குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழ்வியற் கவிஞர்

விக்கிமூலம் இலிருந்து

3. வாழ்வியற் கவிஞர்

நூறுமைல் தொலைவைக் கடந்து செல்ல, ஒவ்வோரங் குலத்தையும் கடந்து செல்வது போல, மனிதனின் உள்ளுணர்ச்சிகள் வளர வளர அவன் தனது சிறு குறை நிறைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறைவு படுத்திக் கொள்வது சிறந்த வாழ்க்கை முறை. பொதுவாக நமது நாட்டில் பலர் வாழ்க்கையைப் பற்றிய துறைகளில் அக்கறை கொள்வதில்லை-ஆர்வம் காட்டுவதில்லை. வாழ்க்கைக் கலை நுண்ணியது. ஆழமானது. வாழ்க்கையைப் பூரணமாகப் பயன்படுத்தி வளர வேண்டும்.

வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெறுவது விண்ணுலகுக்குப் பறந்து சென்று சந்திர மண்டலத்தைக் காண்பது போலத்தான். எனினும், இன்று, 100க்கு 70 பேர் அலுத்துச் சலித்து, சாவு வராதா என்று ஏங்கி இளைத்து மிதந்தவாறாகப் போலி வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்று பேசுகிறார் வள்ளுவப் பெருந்தகை. திருவள்ளுவர் கற்பனைக் கவிஞரல்ல-அவர் ஒரு சிறந்த வாழ்வியல் கவிஞர். அவருடைய இலக்கியத்தில் பொய்யும், புனைந்துரையும் இல்லை. அவர் சமுதாய வாழ்க்கையின் தெருப்புறத்தையும் பார்த்தார்; கொல்லைப்புறத்தையும் பார்த்தார். திருவள்ளுவர், மாணிக்கவாசகர், அப்பரடிகள் இவர்கள் எல்லோருமே சமுதாயத்திற்கு வாழ்வு நெறிகாட்டி வழி நடத்திச் செல்லத் தோன்றிய அறிவியல் ஞானிகள். அவர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தமிழ்ச் சமுதாயத்தைத் திசைமாற்றி விட்டவை, இடைக்காலத்தே தோன்றிய மடல்கள், உலாக்கள், பிரபந்தங்கள் ஆகியனவே என்று நான் கருதுகிறேன்.

வள்ளுவர் பிற்போக்கான கொல்லைப் புறத்தைப் பார்த்து ஆத்திரப்பட்டுப் பாடியதுதான் திருக்குறளில் உள்ள 'கயமை’ என்ற அதிகாரம். வள்ளுவர் உயர்ந்த-மிகச் சிறந்த நகைச்சுவையாளர். வள்ளுவர் பேசுவது சிரிப்பாகத் தெரிகிறது. சமுதாயத்தைப் பார்த்து அவர் சிரிக்கிறார். ‘அதோ போகிறாரே, அவர் யார்?’ என்று ஒருவர் வள்ளுவரைக் கேட்கிறார். போய்க் கொண்டிருப்பவரை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு ‘மனிதன் மாதிரி இருக்கிறது என்கிறார்; ‘மக்களே போல்வர்’ என்கிறார், இத்தகைய நகைச்சுவையை நாம் ஆங்கில நாவலாசிரியரான டிக்கன்சனின் நாவல்களில்கூடக் காணமுடியாதே. திருவள்ளுவர் மக்கட் சமுதாயத்தை உள்ளது உள்ளபடி பார்த்தார். மனிதனைப் பார்த்து, உறுப்பாலே மனிதனாகி விடுவதில்லை... உயர்ந்த பண்பாலே மனிதனாக வேண்டும்; உடலாலே மனிதனாகிவிடுவதில்லை - உள்ளத்தால் மனிதனாகவேண்டும்’ என்கிறார்.

பொதுவாக ஆடுகளையும் மாடுகளையும் தொழுக்களில் கட்டி வைப்பார்கள்; மனிதர்களை அப்படிக் கட்டி வைப்பதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். பகுத்தறிவு, மனச்சாட்சி இவற்றை வைத்துத் தம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும். அறிவில்லாத விலங்குகள்கூட வேலிக்கும் சுவருக்கும் விலகி ஒதுங்கிப் போகின்றன. மனிதனோ அவற்றை உதைத்துத் தள்ளிவிட்டுப் போகிறான்.

வானம், காற்று இவைபோல, அறிவும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும். அந்த அறிவைத்தான் சமய உலகில் ஞானம் என்கிறோம்; வள்ளுவர் ‘வாலறிவன்’ என்கிறார். இந்த உலகை-உலகமக்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் தூய அறிவையே வள்ளுவர் போற்றுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு-பலருக்குக் கல்வி பெற வாய்ப்பும் வசதியும் இல்லாமலிருந்த அந்தக் காலத்தில் கல்வியுரிமை மறுக்கப்பெற்ற காலத்தில் - படித்தறிய வாய்ப்பும் வசதியும் இல்லாமற் போனாலும் படித்தவரிடம் சென்று கேட்டறிந்து அறிவை வளர்த்துக்கொள் என்று வலியுறுத்தினார். ஒரு பெரும் கல்விப் புரட்சியையே உண்டாக்கினார். எல்லாருக்கும் கல்வி கொடுப்பது சமுதாயத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். 'அறிவினால் ஆராய்ந்து பார்’ என்ற பெரும் புரட்சியைச் செய்தவர்களில் தலையாயவர் திருவள்ளுவர்.

