குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சைவ சித்தாந்தத் தத்துவம்

விக்கிமூலம் இலிருந்து

2. சைவ சித்தாந்தத் தத்துவம்


உயிர்த் தொகுதி பலப்பல. உயிர்களின் தோற்றத்திற்குப் பல நூறாயிரம் வாயில்கள். உயிர்களைத் தமிழர் ஐவகைப் படுத்தினர்; மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது தமிழர் கொள்கை; தொல்காப்பியர் காலத்துக் கொள்கை என்பதை மறவற்க இக்கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டது அண்மைக் காலத்தில்தான்! ஆனால் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “மரம் செடிகளும் உயிருடையனவே; ஆயினும் இயக்கக் குறைவு உடையன” என்று கண்டுணர்த்தினார் தொல்காப்பியர்.

புல்லும் மரமும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொல். மர.28-33)

இந்தப் படிமுறை, அறிவு வளர்ச்சிகளின்பாற்பட்டன.

ஆறறிவுடைய மானுடப் பிறவி அறிவியக்கத்தின் இன்றைய கடைசி எல்லை.

ஆனாலும், ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள நிலைகளில் உணர்ச்சிகள் இல்லை; செயல் இல்லை; காதல் இல்லை; பிறவியின் பயனாகிய வீடுபேறு இல்லை என்று கூறுதல் உண்மைக்கு மாறானது. இவையெல்லாம் மக்கட் பிறப்பல்லாத பிற உயிர்களுக்கு உண்டு. ஆனால், சில வரையறைகள் இல்லாமற் போகலாம்; செழுமையாக - விளக்கமாகத் தோன்றாமலிருக்கலாம். ஏன்? ஞானத்தின் பயனாகக் கிடைக்கக்கூடிய வீடுபேறுகளும் கூட, செடிகளும், பறவைகளும், விலங்குகளும் பெற்றுள்ளன. “முள்ளிச் செடிக்கு வீடுபேறு கொடுத்த வரலாறும்”, “கரிக்குருவிக்கு உபதேசித்த வரலாறும்”, “சிலந்தியும், யானையும் பூசித்து வீடுபேறுற்ற வரலாறும்” எண்ணத்தக்கன. அவைகளுக்குள்ள ஒரே குறை, செல்லுழிச் செல்வதோடு சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமையும், காரண காரியங்களை ஆராய்ந்து அனுபவத்திற்குக் கொண்டு வரும் தகுதியில்லாமையும் ஆகும். ஆனால் இவையெல்லாம் மானிடனுக்கு உண்டு.

மானிடர் சாதி, துன்பங்களைச் சந்தித்துச் சந்தித்துப் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. குறையிலிருந்து நிறையும், தீமையிலிருந்து நன்மையும், துன்பத்திலிருந்து இன்பமும் தோன்றுதல்தான் வளர்ச்சியின் படி முறை, இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளவை அறிவு அறியாமை என்பன. இந்த அறியாமை, அறிவிலிருந்தும் தோன்றுவதாகும். ஒன்றை, நன்றாயினும் தீயதாயினும் உள்ளவாறு அறிதல் அறிவு. அறிந்ததற்கேற்பத் தீமையிலிருந்து விலகி, நன்னெறியில் நிற்றல் ஒழுக்கம். அறிவு என்பது பயன்படும் ஆற்றலால் உடைமை போலக் கருதப் பெற்றாலும் அதுவும் ஒரு தொழிற் கருவியேயாம். இந்தப் படி முறை வளர்ச்சிகளில் மானிடச் சாதி தம் சீரான வாழ்க்கைக்கும், சிறப்புடைய வாழ்க்கைக்கும் கண்டதே சமயம்.

“சமயம்”, “மதம்” என்ற சொல் வழக்குகள் பழங்காலத்தில் இருந்ததில்லை. மணிமேகலை “சமயம்” என்ற சொல்லைக் கொண்டு வருகிறது. மதம் என்ற சொல்லை “மாணிக்கவாசகர்” எடுத்தாண்டுள்ளார். நன்னூலில் மதம் என்ற சொல் கொள்கை அடிப்படையில் எடுத்தாளப் பட்டுள்ளது. பின்னால் தோன்றிய கொள்கைகளில் பெரும் பாலானவை கடவுள், ஒழுக்கம் போன்றவைகளோடு மிகுதியும் சார்ந்திருந்ததால் இவைகளை மதம் என்ற சொல்லால் அழைப்பது பெருவழக்காயிற்று. பின், மதம் என்ற சொல்லில் உணர்த்தப் பெறும் பொருள் இறுக்கமான பிடிப்பு, வெறி ஆகியன மேவியதால் தூய இனிய சொல்லாகிய சமயத்திற்கு வந்தன. மதம், சமயம் என்ற இரண்டு சொற்களையுமே கூட நமது திருமுறை ஆசிரியர்களும் சாத்திர ஆசிரியர்களும் சிவநெறியைக் குறிக்கப் பெருவழக்காக எடுத்தாளாமையே சான்று. திருமுறை ஆசிரியர்கள், “திருநெறி”, “நன்னெறி”, “அருள்நெறி”, தவநெறி என்றே மிகுதியும் குறிக்கின்றனர். சமயத்திற்கு ஒரு குறிப்பிட்ட சொல் வழக்காகத் தமது சாத்திர நூலில் மெய்கண்டார் “நெறி” என்ற சொல்லையே கையாளுகிறார். அருணந்தி சிவம், சமயம் என்ற சொல்லைக் கையாளுகிறார். இனி, “சமயம்” என்ற சொல்லை நாம், சிவநெறி, சைவ சமயம் என்ற கருத்தில் கையாளலாம்.

உலகம் முழுதும் வாழ்ந்த மானிடர் சாதி தத்தம் வாழ்க்கைப் படிப்பினைகள் மூலம் சில வாழ்க்கை நியதிகளைக் கண்டுள்ளது; அறநெறிகளைக் கண்டு ஆற்றுப் படுத்தியுள்ளது; நிலவுலகத்தில் நீதி நின்று நிலவ முயன்று பணி செய்துள்ளது. இவை அனைத்தும் வாழ்க்கைப் படிப்பினைகளின் வழியே உருப்பெற்றன. மனித குலத்தை இன்ப நெறியில் ஆற்றுப்படுத்த வாழச்செய்ய அறமும், அறத்தினைச் சார்ந்த நீதியும் தேவை. இவையே இன்ப வாழ்க்கையின் மூலங்கள்; அடித்தளங்கள்; மனிதகுலத்தை அறநெறியில்-நீதி தழுவிய நிலையில் வாழும்படி வலியுறுத்தி நெறிப்படுத்த சமய நெறிகள் தோன்றின; அறந்தழுவிய வாழ்க்கையின் பயன்களை எடுத்துக் கூறின; அறநெறி பிறழ்ந்த வாழ்க்கையால் அடையும் அவலங்களையும் எடுத்துக்கூறி அச்சுறுத்தின; மனித குலத்தில் இயல்பாக அறநெறி பிறழ்ந்த வாழ்க்கைமுறை மேவிய பொழுது-கடவுள் பெயரால்-சொர்க்கம்-நரகம் என்ற முறையில்-முறை பிறழ்வைத் தடுத்து நிறுத்தி-அறநெறியில் நிலை நிறுத்த முயன்றபோது-சமயம் கால்கொண்டது. சமய நெறி தோன்றிய உடன் நல்ல பயன் கிடைத்தது. ஆனால் காலப் போக்கில், சமயநெறி சமுதாயத்தை அறநெறியில் - நீதிநெறியில் நிறுத்தும் ஆற்றலை இழந்தது. அதற்கு மிகுதியும் காரணம் மக்கள் தொகுதிகள் அல்ல. சமயநெறியை மையமாகக் கொண்டு வழிநடத்தத் தோன்றிய சமயம், சமய நிறுவனங்களின் வடிவம் பெற்றதுதான் காரணம். ஒரு இயக்கத்திற்கு, இருக்கும் ஆற்றல் நிறுவனங்களுக்கு இருத்தல் இயலாது; இருக்காது. சமயம் நிறுவனங்களான உடன் சமயத் தலைவர்கள்-அறநெறி புரோகிதர்கள் தோன்றி விடுவர். அவர்கள் மனித குலத்தை மையமாகக் கொண்டு சிந்திப்பதில்லை. தம் சமய நிறுவனம் தற்சார்பு ஆகிய சுழிகளில் சிக்கி அல்லற்படுவர்.

