உள்ளடக்கத்துக்குச் செல்

குமரிக்கோட்டம்/2

விக்கிமூலம் இலிருந்து

II


பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, "அப்பா! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட்டேன், பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்ச வேண்டும், "சீ நீசா! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்" என்று ஏசவேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்யப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம் மனுச்செய்தும், மகன் வாயிற்படி வரவும் இல்லை, வறுமையால் தாக்கப்பட்டதற்காக, மனம் மாறினதாகவும் தகவலில்லை.

"கை கோத்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டே போனார்கள்."

"பழனி, ராஜாபோலத்தான் இருக்கிறான்."

"ரொம்ப அழகாகப் பேசுகிறான்."

"நேற்றுக் கூட்டத்திலே கல் விழுந்தபடி இருந்தது; பழனி கொஞ்சம்கூடப் பயப்படாமல், பேசிக்கொண்டே இருந்தான்" என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வோர் செய்தியும் செட்டியாருக்குச் செந்தேள்தான்! துடித்தார், அவன் துயரமின்றிச் சந்தோஷமாக வாழ்கிறான் என்று கேட்டு, தகப்பனார் மகன் விஷயமாகக் கொள்ளக்கூடிய உணர்ச்சியல்ல தான். ஆனால் குழந்தைவேல் செட்டியார், பழனியைத் தன் மகன் என்று எண்ணவில்லை; தன் பணத்தை அலட்சியப் படுத்திய ஆணவக்காரன் என்றே எண்ணினார்.


"இருக்கட்டும் இருக்கட்டும்; அவள் எத்தனை நாளைக்கு இவனிடம் ஆசைகாட்டப் போகிறாள்? 'முதலிலே கோபித்துக்கொண்டாலும் பிறகு சமாதானம் ஆகிவிடுவார், அப்போது சொத்துப் பழனிக்குத் தரப்படும், நாம் சொகுசாக வாழலாம்' என்று அந்தச் சிறுக்கி எண்ணிக்கொண்டுதான், என் மகனைத் தன் வலையிலே போட்டுக்கொண்டாள். கடைசிவரை ஒரு பைசாகூட நான் தரப்போவதில்லை என்று தெரிந்தால், 'போய்வாடா' என்று கூறிவிடுவாள்; பயல் வந்து சேருவான். பணத்தாசையால் தானே அவள் அவனை மயக்கிவைத்தாள்" என்று எண்ணி, மனத்தைத் தேற்றிக்கொள்வார். அவருக்கென்ன தெரியும், அவர்கள் சிருஷ்டித்துக்கொண்ட இராச்சியத்திலே, பணத்துக்கு அல்ல மதிப்பு என்பது!

🞸 🞸 🞸

மறையூர், நால்வரின் பாடல் பெற்ற ஸ்தலமல்ல; ஆனால் அதற்கு அடுத்த படிக்கட்டிலிருந்த அடியார்கள் பலர், அந்த க்ஷேத்திரத்தைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மண்மேடு, ஒரு காலத்தில் மால்மருகன் கோயிலாக இருந்ததென்று வைதிகர்கள் கூறுவர். குழந்தைவேல் செட்டியாருக்கு, மறையூர் முருகன் கோயிலை அமைக்கும் திருப்பணியின் விசேஷத்தைத் தாழையூர் சனாதனிகளும் மறையூர் வைதிகர்களும் கூறினர். அவரும், வெகுகாலத்துக்கு முன்பு கிலமாகிப் போன திருக்கோயிலை மீண்டும் அமைத்துத் தரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததே என்று பூரித்தார். பணத்துக்குக் குறைவில்லை: ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஆள் அம்பு தளவாடங்கள் வந்து சேர்ந்தன. செட்டியார் மறையூர் முகாம் ஏற்படுத்திக்கொண்டு, கோயில் வேலையை ஆரம்பித்துவிட்டார். பல ஊர்களிலிருந்து, கட்டட வேலைக்காரர்கள். சிற்பிகள், ஓவியக்காரர், கூலிகள் ஆகியோர் மறையூர் வந்து குவிந்தனர். மறையூர் சேரிக்குப் பக்கத்திலே, நூறு குடிசைகள் புதிகாக அமைக்கப்பட்டு, அவைகளிலே கூலிவேலை செய்பவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை எழுந்திருப்பார்; காலைக்கடனை முடித்துக்கொண்டு, திருப்பணியைக் கவனிப்பார். அரைத்த சுண்ணாம்பை எடுத்துப் பார்ப்பார்; செதுக்கிய கற்கம்பங்களைத் தடவிப் பார்ப்பார்; வேலையாட்களைச் சுறுசுறுப்பாக்குவார். சோலையிலே புஷ்பங்கள் மலரத் தொடங்கியதும் வண்டுகள் மொய்த்துக்கொள்வது போல, மறையூரில் வேலையாட்கள் குழுமிவிட்டனர். ஒவ்வோர் மாலையும், அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியிலே அமர்ந்து அன்றாடக் கூலியைத் தருவார்.

