குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

விக்கிமூலம் இலிருந்து

5.வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை இயக்குக!

தமிழ் தழீஇய தமிழர் வாக்கை

தமிழ், ஒரு வளர்ந்த மொழி. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியின் சிறப்புக்குரிய இலக்கணம் கண்ட மொழி. தமிழில் மொழிக்கு மட்டுமா இலக்கணம்! தமிழர்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் உண்டு. ஆதலால், தமிழ்மொழி சிறந்த மொழி, தமிழ் தழீஇய வாழ்க்கை நாகரிக வாழ்க்கை. பண்டைத் தமிழரின் வாழ்வில் மிளிர்ந்த சிறப்பு மிக்க நாகரிகக் கூறுகள் உலகில் வேறு எங்கும் கிடைப்பதரிது. ஆயினும் என்? இன்றைய தமிழரின் நிலை என்ன? பெருங்காயம் இருந்த பாண்டம் பெருங்காய வாசனை தர இயலுமா?

தமிழக வரலாற்றில்

இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழக வரலாறு நகரவில்லை. இடையில் அப்பரடிகள், வள்ளலார் போன்ற சமயச் சான்றோர்களும் தலைவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும் நகர்த்த முயன்றனர்; நகர்த்தினர். கொஞ்சம் நகரவும் செய்தது. ஆனால் அவர்களுடைய மறைவிற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விட்டது. இல்லை, இருந்த நிலையைவிட மோசமாகிவிட்டது. அதனால் தமிழக வரலாற்றில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்க்கையை இருள் கவ்வி மூடிமறைத்து வருகிறது. தமிழர்கள் துன்பப்படுகின்றனர். இந்தத்துன்பச் சூழ்நிலைக்குக் காரணம் தமிழர்களேயாம். உண்மையைச் சொல்கின்றோம்; வேறு யாருமில்லை! தமிழர்களுக்குப் புத்தி வருமா? வள்ளுவத்தைப் பயில்வார்களா? வள்ளுவத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்களா?

தமிழகத்தில் "நான்” “எனது”

செருக்கு, கெட்ட குணம்; அழிக்கும் குணம். "நான்” -"எனது” என்ற சொற்கள் மானிட நாகரிகத்தையே அழிக்கும் சொற்கள்! "நான்” என்ற உணர்வு மனிதனை, மற்றவர்களோடு சேரவொட்டாமல் தடுத்துவிடுகிறது. அதனால் சமூக அமைப்பே உருவாகாமல் போய்விட்டது. சமூகத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு ஆற்றல்கள் பயன்படுத்தப் பெறாமல் வறிதே பாழாகின்றன. இந்த "நான்” இன்றைய தமிழகத்தில் கம்பீரமாக நடைபோடுகிறது. "நான்" என்ற நிலையை பராமரிக்கவே கட்சிகள் தோன்றுகின்றன. ஏன், நமது சமயத் தலைவர்களையும் கூட இந்த "நான்” விட்ட பாடில்லை, "நான்" உணர்வு மிஞ்சியதால் விளம்பர வாடை வீசுகிறது. நாட்டில் பல தமிழச்சிகள் ஒற்றை சேலையுடன் வாழ்கிறார்களே! அதுவும் கூட பலருக்கு மானம் மறைக்க முடியாத நிலை! ஆயினும் நமது நாட்டுச் சுவர்கள் நாள்தோறும் புதிய வண்ணச் சேலைகளை உடுத்திக் கொண்டுள்ள பொலிவைப் பார்க்கவேண்டுமே! ஆம்; இன்றைய சுவரொட்டிகள், சுவரொட்டிகள் அல்ல! இவை; சேலைகளை விஞ்சிவிட்டன. பாடப்புத்தகத்தில் இளைத்த எழுத்துக்கள், சுவரொட்டிகளில் உப்பி ஊரைப் பார்த்துச் சிரிக்கின்றன. என்னைப் போல் உப்பலாக நீங்கள் இல்லையே! இளைத்திருக்கிறீர்களே! என்று! இந்தக் கேவலம் "நான்” என்ற அகங்காரத்தால் நடைபெறுகிறது.

வையத்துள் வாழ்வு சிறக்க!

"எனது” என்பது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளது. "எனது” என்ற சொல்லுக்கு மூலமாக உள்ள தனிஉடைமைக்குணம் செழித்து வளர்ந்துள்ளது. இன்று கணவன்-மனைவியிடையே கூடக் குடும்பம் உருவாகாமல் தனி உடைமை ஆசை கெடுத்துவிட்டது; நண்பர்கள் உருவாகாமல் செய்து விட்டது. ஏன் கையூட்டுகள், வரதட்சணைக் கொடுமைகள் ஆகிய கொடிய தீமைகளைப் பெற்றதே தனி உடைமையைச் சார்ந்த கொடுமைதானே! ஆதலால், "நான்” “எனது” என்ற சொற்களுக்குரிய தீய குணங்கள் மாறாத வரையில் தமிழ்ப்பண்பு வளராது; தமிழ் நாகரிகம் தழைக்காது; சமய வாழ்க்கையும் உருவாகாது; வள்ளுவமும் வாழ்க்கையில் இடம் பெறாது.

"யான் எனதுஎன்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்."

(346)

என்றது திருக்குறள். வையகத்தில் வாழ்க்கை சிறக்க வேண்டுமா? ‘நான்’ ‘எனது’ என்ற சொற்களைத் தோற்றுவிக்கும் சமுதாய அடிப்படையை மாற்றுங்கள்! வையகம் சிறக்க வேண்டுமா? வள்ளுவத்தின் வழியில் வையகத்தை இயக்குங்கள்! "நான்” “எனது” என்ற சொற்கள் வழி அமைந்துள்ள சமய நெறிக்குப் புறம்பான வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்! அப்பொழுதுதான் தமிழ் வெற்றி பெறும்! தமிழ் வளரும்! தமிழ் வாழும்! தமிழர் வாழ்வு புகழ் பூத்த வாழ்வாக அமையும்.