இங்கனம் சமய நெறி இயக்க நிலையில் இருந்து நிறுவனம் ஆகி முடம்பட்டுப்போன நிலையில் மனித குலத்தை நீதிநெறியில் நிறுத்த, சமய நெறி அறநெறியின் சாராத-தொடர்பில்லாத அறநெறியை, நீதியை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர அரசியல் தோன்றியது. அரசியலின் தொடக்க காலத்திலேயே, சென்ற கால நடைமுறைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அறநெறி, நீதி ஆகியவற்றின் அவசியத்தை மிகுதியும் வற்புறுத்த எண்ணி, அறநெறியில் நிறுத்தும் முயற்சிகளை உறுதியாக எடுப்பதற்கு மாறாக நெறி பிறழின் தண்டனை வழங்குதல் என்ற முறையை வழியாகக் கொண்டது. இது கழுதைக்குப் பயந்து புலியிடத்தில் சிக்கியது போலாயிற்று. மாந்தர் நெறி பிறழ்ந்ததோடல்லாமல் அச்சத்திற்கும் ஆட்பட்டனர். அதன் விளைவாகக் காண்பதற்கும், அறிதற்கும் எல்லைகளுடைய அரசனிடத்திலிருந்து தப்ப மறைவாகத் தடம் பிறழ்ந்தனர். ஒட்டு மொத்தமாக வரலாற்றின் பயனை நோக்கில், அறநெறி, நீதிநெறி இவைகளிலிருந்து விலகிச் செல்லும் போக்கே வெற்றி பெற்றுள்ளது. சமய இயலும் அரசியற் சார்புடைய ஆட்சியிலும் போதிய பயனைத் தரவில்லை. இதற்குக் காரணம் சமய நடைமுறைகளில், அரசியல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளேயாம்.

சமயநெறிகளின் படிமுறை வளர்ச்சிகளில் தோன்றிய குறைகளுக்குத் துணை போகாத நிறை நலம் சான்ற சமயத்தை, உலகு துணிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாடு, இனங்களின் காரணமாகவும் பழக்கங்களை விடாப்பண்பின் காரணமாகவும் அறிவு ஆய்வில் ஆர்வமின்மையின் காரணமாகவும் சமய நெறியாளர்கள் கணக்கர்களாக மாறித் தத்தம் எல்லைக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டு உயர் சமய நெறியின் இயல்பையே கெடுத்து விட்டனர். உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாமே நன்னோக்கம் உடையனவே நோக்கத்தில் யாதொரு குறையுமில்லை. ஆனால், அனுபவங்கள் வேறுபடத்தானே செய்யும்! படிப்பினைகள் காரணமாகப் பெற்ற பாடத்தில் செறிவும், செறிவின்மையும் இல்லாமலா போகும். இவற்றை ஒப்பு நோக்கிக் காலத்திற்குக் காலம் உள்ள நெறியை, தேவையான புதுமையை எடுத்துக் கொள்வதற்குச் சமய நெறியாளர்கள் தயங்குகின்றனர். இத் தயக்கங்களின் காரணமாகவே உலகப் பொதுச் சமயம் தோன்றாது போய் விட்டது; உலகளாவிய மனித குலத்தை ஒருங்கிணைக்க முடியாமற் போய்விட்டது. இந்த இனிய பணியைச் சமய நெறியாளர்கள் ஏற்றுச் செய்யாமையின் காரணமாக வாழ்க்கையாகவே இருந்த சமயம், வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒதுக்கப் பெற்றுவிட்டது. அதுவும் ஒரு சிறு விழுக்காட்டினருக்குத்தான். இன்றைய நடைமுறை உலகில் வளர்ந்துள்ள ஒழுக்கக் கேடுகள், காவல் தன்மைகள், பண்பாட்டுச் சிதைவுகள், போருணர்ச்சிகள் இவைகளை யெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டதால் நடைமுறை உலகத்திற்கும், சமயத்திற்கும் சம்பந்தமில்லை. உலகம் முழுதும், பெரும்பான்மையான மக்கள் வேறுவேறு பெயரில் கடவுளை நம்பி வழிபடத்தான் செய்கின்றனர். சர்ச்சுகளும் மசூதிகளும், திருக்கோயில்களும் உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவைகளில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மானிடச்சாதி பகைமை அரிப்பில் உள்ளீடு அழிந்துகொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் உலகியலை மையமாகக் கொண்ட சாமர்த்திய விளையாட்டு! இந்தச் சாமர்த்திய உலகில், வேறு உலகைக் காட்டுவதாகச் சொல்லும் மதத் தலைவர்கள் கூட திறமையாகத்தான் ஈடுபடுகின்றனர். அவர்களிடத்திலும் கூட, விளையாட்டுக்கள் நிர்வாணமான விளம்பரப் போக்குகளாகக் காணப்படுகின்றன.

உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப் பெறும்!

(புதிய ஏற்பாடு: லூக்காஸ் 14:34)

என்று விவிலியம் கூறும். இந்த இரங்கத்தக்க நிலைமைக்கு இன்றையச் சமய உலகு வந்திருக்கிறது. அன்பு கூர்ந்து சிந்தனை செய்மின் ! அண்டங்களை, கண்டங்களை இன்று சாலைகள் இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மானிடச் சாதியின் நெஞ்சங்களை, நெறிகள் இணைத்து வெற்றி பெறவில்லை. நாடுகளைக் கடந்தும்கூட மானிட உலகத்தை இணைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானிட உலகத்தின் தேவைக்குச் சமயத் தத்துவங்களைச் செழிப்பூட்ட வேண்டியிருந்தால் பழையன கழித்துப் புதியன சேர்த்துச் செழிப்பூட்டப் பற்றும் பாசமும் தடையாக இருத்தல் கூடாது.

உலகச் சமயங்கள் அனைத்தும் போற்றுதலுக்குரியன. அச்சமயங்களைக் கண்ட தலைவர்களை நாம் உளமாரப் போற்றுகின்றோம். பிறப்பு-அவ்வழிப்பட்ட பழக்கம் காரணமாகச் சமயநெறிகளை ஏற்றுக்கொள்ளுதல் நன்றன்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை, நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; நல்லெண்ணத்திற்குரியதாக இருக்க வேண்டும்; மானிடச் சாதிக்கு நிலையான இன்ப வாழ்வை வழங்குவதாக இருக்க வேண்டும். இது நம் கொள்கை ஏற்புக்குரிய அடிப்படை அளவுகோல். இந் நிலையில் நின்று ஆராய்ந்தால் தமிழகத்தில் தோன்றிய சித்தாந்தச் சிவநெறி வளர்ந்த தத்துவச் செழுமையுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; சித்தாந்தச் செந்நெறி இன்னும் சமயநெறியாளர்களால் முழுமையாக ஆய்வு செய்யப் பெறவில்லை; அதனுடைய தெளிவான கொள்கை, கோட்பாடுகள் மக்களிடத்தில் விளக்கம் செய்யப் பெறவில்லை; ஏன்? அதுவே கலப்புகளின் காரணமாக மறைக்கப்பட்டுள்ளது. நடுநிலை நெஞ்சத்தோடு சித்தாந்தச் செந்நெறியை ஆராயுங்கள்! விவாதம் செய்யுங்கள்! தேர்ந்து தெளியுங்கள்! தெளிவான முடிவுகளைச் செயற்படுத்துங்கள்.

சித்தாந்தச் செந்நெறியை ஆராய்தறிந்துணர்ந்த மேனாட்டறிஞர்கள் அதைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள்,

“as the Choicest product of the Dravidian intellect.”
“This System possesses the merits of great antiquity; in the religious world it is heir to all that is most ancient in Southern India. It is a religion of the Tamil people by the side of which other every form is of Comperatively foreign origin. As a System of religious thought as an expression of faith and life, the Saiva Siddhants is by far the best that South India possesses; indeed it would not be rash to include the whole of India and to maintain that judged by its intrinsic merits, the Siddhants represents the high water mark of Indian thought and Indian life.” என்று பாராட்டியுள்ளார்.