பழனிமேல் ஏற்பட்ட கோபம், செட்டியாரின் சொத்தை மதிலாகவும் பிரகாரமாகவும், திருக்குளமாகவும், மண்டபமாகவும் மாற்றிக்கொண்டிருந்தது. இந்தக் கோயில் கட்டும் வேலையிலே ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலையாட்களிலே பெண்களும் ஏராளம். அவர்களிலே, குமரி ஒருத்தி. மாநிறம், ஆனால் உழைப்பால் மெருகேறின உடல், குறுகுறுப்பான பார்வை, இயற்கையான ஓர் புன்னகை தவழ்ந்தபடி இருக்கும். என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் மெல்லிய குரலிலே ஏதாவது பாடிக்கொண்டே இருப்பாள். இருபதுக்குள் தான் வயது. பருவ கர்வத்துடன் விளங்கும் அப்பாவையின் பார்வையிலேயே ஓர்வித மயக்கும் சக்தி இருந்தது. கொச்சைப் பேச்சோ, வேதாந்திக்குக் கூட இச்சையைக் கிளறிவிடுவதாக இருக்கும். அவள் கோபமே கொள்வதில்லை.

"ஏலே! குட்டி! என்ன அங்கே குரங்கு ஆட்டம் ஆடறே!" என்று மேஸ்திரி முத்துசாமி மிரட்டுவான். குமரி பயப்படவுமாட்டாள், கோபிக்கவுமாட்டாள். "அண்ணி, காலையிலே சண்டைபோட்டுதா?" என்று கேலி பேசுவாள். கடைக்கண்ணால் பார்ப்பது குமரிக்கு வழக்கமாகிவிட்டது. கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, முகவாய்க்கட்டையில் கைவைத்துவிட்டு, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி, "அடே, அப்பா! காளைமாடு மாதிரி விழிக்கிறான் பாரு. ஏமாறுகிறவ நான் இல்லை. அதுக்கு வேறே ஆனைப் பாருடா. ராசா தேசிங்கு" என்று குறும்பாகப் பேசுவாள், யாராவது அவளிடம் கொஞ்சம், அப்படி இப்படி நடக்க நினைத்தால்.

"குட்டி, பார்ப்பதும் சிரிப்பதும், குலுக்கி நடப்பதும், வெடுக்கென்று பேசுவதும் பார்த்தா, தொட்டால் போதும் என்று தோன்றுகிறது; கிட்டே போனாலோ, நெருப்பு; நெருப்பிடம் போவதுபோலச் சீறிவிழுகிறாளே, இப்படி ஒருத்தி இருப்பாளா?" என்று பலபேர் தோல்விக்குப் பிறகு பேசிக் கொள்வார்கள். குமரிக்கு, அங்கிருந்தவர்களின் சுபாவம் நன்றாகத் தெரியும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியும் தெரியும். அதற்காக வேண்டி, யாருடனும் பழகாமலும் இருக்க மாட்டாள்.தாராளமாகப் பழகுவாள்; ஆனால் "கெட்ட பேச்சு வரும் என்று தெரிந்தால் போதும், வெட்டி விடுவாள். காற்றிலே அலையும் ஆடையைச் சரிபடுத்த நிற்பாள்; குறும்புக்காரரின் கண்கள் தன் மீது பாய்வதைக் காண்பாள், முகத்தை எட்டுக்கோணலாக்கிக்காட்டுவாள். அண்ட முடியாத நெருப்பு அவள். அவள் அண்ணனோ, மகா கோபக்காரன். குமரியைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாணயமான கருத்தைக் கொண்டவர்கள்கூடச் சொக்கனிடம் (குமரியின் அண்ணனிடம்) கேட்கப் பயப்படுவார்கள். தாய்தந்தை இருவரும் இல்லை. தங்கைக்கு அண்ணன் துணை, அண்ணனுக்குத் தங்கை துணை. இருவருக்கும், ரோஷஉணர்ச்சியே பலமான கவசம்.

