகள் நின்று போயின. பழங்காலத்தில் தமிழோடு இசை பாடிதான், வழிபாடு செய்திருக்கின்றனர். சுமார்த்தருடைய கலப்பு ஏற்பட்ட பிறகு சமஸ்கிருதத்தில் சில புகழ்மொழிச் சொற்றொடர்களைத் தொகுத்துத் தூய்மையுடையதாகக் காட்டி அர்ச்சனைக்குப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அவைகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கிய பிறகுதான், கடவுளை இழிவுபடுத்துதற்குரிய சில செய்திகள் பகுத்தறிவாளர்களுக்குக் கிடைத்தன.

சித்தாந்தச் செந்நெறிக்கும், கோயில்களுக்கும் புறச் சமயங்களால் தாக்குதல் வந்த பொழுதெல்லாம் திருமுறைத் தமிழ்தான் காப்பாற்றியது. 'அஷ்டோத்திரமும்’, ‘சகஸ்ர நாமமும்' யாதும் செய்யவில்லை. ஆதலால், நமது சித்தாந்தச் செந்நெறியைக் காப்பாற்றித் தந்த திருமுறைப் பதிகங்களை ஓதி, மலர் சொரிந்து வழிபடும் வழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்றுதான் திருக்கோயில்களில் பெருமான் பெருவிருப்புடன் எழுந்தருளி அருள் புரிவான். ஏன்? அவன் தமிழோடிசை கேட்கும் இச்சை கொண்டவன்.

இறைவன் தமிழிசைக்காக நாயன்மார்களுக்குப் பொற்காசுகள் தந்தவன்; பண் சுமந்த பாடல் கேட்க, கூலி கொண்டு மண் சுமந்து அடிபட்டுப் புண்மேனி சுமந்தவன். திருக்கோயில் வழிபாட்டுக்கு உரிமையுடையது திருமறைத் தமிழே. அதைச் சிவநெறியாளர்கள் உரிமையுடன் போற்றி ஒழுகுதல் வேண்டும்.

பழந்தமிழகத்தின் திருக்கோயில்கள் உடலையும் உயிரையும் ஒருங்கே வளர்க்கும் நிறுவனங்களாக விளங்கின. இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கமளிப்பவையாக விளங்கின. காலப்போக்கில் அயல்வழக்கின் நுழைவின் காரணமாகவும் தற்சார்பு மிகுந்ததன் காரணமாகவும், அயர்ச்சியின் காரணமாகவும் இன்றையத் திருக்கோயில்கள் முழுமையான திருக்கோயில்களாக விளங்கவில்லை.

இன்று, எதையும் எங்கு நோக்கினும் அரசே பொறுப் பேற்று நடத்துகிறது. சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அறவே நீக்கப்பெற்றிருக்கிறது. இந்நிலை சமுதாயத்திற்குத் தற்சார்பான வளர்ச்சியை, வலிமையைத் தராது. பழங்காலத்தில் சமுதாயக் கூட்டுப் பொறுப்பு மிகுதியாக இருந்தது. திருக்கோயில்களில் இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப் பெற்றன: நடத்தப் பெற்றன; மருத்துவமனைகள் இருந்தன. ஏன்? வழக்குகளைத் தீர்த்து வைக்கும் முறையீட்டு மன்றங்களும்கூடத் திருக்கோயில்தான் நடைபெற்றன.

சுந்தரர் சிவபெருமான் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலிலிருந்த முறையீட்டு மன்றம் விசாரித்து நீதி வழங்கியது என்ற வரலாற்றை உணர்க. இதே நிலை மீண்டும் திரும்ப வருதல் வேண்டும்.

திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தலைவனாகக் கொண்டு சிவநெறியைச் சார்ந்த சமுதாயம் கூடிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்துச் சமுதாயப் பணிகளையும் திருக்கோயில்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதைச் சிலர் இன்று மறுக்கின்றனர்.

