குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சைவ சித்தாந்த வரலாறு

விக்கிமூலம் இலிருந்து

2


சைவ சித்தாந்தமும்
சமுதாய மேம்பாடும்


1. சைவ சித்தாந்த வரலாறு


மனித உலக வரலாற்றுப் படிமங்கள் வரிவடிவத்திலும், சிலை வடிவத்திலும் பெறத் தொடங்கிய காலம் தொட்டு, சமய இணைப்புகள் இருந்து வந்துள்ளன. வரலாற்றுப் போக்கில் சமய அடிப்படையில் நிகழ்ந்த நிகழ்வுகள் நிறைய உண்டு. அவற்றில் மனித உலக வளர்ச்சிக்கு ஆக்கம் தருவனவாக அமைந்த நிகழ்வுகள் பல.

ஒரோவழி, தடம் புரண்டு மனித உலகத்திற்கு விளைவித்த தீங்குகளும் உண்டு. ஆனால் தீங்குகள் கொள்கைகளால், கோட்பாடுகளால் விளைந்தவையல்ல. நடைமுறைப்படுத்திய வழிமுறைத் தவறுகளால் விளைந் தவையேயாம்.

இங்ஙனம், வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கின்ற இந்தச் சமய நெறி, எந்தக் காலத்தில் தோன்றியது? ஏன் தோன்றியது? என்ற வினாக்களுக்கு விடை காண்பதில்கூட இன்று உலக அரங்கில் ஒருமித்த கருத்து இல்லை.

மேற்றிசை நாட்டு அறிஞர்கள், “அச்சத்திலிருந்துதான் சமயம் பிறந்தது; கடவுட் கருத்துத் தோன்றியது” என்று கூறியுள்ளனர். அதாவது ஆதிமனிதன் கல்லில் இடித்துக் கொண்டான்; அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. துன்பத்திற்கு அஞ்சியவன், துன்பத்திற்குக் காரணமாயிருந்த கல்லையே தொழத் தொடங்கிவிட்டான் என்று கூறியுள்ளனர். மேற்றிசை நாட்டைப் பொறுத்த வரையில் இக்கருத்து பொருத்தமானதாக இருக்கலாம். அதாவது ஐரோப்பிய சமய நாகரிகத்திற்கு அடித்தளம் அச்சம் பயம் என்று சொல்லலாம்.

ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைவிடச் சற்று வளர்ந்தவர்கள். இவர்கள் நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய இயற்கைப் பூதங்களால் அவ்வப்பொழுது விளைந்த தீமைகன்ளைக்கண்டு அஞ்சி அவற்றையே ஆற்றல் வாய்ந்தவை எனவும் எண்ணித் தொழுதனர்.

இன்று மனித உலக வரலாறு ஐம்பூதங்களை வென்று விளங்கும் விஞ்ஞானத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால் இவ்வழிபாடு சிறுபிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.

அடுத்தது, திராவிடர் நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் வரலாற்றறிஞர்களால் பேசப் பெறும் நாகரிகம். தமிழர், அச்சத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. பயத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. அவர்கள் தொன்மைக் காலத்திலேயே எந்த ஒன்றையும் அறிவியல் முறையில் அணுகும் உணர்வை இயல்பாகவே பெற்றிருந்தனனர். அவர்களுடைய சமய நெறி தோன்றியதற்குரிய களம், அறிவு, இன்பம், அமைதி அவாவும் நிலைகளேயாகும்.

தமிழினத்தின் சிந்தனையின் பயனாக, சிந்தனைத் தெளிவின் பயனாக, அறிவின் ஆக்கமாகத் தோன்றியதே சிவநெறி. மனிதர்குல வாழ்க்கையில் படைப்பின் நிறைவின்மையையும் அறிவு எல்லையைக் காண முடியாமையையும் கண்டுணர்ந்தபோது, எல்லை கடந்து நிலைக்கு ஏறி வளரும் நிலையில்தான் சிவநெறி தோன்றியது. அந்தப் படிகளைக் காணும் முயற்சியில் தோன்றியதுதான் விஞ்ஞானம். ஆதலால், சிவநெறியின் அடித்தளம் வாழ்க்கையின் படிப்பினைகளும் அறிவுமேயாம். அப்படியெனில் உலகின் அறிவியல் புதுமைகளை, அதுகண்ட புதிய உண்மைகளைச் சமய நெறிகள் ஏற்றுக் கொள்ளாது புறத்தே தள்ளியிருக்கின்றனவே! அங்ஙனம் புதிய உண்மைகளைக் கண்ட விஞ்ஞானிகளைச் சமய நெறியாளர்கள் துன்புறுத்தி யிருக்கிறார்களே! என்ற வினாக்கள் எழலாம்.

ஆம்! அந்த வரலாற்று உண்மைகளை நாம் மறுக்கவில்லை! இத்தகைய செய்திகள் மேற்றிசை நாட்டு வரலாறுகளில் உண்டு. அந்நாட்டு வரலாற்றிலும்கூட, சமயம், வாழ்க்கை நெறியாகத் தூய்மையுடன் விளங்கிய காலத்தில் நிகழ்ந்தவையல்ல. ஆனால், அங்ஙனம் சமய நெறியாளர்கள் விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்திய நிகழ்ச்சிகள் தமிழகத்தில் என்றும் நிகழ்ந்ததில்லை; புதிய உண்மைகளை மறுத்து அந்த விஞ்ஞானிகளைத் துன்புறுத்தியவர்கள் உண்மையான சமய நெறியாளர்கள் அல்லர்.

இத்தகைய துன்பம் தரும் நிகழ்ச்சிகள், சமயம் வாழ்க்கையிலிருந்து விலகி, இயக்கத் தன்மையிலிருந்து தேக்கத் தன்மைக்குத் தடம் புரண்டு ஆதிக்கத்தை மையமாகக் கொண்டிருந்த காலத்தில் நடந்தவையாகும். இங்ஙனம் சமய நெறிப் போர்வையில் நடமாடும் ஆதிக்க சக்திகள் மூலம், சமய நெறிக்கு விளைந்த ஊறுகள் பலப்பல. உண்மையான சமய நெறியாளர்கள் புதுமையை வரவேற்கவே செய்வர்.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

(திருவாசகம், திருவெம்பாவை. 9)
என்ற மாணிக்கவாசகர் வாக்கும்,

தொன்மைய வாம்எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா!

(சிவப்பிரகாசம்-12)

என்ற உமாபதிசிவம் வாக்கும் இதற்குச் சான்று.

உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன. அவைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முரண்பாடுகள் இருக்க வழியில்லை. வேறுபாடுகளும்கூட அந்தந்தச் சமயநெறிகள் தோன்றிய காலம், சூழ்நிலை, அனுபவம் இவைகளினால் ஏற்பட்ட தரவேறுபாடுகள்தாம்! சமயங்கள், நிறுவனங்களாக மாறியவுடன் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி முரண்பாடுகளை உருவாக்கித் தம்முள் முரணி மோதிக் கொண்டு வந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தத் தீமையும்கூட சமயம், நெறியாக இல்லாமல் நிறுவனமாக மாறியதால் ஏற்பட்டதன் விளைவேயாகும்.

ஆனால், உண்மையான சமய ஆர்வலர்கள் ஒருமைப் பாட்டையே காண முயன்று வந்துள்ளனர். தாயுமானார்,

வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!

(தாயுமானவர், கல்லாலின்:25)

என்று கூறுவதால் அறியலாம்.

