குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வான்புகழ் வள்ளுவன்

விக்கிமூலம் இலிருந்து

8. வான்புகழ் வள்ளுவன்

தேசீயக் கவிஞன் பாரதி. பல இலக்கிய மேதைகளைப் பாராட்டித் தமது கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளார். பலரைப் பாராட்டியிருந்தாலும் திருவள்ளுவரைப் பாரதி பாராட்டிய முறை தனிச்சிறப்புடையது. பாரதி, திருவள்ளுவருக்குச் சூட்டிய புகழ்மாலை. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு" என்பது. பாரதி தமிழ் நாட்டையே பாராட்டுகிறான். காரணம் திருவள்ளுவரை ஈன்று அவர் வழி உலகு திருக்குறளைப் பெறக் காரணமாக இருந்ததுதான். உலக அரங்கில் ஒரு கவிஞரால் நாடு உலகப் புகழ் பெறுதல் என்பது அருமையிலும் அருமை. திருவள்ளுவர் உலகு புகழ் கவிஞர். இவர் அருளிய திருக்குறள் உலகப் பொதுமறை. அதனாலன்றோ பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து” என்று மனங்குளிரப் பாடுகின்றார். திருவள்ளுவரைப் பெற்றமையால் தமிழ்நாடு பெற்றபுகழ் வான்புகழ். வான்புகழ் என்றால் இலக்கண மரபுப்படி மிகச் சிறந்த புகழ் என்று பொருள் கூறுவர். எனினும், நிலமனைத்தும் வானால் சூழப்பெற்றுள்ளது. வான் புகழ் என்றால், வானகம் பரவியுள்ள நிலவுலகமனைத்திலும் நின்று நிலவும் புகழ் என்றும் கொள்ளலாம். மேலும், வானுலகம் போற்றும் புகழ் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தகு சிறந்த புகழ் திருக்குறளுக்கு எப்படி வந்தது?

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறள் தோன்றயது. திருக்குறள் தோன்றிய ஆண்டிலும் அதற்கு முன்பும் உலக மொழிகளில் திருக்குறள் போன்ற சிறந்த நூல் ஒன்றும் தோன்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, இன, மொழி, சமய வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது நூல், காணும் ஆற்றல் தமிழகத்திற்கே இருந்தது. உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இத்தகையதொரு நூல், திருக்குறள் தோன்றுவதற்கு முன்பு தோன்றியதில்லை. ஏன்? அதற்குப் பின்பும் இதுவரையிலும் கூட திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை.

நூல் தோன்றிய காலத்தின் தொன்மைமட்டும் நூலின் சிறப்புக்கு முற்றிலும் காரணமாகமாட்டா. நூல் நுதலும் கருத்துக்களும், சிறப்புடையனவாக இருத்தல் வேண்டும். இரட்டுற மொழிதலும், மயக்க நிலையின் பாற்பட்டனவும் கூட இல்லாமையும் வேண்டும். திருக்குறளில் இரட்டுற மொழிதலும், பயனில் சொற் கூறுதலும், ஒழுக்கக் கேடுகள் எனக் குறிப்பிடப் பெறுகின்றது. திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் மிகவும் எளிதேயாகும். திருக்குறள் வாழ்க்கை முறையை திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமான ஒன்றேயாகும்! திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகள் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய நெறிமுறைகளே யாயினும் இன்னும் கடைப்பிடிக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகள், சாதி, இனம், பால், சமயம், மொழி, பருவம் ஆகியனவற்றால் மாறுபடக் கூடியனவல்ல. ஒரே மாதிரி ஒழுக்க நெறியை எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. திருக்குறள் ஒழுக்க நெறி உலகப் பொதுநெறி. மனிதகுலத்தின் வாழ்க்கை நெறி.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியனவல்ல. நடைமுறைப்படுத்த முடியாத அளவு அருமையுடையனவல்ல. மிகமிக எள்ளிய ஒழுக்க நெறிகளேயாம். உலகியலுக்கும், உடலியலுக்கும், உயிரியலுக்கும், மாறுபட்ட எந்த ஒன்றையும் திருவள்ளுவர் ஒழுக்க நெறியாக வலியுறுத்தவில்லை. திருக்குறள் ஒழுக்க நெறிகளை நடை முறைப்படுத்த முடியவில்லை என்றால், மனிதர்களின் தரம் வீழ்ந்திருக்கிறது என்பது கருத்தேயொழிய அது வலியுறுத்தும் நெறி கடுமையானதல்ல. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகளை எடுத்துக்காட்டும் பொழுதும் இயைந்தவாறு காட்டுவதானால், சிறந்து விளங்குகிறது. நடைமுறைப்படுத்த முடியாத ஒழுக்க நெறிகள் எந்த ஒன்றினையும் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் இல்லை. அதனாலும் திருக்குறளின் புகழ் சிறந்து விளங்குகிறது. மேலும், ஒழுக்க நெறிகளைக் காட்டும்பொழுதும் இயைந்தவாறு, ஒன்றுக்கொன்று தொடர்பாக முறைப் படுத்திக் கூறியிருப்பது அறிந்தின்புறத்தக்கது. அதுமட்டுமல்ல, உலகியலில் நோய்பற்றிக் கூறுவோர் பலருண்டு. நோயாளி கூட கூறிவிடுவான். ஆனால் நோயின் காரணத்தைக் கண்டறிந்து சொல்லுபவர் இல்லை. அப்படியே ஒரு சிலர் கண்டறிந்து சொன்னாலும் நோய் நீக்கத்திற்குரிய மருந்தினைத் தெளிவாக, அறிவியல் அடிப்படையில் காட்டுவதில்லை. திருவள்ளுவர் நோய் கண்டு காட்டினார். நோயின் காரணத்தையும் கண்டு காட்டினார். நோய் நீக்கத்திற்குரிய வழிமுறைகளையும் கண்டு காட்டினார். ஐயந்திரிபரக் காட்டி யுள்ளார். மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான். இதற்குக் காரணம் அவனுடைய மனமே. மனத்தில் தூய்மை இருந்தால் அதுவே அறம்-பேரறம், மருவுலகில் பல்வேறு அறங்களைச் செய்வதைவிட மனத் தூய்மையைப் போற்றி வளர்த்தால் சிறந்த அறம் என்று குறிப்பிடுகின்றார். அதுமட்டுமின்றி மனத்துாய்மையின்றிச் செய்யப்பெறும் வேறு பல அறங்களை வெறும் ஆரவாரத்தன்மையன என்றும் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த மனத்தூய்மையை அறிவாலும், அன்பினாலும் பெறமுடியும் என்று திருக்குறள் வழி காட்டுகின்றது.