இந்தச் சைவ சித்தாந்தச் செந்நெறியைத் தந்த முதல் நூலாகிய சிவஞானபோதத்திலிருந்து சில வழி நூல்கள் விலகிச் சென்றிருக்கின்றன; இது உண்மை. வழிநூலாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் சமுதாய அமைப்பும், நடைமுறைகளும், அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. நெருக்கடியைத் தந்து-காலச் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டுத் தள்ளியிருக்கின்றன. சமுதாய நெருக்கடிகள் அல்லது பழக்கக் கொடுமைகள், சிறந்த அறிஞர்களைக் கூட பாதிப்புக் குள்ளாக்கித் தம் வழி நிறுத்த முயன்று வெற்றி பெற்றதுண்டு. வரலாற்றில் இங்ஙனம் தோற்ற அறிஞர்களின் எண்ணிக்கை மிகுதி, வெற்றிபெற்றவர்கள் மிகமிகச் சிலரே. உண்மையின் பக்கத்திலேயே நின்று வழக்காடி-முரட்டுத் தனமாக உலகியலிற்குப் பலியானவர்கள் ஒரு சிலரேயாம்.

திருக்குறள், திருமுறைகள், மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதம் ஆகியவை உண்மையின் பக்கமே நின்ற நூல்கள். காலத்தைவென்று விளங்கும் நூல்கள். சித்தாந்தச் செந்நெறி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு வளரவில்லை; தத்துவச் செழிப்பிலும் வளரவில்லை; தேக்கம்தான். ஏன்? உயிர்ப்புள்ள வாழ்வுக்கெல்லாம் உயிராக அந்நெறி நின்றோர், பிறழாது பிழைப்பு நடத்தியதால்தான் சைவ சமய நெறியாளர்கள் சிந்தனைப் போக்குக்கு எல்லை கட்டிக் கொண்டு-கோட்டை கட்டிக்கொண்டு பின் தோன்றிய சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டனர்; புறக் கணித்து வருகின்றனர். சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தோடு திருமுறையுகம் முற்றுப் பெறுகிறது. உமாபதி சிவம் இயற்றிய சாத்திர நூல்களுடன் சித்தாந்த சாத்திர யுகம் முடிகிறது. இவைகளை விளக்குவனவாகப் பின்னே சில தோன்றியிருக்கின்றன. ஆனால் அவைகள் முன்னர்க் கூறியவற்றை, விளக்கும் பணியில் ஈடுபட்டனவே தவிர ஆய்வில் ஈடுபடவில்லை. இச்சமயநெறி தோன்றிய பின் உலக அரங்கில் தோன்றியுள்ள கிறித்துவம், இசுலாமியம் போன்ற சமயநெறிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றில் ஏற்பனவற்றை ஏற்கவோ, அவைகளுக்கு வழங்க வேண்டியவற்றை வழங்கவோ சித்தாந்தச் செந்நெறி இயக்கங்கள் முயற்சியெடுத்துக் கொள்ளவில்லை. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாமுனிவன் கார்ல்மார்க்ஸ் மனித உலகத்திற்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளான். நம் சைவ சித்தாந்தச் சொற்பொழிவில், கடவுள் நம்பிக்கையில்லாத-"மதம் மக்கட்கு அபின்” என்று கூறிய கார்ல்மார்க்சை “மாமுனிவன்” என்று குறிப்பிடுகிறோமே என்ற வினா எழலாம். கார்ல்மாக்சை மாமுனிவர் என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். இன்று உலகியலில் மெய்ப் பொருளியலை ஆராய்ந்தறிந்து முடிவுக்கு வரவேண்டுமென்றால் மார்க்சீயத்தை ஆராயாமல் எடுக்கப்பெறும் மெய்ப்பொருள் பற்றிய முடிவுகள் குறையுடையனவேயாம். இந்த ஆய்வைச் சமயநெறியாளர்கள் நிகழ்த்த விரும்பாமல் மார்க்சீயத்தை நாத்திகம் என்று ஓதுக்குகின்றனர்; பயமுறுத்துகின்றனர்! அது பெரும்பிழை. மார்க்சீயத்தைச் சந்தித்துத் திறனாய்வு செய்து மார்க்சீயம் விரும்புகின்ற வேறுபாடற்ற சமுதாயத்தைச் சமயம் படைக்கும் என்ற தெளிவைத் தரவேண்டும். அருள்நந்தி சிவம், மார்க்சீயத்தில் முற்கால வடிவமாகிய உலகாயதத்தைத் திறனாய்வு செய்து மறுத்துள்ளார். ஆயினும், அது உலகாயத்தின் மறுப்புரையாக மட்டும் விளங்குகிறதே தவிர நடைமுறைக் குறைகள் நீக்கத்திற்குரிய விளக்கம்தரப் பெரிதும் முயலவில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் பழைய நாகரிகத்தின் தலைநகரமாகிய மதுரையில் நிலைபெற்றுள்ள ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் நெறியில்-சிவ நெறியில் நாட்டுப்பணியில் ஈடுபட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வ.உ.சி. புகழ் பரப்பும் ‘தமிழவேள்’ ஏ.பி.சி, வீரபாகு அமைத்த அறக்கட்டளையின் சார்பில் சித்தாந்தச் செந்நெறியைப் பற்றிப் பேசுகின்றோம். நம்முடைய பேச்சு சமய நெறியளார்களுக் கிடையில் சிந்தனையைத் தோற்றுவிக்குமானால், அறிவாராய்ச்சியைத் தொடங்கி வைக்குமானால் அதுவே நாம் விரும்பும் பயன். நம்முடைய பேச்சைகருத்தை மறுப்பின்றி ஏற்க வேண்டும் என்பது நமது நோக்கமன்று! விருப்பமுமன்று; ஆராய்ச்சி செய்யுங்கள். அதுவே போதும்-சார்பின்றி-பற்று-பாசமின்றி-அறிந்து உண்மையை நாடிக்காணவேண்டும் என்று விரும்பி ஆராயும் உலகம் - உண்மையைக் காணுதல் இயற்கை என்ற நம்பிக்கை நமக்கு மிகுதியும் உண்டு.

சித்தாந்தச் செந்நெறிக் கருத்துக்கள் முழுமையான நூல் வடிவம் பெற்றது மெய்கண்டார் காலத்தில் ஆனாலும், சித்தாந்தச் செந்நெறியின் கருத்துக்கள் தொன்மையானவை; பழைமையானவை. சித்தாந்தச் செந்நெறி, அறிவாராய்ச்சி அடிப்படையில் தோன்றி உள்ளார்ந்த அருளனுபவம் வழி செழித்து வளர்ந்த-நெறி. சித்தாந்தச் செந்நெறியின் முதலாசிரியன், “ஆலமலர் செல்வனே” யாம். “சித்தாந்தம்” என்ற சொல்லுக்கே “முடிந்த முடிபு” என்று பொருள். இனிமேல் கேள்விகள் கேட்க முடியாவண்ணம் சிந்தனையின் உச்சவரம்பை எட்டியது சித்தாந்தம் என்பர். அறிவியலாராய்ச்சிக்கு இங்ஙனம் கூறுதல் இயைபன்று. ஆயினும் சித்தாந்தச் செந்நெறி, கண்டு உணர்த்தியுள்ள முடிவினை மறுத்துப் புதிய முடிவுகளைக் காண்பார் யாரும் இதுவரையில் தோன்றவில்லை. சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்களும்கூட பெயரளவில் வாழ்ந்தனரேயன்றி உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடவில்லை. அதனால் புதுமைகள் தோன்ற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

சமய நெறிக்கு எதிராகச் சிந்தித்தவர்களும்கூட பொதுவுடைமைக் கொள்கையாளர் உள்பட - சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை அணுகி ஆராய்ந்து மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் அளவுக்குச் சித்தாந்தத் செந்நெறியின் செயற்பாடும் இல்லை.

சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையின் அடிப்படை “உள்ளது போகாது, இல்லது வாராது” என்பது. இஃது அடிப்படையான வாய்பாடு. சித்தாந்த நெறியினர், “என்றும் உள் பொருள்களாக மூன்று உள” என்ற அடிப்படையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். அப்பொருள்கள் முறையே இறை, உயிர், தளை என்பன. இம்மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்ல; அழிவனவுமல்ல. இவை மூன்றும் என்றும் நிலையாக உள்ள பொருள்கள் என்பது சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை, இந்த அடிப்படைக் கொள்கையின் மூலமாகவே சமய நெறி எதிர்ப்புக் கொள்கைகள் பல சரிந்து போகும். அவை எங்ஙனம் சரிகின்றன என்பதைப் பின்னால் விளக்குவோம்.