“திருக்கோயில் நிதியத்தைக் கடவுள் பூசனைக்குத்தான் பயன்படுத்த வேண்டும்; வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்று கூக்குரலிடுபவர்கள் இருக்கிறார்கள். மேலும் “செல்வநிலை மிகுந்துள்ள கோயில்கள், செல்வ வசதிக்குறைவான திருக்கோயில்களின் திருப்பணிக்குச் செல வழிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இது நூற்றுக்கு நூறு தமிழகத்தின் எல்லாத் திருக்கோயில்களையும் திருப்பணி செய்து திருவருளின் பொலிவோடு வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலிடம் கொடுக்கலாம். இதைச் செய்வது சமுதாயப் பணிகளுக்குத் தடையாக இருக்காது.

‘கடவுட் பணிக்கென வழங்கப்பெற்ற நிதியைக் கடவுட் பணிக்குத்தான் செலவழிக்க வேண்டும். இதுதான் சரியான அறநெறி. கடவுட் பணியும் மக்கட் பணியும் வேறு வேறு’ என்றெல்லாம் கூறுவர். இக்கருத்து மிகவும் தவறானது. சிவஞான மாபாடியும், இயற்றிய மாதவச் சிவஞான முனிவர் மக்கட் பணியையே கடவுட் பணியாக்கலாம் என்று கூறுகிறார். “மக்களை நோக்கிச் செய்யும் பசு புண்ணியங்களை, மக்களை மக்கள் என்று கருதாமல் கடவுளின் கருணையைப் பெறுதற்குரிய பாத்திரங்கள் என்று கருதிக் கடவுள் நினைப்போடு செய்யின் அது கடவுள் பணியேயாம்” என்று கூறியுள்ளமையை அறிக.

ஆதலால் நமது சிவநெறியைச் சார்ந்த சமுதாய அமைப்பைக் கோயிலைச் சார்ந்த குடிகளாகவும், குடிகளைச் சார்ந்த கோயிலாகவும் செழுமைப்படுத்தி வளர்ப்பதுதான் சமயம் தழுவிய சமுதாய அமைப்புக்குத் துணை செய்யும். இப்பணியில் நாம் வெற்றிபெறும் வரையில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

சிவநெறி அமைப்பில் அடுத்த பணிமனைகள்-சமய, நிறுவனங்கள்-திருமடங்களாகும். மானுடச் சாதி சமய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கும்பொழுது முதலில் தேவைப்படுவோர் ஞானாசிரியர்கள். ஞானாசிரியர்கள், மனிதர்களுக்குச் சமயக்கல்வியும் தத்துவ விசாரணையும் கற்றுக் கொடுத்துச் சமய வாழ்க்கையின் நுழைவுக்குரிய சடங்குகளாகிய தீக்கைகளைச் செய்வித்துச் சமய வாழ்க்கையில் ஆற்றுப்படுத்துவர். அப்பரடிகளுக்குத் திலகவதியார், “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்வித்துத் திருவதிகைத் திருக்கோயிலுக்கு ஆற்றுப்படுத்திய அருமைப் பாட்டினை அறிக.

ஞானாசிரியர்களின் திருமடங்கள் மக்களைச் சமய வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்தும் பணியை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள். அவை மக்களின் சமய அனுபவங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தி மேலும் மேலும் வளர்க்கும் பணிக்கும் பொறுப்பு உடையன, திருக்கோயில்கள் சமய அனுபவத்திற்குரியன. இந்நெறி முறையில் இணைந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் நமது சமுதாயம் சமய நெறியில் நின்றொழுக இயலும்.

இன்றைய நிலை என்ன? திருமடங்கள் மக்களுக்குத் தீக்கைகள் செய்விப்பதை மறந்துவிட்டன. இல்லை, கடமையல்ல என்று கூறி மறுக்கின்றன. ஏன்? ஒருபுறம் நிலவும் சாதிமுறைத் தடை, பிறிதொருபுறம் இல்லறம், துறவறம் தடை என்றெல்லாம் கூறுவர். இவை பொருளற்ற சமாதானங்கள். உண்மையான காரணம் அவற்றுக்கு ‘உயர் மனப்பான்மை’ வந்துவிட்டது. மக்களிடத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதுதான் சிறப்பு, பெருமை என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இங்ஙனம் நிலைமைகள் மாறியதற்குக் காரணம் அவைகளின் செல்வச் செழிப்பும் அவ்வழி கால்கொண்ட சாதீய முறைகளுமேயாம். இவை இரண்டின் காரணமாக அவைகளைச் சார்ந்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் அவைகளின் திசைகளையே மாற்றிவிட்டனர். மேலும் ஒரு காரணம் தமிழர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் துறவை விரும்புவதில்லை. அஃது அவர்களின் நாகரிகமும் அன்று. அதனால் பரவலாகத் திருமடங்களுக்குத் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தூய பணிகளைச் செய்யத் தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. அதனால் திருமடங்களில் துறவிகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே பல்கிப் பெருகியதில்லை. அதன் காரணமாகச் சில சமயங்ககளில் சந்தையில் மலிவாகக் கிடைத்த சிலர் துறவிகளாயினர்.