மனித குல வரலாற்றின் தொன்மையில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடியேயாம். இது வரலாற்றறிஞர்கள் கண்டு கூறும் முடிபு. தமிழினத்தின் வரலாற்றுத் தொடக்கம் கி.மு. முப்பதாயிரத்திற்கும் அப்பால் செல்கிறது.

பல ஊழிகள் கண்ட வரலாறு தமிழர் வரலாறு. தென் கோடியில் தொன்மை நலம் சான்ற “தென்குமரிக் கண்ட நாகரிகமும்” வடகோடியில் “சிந்து வெளி நாகரிகமும்” தமிழ்ச் சாதி நாகரிகத்தின் தொன்மை நாகரிகங்களாகும். தமிழர் நாகரிகம் அனைத்துத் துறைகளிலும் செழித்து வளர்ந்து புகழ் பூத்ததாகும். அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சமய நெறியில் கால்கொண்டனர். அவர்களது சமயம் சிவநெறி யாகும். இச்சிவநெறி காலத்திற்குக்காலம் முறையாக வளர்ந்து மெய்கண்ட தேவர் காலத்தில் வடிவம் பெற்றது.

தென்குமரிக்கண்ட மக்கள், சிவன், சேயோன் என்ற திருப்பெயர்களில் சிவபெருமானை வழிபட்டு வந்திருக்கின்றனர். சிவன் ஒளிவடிவானவன். ஒளிவடிவிலும் உயிர்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தரநிலைகளில் (ஒளிக்கற்றை, வெப்பநிலை) நின்று அருள்பவன். உலகியலை வெப்பஇயல் இயக்குவதைப் போல சிவமே நெருப்பை இயக்கும் பெரும் பொருளாக இருந்து இயக்கி வருகிறது.

சோதியே! சுடரே! சூழ்ஒளி விளக்கே!
(திருவாசகம், அருட்பத்து-1)

என்ற திருவாசகம், சிவம் என்ற பேரொளியின் படிநிலைகளை விளக்குவது. சிவத்தின்தொழில்-இயல்புகள் குறித்துப் பல திருமேனிகளில் சில வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன.

அவற்றுள் சிறப்புடையன ஐந்து. முதல்நிலை, “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” ஆக அடல்விடையூர்ந்து ஆட்கொண்டருளும் நிலை கொன்றை மாலையும் திரிசூலமும் கொண்டு விளங்கும் திருக்கோலம், இரண்டாவது படிவம். அம்மையப்பன், இந்த அம்மையப்பன் திருவுரு எல்லா உறுப்புகளும் முறையாக அமைந்து, அம்மையை இடப்பாகத்திற் கொண்டு விளங்கும் மங்கை பங்கன் திருமேனியாகப் போற்றப் பெற்றது. அறிவியலில் பொருளையும், பொருளின் ஆற்றலையும் தனியே பகுத்து ஆராயும் மரபு பிற்காலத்தே தோன்றியது. அம்மையப்பன் வழிபாடு அந்த அடிப்படையில் சங்க காலத்திலேயே தோன்றி வளர்ந்ததாகும். பாவாணர், “கடல் கொண்ட தென்குமரிக் கண்ட நாகரிக காலத்திலேயே அம்மையப்பன் வழிபாடு இருந்தது” என்று கூறுவர். (தமிழர் மதம்) சிவம், பொருள்; அம்மை அப்பொருளின் இயங்கும் ஆற்றல். இந்த அடிப்படையிலேயே அம்மையப்பன் வழிபாடு தோன்றியது. குணம் குணமல்ல அப்பனும்-அம்மையும் உண்டு என்று கூறுவோரும் உண்டு. திருமறை-திருக்கோவில்களில் அப்பன் அம்மை என்று போற்றப் பெறுகின்றனர்.

சங்ககால இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்ந்த, பாரதம் பாடிய பெருந்தேவனார், புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்களுக்கு அம்மையப்பன் வழிபாட்டை உணர்த்தும் பாடல்களாகப் பாடிச் சேர்ந்துள்ளார். வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் தொடக்க காலத்திலும் பெண்மை பெருமதிப்புப் பெற்றிருந்தது. காலப் போக்கில் பெண்மை, தகுதி நிலைகளை இழந்த பொழுது அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருத முடிகிறது.

தமிழ் இலக்கியங்களானாலும் நூல்களானாலும் தனித்தமிழ் மரபில் தோன்றியவைகள், பெண்மையை இழித்துப் பேசியதில்லை. ‘வீடுபேற்றுக்கு மனையறம் தடையானது’ என்று ஒருபோதும் தமிழ்நெறி சாற்றியதில்லை. ஆதலால் அருவ நிலையில் வளங்கி வந்த சிவவழிபாடு உருவ வழிபாட்டுக்கு வந்தவுடன் முதல் நிலையில் இலிங்க வழிபாடாகவும் இரண்டாம் நிலையில் அம்மையப்பன் வழிபாடாகவும் மலர்ந்தது. இது,

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

(புறம்; கடவுள் வாழ்த்து; 7-8)
என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கூறப்படுகிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

(ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து)

என்ற ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் அம்மையப்பன் வழிபாடு எடுத்துக் கூறப்படுகிறது. சிவனைச் செம்மை நிறத்தின் அடிப்படையிலும், அம்மையை நீலநிறத்தின் அடிப்படையிலும் விளக்குதல் ஆன்றோர் மரபு, “வில்லியம் ஜேம்ஸ்” என்ற ஓவியன் வெம்மையின் ஆற்றலை விளக்கச் சிவப்பு நிறத்தையும், தண்ணளியை - தண்ணருளை விளக்க நீல நிறத்தையும் பயன்படுத்தும்படி அறிவுரை கூறியுள்ளது நினைவு கூரத்தக்கது.

“சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்ற திருப்பெயர் எண்ணுதற்குரியது. இந்த அம்மையப்பன் வழிபாடு தொன்மைக்காலத்திலேயே தோன்றிச் சிறந்தது என்பதை மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் விளக்கியுள்ளார்.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும்உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிந்துரதாய் கோத்தும்பீ

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 18)

என்பது திருவாசகம்.

இலிங்க வடிவ நிலையில் இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள், என்றும், மேல் நிற்கும் இலிங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும் பெயர்கள் வழங்கப் பெற்றுள்ளன. இத்தத்துவம் “ஓம்” என்ற ஒலி வடிவிலும் பிள்ளையார் சுழியின் வரிவடிவத்திலும் அமைந்திருக்கிறது.

மூன்றாவது, ஆசிரியனாக இருந்து நன்னெறி உணர்ந்தும் திருக்கோலம். இதனை “ஆலமர் செல்வன்” (சிறு, பா 97, கலி, 819) என்றும், “ஆலமர் கடவுள்” (புறம் 198-9) என்றும் சங்க கால இலக்கியங்கள் பாராட்டும். வாழ்க்கையில் இயல்பாகச் சமய நெறி-முறைகள் அமையாது மனித உலகம் புறத்தே விலகிச் செல்லும் பொழுது நன்னெறி உணர்த்த அறிவர்கள்-ஞானிகள் தேவைப்படுவர்.

அதுபோலத் தமிழினம் நெறியல்லா நெறிதன்னை நாடிச் சென்ற பொழுது சிவபரம்பொருளே ஆசிரியனாக எழுந்தருளி நெறியுணர்த்தி வழி நடத்துகிறான் என்பது தமிழர் சமய மரபு. சிவநெறிக்கு இறைவனே முதல் ஆசிரியன். அவன் வழிபடும் பொருள் நிலையிலிருந்து இறங்கி, வழிகாட்டும் நிலைக்கு வந்த பிறகு, ஆசிரியன் நிலையில் வழிபடும் நிலையை எய்தினன். சங்க இலக்கியங்களில் சிவன் ஆலமர் செல்வனாக இருந்து அறமுணர்த்திய செய்தி கூறப்பெறுகிறது.