இம்மூன்றில் முதற் பொருள் இறை-கடவுள். சித்தாந்தச் செந்நெறி, கடவுளைச் “சிவம்” என்று பாராட்டும், சிவம் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய “சைவம்” என்ற சொல் மணிமேகலை காலத்தில் தொடங்கி வழங்கி வருகிறது. அதன் பின்னெழுந்த இலக்கியங்களில் ‘சிவம்’ என்ற சொல் பெருவழக்காகப் பயிலப் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை உள்ளடக்கிய சொல் கடவுள் என்பது. கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் “உலகத்தைக் கடந்தும், உள்ளி ருந்தும் இயக்குதல்-நடத்துதல்” என்பதாகும். கடத்தல் என்பது இடத்தைக் கடப்பது; காலத்தைக் கடப்பது; பொருளின் தன்மைகளைக் கடப்பது என்று பொருள் தரும்; கடவுள் எந்தப் பொருளின் எல்லையிலும், எந்த நாட்டின் எல்லையிலும் அடங்கியதல்ல. நாடுகளைக் கடந்து நாட்டின் எல்லைகளைக் கடந்தது கடவுள் என்பதனை:

தென்னா டுடைய சிவனே, போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

(திருவாசகம் திருவெம்பாவை 164-165)

என்ற அருள் மொழியாலறிக.

அடுத்து, காலத்தைக் கடப்பதென்பதற்கு, காலம் தாழ்த்தல் என்பது பொருளன்று. அவர் தோன்றிய காலமும், மறையும் காலமும் இல்லை. அது மட்டுமன்று கால எல்லைகளுக்குபட்பட்டு நிற்றலுக்குரியவையாகிய பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் ஆகியவைகளும் அவர்க்கு இல்லை. இந்தக் குறிப்பினைக் காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்காக!! என்ற வரலாற்றுக் குறிப்பால் உணர்க.

காலனைக் காலால் காய்ந்த கடவுள்

(அடங்கன்முறை 6580)

என்று அப்பரடிகள் போற்றுவார்.

மாணிக்கவாசகப் பெருமான், காலம் கடந்தவன் இறைவன் என்பதை இறைவனின் பழைமையை உணர்த்தும் பொழுதுகூட, கால எல்லையைச் சுட்டாமல்,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே...

(திருவாசகம், திருவெம்பாவை. 163)
என்றும்,

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்.....
(திருக்கோவை. 312)

என்றும் அருளிச் செய்தமை அறிக, மூன்றாவது, பொருள்களின் தன்மையைக் கடத்தல், அதாவது பொருள்களின் இயல்புகளில் அடங்காமல் அவற்றின் இயல்புகளையும் கடந்து நிற்றல். அதாவது வண்ணம், வடிவு அளவு, சுவை ஆகிய எல்லையினையும் கடந்து நிற்றல் என்பதாகும். இங்ஙனம் கடந்து நின்றாலும் அவ்வப்பொருளில் தன் நிலை கெடாமல் நின்றருளி இயக்குகின்றமையால் புறத்தேயும் உளன்; அகத்தேயும் உளன் என்ற வழக்குத் தோன்றியுள்ளது. இறைவன் பொருள்களைக் கடந்தே நின்றால் உலகுக்கும் உயிர்களுக்கும் பயனே இல்லாமற் போகும். பொருள்களின் எல்லைக்குள்ளும், தன்மைக்குள்ளும் உள்ளடங்கியே இருக்குமானாலும் புதுமையாகாது; சிறுமை தோன்றும், ஆக்கத்திற்கும் பயன்படாது. ஆதலால் எல்லாமாய் அல்லதுமாய் இறைவன் விளங்குகின்றான் என்று சித்தாந்தம் கூறுகின்றது. அதனாலன்றோ சித்தாந்தச் செந்நெறி இறைவனை எட்டுருவினன் என்று உணர்த்துகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் இவற்றொடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான். இதனை மாணிக்கவாசகர்,

நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகேழ் எனத்திசை பத்துஎனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

(திருவாசகம் திருத்தோணோக்கம். 5)
என்பார். சித்தாந்தச் செந்நெறி உணர்த்தும் கடவுள், சிவம். சிவம் என்பது வள்ளுவம் கூறிய கடவுள் வாழ்த்தில் உள்ளபடி,

“தனக்குவமை” இல்லாதவன் “எண்குணத்தான்”.

எண்குணத்தான் என்பது,

தன்வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கை
உணர்வினனாதல், முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை,
முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை

எனும் எண் குணங்களுடையவன் என்பதாகும்.

கடவுள் உண்மையை விளக்கப் புகும் மெய்கண்டார், “அவன், அவள், அது” என்ற நூற்பாவில், முத்தொழிற்படுதலால் இறைவன் உண்டு என்பதும், எந்த ஒன்று தொழிற் பட்டாலும், தொழிற்படுத்தும் ஒருவரை அவாவி நிற்கும் என்பதும் நியதி என்பதைச் சுட்டுகிறார். இந்நூல் வழி, சித்தாந்த சைவம், கடவுளை நம்புகின்ற சமய வரிசையில் நிற்கிறது.

அடுத்து சித்தாந்த சமயம் கடவுளுக்குச் சொல்லும் சிறப்பு அவன் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை என்பது. சித்தாந்திகள் கடவுளின் அவதாரங்களுக்குக் கூட உடன் படுவதில்லை. இதனைத் திருவாசகம்,

தாயுமிலி தந்தையிலி தான் தனியன்

(திருச்சாழல்-3:2)
என்று பாராட்டும். சித்தாந்திகள் கொள்கைப்படி உலகிற்குத் தலைவன் கடவுள். ஆனால் செயற்கையாலன்று. இயற்கையின் வழி, நிறை நலம் நோக்க அவாவுதலின் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறியில் உயிர்களுக்குத் தலைவன் கடவுள். அவன் ஆண்டானும் கூட அங்ஙனம் அவன் தலைவனும் ஆண்டவனும் ஆதல் கூட உயிர்கள் விரும்பி ஆட்படுவதற்காகவே தவிர, நிர்ப்பந்தமாக அடிமை கொள்வதற்காக அல்ல. இதனை மாணிக்கவாசகர்,

ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

(திருச்சதகம். 82)

என்பார். சித்தாந்தச் செந்நெறிகளின்படி கடவுள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படுவோன் அல்லன். ஆதலால் விருப்பு வெறுப்புகள் மிகுதியும் உடைய உலகியல் நிகழ்வுகள், உயிர்களின் நிகழ்வே தவிர கடவுளின் நிகழ்வுகள் அல்ல. அந்நிகழ்வுகள் அவனுக்குத் தெரியாதனவுமல்ல. சித்தாந்தச் செந்நெறியின் கடவுளாகிய சிவம் அறிவுருத்தன்மையது. சிவமாகிய அறிவுருவுக்குத் தொழிற்பாடு இல்லை. சிவம் தம்மையொத்த தமது எல்லைக்குள் அடங்கிய சக்தியின் மூலம் உலகைத் தொழிற்படுத்துகிறது. சிவம் அறிவுருச் சக்தி இயக்கம். இத்தத்துவத்தின் படிமுறை வளர்ச்சியில் தோன்றி யதே அம்மையப்பன் வழிபாடு. இதனைத் திருக்களிற்றுப் படியார்,

அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பார்-அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்
(திருக்களிற்றுப்படியார் 1)

என்று கூறுவது அறிக. சிவம் சக்தியை, பண்பு-பண்பியாகச் சிலர் விளக்கம் கூறிக் குழப்புவர். அஃது உண்மையன்று. சிவமும் சக்தியும் இரு வேறு பொருள். ஆனால், சக்தி சிவத்தின் குறிப்பின் வழி இயங்கும் தன்மையது. அம்மையப்பர் இரு வேறு நிலையினர் என்பதை உணர்த்தத்தான் போலும், திருவாசகம்,

குவளைக் கண்ணிக் கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க

(திருவண்டப்பகுதி 64,65)
என்றும், திருஞானசம்பந்தர்,

பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே!
(அடங்கன்முறை 3052)

என்றும் உணர்த்துவது அறிக. ஆனால், அம்மையும் அப்பனும் ஒருங்கிணைந்து உலகியல் தன்மை நோக்கி நிற்றலால் இருவராகக் கூறாமல், ஒருவராகவே போற்றும் தமிழ் மரபு தோன்றியது. இதனைக் குமரகுருபரர்,

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் றால்அவ்
உருவையிஃது ஒருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றுஓர்
இயற்சொல்இல தெனின்யான்மற் றென்சொல் கேனே
(சிதம்பரச் செய்யுட்கோவை-54)

என்கிறார்.