எனவே, செந்தமிழ் நூற்புலமைக்கும், சித்தாந்த ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்த திருமடங்கள் காலப்போக்கில் அந்தத் தகுதியை இழந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழமொழி வழங்கப்படுகிறது. வயது வந்த பிள்ளையை வைத்திருக்கிற சைவர்களைப் பார்த்துப் பிள்ளைகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், “இருக்கவே இருக்கு தண்ணீர் வண்டி, இல்லையென்றால் தம்பிரான் பதவி” என்று கூறுவார்களாம்.

அதாவது நெல்லை மாவட்டத்துச் சைவ வேளாளர்கள்-வளமுடைய சைவ வேளாளர்கள். அவர்கள் ஆற்றின் தண்ணீர் மட்டுமே குடிப்பர். வாய்ப்பில்லாத சைவ இளைஞர்கள் தண்ணீர் வண்டியில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுக்கும் பணி செய்வர். இல்லையேல் தம்பிரான் பதவிக்குப் போவார்கள். தண்ணீர் வண்டி இழுப்புப் பணியையும் தம்பிரான் பணியையும் ஒன்றாக எண்ணும் நிலைமையை எண்ணி வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது.

இத்தகு நிலைமைகள் வளர்ந்ததன் காரணமாகத் தகுதி வாய்ந்தவர்கள் திருமடங்களுக்குத் துறவிகளாக வரும் வாய்ப்பு அருகிப்போயிற்று. தகுதியற்றவர்களாக வந்தாலும் அவர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்கும் சமயக் கல்வியை, ஞானத்தை வழங்கி அவர்கள் நிலையை உயர்த்தும் நிலையில் திருமடங்களின் பிற்காலத்திய நிலை இல்லாமல் போயிற்று.

ஒரு காலத்தில் திருமடங்களில் பணிவிடை செய்தவர்கள் கூட, சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அவர்களுக்கு எளிதாக, உயர்வு தாழ்வு பாராட்டாது சமய ஞானத்தைக் கற்றுத்தருகிற இனிய எளிய மனப்போக்கு திருமடங்களின் தலைவர்களிடத்தில் இருந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்றாவது மகாசந்நிதானமாக அமர்ந்திருந்த திருவருள்திரு. அம்பலவாண தேசிகசுவாமிகளிடத்தில் பூசைக்கு மலரெடுத்துத் தரும் பணிவிடை செய்த, “பணிவிடைக்கு”ச் சித்தாந்தத்தைக் கற்றுத் தர, பூப்பிள்ளை அட்டவணையென்று ஒரு சமய சாத்திர நூலே தோன்றியது. திருமடங்களில் பணிவிடை செய்தவர்களுக்குக் கூட அந்த அளவுக்குச் சித்தாந்தச் செந்நெறி ஆர்வம் இருந்தது.

திருமடங்களில் பணி செய்தவர்கள் தீக்கை பெற்றே இருந்தனர். பல பணியாளர், அலுவலர்கள் சிவபூசையே செய்திருக்கின்றனர். இன்றைய நிலை என்ன? திருமடங்களில் துறவிகள் எண்ணிக்கை பெருக வேண்டும். அவர்களுக்குக் கல்வியும் ஞானமும் வேண்டும் என்று திருவுள்ளம் பற்றிய தருமபுரம் ஆதீனத்தில் 25ஆவது மகாசந்நிதானமாக அருளாட்சி செய்த கயிலைக்குருமணி அவர்கள் செந்தமிழ்க் கல்லூரி கண்டு, திருமடத்தின் துறவிகளைத் தமிழ்த்துறையில் பயிற்றுவித்தார்கள். சித்தாந்த சாத்திர வகுப்புகளை நடத்தித் தத்துவப் பயிற்சியைக் கொடுத்தார்கள். அவர்களே வாய்ப்பு நேரிடும் பொழுதெல்லாம் சிறந்த உரையாடல்கள் மூலமும் ஞானசாத்திர உண்மைகளைப் புலப்படுத்தினார்கள்