நான்காவது, உலகியல் இயக்கத்திற்கு உரியதாயிருக்கின்ற நிலம், நீர், தீ, வளி வெளி, கதிரவன், திங்கள் ஆதன் என்னும் எண் பொருள் வடிவினனாகவும் அவன் வழிபடப் பெற்றிருக்கிறான்.

ஐந்தாவது ஆடல்வல்லான் (நடராசன்) வழிபாடு. இவ்வுலகியக்கத்தை ஓயாது தனது ஆடல் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்பெறும் திருமேனி இது. குமரி நாடிருந்த காலத்திலேயே குமரிக்கும் பனிமலைக்கும் நடுவணதாக நெஞ்சத்தமைப்பு மையமாகக் கருதி, தில்லையம்பலம் அமைத்து ஆடல்வல்லானைப் பாண்டியன் அமைத்தான் என்று ஒரு வரலாறு உண்டு.

சிந்துவெளி நாகரிக மக்கள் மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்கினர் என்பதும், சிவலிங்க வழிபாடு இருந்ததென்பதும் ஆங்கு அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்கள் மூலம் புலனாகின்றன. “சிவவழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகிய இலிங்கவழிபாடு வரலாற்றறிவுக்கும் அப்பாற்பட்ட பழைமையுடையது; கற்காலத்திற்கும் முந்தியது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது” என்று சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சி அறிஞர் சர்ஜான், மார்ஷல் கூறுகிறார். இந்தச் “சிவவழிபாடு உலகம் முழுதும் பரவியிருந்தது; சிவவழிபாடு இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையில் பரவியிருந்தது” என்பார் எச். ஜி. வெல்ஸ்.

தமிழ் தொன்மையான மொழி, இலக்கிய நலம் சிறந்த மொழி, இலக்கண வளம் மிக்க மொழி, தமிழ் மொழியைப் பேசி வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற் சிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மற்ற நாகரிகங்களுக்கெல்லாம் தொட்டிலாக அமைந்தது தமிழர் நாகரிகமேயாம். இதற்குச் சான்றுகள் எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை.

தமிழர்த்ம் சிந்தனையிற் சிறந்து, வாழ்க்கையில் விளக்கமுற்று விளங்கிய கருத்துக்களை விளக்கும் இலக்கிய இலக்கணங்களே சான்று. இன்று நிலவும் தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். இது தோன்றிய காலம் கி.மு.3000க்கு முந்தியது என்று சிலரும் கி.மு.5000க்கு முந்தியதென்று சிலரும் கூறுவர். எப்படியாயினும் கிறித்து பிறப்பதற்கு முன்தோன்றிய மூத்த நூல் என்பது உறுதி.

தொல்காப்பியம் இலக்கண நூல். செழிப்பான இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பது மொழிநூற் கருத்து தொல்காப்பியம் போன்றதொரு செப்பமான இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பு இலக்கியம் சிறந்து விளங்கியிருக்க வேண்டும் என்பது ஒருதலை. தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் பேசவில்லை, மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தது. இதுபோல் உலகில் வேறு எந்த மொழியிலும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண நூல் இலக்கணம் கூறப்பெறவில்லை. ஏனோ, தானோ என்று வாழ்வது வாழ்க்கையன்று. வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை. இந்த உணர்வில் ஓர் இனம் வளர்ந்திருக்குமானால் அந்த இனத்தின் தொன்மை மிகமிகப் பழமையானது என்பதை ஆராய அகழ்வாராய்ச்சிகள் தேவைப்படா.

தொல்காப்பியம் தோன்றிய பிறகும் வாழ்க்கை முழுமையுறாத நிலையில் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தத் திருக்குறள் தோன்றியது. தொல்காப்பியத்தில் சித்தாந்த சமயக் கருத்துக்கள் பயின்றுள்ளன.

நிலத்தைப் புரிந்து நிலத்திற்குரிய வழிபாட்டுப்பொருளை உணர்த்துகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்விய முறையாற் சொல்லவும் படுமே

(தொல். அகத்திணை, நூற்பா.5)
இந்நூற்பாவில் சேயோன் என்று குறிப்பிடப் பெறும் கடவுள் முருகனே என்பது பெரு வழக்கு. ஆனால் காலத்தின் பின்னணி, கருத்து வளர்ச்சிகளின் படிநிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்கும்பொழுது சிவ வழிபாட்டின் தொடர்ச்சியாக முருகன் வழிபாடு சங்க காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது பெறப்படும். சிவன் தந்தை பார்வதி தாய், முருகன்பிள்ளை என்ற கருத்துக்கள் பிற்காலத்திய பெளராணிகக் கருத்துக்கள். சேயோன் என்பதைச் சேய், சேயன், சேயான், என்று பகுத்துப் பொருள் கொண்டால் செந்நிறத்தான் என்று பொருள்படும்.

சேயோன் என்ற சொல்லுக்குச் சிவன் என்றும் பொருள் உண்டு. ஆதலால் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்குச் சிவபெருமான் உறையும் மலை நிலம் என்றே பொருள். ஆதலால், தொல்காப்பியத்தில் சிவநெறிக் குறிப்புக்கள் உண்டு. அதோடு, தொல்காப்பியத்தின் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு சிவநெறிக் கருத்துக்களுக்கு அரண் செய்வனவாக உள்ளனன.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்ற இலக்கண வைப்புக்கள் சிவநெறியின் சீர்மைகளை விளக்கும் இயல்பின. இதுபற்றித் தத்துவத் தலைப்பில் பேசும் பொழுது ஆராயலாம். தொல்காப்பியத்தில் தெளிவாகச் சிவம் சைவம் என்ற சொற்கள் பயிலப்படவில்லையானாலும் சிவநெறியின் கருத்துக்கள் வந்துள்ளன. கந்தழி என்பது சிவ பெருமானைக் குறிக்கும் தன்மையுடைய சொல்லாகக் கருதப் பெறும். தொல்காப்பியத்தை ஒட்டித் தோன்றிய சங்க காலத்தில் மேலும் சிவநெறி வளர்ந்தது; ஆக்கம் பெற்றது. ஆயினும் சங்க காலத்திற்கூட அது வாழ்க்கையின் நியதியாக விளங்கியதேயன்றி வரையறுக்கப்பட்ட முழு நிலையை எய்தி விடவில்லை.

கடைச்சங்க காலத்திற்கு முந்தியவன் என்று கருதப்படும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொற்றக்குடை முக்கட் செல்வர் நகர்வலம் வருவதற்குத் தாழ வேண்டும் என்று அறிவுறுத்தியதாகப் புறநானூற்றுப் பழம்பாடல் கூறுகிறது.

பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே!

(புறம். 6: 17-18)

என்பதறிக முக்கட் செல்வர் என்பது சங்க காலத்தில் சிவன் பெற்ற பெயர். கதிரவன், திங்கள், தீ இம்முன்றும் மூன்று கண்களெனக் கூறுவர். ஆனால் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சிவன் என்ற சொல் பயிலவில்லை. ஆனாலும் சிந்துவெளி நாகரிக காலம் தொட்டு, மெய் கண்டார் காலம் வரை தோன்றிய அனைத்து நூல்களிலும் சிவன் மூன்று கண்களையுடையவன் என்பது இடையறாது பயிலப்பட்டு வந்துள்ளது.

