குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வருவாய்க்காக வழிமாறற்க!

விக்கிமூலம் இலிருந்து

51. வருவாய்க்காக வழிமாறற்க!

இனிய செல்வ,

நமது தமிழகத்தில் மலிவு விலை மதுக்கடைகள் "நாட்டு மதுக்கடை" என்ற பெயரில் திறக்கப்பட்டு விட்டன. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சி. அதுவும் வள்ளுவர் கோட்டம் கண்ட பெருந்தகை கலைஞர் ஆட்சியில் மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏன், கலைஞர் உளமாரச் செய்கிறாரா? இல்லை! செய்யவேமாட்டார். இது முக்காலும் உண்மை! சத்தியமும் கூட! அப்படியானால் ஏன் திறக்கிறார்? நிதி நெருக்கடி, கள்ளச் சாராயம் இவைகளைக் காரணம் காட்டுகிறார். இனிய செல்வ, இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆயினும், நிதி நெருக்கடி அரசுக்கு! அரசு தனது நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண மக்களுக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கலாமா? அதுவும் கிராமப்புற ஏழை மக்களுக்கு உண்டாக்கலாமா? அரசாவது முயன்றால் புதிய வருவாய்களைத் தேடலாம்; தேட முடியும். அரசுக்கு வருவாய்க்குரிய வாயில்கள் ஏராளம்! அரசு தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள மக்களைச் சுரண்டுவது சிறந்த பொருளாதாரக் கொள்கையல்ல!

இனிய செல்வ மலிவு விலை மதுக்கடை மூலம் 530 தோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கிறது அரசு. அரசுக்கு 530 கோடி ரூபாய் வருவாய் வர, கிராமப்புற ஏழை மக்கள் 5000 கோடி ரூபாய்க்குக் குடித்தாக வேண்டும். இவ்வளவுக்கு அவனிடம் பணம் ஏது? கிராமப்புறத்தான் ஏற்கெனவே ஏழை! வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றான். நியாய விலைக் கடையில் அரிசிக்குக் கூடை தாங்கிக் கால்கடுக்கத் தவம் செய்கிறான். அவனிடம் ஏது காசு! கிராமப்புறத்துக் குடிமக்களுக்குக் குடியை அறிமுகப்படுத்துவது கொடிய முதலாளித்துவத்தின் செயல் என்று லெனின் கூறினார். இவையெல்லாம் கலைஞருக்குத் தெரியாததா? அப்புறம் ஏன் செய்தார்? அதுதான் புரியவில்லை! இனிய செல்வ, நமக்கொன்று புரிகிறது. தெளிவாகப் புரிகிறது. கலைஞர் இனந்தெரியாத அறச்சங்கடத்தில் இருக்கிறார். ஆதலால், விரைவில் மீண்டும் மதுவிலக்கை கலைஞர் அறிமுகப்படுத்துவார் என்றே நம்புகின்றோம். இனிய செல்வ, ஏன் முன்பு 1972இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது நாம் மேலவை உறுப்பினர். நாம் அரசுக்குச் சாதகமாக வாக்களிக்கவில்லை. சும்மா இருப்பார்களா? கலைஞரிடம் நமது நிலை தி.மு.க. அரசுக்கு எதிரான நிலை என்று கூறியுள்ளனர். எப்போதும் நம்பால் பழமை பாராட்டும் கலைஞர் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல, நமது நிலையை அவர் புரிந்து கொண்டு வாதாடி யிருக்கிறார். அப்போது கலைஞர்,

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தா னைத் தீத்துரீஇ யற்று

(929)
என்ற குறளை எடுத்துக்காட்டாகக் கூறினார். நீருக்குள் அமிழ்ந்தவன் உயிர் பிழைத்தல் அரிது. மதுப்பழக்கத்தில் மூழ்கியவன் உய்தல் என்பது இல்லை. இந்தக் கருத்துப் பொதிந்த குறளை நமக்கு எடுத்துக்காட்டியவர் கலைஞர் தான்! ஆதலால் கலைஞர் விரைவில் பூரண மதுவிலக்கை மீண்டும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிய செல்வ, அதேபோழ்து நமக்கும் ஒரு பெரிய கடமை இருக்கிறது. இனிய செல்வ, என்ன கடமை என்றா கேட்கிறாய்? அதுதான் மக்களிடம் கள்ளுண்ணலின் கொடுமையை உணர்த்துவது! இந்தக் கடமையை உணர்ந்து இன்று செய்வார் யார்? இன்று நமது நாட்டில் சமூகச் சிந்தனையாளர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. இனிய செல்வ, கலைஞரின் கொற்றம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது! அந்த உரிமையைப் பாராட்டுக்குரிய கலைஞர் மறுத்ததில்லை. இனிமேலும் மறுக்கமாட்டார்! மறுக்காதது மட்டுமல்ல. கவலையுடனும் கவனத்துடனும் ஆய்வு செய்வார்! செய்யக் கூடியதைச் செய்வார்! நம்புவோமாக!
இன்ப அன்பு
அடிகளார்