திருமடங்களின் வரலாற்றில் மீண்டும் கற்றறிந்த துறவிகளைக் கொண்டு வரவும், பணிகளில் ஈடுபடுத்தவும் தருமபுர ஆதீனம் முன்வந்த வரலாற்று நிகழ்வு, ஒரு சமய மறுமலர்ச்சிக் காலம். இன்றைய இளைய தலைமுறை, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்தச் சமய மறுமலர்ச்சியை எளிதில் மறக்காது.

பொதுவாக திருமடங்களின் பணிநிலைகள் மன நிறைவைத் தரத்தக்கன என்று கூறமுடியாது. புறச்சமயங்களின் வளர்ச்சியும், சமயச் சார்பற்ற அரசின் தோற்றமும் திருமடங்க்ளின் முன்னால் பல்வேறு பணிகளை வைத்துள்ளன; அறைகூவல்களை வைத்துள்ளன. அவைகளைச் சந்திக்கக் கூடிய சக்தியை நமது சைவத் திருமடங்கள் பெற்றாக வேண்டும். சைவத் திருமடங்கள் பொருள், வாய்ப்பு, பெருமை இவற்றின் காரணமாகத் தம்முள் முரணி நிற்கும் நிலை அறவே மாற வேண்டும்.

நமது ஒப்புயர்வற்ற சிவநெறியையும் சமுதாயத்தையும் காக்கத் தோன்றிய திருமடங்கள் தமக்குள்ளேயே முரணிக் கொண்டு முறையீட்டு மன்றங்களுக்குச் செல்வது வேதனையைத் தருகிறது. இந்த முரண்பாடுகளுக்குள்ள காரணங்கள் அற்பமானவைகள்.

நமது சைவத் திருமடங்கள் அவைகளின் நோக்கத்தை நிறைவேற்றவும், காலத்தின் தேவைக்கு, கொண்டு வந்து சேர்த்திருக்கும் பணிகளைச் செய்யவும் தம்முள் தனித்தனி நிறுவன உணர்வுகளைக் கடந்து, துறந்து ஒருமையுணர்வுடன் ஓரமைப்பாக உருப்பெற வேண்டும். பல நூற்றுக்கணக்கில் துறவிகளை-தொண்டர்களைத் தயார் செய்ய வேண்டும். முறையான பணிப் பங்கீடும், நிதிப் பங்கீடும் செய்து சிவநெறியைச் சார்ந்த மக்களை, கல்வியில், தரத்தில் ஞானத்தில் உயர்த்த வேண்டும்.

நமது திருமடங்களின் நிலையில், வலிமைக் குறைவுகள் அகநிலையிலும், புறநிலையிலும் வளர்ந்து புறத்தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்து அறநிலையச் சட்டம் அவர்களைப் படிப்படியாகக் கணக்குப் பிள்ளைகளாக்கிக் கொண்டு வருகிறது. திருமடங்களின் தலைவர்கள் தம்மைத் தாமே சிறந்த கூட்டமைப்புக்கும், நேரிய நிர்வாகத்திற்கும் தணிக்கைக்கும் மேற்பார்வைக்கும் தமக்குள்ளேயே விகார உணர்ச்சிகளின்றி ஏற்பாடுகள் செய்துகொண்டு நமக்கு நாமே ஆட்பட்டுக் கொள்கின்ற நிலை உருவாகுமானால் திருமடங்களின் வரலாற்றில் அரசின் தலையீடுகளைக் குறைக்க முடியும்.

விவிலிய சமயத்தில் அரசின் தலையீடு இல்லை. ஏன்? அது அத்தகைய கூட்டாட்சி முறையை மேற்கொண்டிருப்பதே காரணம். கிறித்துவத் துறவிகள் இடமாற்றங் களுக்கும் பணிமாற்றங்களுக்கும் உரியவர்கள். அவர்களிடத்தில் வரம்புகள் வரையறுக்கப்படாத வைப்புநிதியும் இல்லை. வரையறுக்கப்படாத அதிகாரங்களும் இல்லை.