தமிழக வரலாற்றின் பொற்காலம் சங்ககாலமாகும். சங்க கால இலக்கியங்களில் சிவநெறிக் கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. சிவபெருமானின் செயல்முறைப் பண்பாட்டால் அமைந்த பிறிதொரு பெயர், “திருநீல கண்டம்”. அதாவது “நீலமணி மிடறு” என்பது. அமரர்களுக்கு வாழ்வளிப்பதற்காக நஞ்சு உண்டமையால் தோன்றியது “நீலமணி மிடறு” என்பது. இதனை நினைவு கூர்ந்து ஒளவையார் அதியமான் நெடுமானஞ்சியைப் பாராட்டும் பொழுது,

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே...

(புறம், 91: 5-7)

என்று பாடுகின்றார். மற்றும் சங்க கால இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே சிவநெறி ஏற்றிப் போற்றப் பெற்றுள்ளது.

காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் சிவநெறியை ஏற்றிப் போற்றியுள்ளார். கவுந்தியடிகள் வாயிலாக, இளங்கோவடிகள் கூறும் கொள்கைகளை வைத்து, இளங்கோவடிகளைச் சமணர் என்று பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் சமயமாயினும் அவர் அந்தச் சமய நெறியின் உயர் கொள்கைகளைத் தழுவுதல் வேண்டியும், சமயப் பொறை நோக்கியுமே கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அதனால் அவரது சமயமே சமணம் என்று துணிதல் ஏற்புடையதன்று. இளங்கோவடிகள், நிறைந்த சமயப் பொறையுடையவர். தெளிவாகச் சொன்னால் சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி மேற்கொண்டவர் என்றே பாராட்டத் தோன்றுகிறது. அவர் தம் நூலில் எந்தெந்தச் சமயங்களைப் பற்றிப் பேசுகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்தந்தச் சமய நெறியின் சிறப்பை, கொள்கைகளை உள்ள ஈடுபாட்டுடன் கூறுகிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அடிகள் பாடிய ஆய்ச்சியர் குரவை, ஆய்ச்சியர் குரவையைப் படிக்கும் பொழுது திருமால் நெறியில் தோய்ந்து ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களைப் படிக்கும் பொழுது என்ன உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறதோ அதே உணர்ச்சியும் அனுபவமும் ஏற்படுகிறது என்றால் மிகையாகாது.

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவிர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாஎன்னா-நாவென்ன நாவே

(சிலப். ஆய்ச்சியர் குரவை-37)

என்ற பாடலையும்,

சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள் எந்நாளும் நாளாகும்-என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துகளன் வாய்

(நாலா: 2298)

என்ற பாடலையும் இணைத்துப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அதுபோலவே அவர் சொல்லும் முறையில் காணப்படும் குறிப்பின் அடிப்படையில் அடிகள் சிவநெறியைச் சார்ந்தவரென்று துணிய முடியும். ஆயினும் அது நமது நோக்கமன்று.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்

(சிலப். வேட்டுவ வரி-21)

என்று போற்றுகின்றார். சிலப்பதிகாரத்தில் நகரங்களை அணி செய்யும் திருக்கோயில்களைக் குறிப்பிடும் பொழுது சிவபிரான் திருக்கோயிலையே முதல் நிலையில் வைத்துக் கூறுகின்றார்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்...

(சிலப். இந்திரவிழவூரெடுத்த காதை 169-172)

என்றும்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்

(சிலப் ஊர்காண் காதை : 7-10)

என்றும் கூறுதல் அறியத்தக்கது. சைவத்துக்கேயுரிய சிறப்பு “பிறவாயாக்கைப் பெரியோன்” என்பது. சைவ நெறியின் கடவுள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்படாதவன்; பிறவாதவன்; இறவாதவன்.

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்குமேல் வினையும் செய்யும்
ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வ னன்றே

(சிவஞான சித்தியார், 115)

எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேநம் சோணேசர்-இல்லில்
பிறந்தகதை யும்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு
இறந்தகதை யும்கேட்டி லேம்.

(அருணகிரியந்தாதி)

என்ற திருப்பாடல்களின் பொருள் அறிக. இந்தச் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துப் பாராட்டுவதன் மூலம் அவருடைய சிவநெறிச் சார்பு அறியத்தக்கது.

மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக

(மணவிழாவறை காதை : 54-55)

என்று சிவபிரான் திருக்கோயிலை முதன்மைப்படுத்திக் கூறுகிறார். -

அடுத்து, செங்குட்டுவன் வடபுலப் படையெடுப்புக்குப் புறப்படும்பொழுது, நெடுமாலின் திருச்சேடத்தைக் கொண்டு வந்து, நின்று சிலர் தொழ, சிவபெருமானது திரு வடிகளைத் தன் மணிமுடியின் மீது வைத்திருந்தமையால், அத் திருச்சேடத்தை வாங்கித் தனது புயத்தில், ஏற்றுக் கொண்டதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்குஅது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்..............

(சிலப். கால்கோள் காதை 62-67)

இந்த முறை வைப்பு சிறப்புடைய மரபினை மையமாகக் கொண்டதன்றோ?

அடுத்து, தமிழகத்துச் சைவ நெறியின் பொற்காலம் எனப் போற்றக்கூடிய காலம், திருமுறைக் காலம். திருமுறைக் காலம் என்பது மிக நீண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்க முதல் கி.பி.1150 வரையாகும். இந்த நூற்றாண்டு இடைவெளி, தமிழகத்தின் வரலாற்றைக் கிளர்ச்சித் தன்மையுடையதாக்கிய சமய எழுச்சிக் காலம். சமயப் பொறை கருதி, பல்வேறு சமய நெறியாளர்கள் தமிழ்நாட்டில் உலாவவும் வாழவும் அவர்களுடைய சமயக் கொள்கைகளை, பாராட்டியும் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டுமே தமிழர்கள் வாழ்ந்தனர்.

ஆயினும் பெளத்த, சமண நெறியாளர்கள் சமயப் பொறையை இழந்து தர்க்கித்தல், சழக்கிடுதல், மதம் மாற்றுதல், தம் நெறி சாராதவரைத் துன்புறுத்தல் ஆகிய செயல்களை மேற்கொண்டு சைவ நெறியாளர்களுக்கும் ஊறுவிளைவித்தனர். தமிழர்கள் இயல்பில் சமயப்பொறை யுடையவர்களாக இருந்தனர். இதற்குச் சான்று, அப்பரடிகள் சைவத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது யாரும் தடுக்கவில்லை; கிளர்ச்சி செய்யவில்லை. ஆனால், சமணத்திலிருந்து சைவத்திற்கு அப்பரடிகள் திரும்பி வந்த பொழுது, சமணர்கள் மதம் மாறிய பல்லவ அரசனின் துணையுடன் அப்பருக்குத் தந்த தொல்லைகளே சான்று.

அதுபோலத்தான் மதம் மாறிய பாண்டிய அரசன் நெடுமாறன் துணையுடன் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குத் தீ வைத்ததுமாகும். திருஞானசம்பந்தரோடு பலமுனைகளில் வாதாடியது, பேராடியது ஆகியவற்றின் மூலம் இதனை அறிய முடிகிறது. இந்தச் சூழலில்தான் ஒரு சைவப்படை யெழுச்சியே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சமயத் தொண்டர்கள் அப்பரடிகள், திருஞானசம்பந்தர் ஆகியோருடைய அடிச்சுவட்டில் தொண்டு செய்தனர் திருத்தொண்டுகள் இயற்றினர்.