பெளத்த ஆரிய எதிர்ப்புக்களையெல்லாம் மோதிச் சமாளித்துத் தமிழ் நாகரிகத்தையும் தமிழர் பண்பையும்

தி.12. செழுமைப்படுத்தி யிருக்கிறார் வள்ளுவர். இப்படி நாம் கூறும்போது சாதி இனப்பிரச்னைகளைக் கணக்கில் வைத்துக் கொண்டு பார்க்கக்கூடாது.

மனிதன் புற உலகத்தில் வளர்ந்திருக்கிற அளவிற்கு அகஉலகில் வளர்ச்சியடையவில்லை. உலகம் அவனது காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. புயலை, வெள்ளத்தை, நோயையெல்லாம் அடக்கியாளக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதன் பக்கத்து வீட்டுக்காரனோடு கூடிக் குலாவி அன்டோடும் பண்போடும் வாழக் கற்றுக்கொள்ளவில்லை.

மனிதன் உள் அமைப்பால் வளர வேண்டும். உடம்பை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதனை செய்துக் கொள்வது போல, உள்ளத்தால் உணர்வால் வளர்ந்திருக்கிறோமா என்று நமது செயல் முறைகளை எண்ணிக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? மனிதனைப் பார்த்து மனிதன் என்று கூற இன்னொரு மனிதன் இல்லையென்றால் மனிதன் என்ற பெயர் எப்படியிருக்கும்? எனவேதான், மனிதனுக்கு அறம் கூற வந்த திருவள்ளுவர்,

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்:
ஆகுல நீர பிற"

என்றார். செயலால் குற்றமற்றவனாக வாழ்ந்து விடுதல் எளிது. சிந்தையால் குற்றமற்றவனாக வாழ்வதுதான் அரிது. பல பக்தர்கள் நெற்றியிலே திருநீறு பூசியிருப்பர்; சரிதான், சிறந்த பக்தர் போலிருக்கிறது என்று கருதுவோம். அருகில் போனால், அவரிடம் கொஞ்சம்கூட மனிதவாடையே இருக்காது. இவர்களைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலனாக இரு’ என்று வற்புறுத்தினார்.

இன்று, நமது நாட்டைப் பொறுத்தவரை அறம், நீதி, ஒழுக்கம் என்பன யாவும் எல்லோரும் விளையாடும் பொது விளையாட்டுத் திடலாகி விட்டது. அந்தப் பொய்யான ஒழுக்க நெறியிலிருந்து மனிதனை விடுதலை செய்யவேண்டும் என்று வள்ளுவர் விரும்பினார். எனவேதான் அவர், சத்திரமும் சாவடியும் கட்டுவதை அறம் என்று கூறாமல் 'மனத்துக் கண் மாசிலனாதல் அறம்' என்றார்.

உயிர் சிலருக்குப் பொருளாக-சிலருக்கு நீதியாக - வேறு சிலருக்கு அன்பின் வடிவமாக மாறும். ‘அன்பின் வழியது உயர்நிலை’ என்றார் திருவள்ளுவர். ஆனால், இன்று உலகியலில் அழிக்கும் சக்தி வளர்ந்திருப்பதுபோல, அன்பு காட்டும் முறை வளரவில்லை. அன்பும் வாழ்க்கையும் என்பும் தசையும்போல.

வெகுளாமையை வலியுறுத்திய வள்ளுவருக்கும் வெகுளி வருகிறது. அப்படி வெகுண்டெழுந்து,

‘செத்தாருள் வைக்கப்படும்,’ ‘அவியினும் வாழினும் என்? என்றெல்லாம் பேசுகிறார். வெகுளியை வெறுத்தொதுக்க வேண்டும் என்று கூறிய வள்ளுவருக்கு வெகுளி தோன்றியது நியாயமா? என்று கேட்கலாம். தன்னலத்திற்கு ஊறு செய்யும்பொழுது வெகுளி கூடாதுதான்; சமுதாயத்தின் பொது ஒழுக்கத்திற்கு ஒருவன் ஊறு செய்தால் வெகுண்டெழுந்து தீப்போலக் காய்வதில் தவறில்லை.

வள்ளுவர் பல்வேறு கோணங்களில் அருமையான தொரு ஒழுக்கக் கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்; பல்வேறு சாளரங்களையுடைய ஒரு சுகாதாரமான நல்ல வீடு அது. ஒழுங்காக ஒவ்வொரு கல்லாக வைத்து அடுக்கி அந்தக் கட்டிடத்தை அவர் எழுப்பினார். வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டு வாழ உறுதி கொண்டால் பத்து ஆண்டுகளில் நாம் ஒப்புயர்வற்ற ஒரு மனிதனாக வாழ முடியும்.

இனி வள்ளுவருக்கு விளம்பரம் தேவையில்லை. வள்ளுவரின் வாழ்க்கை முத்திரை வீட்டிலும் நாட்டிலும் பதிக்கப்பெற வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்! வள்ளுவர் காட்டிய ஒழுக்கச் சமுதாயத்தைக் காண முயற்சி செய்யுங்கள்! வள்ளுவத்தைத் தமிழகத்தின் வாழ்க்கை நெறியாக-ஒழுக்க நெறியாகக் கொண்டுவரப் பாடுபடுங்கள்!