தன்னிச்சைக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நமது சமயத் தலைவர்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னிச்சைப் போக்கு கீழ்மையானது. யாருக்கும் கட்டுப்படாதது. ஏன்? தமக்குத் தாமே கூடமனசாட்சிக்குக் கூட கட்டுப்பட மாட்டார்கள்.

சுதந்திரம் என்பது துய்மையானது; உயர்ந்தது; சுதந்தர உணர்வுடையவர்கள், சொல்லும் உரிமையும் பெறுவார்கள் கேட்கும் கடமையும் பூண்பார்கள். ஆளவும் செய்வர்; ஆட்படவும் செய்வர். இத்தகு சுதந்திரம்தான் திருமடங்களுக்குத் தேவை.

தம் நெறி நிற்பார், நம்மையொத்த திருமடத்துத் தலைவர்களுடன் கலந்து பேசியும் சொல்வன சொல்லியும், கேட்பன கேட்டும் தக்காங்கு ஒத்ததறிந்து ஒழுகி, ஆளவும் ஆட்படவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு, பணிப்பங்கீடுகள் செய்து முறையாகச் செயற்பட்டால்தான் “மேன்மைகொள் சைவ நீதி” உலகம் எல்லாம் விளங்கும். இதனை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் சித்தாந்தச் செந்நெறியில் ஆர்வமுடையோர் இந்நிலை கொள்ளும் வழிவகை பற்றிச் சிந்திக்க வேண்டும்; செயற்பட வேண்டும்.

இந்தியா சமயச் சார்பற்ற ஒரு நாடு. இந்த நிலையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கடந்த காலச் சமயத் தலைவர்களும் புரோகிதர்களும் கொண்டு வந்து விட்டனர். இந்த அவல நிலை உருவாகாமல் தடுக்க தோன்றிய புத்தர், குருநானக், பசவேசர், விவேகானந்தர், வள்ளலார் ஆகிய இந்திய சமயச் சிந்தனையாளர்களுடைய தூய சமுதாய நலம் பயக்கத்தக்க கருத்துக்களை இறுக்க நிலையடைந்த பழைய சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. இவைகளின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றாத, அயல் நிலங்களில் தோன்றி வளர்ந்து வந்த சமயநெறிகளை இந்திய மக்கள் அவாவி அடையும் நிலை தோன்றிவிட்டது.

இன்று இந்தியாவில் பல சமயத் தலைவர்கள் வாழ்கிறார்கள். இன்றையச் சூழ்நிலையில் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதும், இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக விளங்குவதும், தவிர்க்க முடியாதன. அதுவே நியாயமும் நீதியும் சார்ந்த முறையாகும். ஆதலால் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதை மனித மதிப்புகளை அறிந்தோரும், சமயக் காழ்ப்பு அற்றோரும், மனித குலத்தின் அமைதியை விழைவோரும் விரும்பி வரவேற்பது கடமை.

இந்திய நாட்டின் சூழலில் மத மாற்றங்களும், மத வெறிச் செயல்களைத் தூண்டும் பேச்சும், எழுத்தும் கட்டாயமாகத் தடைசெய்யப் பெற வேண்டும். வயது வந்தோர் தமது மதமாற்றத்திற்குரிய அவசியத்தை அல்லது விளக்கத்தை முறையாக ஒரு முறை மன்ற நடுவரிடம் எழுத்து மூலம் தெரிவித்துத் தக்க காரணங்கள் இருப்பின் இசைவு பெற்ற பிறகு மாறலாம் என்ற ஒழுக்க நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

ஆட்டு மந்தைகளைப் போல மக்களை நினைத்து, ஆசைகளைத் தூண்டிவிட்டுத் தமது சமயத்தைச் சார்ந்த மக்கள் தொகையின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்தியாவில் தமது சமய ஆதிக்கத்தை, அவ்வழி சாதி இன ஆதிக்கத்தை வளர்த்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மதமாற்றங்கள் செய்ய எந்தச் சமய நிறுவனத்திற்கும் உரிமை இருத்தல் கூடாது. தொடர்ந்து இந்த மனப்போக்கை அனுமதித்தால் இந்தியாவின் புகழுக்குக் காரணமாய் அமைந்த சமயப்பொறை கெடும்; மீண்டும் உலக நாடுகளை வருத்தி வரலாற்றுக்குச் சீரழிவு செய்த சமயக் கலகங்கள் நிகழ வாய்ப்பளித்ததாகிவிடும்.