சித்தாந்தச் செந்நெறியில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருள் உயிர் உயிரைப் பற்றிச் சித்தாந்தச் செந்நெறி கொண்டிருக்கும் கொள்கை, உலகியல் அமைப்பில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குத் துணையாக அமைகிறது. சித்தாந்தத்தின் அடிப்படையில் உயிர், என்றும் உள்பொருள். உயிர் யாராலும் படைக்கப்பட்டதன்று. உயிர்க்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்பன சைவ சித்தாந்தம் கொண்டுள்ள முடிவுகள். சித்தாந்தம் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள இம்முடிவினால் உயிர்களிடை நிலவும் குறை நிறைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் கடவுள் பொறுப்பல்ல என்ற தெளிவு பிறக்கிறது. இத்தெளிவு மார்க்சியத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. மார்க்சியம் அல்லது மார்க்சியத்திற்கு முதல் நிலையிலிருந்த உலகாயதம், உயிரை உள்பொருளாக ஒத்துக்கொள்வதில்லை. “வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் கலந்தால் ஒரு சிவப்பு தோன்றுவதைப் போல ஐம்பூதங்களின் கூட்டால் உடல் உற்பத்தியாகும் போது ஒரு சக்தி தோன்றுகிறது; உடலை இயக்கி உடல் அழியும் போது அச்சக்தியும் அழிந்து விடுகிறது” என்பது கருத்து.

இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்தாலேகூடத் தவறு என உணர முடியும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சடப்பொருள்கள். இவை எப்படிச் சேரும்? சேர்ப்பார் வேண்டாமா? அடுத்து வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு சேர்ந்தால் ஒரே மாதிரியான சிவப்பு தோன்றுவதில்லை. தரத்தில், அளவில் கூடுதல் குறைவான சிவப்பு தோன்றுதல் உண்டு. இந்தச் சேர்க்கை அளவாக இருக்கும் பொழுது இன்பமும், அளவு மிகும் பொழுது வாய் வெந்து புண்ணாவதும் உண்டு. ஆதலால், இந்த உவமை உயிரின்மையை மறுப்பதற்குப் பொருந்தாது! அடுத்து உயிரை மறுப்பவர்கள் புத்தர்கள். அவர்களுக்கு எல்லாமே சூன்ய மயம். சூன்யத்திலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்; இயங்க முடியும். அடுத்து உயிரைப் பற்றிய கொள்கையில் இரண்டாம் கட்டத்தில் நிற்பார்கள் வேதாந்திகள். வேதாந்திகளிலும் ஏகான்மவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகியல் வழக்கில் இவர்கள் “சுமார்த்தர்” என்று அழைக்கப்படுவர். இன்றைய ஜகத் இவ்வகையைச் சேர்ந்ததே! இவர்கள் ஆன்மாவை மறுப்பதில்லை. ஆன்மா ஒன்றே என்பர். சித்தாந்திகளின் கொள்கை ஆன்மா ஒன்றல்ல; பலப்பல; எண்ணில என்பது.

வேதாந்திகள், “ஒரோயொரு ஆன்மா உண்டு. அது பரமான்மா. அந்தப் பரமான்மாவே பல சீவான்மாக்களாக விரிவடைகிறது” என்பர். இவையெல்லாவற்றையும் மறுத்துச் சித்தாந்தச் செந்நெறி உயிரைப் பற்றிக் கொண்டுள்ள முடிவு அறிவுக் கிசைந்ததாக உள்ளது. சித்தாந்தச் செந்நெறிப்படி ஆன்மா என்றும் உள்ள பொருள். ஆன்மா ஒன்றல்ல. பலப் பல; ஆன்மாக்களின் தோற்றம் ஒன்றிலிருந்து ஒன்றல்ல. ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவில் தோற்றமளிக்காது. எல்லோருடலிலுமுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உண்மையானது. இதனை,

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவைஅவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.

(சிவப்பிரகாசம். 19)

என்ற சிவப்பிரகாசத் திருப்பாடலில் அறிக.

உயிர் அறிவுப்பொருள்; ஆயினும் உயிர்க்கு இயல்பாய் அமைந்த ஆணவ அழுக்கின் காரணமாக அறிவு விளக்க முறாது அறியாமையில் கட்டுண்டு கிடக்கிறது. உயிர் உண்டு என்று உடன்படுபவர்கூட, உயிரின் இலக்கணத்தை நிர்ணயிப்பதில் மாறுபடுகின்றார். சிலர், “உடலே உயிர்” என்கின்றனர். சிலர் “மனமே உயிர்” என்கின்றனர். “உயிர் ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்றும் சிலர் கூறுவர். சிவஞான போதம் இதனை, இரண்டு வார்த்தைகளில் மறுத்து விடை சொல்கிறது. ஒன்றை இல்லையென்று மறுக்க வேண்டியே அவசியமே உண்மையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பது மெய்கண்டார் கருத்து.

“இலதென்றலின் உளது” (நூற்பா 3) என்பது சிவஞான போத மறுப்புரை. ஆன்மா இல்லையென முடிவு பண்ணும் அறிவு எதுவோ, அதுவே ஆன்மா என்று, சூன்யவாதிகள் கூற்றை நகைப்புக்கிடமாக்கி மறுக்கிறார் மெய்கண்டார். இது ஃபிரெஞ்சு தேசத்துத் தத்துவ ஞானி “டெகார்டே” ஆராய்ந்த முறையோடு ஒத்திருக்கிறது. டெகார்டேக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. தானும், தான் காணும் பொருள்களும் பொய்யாய் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம். அவன் அறிஞன் ஆனதால் சந்தேகத்தையே முடிவுகளாக்கிக் கொள்ளவில்லை. சந்தேகம் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. அவனுடைய நீண்ட ஆராய்ச்சியின் பயனாக,

“யாவுமே பொய்யான போதும் அவையாவும்
பொய்யெனச் சந்தேகிப்பவன் உண்மையாய்
இருத்தல் வேண்டும்”

என்றான். உடலே உயிர் என்ற கொள்கையையும் எளிதில் சொல்வழக்கில் கொண்டே சித்தாந்த சாத்திரம் மறுக்கும்.

“எனதுடல் என்றவின்”.

(நூற்பா 3)

என்பது சிவஞானபோதம், ‘எனது உடல்' என்பது வழக்கு. ஆன்மாக்கள், ஆண்டவனால் படைக்கப்பட்டன என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. படைக்கப்பட்டன என்றால் அவற்றுக்கு நிலையான தன்மையில்லை; அவை அழியும் என்றாகும். அதுபோலவே படைக்கப்பட்டன என்றால் படைக்கப்பட்டன வற்றிற்கென்று தனியே அறிவும் குணமும் செயலும் இருத்தற்கில்லை.

படைப்பாளியின் அறிவும் குணங்களுமே படைக்கப் பட்டனவற்றின் அறிவும், குணமுமாக இருக்கும். ஆன்மா இறைவனால் படைக்கப்ப்டடது என்றால் ஏன் படைத்தான்? என்ற வினாவும் எழும். அடுத்து, ஆன்மாக்கள் பெறும் உடல்களில் உள்ள குறை நிறைகள். அறிவில் பெறும் தராதரங்கள் இவைகளை நோக்க ஏன் இப்படி வேறுபாடுகளோடு படைக்கிறான்? என்ற வினாவும், பின்னணியாக இறைவன், வெறுப்பு-விருப்புகளுடையான் என்ற முடிவுகளும் தோன்றும். இத்தகைய முடிவு சமய நெறியின் அடித்தளத்தையே அசைத்து விடும். இந்த இடர்ப்பாட்டைக் கருதித்தான் சித்தாந்தச் சமயம், ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல என்ற தெளிவான முடிவை எடுத்து உள்ளது. ஆன்மாக்களிடையில் ஏற்பட்டுள்ள குறை நிறைகளுக்கு அவ்வான்மாக்களை இயல்பாகவே பற்றி நிற்கும் ஆணவமும், அவ்வழி செயற்பட்ட ஆன்மாவின் செயல்களுமே காரணம். ஆன்மா என்பது முன்னர்க் கூறியது போல என்றும் உள்ளது; எங்கும் பரவியது. அறிவுடையது. இந்த ஆன்மாவை இயல்பாகவே ஆணவம் என்னும் அழுக்குப் பற்றி நிற்கிறது. இதற்கு மெய்கண்ட சாத்திரம் காட்டும் உவமை “செம்பிற் களிம்பு போல, நெல்லிற்கு உமி போல” என்பனவாகும். இதனை,

அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண்டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே

(சிவப்பிரகாசம் 25)