திருக்குறள் ஓர் அறிவுநூல். நம்பிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் எந்த ஒன்றையும் வற்புறுத்தவில்லை. கடவுள் வழிபாட்டதிகாரத்திலும்கூட உலக இயக்கத்தின் பாற்பட்ட அறிவுணர்வின் அடிப்படையிலேயே திருக்குறள் கடவுள் வாழ்த்து தோன்றியுள்ளது. திருக்குறள் காட்டும் அறிவு வெறும் நூலறிவு அல்ல. ஆனாலும், கற்றல் கேட்டலின் மூலம் பெறும் அறிவைத் திருக்குறள் மறுக்கவில்லை. திருக்குறள் அறிவு என்று இறுதியாக எடுத்துக்கொள்வது. வாழ்க்கையின் அனுபவத்தையொட்டிய உணர்வுகளேயாகும். தீமையினின்றும் விலகி நன்மையின்பால் செலுத்துகின்ற அறிவையே அறிவு என்று திருக்குறள் போற்றுகின்றது. தீமைகளுக்குப் பிறப்பிடமாகிய அன்பின்மையை திருக்குறள் கண்டிக்கிறது. ஏன்? அறிவின் பயனே அன்பு காட்டுதல். அன்பினால் வளர்தலும் வளர்த்தலுமே அறிவினது ஆக்கம் என்று திருக்குறள் பேசுகின்றது.

"சென்றவிடத்துச் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு."

"அறிவினால் ஆகுவதுண்டோ பிரிதின் நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை"

என்ற குறட்பாக்கள் நினைந்தின்புறத்தக்கன. தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது. "நன்றின்பால் உய்ப்பது அறிவு" என்ற திருக்குறள் அடியின் "நன்றுடையானை தீயதிலானை' என்ற திருஞான சம்பந்தர் அருள்வாக்கு ஒப்புநோக்கி உணரத்தக்கது. "அறிவினால் ஆகுவதுண்டோ" என்ற திருக்குறளும் "அன்பே சிவம்" என்ற திருமூலர் வாக்கும் ஒப்புநோக்கி இன்புறத்தக்கன. இன்றைய தமிழர் சமய வாழ்வில் இந்த அன்பும், நன்றும் மீதுர்ந்து வளரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. திருக்குறள் ஓர் அறிவு நூல். முழுதுரிழ் அறநூல். உலகப் பொதுமறை. நேற்றும் இன்றும் என்றும் வாழ்க்கைக்குப் பயன்படும் பொதுமறை. அதன் புகழ் வான்புகழ்.