இன்று நம்மிடையே வழக்கத்திலிருக்கும் சைவ நெறியின் பழக்கங்கள் எல்லாம் அவர்களால் காக்கப்பெற்று நமக்கு அளிக்கப் பெற்றவையேயாம். இதனை,

“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் சுந்தரனும்
சிற்கோல வாவூர்த் தேசிகனும்-முற்கோலி

வந்திலரேல் நீறெங்கே? மாமறைநூல் தானெங்கே?
எந்தைபிரான் அஞ்செழுத் தெங்கே!”

என்ற பழம்பாடல், வினாவால் விளக்குவது காண்க.

தமிழக அரசர்களில் பலர் சிவநெறியைச் சார்ந்தே ஒழுகி வந்துள்ளனர். ஒரு சிலர் திருமாலியத்தைச் சார்ந்திருந்தனர். ஆயினும், பெரும்பாலான அரசர்கள் தாம் எந்தச் சமயத்தை மேற்கொண்டொழுகினும் மற்றச் சமயங்களை மதித்து வந்துள்ளனர்.

பல்லவர்களில் ஓரிரு அரசர்கள் மட்டும் சமண சமயத்தைச் சார்ந்திருந்தனர். பல்லவர்களில் மகேந்திர பல்லவனும் பாண்டியர்களில் நெடுமாறனும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களும் கூட முறையே அப்பரடிகளாலும், திருஞானசம்பந்தராலும் முறையாகச் சைவத்துக்குத் திரும்பி அழைக்கப் பெற்றவர்கள். பழங்காலத் தமிழகப் பேரரசுகள் உள்நாட்டு அமைதிக்கு மக்களின் சமய நம்பிக்கைகளையே களமாகக் கொண்டு செயற்பட்டன.

பல்லவ அரசர்களால் சிவநெறி மிகச் சிறப்பாக வளர்ந்தது. ஆனாலும், தூய சிவநெறியாக வளராமல் செழுந்தமிழ் வழக்கில் ஊடுருவிக் கலக்க ஆவலுடன் துடித்த ஆரிய வேதத்திற்கு வாயிலமைத்துக் கொடுத்ததே பல்லவப் பேரரசுதான். களப்பிரர் ஆதிக்கம் (கி.பி.300-600) தமிழகத்தில் கால் கொண்டது. அவர்கள் மூலம் சமண, பெளத்த சமயங்கள் பரவின. ஆரிய வேதங்களும் பொய்ம்மை நிறைந்த புராணக் கதைகளும் தமிழ்நாட்டில் பரவின. ஆயினும் இந்த இடைக் காலத்தில்தான் கோச்செங்கணான், புகழ்ச்சோழர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய அரசர்கள் திருக்கோயில்களை எடுப்பித்தும் பூசனைகள் செய்வித்தும் சிவநெறியை வளர்த்தனர்.

கி.பி. 600 முதல் 900 வரை ஆண்ட பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலும் சிவநெறியே வளர்ச்சி பெற்றது. இந்தக் காலத்தில் ஆண்ட பல்லவர்கள் தங்கள் அரசின் முத்திரையாகச் சிவநெறியின் இலச்சினையாகிய “நந்தி"யை அரசு முத்திரையாகக் கொண்டும், நாணயங்களில் முத்திரையாகப் பதித்தும் ஆட்சி செய்து வந்துள்ளனர். அக்காலப் பல்லவ அரசின், நாட்டுச்சமயமாகவே சிவநெறி இருந்திருக்கும் என்று கருத முடிகிறது. மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவ நாட்டில் அப்பரடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தூய சிவநெறி எழுச்சி பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தந்திருக்கிறது. அந்த எழுச்சியின் ஒளி வீச்சு, தமிழகம் முழுவதிலும் மூன்று பேரரசுகளிடையிலும், ஆட்சியிலும் பரவிப் பயன்தந்தது. மகேந்திரன் பல திருக்கோயில்களை எடுத்துத் திருப்பணி செய்துள்ளான். பல்லவ அரசருள் ஒருவனாகிய பரமேசுவரவர்மன் மாமல்லபுரத்துக் கணேசர் கோயிலில் ஒரு கல்வெட்டு வைத்துள்ளான். அக்கல்வெட்டில் “சிவனுக்கு மேல் தெய்வமில்லை; அவனே முழு முதற் கடவுள்; பிறப்பிலி, ஸ்ரீநிதி. சிவனை உள்ளன்புடன் வழிபடுபவன். சிவனை நினையாதவர் ஆறுமுறை சபிக்கப் பட்டவராவர்” என்று கூறுகிறது.

இராசசிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயில் பெரும் புகழ்பெற்றது. சுந்தரரால் பாராட்டப் பெற்ற காடவர் கோன் கழற்சிங்கனும் பல்லவனேயாவான். இவனை வரலாறு, மூன்றாம் நந்திவர்மன் என்று கூறும். இவன் காலத்தில் செந்தமிழும் சிவநெறியும் சிவத்தொண்டும் பெருகி வளர்ந்தன. பல்லவர்கள் காலத்தில் நாயன்மார்கள் பலர் இருந்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் இந்தக் காலம் சைவ மறுமலர்ச்சிக் காலம்.

பல்லவ அரசர்களைப் போலவே சோழர்கள் காலத்திலும் சிவநெறி வளர்ந்தது. சோழர் காலத்தில்தான் வடபுல்த்தில் காஷ்மீரம், நேபாளம் முதலிய இடங்களில் திருத்த முற்ற சிவநெறி கால் கொண்டது. சோழ நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் காவிரியாற்றங்கரையில் கறைக் கண்டனுக்குத் திருக்கோயில்களை எடுத்தும் சாதாரண நிலையிலிருந்த கோயில்களைக் கற்றளிக் கோயில்களாகப் புதுப்பித்தும் அழகுபடுத்திய பெருமை ஆதித்த சோழனைச் சாரும். சோழப் பேரரசை நிறுவிய முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலை எடுத்தான். இராசராசன் இத்திருக்கோயில் எடுத்ததோடு மட்டுமின்றிச் சிவநெறி வரலாற்றில் நிலையான இடம்பெறத் தக்கதாக திருமுறைகளைத் தொகுத்துத் தமிழ் உலகிற்குக் கொணர்ந்தான்.

பல்லவர் காலத்தில் சிவநெறியாளர் போல வேடங்கொண்டு ஊடுருவிய ஆரியவேத மரபினர், நமது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் அருளிச் செய்த தமிழ்மறைப் பாடல்களைக் கண்டு அஞ்சினர்.

தேவார ஆசிரியர் மூவரும் ஆரியவேத மரபினர் பரப்பிய-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை மறுத்து, உய்ர்ந்த சமய வாழ்க்கை நெறியினை நாடு முழுதும் நடந்து சென்று பரப்பினர். அவை நாட்டிலே நடமாடினால் ஆரிய வேதத்தின் கொள்கை இடம் பெறாது என்று அஞ்சிய ஆரியமரபினர் அவைகளை அரும்பாடுபட்டுத் திரட்டித் தொகுத்துத் தில்லைத் திருக்கோயில் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டனர்.