என்று சிவப்பிரகாசம் கூறுகின்றது. ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றில் முளையைப் போன்றது எது? தவிட்டைப் போன்றது எது? உமியைப் போன்றது எது? என அறிந்தால் மேலும் விளக்கமுறும் முளையைப் போன்றது கன்மம்; தவிட்டைப் போன்றது மாயை, உமியைப் போன்றது ஆணவம், அரிசிதான் ஆன்மாவுக்கு உவமையாகிறது. நெல்லில் உள்ள முளைத்தல் சக்தி முளையைத் தோற்றுவித்தல்போல கன்ம மலம் உயிரினிடத்துச் சுக, துக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு, முளைத்தற்கு அனுகூலம் செய்து துணை நிற்றல் போல மாயாமலம் சுகதுக்கம் தோன்றுதற்குத் துணைக் காரணமாய் அமைந்து, தன் காரியமாகிய கருவிகளையும் துய்ப்பனவுமாகிய பொருள்களையும் தோற்றுவித்து உயிரையும் அசைத்து நிற்கும். உமி, அம்முளை தோன்றுதற்கு நிமித்த காரணமாக இருத்தல் போல ஆணவ மலம் அச் சுக, துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும். ஆன்மாவின் சுக துக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் முதல், துணை, நிமித்தங்களாக அமைந்தன.

ஆணவம், மாயை இவற்றுக்கு விளக்கம் கிடைத்தது. கன்மம் என்றால் என்ன? கன்மம் என்ற சொல்லும் கர்மம் என்ற சொல்லும் ஒரு பொருட்சொற்கள். அதாவது வினை அல்லது செயல் என்பது பொருள். தத்துவ ஞான உலகம் செயலைப் பற்றிய துண்பொருள்களை விளக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு; பலனும் உண்டு. அப்பலனை அனுபவித்தலும் ஒரு செயலாகும். செயல் மட்டுமின்றி செயல் செய்தற்கு முதல் நிலையாக இருக்கிற எண்ணம், செயலோடு தொடர்புடையதாக இருக்கிற சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங்கும். செய்யப் பெறும் செயல்களுக்குப் பலன் உண்டு. அச் செயல்களைச் செய்தவர்களையே அப்பலன்கள் சாரும். அச்செயல்களைச் செய்தாருக்கு அவ்வனுபவங்கள் உரிமையுடையன. அவை இன்பமாயினும், துன்பமாயினும், அவர்கள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதனைத் தருமைக் குரு ஞானசம்பந்தர்,

ஊட்டும் வினையிருந்தால் உன்னாணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும்-கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே; நெஞ்சே இரு

என்றருளினார். இப்பயன்களில் சில, உடனே துய்ப்புக்கு வரும்; சில காலங்கடந்து வரும். ஏன்? காலங் கடந்து வருவானேன்? என்று சிலர் கேட்பர். உயிர்களின் துய்ப்பின் தகுதியைப் பொறுத்துக் கால நியதியின்கண் முறைப்படுத்தப் பெறுவதால் முன் பின்னாக வருகிறது! இப்பிறப்பில் தீமையே செய்வார் இன்புறுதலும், நன்மையே செய்வார் துன்புறுதலும் உடன் நிகழ்வுகளின் விளைவுகளன்று; இதனைப் பட்டினத்தார்,

என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே.

(திருப்பாடற்றிரட்டு - 22)

என்று குறிப்பிடுவார்.

வினை வழிப்பட்ட இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்காகவே உயிர்களுக்குக் கறங்கு போலப் பிறப்பும் இறப்பும் சுழன்று வருகின்றன. இங்ஙனம் கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்பின் காரணமாகக் கன்மமும் மாறி மாறி சங்கிலித் தொடர் போல வரும். அப்படியானால் உயிர்களின் முதற் பிறப்பும் கன்மத்தின்பாற் பட்டதுதானா? இல்லை, முதற் பிறப்பு அருட்கொடை. ஆனால், அப்பிறப்பில் உயிர் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகியதால் அவ்விருப்பு வெறுப்பு, கன்மமாகி மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது. உயிரின் இயற்கை துய்த்தல், செயற்படுதலும், துய்த்தலும் கன்மமாகி விடுவதில்லை. செயலைச் செய்யும்பொழுது, எண்ணத்தில் ஏற்படும் விகாரமும், துய்க்கும் பொழுது ஏற்படும் விகார உணர்ச்சிகளும்தான் கன்மமாகின்றன.

எச்செயலைச் செய்யும் பொழுதும் திருவருள் சிந்தனையோடு செய்தல் மூலம், துய்க்கும் பொழுது ஆசையும் விகாரமுமின்றிக் கடப்பாடு என்று கருதித் துய்த்தால் கன்மம் சேராது; என்றும் வாழ்க்கைக் கணக்கு நேராக இருக்கும். சுந்தரர் வாழ்க்கை இத்தகையது. செய்யப் பெறும் கன்மங்களை-வினைகளைச் சித்தாந்தம் மூவகைப்படுத்தும்.

பழவினை (சஞ்சிதம்), நிகழ்வினை அல்லது துய்ப்பு வினை (பிராப்தம்), எதிர்வினை அல்லது வருவினை (ஆகாமியம்) என்பன அவை. பழவினை என்பது உயிர்களால் துய்க்கப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை. துய்ப்புவினை அல்லது ஊழ்வினை என்பது இப்பிறப்பில் துய்ப்பதற்குரியது. இப்பிறப்பில் வினைகளைத் துய்க்கும் பொழுது விருப்பு வெறுப்புகளால் அலைக்கப்பட்டுத் தோன்றுவது எதிர்வினை (ஆகாமியம்).

வினையின் பயனை அனுபவித்தலும் முயற்சியும் முரண்பாடுடையனவல்ல. திருவருள் சிந்தனையோடு கூடிய முயற்சியின் முன்னால் வினைவலி நிற்காது. வினை வலிது என்று நினைந்து வாளாத் துன்புறுதல் நியதியன்று. அங்ஙனம் துன்புறும் பொழுது, மீண்டும் உயிர் வினைகளுக்கு ஆளாகும். ஆதலால், வினைவலியறிந்து, திருவருள் துணைகொண்டு அயர்விலா முயற்சிகளில் ஈடபட்டுப் பணிகளைப் பாங்குடன் செய்து, பயன்களைப் பற்றின்றி இறைவனையே அடைக்கலமாகக் கருதி வாழ்தல் வினை நீக்கத்திற்கு உரிய எளிய வழி.

தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே

(அடங்கன்முறை - 5420)

என்பதை அறிக.

இந்த ஆணவ மலத்தால் ஆன்மா கட்டுண்டு கிடப்பதனாலேயே பசு என்று பெயர் பெற்றது என்பர். ஆணவம், ஆன்மாவின் விரிவை, அறிவைக் கெடுத்து அறியாமையில் ஆழ்த்தும். இங்கு அறியாமை என்பது யாதொன்றையும் அறியாமலிருப்பதன்று. யாதொன்றையும் அறியாதிருத்தல் உயிரின் இயல்பன்று. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்தலையே “அறியாமை” என்று சித்தாந்த சாத்திரம் உணர்த்துகிறது. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்வதற்குக் காரணம், ஆணவத்தின் தொழிற்பாடே! ஆன்மா, என்றும் உளதாயினும், நிலையானதாயினும் அதனியல்பு ஏதாவதொன்றைச் சார்ந்து நிற்பது. ஆன்மா சார்ந்திருக்கக் கூடிய சார்புகள் இரண்டு. முதல் சார்பு இயல்பாயமைந்த ஆணவச் சார்பு. இரண்டாவது சார்பு, ஆன்மா மாயை வழி கிடைத்த கருவிகளைத் துணையாகக் கொண்டு ஆணவத்தின் இயல்பறிந்து அதன்வழிச் செல்லாமல் சிவசக்தியின் வழிச் சென்று இன்ப துன்ப உணர்வுகளைக் கடந்து சிவமாம் தன்மையைச் சார்தல். இதுவே உயிரின் இலட்சியம்-அதன் வாழ்க்கைப் பயணம். இந்தப் பயணம் இனிதே நிறை வேறினால் ஆன்மா இன்ப அன்பில் நிலைத்து நிற்கும்.

................. மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து
ஏயும்அதே நிட்டையென் றான்எழிற் கச்சி ஏகம்பனே

(பட்டினத்தார். திருஏகம்பமாலை - 10)

என்பதை ஓர்க.