ஆதலால், உண்மையான சமய நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் இன்றைய நிலையில் இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக விளங்கச் செய்ய மனம் ஒப்பி முன்வர வேண்டும். மறைவாகக் கூட சமயப் பொறைக்கு எதிரான சிந்தனைகளை, செயல்களை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. அவரவர் தத்தம் சமயநெறியை மேற்கொண்டொழுதல், முறையாக வளர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல் நல்லது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் பிறிதொரு நாடு ஆக்கிரமித்தல் எங்ஙனம் தவறு என்று “உலக நாடுகளின் பேரவை” விதிகள் இயற்றியுள்ளதோ அதுபோலச் சமய நெறிகளும் பிறிதொரு சமயத்தை மேவி அமுக்குவதில்லை; சமயக் கருத்துக்களில் கலப்படம் செய்வதில்லை என்ற நியாயத்திற்கு உடன்பட்டு வரவேண்டும்.

இன்று உலக நாடுகளின் அரசியல், ஆட்சி உரிமைகள், பொருளியல் காரணமாக நாடுகளிடையில் மோதல்கள் வராமல் தடுக்கும் பணி இதன் பணி வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்கின்றன. இந்த உலக நாடுகள் பேரவையின் பணியால் பதட்டநிலை கட்டுப்படுத்தப் படுகிறது. அதுபோல உலகச் சமயங்களின் பேரவை சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். பல உறவுகளை வளர்க்க வேண்டும். காலப்போக்கில் உலகப் பொதுச் சமயம் காண வேண்டும். சமய நெறித் தலைவர்கள் இது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். உலகச் சமயப் பேரவை தோன்றின் மனித குலம் மேம்பாடுறும்.

இன்று உலகம் பதற்ற நிலையிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படைகளைப் பெருக்கி வளர்க்கிறது. சில விநாடிகளில் மனித உலகத்தை-உயிரினங்களை அழிக்கக்கூடிய அணு ஆயுதங்களைச் செய்து குவிக்கிறது. இந்த நிலையில் சமய நெறிகள் வாளாயிருக்குமாயின் சமய நெறிகளால் மனித குலத்திற்கு யாது பயன்? இங்ஙனம் சமய நெறிகள் தம்முள் ஒத்ததறிந்து செயற்படாமையின் காரணமாகவும் மனிதகுல மேம்பாட்டுக்குச் சமயநெறி முழுமையாகப் பயன்படாததன் காரணமாகவும் ஏமாற்றம் அடைந்த சிந்தனையாளர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத் வாழ்க்கை நெறிகளை, சமயம் சாராத வாழ்க்கை நெறிகளை, தத்துவங்களைக் கண்டு வருகின்றனர். இந்த அணிக்கு மார்க்சியம் தலைமையேற்றுப் பீடு நடைபோட்டு வருகிறது.

கிறித்துவ சர்ச்சுகளின் ஏகபோகத்தை-மக்கள் மன்றத்திலிருந்த தடையிலாச் செல்வாக்கை “புதுயுகப் புரட்சி” கண்ட சோவியத்துச் சமுதாயம் தடுத்து நிறுத்தி, சர்ச்சுகளிடமிருந்து மக்களைப் பிரிந்து எடுத்துச் சென்று புதிய வாழ்க்கை முறைக்கு ஆயத்தம் செய்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கு நாம் இப்பொழுது வரவில்லை.

“கடவுள் நம்பிக்கையில்லாமல், சமயம் சார்ந்த சீலமில்லாமல், ஒரு பொதுமைச் சமுதாயத்தை அமைத்து மானுடச் சாதியை இன்பமாக வாழ வைக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஓரளவு மார்க்சியம் தந்துள்ளது. வரலாற்றுப் போக்கிலும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. ஆயினும், பொது வுடைமைச் சமுதாயத்தில் எல்லா நலங்களும் எய்திய பிறகும்கூட, ஏற்படும் மனிதக் குறைபாடுகளுக்கு என்ன மாற்று? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. உலகியல், பொருளியலைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை சரியானது என்றே நாம் கருதுகின்றோம்.