கறைப்பட்ட வாழ்க்கையும், சிறைப்பட்ட மன நிலையும் கொண்ட தமிழினத்தைச் சிறை மீட்கவந்த திருமுறைகள் சிறைப்படுத்தப்பட்டு விட்டன. தேவாரம் பாடிய மூவரும் வந்ததால்தான் திருமுறைகளை எடுத்துச் செல்ல முடியும் என்றார்கள். இதனை அறிந்த இராசராசன் தனது நுண்ணறிவினால் தேவாரம் பாடிய மூவரையும் சிலைவடிவில் கொண்டுவந்து திருமுறைகளை மீட்டான். தமிழர் நெறி இன்றும், என்றும் உயிர்ப்போடிருக்கத் திருமுறைகளைக் கண்டு தந்த இராசராசசோழன் புகழ், என்றும் நின்று நிலவும்.

தேவாரத்தில், இராசராசசோழனுக்கு நிறைந்த ஈடுபாடு. அதனால், தான் வழிபடும் இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான். தான் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் நாற்பத்தெண்மரையும், துணைக்கருவியாளர் இருவரையும் பரம்பரைப் பணியாளராக நியமித்தான். நாள்தோறும் “ஆடல்வல்லான்” மரக்காலால் அரண்மனைப் பண்டாரத்தில் முக்குறுணிநெல் தரவும் ஏற்பாடு செய்தான். அவ்வழி, அப்பெருமன்னன் திருமுறைகளைப் போற்றி வளர்த்த பெருமைக்குரியவனாகிறான்.

இராசராசசோழன் மகன் இராசேந்திர சோழன் தந்தையை விஞ்சிய சிறப்பில் கங்கைகொண்ட சோழிச்சரம் என்ற திருப்பெயரில் பெரிய சிவன்கோயில் எடுப்பித்தான்.

அடுத்து, சோழ அரசர்களில் நீள நினைந்து போற்றக் கூடிய பேரரசன், அநபாயன் என்று சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன்.

ஆரியம், பெளத்தம், சமணம் ஆகியவற்றின் ஊடுருவல்களால் சமயச் சடங்குகள் பெருகின; பெண்மையை இழிவுபடுத்தும் வறட்சித் தன்மையுடைய துறவு நெறி மலிந்தது; தமிழ்ச் சமுதாய வாழ்க்கையை நலிவடையச் செய்தது.

அந்தக் காலத்தில், “வாழ்க்கையே சமயம், பெண்மை பெருமைக்குரியது; மாந்தரில் சாதிப் பிரிவுகள் இல்லை; காதல் திருமணமே சிறந்தது; மனையற வாழ்க்கை மூலமே வீடுபேறு பெறலாம்; தொண்டு நெறியே உயர்ந்தது” என்ற கொள்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்க்கையினைக் கூறுவதன் மூலம் தமிழின வரலாற்றுக்கு ஏற்பட இருந்த சரிவைத் தடுத்து நிறுத்தி, சேக்கிழார், பெரிய புராணம் இயற்றிடத் துணை நின்ற பெருமைக்குரிய மன்னன் அநபாயச் சோழனே.

சோழர் காலத்துத் திருக்கோயில்கள் திருக்கோயில்களாக மட்டுமல்லாமல் சமுதாயப் பணிமனைகளாகவும் விளங்கின என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

பாண்டிய மன்னர்களிலும் பலர், சிவநெறியைச் சார்ந்து பணி செய்துள்ளனர். அவருள் மிகச் சிறந்தவன் வரகுண பாண்டியன் என்ற பேரரசன். பட்டினத்தடிகள் வரகுணபாண்டியனைப் ‘பெரிய அன்பின் வரகுண தேவரும்’ என்று பாராட்டுவார். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியப் பேரரசனின் அமைச்சராக விளங்கினார் என்பதும் அறிந்து மகிழத்தக்கது.

தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிவநெறியின் சீலத்திற்கும் பணிவிற்கும் புகழ் பெற்றவன். மாபெரும் கற்றளித் திருக்கோயிலாகிய தென்காசித் திருக்கோயிலை எடுப்பித்த பெரும் புகழுக்குரிய அரசன் அவன்.

சிவநெறியை, திருக்கோயிலை என்றென்றும் அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற ஆராக் காதலில் உந்தப் பெற்றுத் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறைக்கு எழுதி வைத்த கல்வெட்டு, காலத்தால் அழியாதது: கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வது. கல்வெட்டைப் படித்து அனுபவியுங்கள் தமிழக வரலாற்றை, சிவநெறியின் சீர்மையை, திருக்கோயில்களை நன்றியுணர்வோடு காக்கும் பணியைத் தொடருங்கள்! இதோ கல்வெட்டு; படித்து உணர்ந்து செயலாற்றி மகிழுங்கள்.

அரிகே சரிமன் பராக்கிரம மாறன் அரன்அருளால்
வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்

புரிசேர் கடற்புவி போற்றவைத் தேன்அன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதம்என் சென்னியதே.

(தென்காசிக் கோயில் கல்வெட்டு)

பாண்டியப் பேரரசில் சோழர் குலத்தில் தோன்றிய மங்கையர்க்கரசியாரின் கணவனாக இருந்து சமணத்துக்குச் சென்று, பின் சிவநெறிக்கு மீண்டு, சிவநெறி வரலாற்றுக்குப் பெருநலம் சேர்த்தவன் நின்றசீர் நெடுமாறன். அவன் புகழ், ஞாலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

நெடுமாறனின் வாழ்க்கைத்துணையாக நின்ற மங்கயைர்க்கரசியாரின் புகழ், பண்ணும் இசையும் பயிலும் காலம் வரையில், தமிழினம் இயற்கையோடிசைந்த வாழ்க்கை வாழும் காலம் வரையில், ஆணும் பெண்ணும் காதலிற் கலந்து வாழும் மனையறம், மண்ணில் நிலவும் வரையில் நிலைத்து நிற்கும்; அந்த மங்கையர்க்குத் தனியாசி, தமிழர்தம் இல்லங்களில் தெய்வமாக வழிபடப் பெறுவார்.

சேரமன்னர்களில் சிறந்து விளங்கிய பேராசர் சேரமான் பெருமாள் நாயனார். இவர் நாள்தோறும் வழுவாது சிவ பூசை செய்த மன்னர். அதுமட்டுமா? பூசையின் பயனை நாள்தோறும் பெருமான் ஏற்றுக் கொண்டு, அருள் செய்த பெரும் பேறுபெற்ற மன்னர், திருநீற்றுச் சாதனத்தை மேற்கொண்டவர்கள் யாராயினும் அவரை மதித்தவர் சிவபெருமானால் சுந்தரருக்குத் தோழராக்கப் பெற்ற அண்ணல், இங்ஙனம் சேர அரசர்களிலும் போாசர்கள் பலர் சிவநெறியில் நின்றொழுகிச் சைவத்தை வளர்த்து வந்துள்ளனர்.

இங்ஙனம் வளர்ந்து வந்த சிவநெறி, பெளத்த, சமண, மாயாவாத சமயங்களைச் சந்திக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. அப்பொழுது இலக்கியங்களில் பரவிக்கிடந்த சைவக் கருத்துக்களை மையமாகக் கொண்ட சைவ இலக்கண-சாத்திர நூல்கள் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது, காலத்தின் தேவையாக இருந்தது. இத் தேவையினைத் திருவருள் துணைகொண்டு மெய்கண்டதேவர் நிறைவு செய்தார்; “சிவஞான போதம்” என்ற அருமையான தத்துவ அளவை நூலை முதல் நூலாக ஆக்கித் தந்தார்.