திருவள்ளுவர். இந்தச் சிறந்த சித்தாந்தக் கருத்தை இரண்டு குறள்கள் மூலம் விளக்குகிறார்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

(குறள்.359)


நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

(குறள். 452)

என்ற திருக்குறள்கள் ஒப்பு நோக்கத்தக்கன. ஆன்மா, இந்த இலட்சியப் பயணத்தில் அடையும் அவத்தை நிலைகள் மூன்று. மூன்று அவத்தைகளில் முதலாவது அவத்தை ஆணவ மலத்தோடு ஆன்மா கலந்திருத்தல், ஆணவத்தை இருள் என்றும், சிலர் உருவகம் செய்வர். வள்ளுவம் இருள் சேர் இருவினை என்று கூறும் ஆணவம் இருளோடு ஒத்திருப்பினும், இருளைவிட ஆணவம் கொடியது.

இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலையும் மறைக்கும்; தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் கிடக்கும் ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் அப்பொருளை மறைத்திருக்கும் இருள் நமக்குத் தெரியவே செய்கிறது. ஆதலால் இருள் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டும் ஆணவம் தன்னைக் காட்டாமலே மறைத்து நின்றும் தொழிற்படுகின்றன. அதனாலேயே நம்மில் பலர் ஆணவம் இன்னதெனத் தெரிந்து கொள்ளாமலே ஆணவ மயமாகி நிற்கின்றோம். ஆணவமே நமது குறைக்கு, அறியாமைக்குக் காரணம் என்று நாம் உணர்வதில்லை. ஆணவ மயக்கில் கிடக்கும் உயிர், விருப்பார்வங்களைக் கொள்வதில்லை, செயற்படுவதும் இல்லை. ஆன்மா தன் நிலையை இழந்து ஒடுங்கிக் கிடக்கும். இந்நிலை வரையில் ஆன்மா படும் அவத்தை கேவல அவத்தையாகும்.

ஆணவக் கூட்டின் பயனாக முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கண்டு இரக்கப்பட்ட சிவம், ஆன்மாவை மூலையிலிருந்து முற்ற வெளிக்குக் கொண்டுவரத் திருவுள்ளம் பற்றியதாலேயே ஐந்தொழில் நிகழ்கிறது. சிவம், சக்தியின் மூலம் மாயையை இயக்கித் தொழிற்படுத்தி உயிர்கள் உடம்பையும், உலகையும் பெற உதவி செய்கின்றது. இஃது ஆன்மாவின் இரண்டாவது அவத்தை இந்த நிலையில் ஆன்மா மேலும் இரண்டு மலங்களோடு கூட்டுச் சேர்கிறது. அவ் இரண்டு மலங்களாவன: கன்மம், மாயை என்பன.

ஆன்மா உறையும் உடல், உலகம் ஆகியவற்றின் தோற்றத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மூலகாரணம் மாயை. ஆன்மா உடலோடு சேர்ந்த பின்தான் ஆன்மாவின் அறிவு, இயக்கம் பெறுகிறது. அறிவு இயக்கத்திற்குத் துணை செய்யும் மாயையை ஏன் மலம் என்று கூற வேண்டும்? மாயையிலிருந்துதான் உடலையும், உடற் கருவிகளாகிய அறி கருவிகளையும், செயற் கருவிகளையும் புலன்களையும் உயிர் பெறுகிறது; அவைகளின் மூலம் அறிவைப் பெறுகிறது. ஆனாலும் அந்த அறிவு, நிறை நலம் சான்றதன்று. ஆனாலும் அறிவு, இயக்கத்திற்குத் துணையாக இருப்பதால் அதை, (மாயையை) விளக்கு என்று உபசரித்தலும் சைவ சித்தாந்தத்தில் உண்டு. மாயை யென்பது ஒரு நுண்பொருள்; சடப் பொருள். மாயையைச் சிவசக்தி இயக்குவதால் உலகம் தோன்றுகிறது. கண் முதலியன ஞானேந்திரியங்கள்-அறிவுக் கருவிகளும் மனம், புத்தி முதலிய அகக் கருவிகளும், மாயையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆயினும் மாயை ஒன்றே. அது நிலையானது; வடிவமற்றது. உலகம் தோன்றும் வித்தும் மாயையே. அந்த மாயை அறிவற்றது; இயங்காப் பொருள்; எங்கும் பரந்திருப்பது, இறைவனுடைய தொழிலுக்குத் துணை நிற்பது. ஆயினும் உயிர்களை மயக்கவும் செய்யும்; இது மாயையின் இலக்கணம். சிலர் கூறுவது போல் மாயை இல் பொருளோ, பொய்த் தோற்றமோ அல்ல. மாயையின் இலக்கணத்தை,

நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே

(சித்தியார் - 143)

என்று சிவஞான சித்தியார் விளக்கும்.

மாயை பொய்மையாக இருக்குமானால் உலகம் தோன்றாது; ஆதலால் மாயையின் இருப்பு உணரப்படுகிறது இவ்வுலகத் தோற்றத்திற்கு மாயை முதற்காரணம்; இறைவன் நிமித்த காரணம்; அதனுடைய சக்தி துணைக்காரணம். சடப்பொருளாகிய மாயையை இறைவன் தனது அருட் சக்தியால் இயக்கக் கருவிகள், துய்ப்புப் பொருள்கள், தூய்மை வாயில்கள், தத்துவங்கள், அறிவு வாயில்கள் அனைத்தும் தோன்றி, அனைத்தையும் ஆன்மா அடைந்து வாழ்ந்து, வளர்ந்து எல்லையிலா இன்பநிலையை எய்துகிறது.

இம் மலங்களின் கூட்டு, ஆன்மாவின் துய்மைக்குத் துணை செய்வனவாகும். “அழுக்கு உடையை வெளுக்க உவர் மண்ணைச் சேர்க்கும் கூட்டைப் போன்றது இது” என்று சித்தாந்தம் கூறும். இந்நிலையைச் சகலாவத்தை என்று சாத்திரம் கூறும். இச் சகலாவத்தை நிலையே மானிட நிலை. உயிர்கள் சகலாவத்தையிலிருந்து கேவலாவத்தைக்கும் கூட மாறிச் செல்வதுமுண்டு. இங்ஙனம் மாறுவதெல்லாம் உயிர் இளைப்பாறுதல் பொருட்டேயாம். கேவலாவத்தையில் ஆன்மாவுக்கு அறிவு கிடையாது. சகலாவத்தையில் தனு, கரணங்களின் துணையினால் ஆன்மா, சிறிது அறிவு விளக்கம் பெறும். ஆனாலும் ஆன்மாவின் அறிவு நிறைதல் அறிவன்று. சகலாவத்தையில் ஆன்மாவின் அறிவு, நிலையற்ற பொருள்களை மட்டுமே அறிய முடியும். ஆதலால் இஃது அறிவன்று. இஃதொரு மயக்கநிலை! நிலையற்றனவற்றை நிலையாயின போலவும், துன்பங்களை இன்பம் போலவும், கருதி மயங்கி நிற்கும் நிலை. முன்னைய கேவலாவத்தை இருள்நிலை; இரண்டாவதாகிய சகலாவத்தை மருள்நிலை. அதாவது மயக்க நிலை. அறியாமையையும், அரைகுறை அறிவையும் நீங்கி, ஆன்மா நிறைநல அறிவைப் பெற வேண்டும். அந்நிலையை அடைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெறும் நிலையே அருள்நிலை. அல்லது சுத்தாவத்தை நிலை! ஆன்மாக்கள் இந்த மூன்று அவத்தை நிலைகளையும் அடையும் நடைமுறைக்கும் இறைவனின் ஐந்தொழில்களுக்கும், தொடர்பு உண்டு. இறைவனது அழித்தல் தொழிலால் ஆன்மா கேவலாவத்தை நிலையை அடைகின்றது. படைத்தல், காத்தல், மறைத்தல் ஆகிய முத்தொழில்களின் வழி, ஆன்மா சகலாவத்தைக்கு ஆளாகின்றது. ஐந்தாவது தொழிலாகிய அருளல் சுத்தாவத்தை நிலையை அடைவதற்குத் துணையாய் அமைகிறது. இங்குப் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல் என்ற சொல்வழக்குகள் உணர்த்தும் பொருள் வேறு. இங்குப் படைத்தல் என்பது உயிர்களை, கன்மங்களைப் படைப்பதன்று. ஆன்மாக்கள் கருவி கரணங்கள் பெறத் துணைசெய்தலே படைத்தல். அங்ஙனமே காத்தல் என்பது அக்கருவி கரணங்களோடு ஆன்மா இசைந்து நின்று துய்க்குமாறு செய்தலேயாம். மறைத்தல் என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும், கன்மத்தின் இயல்பினை மறைத்தல் என்பதேயாம். அழித்தல் என்பது ஆன்மாவிற்கு ஆணவக் கூட்டால் ஏற்பட்ட தீமையை அழித்தலேயாம். அருளல் என்பது ஆன்மாவின் ஆணவ ஆற்றலை ஒடுக்கி, அதனைச் சேட்டைகளினின்றும் விடுவிடுத்து, சிவத்தின் திருவருளில் தங்கச் செய்து, இன்ப அன்பினை ஆர்ந்து அனுபவிக்கச் செய்தலேயாகும். ஆன்மா, ஆணவத்தின் துன்பத் தொடக்கிலிருந்து விடுபட்டு இன்ப அன்பினை அடைய, சிவமே துணை நிற்கிறது. இந்தச் சிவத்தினைச் சாரும் வாழ்க்கை முறையே சைவ வாழ்க்கை.