சிவநெறியில் உள்ள கடவுட் கொள்கை நீங்கிய பகுதி, பொதுவுடைமை என்று பெயர் பெற்றுள்ளது என்று கூறினாலும் தவறன்று. மார்க்சீயம், கடவுளால் உயிர்களும், உலகமும் படைக்கப்பட்டன என்ற கொள்கையுடைய சர்ச்சு மதத்தைச் சந்தித்தது. சைவசித்தாந்தம் சொல்லும் உயிர் நிலைக்கும் மார்க்சீயத்துக்கும் வேறுபாடு பெரிதன்று. மனிதனைவிட மேம்பட்ட ஒன்றை மார்க்சீயம் ஏற்பதில்லை. சைவ சித்தாந்தம் மனிதனை மேம்பாடுடையவனாகவே தான் காண்கிறது.

பல ஆண்டுகள் சோவியத் புரட்சித் தொண்டர் படையில் பணி செய்து பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, பொதுவுடைமைத் தத்துவத்தைப் பொருத்தி, அழித்துவிட எண்ணிய நாசிசத்தை - பாசிசத்தை எதிர்த்து, வெற்றிவாகை சூடிய வீரன் “ஸ்டாலின்” வாழ்க்கையில் ஏற்பட்ட பின்விளைவுகள் என்ன? இரண்டாவது உலகப் பெரும்போரில் ஸ்டாலின் பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் தன்னிச்சைப் போக்காக நடந்து கொண்டார்.

பொதுவுடைமைக் கொள்கையின் இன்றியமையாத ஒழுக்க நெறிகளாகிய கூட்டுச் சிந்தனை, கூட்டுச்செயல் ஆகியவற்றினின்றும் முறை பிறழ்ந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அவருடைய மரணத்திற்குப் பிறகுகூட உயர்தரக் கல்லறையிலிருந்து அவருடைய பிணம் பொதுவுடைமைக் கட்சியினாலேயே அகற்றப் பெற்றது. இந்த விளைவுகளை உற்றுநோக்கின் சைவசித்தாந்தம் கூறும் ஆணவம்-இல்லை என்று கூற யாருக்கு மனம் வரும்? உயிர் இயல்பில் ஆணவச் சேர்க்கையுடையது.

ஆணவம், உயிரைத் தன்னிச்சைப் போக்கிலும் அகங்கார வழியிலும் செலுத்தும்; அதன் காரணமாக உயிர் கீழ்மையுறும். சூழ்நிலைகளின் காரணமாக ஆணவம் தோற்றப்படாதிருந்தாலும், செயற்படாதிருந்தாலும் சூழ்நிலைகள் மாறும்பொழுது உயிரின் ஆணவ இயல்பு மேலிட்டுச் செயற்பாட்டுக்கு வரும். இதனை உணர்ந்து என்றும் உயிரை, உணர்வை கடவுள் என்ற தலைவனுக்கு ஆட்படுத்தி வைப்பது தற்காப்பாகும் என்ற சித்தாந்தச் செந்நெறியின் கருத்து ஆராய்தற்குரியது.

பொதுவுடைமைக்கொள்கையின் குறை-நிறைகளை ஏற்றுக் கொண்டு ஈடுகொடுத்துச் சமய நெறியை வளர்க்கச் சமயங்கள் முன்வரவில்லை. எனவே மனித குலத்தின் பொது நன்மை கருதியும் சமயப் பண்புகளைக் காக்கவும் “உலகச் சமயங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனம் காணவேண்டும். அது காலத்தின் தேவை. இத்தகு பொற்காலமே சித்தாந்தச் செந்நெறி படைக்கும் தகுதியுடையது. அந்தப் பொற் காலத்தை எதிர்பார்ப்போமாக!”

சைவ சித்தாந்தத்தில் வாழ்க்கை அருமையானது. சைவ சித்தாந்தத்தில் சாதிகள் இல்லை; சிறந்த மனையறம் போற்றப் பெறுகிறது. பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பே சைவ சித்தாந்தச் செந்நெறி! சைவ சித்தாந்தத்தின் தத்துவம் செயலுருக் கொள்ளுமானால் வையகம் இன்புறும்! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

சிவ சிவ