சிவஞானபோத நூலுக்கு வழி நூலாகத் தோன்றிய, அருணந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார், மிக விரிவாகவும் தெளிவாகவும் சைவ சித்தாந்தச் செந்நெறியை எடுத்து விளக்குகிறது. இதனையொட்டிப் பன்னிரண்டு நூல்கள் தோன்றிச் சாத்திர வரிசையில், பதினான்கு சாத்திர நூல்களாக அமைந்துள்ளன. அவற்றுள் திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், மெய்கண்டதேவருக்கு முன்பே செய்யப் பெற்றன என்று ஒரு கொள்கையும் உண்டு.

அந்தப் பதினான்கு சாத்திரங்களாவன:

1. சிவஞானபோதம் 8. திருஅருட்பயன்
2. சிவஞான சித்தியார் 9. வினாவெண்பா
3. இருபா இருபது 10. போற்றிப் பஃறொடை
4. உண்மை விளக்கம் 11. கொடிக்கவி
5. திருவுந்தியார் 12. நெஞ்சு விடு தூது
6. திருக்களிற்றுப்படியார் 13. உண்மைநெறி விளக்கம்
7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம்

சைவ சித்தாந்த சாத்திரக் காலம், வழி வழியாக வந்த சமய மரபுகளையும், தத்துவ மரபுகளையும் காப்பாற்றித் தந்தது; பிற சமய நெறிகளின் தத்துவங்கள் ஊடுருவிக் கலக்காமல் தடை செய்தது. அங்ஙனம் மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதத்தில் இல்லாத செய்திகள்தமிழ் மரபுக்குப் புதியனவாய் அமைந்த செய்திகள் சில வழி நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து புராண காலம் தோன்றுகிறது. இந்தக் காலம் சைவத்திற்கு அவ்வளவு நல்ல காலமாக அமையவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரண்டு நல்ல புராணங்கள் தோன்றின. இங்கே மிகச் சிறந்த வரலாற்றுப் புராணமாகிய பெரிய புராணம் சாத்திர காலத்துக்கு முந்தியது என்பது குறிக்கத்தக்கது.

ஆயினும் பல புராணங்கள் இந்த நூற்றாண்டிலேயே செய்யப்பெற்றன. அவைகளில் ஏற்புடையன மிக மிகச் சிலவே. பல புராணங்கள் சிவநெறியை ஊடுருவிச் சிதைக்கும் நோக்கத்துடன் கூட செய்யப்பட்டனவோ என்று கருதத்தக்க அளவில் அமைந்துள்ளன. அவை பிற்காலத்தில் தோன்றிய பகுத்தறிவுவாதிகளுக்குப் பெருந்தீனியாகப் போய்விட்டன. அவைகளை உள்ளவாறறிந்து ஒதுக்குதல் இன்றுள்ள தலையாய கடமை.

சைவ சித்தாந்த சாத்திரக் காலத்தைத் தொடர்ந்து திருமடங்களின் காலம் தொடங்குகிறது. சமயாசாரியர்களாலும் சந்தானாசாரியர்களாலும் போற்றி வளர்க்கப் பெற்ற சமய நெறிகளை, நிலையான நிறுவனங்கள் அமைத்துத் தொடர்ந்து பேணி வளர்க்க வேண்டும்; சிவ ஞானத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி அந்நெறியில் அவர்களை வழிநடத்த வேண்டும்; சிவஞான நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சைவத் திருமடங்கள் காணப் பெற்றன. சைவத் திருமடங்கள் பதினெட்டு என்ற வழக்கு உண்டு.

1 திருவாவடுதுறை ஆதீனம், 2. தருமபுர ஆதீனம், 3. காஞ்சிபுரம் ஆதீனம், 4. சூரியனார் கோவில் ஆதீனம், 5. செங்கோல் ஆதீனம், 6. ஆகமசிவப்பிரகாச ஆதீனம், 7. திருஞானசம்பந்தர் ஆதீனம், 8. திருவண்ணாமலை ஆதீனம், 9. நீலப்பாடி ஆதீனம், 10. தாயுமானசுவாமிகள் ஆதீனம் (அன்னப் பேட்டை, 11. சாரமா முனிவர் ஆதீனம், 12. திருச்சி சொர்க்கபுர ஆதீனம், 13. வேளா குறிச்சி ஆதீனம் (திருவாரூர்), 14. வள்ளலார் ஆதீனம், 15 இருளஞ்சேரி ஆதீனம், 16. வரணி ஆதீனம், 17 நாச்சியார் கோயில் ஆதீனம் (வேதாரண்யம்), 18 நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம் (குடந்தை).

- தொகையகராதி பக்.117.

இத்திருமடங்கள் எல்லாம் அவை தோன்றிய காலத்தில் அருள் ஞானப் பண்ணைகளாகத் தொண்டின் நிறுவனங்களாக விளங்கின. இன்றும் சில திருமடங்கள் விளங்குகின்றன. மேலும் இங்கும் அங்குமாக நாட்டில் பரவலாக நூற்றுக்கணக்கான திருமடங்கள் தோன்றிப் பணிகள் செய்தன என்று ஆங்காங்கு உள்ள திருக்கோயில்களின் கல்வெட்டுக்கள் எடுத்துக் கூறுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த பொழுது உடனிருந்த அடியார்கள் வழித் தோன்றி, இன்றும் நின்று நிலவும்-காலத்தால் மிகவும் மூத்த ஆதீனம் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம். இத்திரு மடத்தில் வழிவழியாகச் சைவத்தின் நுண்பொருள்களை விளக்கும் சமய நூல்கள் செய்த முனிவர்கள் இருந்துள்ளனர்.

மதுரை ஆதீனத்தில் 291ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளிய திருவருள் திரு. சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறந்த சைவ சித்தாந்த ஞானம் கைவரப் பெற்றவர்கள். செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவர்கள். ஆவியுலகத்தொடு தொடர்பு கொள்ளுதல், பேசுதல் முதலிய துறைகளில் துறைபோய அனுபவமும் உடையவர்கள். இத்துறையில் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள புத்தகங்கள் கற்றுத் தெளிதற்குரியன.

தமிழகத்தின் சமய அரங்குகளில் இவர்கள் “செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும்” என்ற சேக்கிழார் பாடலுக்கு ஆவியுலகக் கருத்தைக் கருவியாகக் கொண்டு விளக்கியருளும் பாங்கு பாராட்டு தலுக்குரியது.

இத்திருமடத்து ஞானபிடத்தின் வழித்தோன்றலாக, இளவரசாக எழுந்தருளியிருப்பவர்கள் திருவருள் திரு. அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். செந்தமிழ் ஆர்வமும் திருத்தொண்டு நெறியில் நிற்கும் பண்பும் உடைய இவ்விளவரசு அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.

சைவத் திருமடங்களில் திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப் பெறும் ஆதீனங்களின் உபதேச பரம்பரை, கயிலையிலிருந்து தோன்றியதாகும். திருக்கயிலாய பரம்பரை, திருக்கயிலாயத்தின் அருள்வடிவாய் கல்லாலமர நிழலில் அமர்ந்து அதோ முகப்பரமனிடமிருந்து திருநந்தி தேவர் சிவஞான உபதேசம் பெற்றார். அக்குருபரம்பரையில் வந்த அகச்சந்தான தேவர்கள், 1. திருநந்திதேவர், 2. சனத்குமாரர், 3. சத்தியஞானதரிசனி, 4. பரஞ்சோதியார். புறச்சந்தான குரவர்கள் 1. மெய்கண்ட தேவர், 2. அருணந்திசிவம், 3. மறைஞான சம்பந்தர், 4. உமாபதி சிவம். இந்தச் சந்தான குரவர்களில் அருணந்தி சிவாச்சாரியாரின் 49. சீடர்களில் ஒருவராக விளங்கிய தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் ஞானப் பெருக்கில் தோன்றியது, திருவண்ணாமலை ஆதீனம். இன்று அது குன்றக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு பணி செய்வதால் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம் என்று அழைக்கப் பெறுகிறது. இத்திருமடம் சிவஞான சித்தியாருக்கு உரைகண்ட ஞானப்பிரகாச முனிவரைப் பெற்றது.