இறைவனை, ஆன்மா அடைய, நான்கு நெறிகளைச் சைவம் காட்டுகிறது. அவை சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பன. இந்நான்கு நெறிகளின் வழி ஆன்மாக்கள் பத்திமையும், தொண்டும் மேற்கொண்டு வாழ்வதால் ஆன்மா உய்தி பெறுகிறது. இறைநெறியில் நின்று ஒழுகுதலால் செயல்களும் நிகழும்; செயல்களின் பயனும் உயிர்க்கு வாரா. இறை நெறி நின்று வாழ்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள். இன்ப துன்ப உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். இதனால் ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் உயர் நிலையை ஆன்மா அடையும். இந்நிலையை ஆன்மா எய்துதலே இருள் நீங்கப் போகிறது. அழுக்கு அகலப் போகிறது. அறிவும் ஒளியும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்கப் போகிறது என்பதன் அடையாளமாகும். இந்நிலையை “மலபரிபாகம்” என்று சாத்திரம் கூறும். ஆணவ மலமேயானாலும் அதை முரட்டுத் தனமாக அகற்ற முடியாது.

உடையைச் சார்ந்தது அழுக்கேயானாலும் அதையும் நனைத்து மெல்ல ஊற வைத்துத்தான் அகற்ற வேண்டும். நெல்லைச் சார்ந்துள்ள உமியை, நெல்லினின்றும் பிரித்து அரிசியைக் காண, நனைத்தலும், அவித்தலும் ஆகிய தொழில்கள் நிகழ்ந்து அரிசிக்கு ஊறு ஏற்படாவண்ணம் உமியை நீக்குவோம்.

உடைக்கு ஊறு நேராவண்ணம் நனைத்தலும், ஊற வைத்தலும் அழுக்கை நீக்கும். அதுபோல இறையின் கருணை ஆன்மாவுக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் நல்கி ஆணவத்திலிருந்து ஆன்மாவை எடுத்தாள்கிறது. இந்நிலையில் சிவத்தின் அருளாக நின்று தொழிற்படும் அருட்சக்தி ஆன்மாவிடத்தில் பதிகிறது. திருவருட்சக்தி பதிதலால் ஆன்மா ஞானத்தினைப் பெற்று அச்சக்தியின் வாயிலாக இறைவனைக் கண்டு மகிழ்கிறது. இறைவனும் எளிதில் வெளிப்பட்டு எடுத்தாள்வான்.

ஆன்மாவின் இலட்சியமாக இருப்பது வீடுபேறு. ஆணவத்திலிருந்தும், அவ்வழிப்பட்ட இன்ப துன்பங்களிலிருந்தும் விடுதலை தருவது வீடு. முத்தி நிலையை விளக்குவதிலும் சமயங்கள் மாறுபடும்; முத்தி நிலையில் இறைவனோடு ஆன்மா கலந்து மறைந்து போகிறது என்பார் சிலர். இது ஆன்மாவுக்கு அழிவில்லை என்ற கருத்தோடு மாறுபடும். அதுமட்டுமன்று. ஆன்மாவுக்கு இயல்பிலே அமைந்த உண்மையாகிய துய்ப்பு நிலையும் போகிறது. அதனால் ஏற்புடையதன்று. சித்தாந்த முத்தி என்பது நுட்பமானது. முத்தி நிலையிலும் ஆன்மாவும் உண்டு; சிவமும் உண்டு. அவை இரு வேறு பொருள்தாம்! ஆனால் ஆன்மா தன் தன்மையை இழந்து சிவமாம் தன்மையைச் சார்ந்து ஒன்று போலத் தோற்றமளிக்கிறது. எண்ணிக்கையால் இரண்டு. அனுபவத்தால் இரண்டு; தன்மையால் ஒன்று. முத்தி நிலையில் ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை; மாணிக்க வாசகர்,

ஆனந்த வெள்ளத் தழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக்கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும்; அம்பலம்சேர்
ஆனந்த வெள்ளத்து அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதுஇவ் அணிநலமே.

(திருக்கோவையார் - 307)

என்பர்.

மேலும் சித்தாந்த முத்தியினை இனிதே விளக்க தாள்+தலை என்னும் சொற்களின் புணர்ச்சி எடுத்துக் காட்டாகச் சித்தாந்த நூல் கூறும் தாள், என்கிற நிலை மொழியும் தலை என்கிற வருமொழியும் முதல் தகரமும் சேர்ந்து டகரமாகத் திரிந்து தாடலை என்று ஆகின்றது. “தாடலை” என்கிற இதனை, புணர்ந்து நிற்கும் நிலையில் இரு சொற்கள் என்று கொள்ளவும் முடியாது. ஒரு சொல் என்று கொள்ளவும் முடியாது. ஒரு நோக்கில் ஒரு சொல், பிறிதொரு நோக்கில் இரண்டு சொல். ஆன்மா கள்ணொளியோடு கூடி நின்று காணும் காட்சி போல ஆன்மா இறைவனோடு கலந்து நின்று துய்த்து மகிழ்கிறது.

இத்தகைய சிறந்த தவநெறி வாழ்க்கையை உயிர்கள் அடைய சிவமே உயிர்கள் மாட்டுக் கருணை கொண்டு குருவாக எழுந்தருளித் தீக்கைகள் செய்வித்து ஞானத்தை உணர்த்துகின்றது. சைவ சமய சித்தாந்தச் செந்நெறியில் வழிபடு பொருள்கள் மூன்று. முதலாவது குரு இரண்டாவது இலிங்கம்; மூன்றாவது அடியார் திருக்கூட்டம். இம்மூன்று வழிபாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆசிரியன் உணர்த்தினாலன்றி உயிர் தன்னை அறியாது.

ஆதலால்தான், ஞானாசிரியன் மாணாக்கனுக்குச் சிவத்தினைக் கண்டு காட்டி வழிப்படுத்துகிறான். வழிபாட்டில் அகப்பூசை, புறப்பூசை என இரண்டு பூசை. அகப்பூசையே உயர்ந்தது. அப்பூசையின் அனுபவத்தை இடையீடின்றி அனுபவிக்கவும் பாதுகாத்துக் கொள்ளவும் துணை செய்வது புறப்பூசை. நாள்தோறும் இறைவனின் அருட்சின்னமாகிய சிவலிங்கத்தை வழிபடுதல் கடமை. சீவன் முத்தர்களாகிய சிவனடியார்களைத் தொழுதல்; அவர்களோடு இணைந்திருத்தல் முதலியன, பெற்ற சிவ ஞானத்தைப் பேணவும், பெருக வளர்த்துத் துய்க்கவும் துணை செய்யும். இதனைச் சிவஞான போதம்,


செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனப் படுமே
(நூற்பா - 12)

என்றருளிச் செய்துள்ளமை அறிக. இதே கருத்தை,

நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ
திருவேகம்பமாலை - 5

என்று பட்டினத்தார் விளக்குவதையும் அறிக. தருமைக் குரு ஞானசம்பந்தர்,

ஆசையறாய், பாசம்விடாய்; ஆனசிவபூசை பண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய்-சீச்சி
சினமே தவிராய்; திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்,

என்று அருளிச் செய்ததையும் அறிக.

இத்தகைய சிறந்த சித்தாந்தச் செந்நெறி நம்பிக்கைக் குரியது; நல்லெண்ணத்திற்குரியது; இம்மைக்கும் பயன் தருவது. மறுமைக்கும் பயன் தருவதாம்!