இவ்வுரையைச் சிவசமவாத உரை என்று கூறி மறுப்பாரும் உண்டு. பெரிய புராணத்திற்கு விரிவுரை கண்ட ஆறுமுகத் தம்பிரானைப் பெற்றது என்ற பெருமைக்குரியது. இத்திருமடத்தில் வழி வழி பல முனிவர்கள் பல அருள்ஞான நூல்களைச் செய்துள்ளனர்.

இன்றும் இந்தக் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஒன்றும் வகையிலெல்லாம் பணி செய்து வருகிறது.

அடுத்து, நமசிவாய மூர்த்தியை ஞானாசிரியராகக் கொண்ட திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஆகும். நுண்ணிதின் அமைந்த சிவஞான போதத்தை எல்லாரும் கற்கும் வகையில் பேருரையாக்கித் தந்த மாதவச் சிவஞான முனிவர் இந்த ஆதீனத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த ஆதீனத்தின் பெருமைக்குச் சான்று.

திருவாவடுதுறை மடம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் எழுச்சிக்குத் துணையாக இருந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதயர் முதலியவர்களுக்குக் களமாக அமைந்தது என்பதைத் தமிழுலகம் அறிந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இத் திருமடத்தில் செந்தமிழ்ப் புலமையும் சிவஞானமும் கைவரப் பெற்றவர்கள் வழிவழியாக அருளாட்சி செய்து வருகின்றனர்.

இன்று இத்திருமடத்தின் ஞானத்தலைவராக எழுந் தருளியுள்ள மகாசந்நிதானம் திருவருள் திரு. அம்பலவான தேசிய பாரமாசார்ய சுவாமிகள். அவர்கள் நல்ல ஞான நூல்களை அச்சிட்டு வழங்கியும், சமய, இலக்கிய மாநாடுகளை நடத்தியும் செய்து வரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன.

சைவத் திருமடங்களில் சிறப்புடையதாக விளங்கி நின்று தொண்டு செய்து வருவது திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனமாகும்.

இத்திருமடம், முத்தி நிச்சயம் முதலான சாத்திர விளக்க நூல்களைச் செய்து பெருமை பெற்றது. இன்றும் சிறந்த சாத்திர, தோத்திர நூல்களை வெளியிட்டும், சைவ சாத்திரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களைக் கண்டும் சிறந்த முறையில் தொண்டு செய்து வருவது தருமபுரம் ஆதீனம் ஆகும்.

தருமபுர ஆதீனத்தில் இன்று 26ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளியுள்ள திருவருள் திரு. சண்முகதேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சாத்திரங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்த ஞானமும் அந்நெறி முறைகளின் வழி அயர்விலாது அரன் தன்னை அருச்சிக்கும் ஆர்வமும், சிவஞானத்தின் இயல்பெனச் சிவஞான போதம் 12ஆவது சூத்திரம் சொல்லும் சிவப் பணிகள் அனைத்திலும் தோய்வும் ஈடுபாடும் கொண்டு சைவம் செழிக்க அருளாட்சி செய்து வருகிறார்கள்.

அடுத்து, சிறந்ததொரு திருமடமாக விளங்குவது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம். இது தருமையின் ஞானப் பரம்பரை வழி வந்த, கொழிதமிழ்க் குமரகுருபர அடிகளால் தோற்றுவிக்கப் பெற்றது. இத்திருமடம், காசி முதல் இராமேச்சுரம் வரை இயற்றியுள்ள அறக்கட்டளைகள் பலப்பல. வடபுலத்து மக்கள் செந்தமிழையும் சிவநெறியையும் அறிந்து கொள்ளச்செய்த பெருமை இத்திருமடத்திற்கு உண்டு.

இன்று இத்திருமடத்தின் தலைவராக எழுந்தருளியுள்ள அருள் திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் செந்தமிழ் நூற்புலவராக, சிவஞானச் செல்வராக விளங்கிப் பணி செய்துவருவது பாராட்டுதலுக்குரியது. மேலும்,

1. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்
2. மயிலம் பொம்மபுர ஆதீனம்
3. பேரூர் அருள்திரு. சாந்தலிங்கர் திருமடம்.
4. கோவை சிரவணபுரம் கெளமார மடாலயம்.
5. கோவிலூர் ஆதீனம்.
6. திருவண்ணாமலை ஈசான்ய மடம்.
7. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம்.

ஆகிய திருமடங்களும், மற்றும் பல திருமடங்களும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த முறையில் பணி செய்து வருகின்றன.

சைவ சித்தாந்தச் சமயத்திற்குத் தொன்மையான வரலாறு உண்டு; காலத்திற்குக் காலம் அது வளர்ந்து வந்திருக்கிறது. பல்வேறு புறத்தாக்குதல்களைக் கண்டு வெற்றி பெற்று விளக்கமுற்று வந்திருக்கிறது.

இன்று தமிழகத்தில் அணி செய்து நிற்கும் ஆயிரமாயிரம் ஆலயங்கள், சித்தாந்தச் செந்நெறியின் ஆன்ம அனுபவச் செயல் முறைக் கழகங்களாகத் தோன்றியவை. சித்தாந்தச் சைவம் தனித்தன்மையில் நின்று விளங்கிய வகையில் அது ஒளித்தன்மையுடையதாக விளக்கம் பெற்றிருந்தது.

பிற்காலத்தில் தோன்றிய புறச் சமயங்களைச் சந்திப்பதற்காக அகச் சமயங்களிடையே ஏற்படுத்தப் பெற்ற இணைப்புகளாக மட்டுமல்லாமல் கலப்பாகப் போய் விட்டதால் இந்தச் சமயமும் இன்று பகுத்தறிவு சர்ச்சைகளுக்குள்ளாகி நிற்கிறது.

அகச் சமயங்களுக்கிடையே கலப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அதனுடன் மாயாவாதக் கலப்பும் ஏற்பட்டது. இவ்வாறான கலப்பு நிலையில் “இந்து மதம்” என்ற பெயர் தோன்றியது. இந்தக் கலப்பினால் ஏற்பட்ட மயக்கங்கள் இன்று மலிந்துள்ளன. அதன் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறி இனம் கண்டு கொள்ள முடியாமல் கனித்தன்மையை இழந்திருக்கிறது. இன்றையச் சித்தாந்த செந்நெறியின் திருமடங்கள் இதுபற்றி எண்ணத் திருவுள்ளம், கொள்ள வேண்டும்.

சித்தாந்தச் செந்நெறியை அதன் தனித்தன்மையோடு பாதுகாக்க முன்வர வேண்டும். சித்தாந்தச் செந்நெறி, உலகப் பொது நெறியாவதற்குரிய தத்துவச் சிறப்புடையது; சமுதாய நோக்குடையது. அது, முன்னைப் பழைய நெறி; பின்னைப் புதுமைக்கும் ஈடுகொடுக்கும் பெரு நெறி. இத்தகு சிறப்பு வாய்ந்த சித்தாந்தச் செந்நெறி என்றும் நின்று நிலவுவதாகுக!