குமரி, வேலை செய்யுமிடந்திலே இருந்தவர் அனைவரையும் 'எடை போட்டுவிட்டாளே தவிர, செட்டியாரை அவள் சரியாக எடைபோட வில்லை. பாவம், பெரிய மனுஷர், மெத்தாதி, உபகாரி, ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர், என்றுதான் குமரியும், மற்றவர் களைப்போலவே, அவரைப்பற்றித் தெரிந்திருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதைவிட, அவரிடம் கொஞ்சம் அடக்கமாகவே பேசுவாள். "யாரங்கே ! மணல் ஏன் இப்படிச் சிதறி இருக்கு? பகவானுக்கான காரியம், பாவபுண்யம் பார்த்து வேலை செய்யுங்கள், கேவலம் பணத்தை மட்டும் கவனித்தால் சரி இல்லை" என்று செட்டியார் சொல்வார்; மற்றவர்கள் முணுமுணுத்தாலும் குமரிமட்டும் குறை கூற மாட்டாள். ஓடிப்போய், மணற் குவியலைச் சரிசெய்வாள்.

மீனா, ஒரு குறும்புக்காரி: கொஞ்சம் கைகாரியுங் கூட, அதற்காகவே அவளுக்கு, மேஸ்திரி ஒருநாள் தவறாமல் வேலைகொடுப்பான். இடுப்பிலே கூடை இருக்கும், அது நிறைய மணல் இருக்காது; ஒய்யார நடை நடப்பாள். பாக்கு இருக்கா அண்ணேன் ! ஒரு வெத்திலைச் சருகு கொடுடி முனி!" என்று யாரையாவது ஏதாவது கேட்டபடி இருப்பாள். கொடுத்தாக வேண்டுமென்பதில்லை. மேஸ்திரியிடம் பேசுவதிலே ரொம்பக் குஷி அவளுக்கு. அவனுக்குந்தான்.

"மேஸ்திரியாரே! இருக்குதா?"

"கருக்கு மீசைக்காரனை, இருக்குதாண்ணு கேக்கறயே!"

"நான் எதைக் கேட்கறேன் நீ எதைச்சொல்கிறே?"

"கேட்டதற்குப் பதில் நீ என்ன இருக்கான்னு கேட்டே ?"

"கொஞ்சம் புகையிலை கேட்டேன்."

"காரமா இருக்கும்" "பரவாயில்லை. அந்தக் காரத்தைக் காணதவளா நானு. கொடுங்க இருந்தா" இப்படிப் பேச்சு நடக்கும். இருவரும் பேசும்போது மற்றப் பெண்கள் இளித்துக் கொண்டு நிற்பார்கள். விடமாட்டாள் மீனா.

"ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க."

"ஒண்ணுமில்லையே, அக்கா."

"அக்காவா நானு? இவ கொழந்தை! வயசு பதனாறு."

இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம். சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவைகள் அடிக்கடி மீனாமீது தான் விழும். மேஸ்திரி இவைகளை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்துவந்த எட்ட ணா கூலி, இந்த விளையாட்டுக்கும் (விபரீதமற்ற) சேர்த்துத் தான்.

ஒரு கெட்ட வழக்கம் மீனாவுக்கு; முடிபோட்டு விடுவாள்! திடீர் திடீரென்று தன் மனம் போன போக்கிலே ஜோடி சேர்த்து விடுவாள், —கற்பனையாகவே! அவளுடைய 'ஆரூடம்' பல சமயங்களிலே பலித்ததுண்டு, "உன் பல் ரொம்பப் பொல்லாதது. ஒன்றும் சொல்லிவிடாதேயடியம்மா" என்று கெஞ்சுவார்கள் மற்றவர்கள்." இல்லாததை நான் சொல்ல மாட்டேன் என்று கூறுவாள் மீனா.

மீனாவின் கண்களுக்குத்தான் முதலில் தெரிந்தது. குமரியின்மீது செட்டியாரின் நோக்கம் செல்வது ! குமரிக்குத் தெரிவதற்கு முன்பே, மீனாவுக்குத் தெரிந்து விட்டது ! குமரி, எந்தப் பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம்தான் செட்டியார் அடிக்கொரு தடவை வருவார். மற்றவர்களை, இதைச் செய் அதைச்செய் என்று நேரிலே கூப்பிட்டுச் சொல்வதற்குப் பதில், குமரியைக் கூப்பிட்டனுப்பி அவள் மூலமாகவே சொல்லி அனுப்புவார். அதாவது, குமரியை அடிக்கடி தம் பார்வையிலே வைத்துக் கொண்டிருக்கச் செட்டியார் ஆசைப்பட்டார். எத்தனை நாளைக்குச் செடியிலே இருக்கும் மலரைப் பார்த்து மகிழ்வதோடு இருக்க முடியும்? ஒருநாள் பறித்தே விடுவது என்று தீர்மான மாகித்தானே விடும்! உலசுமறிந்தவள் மீனா. ஆகவே உருத்திராட்சம் அணிந்தால் என்ன, விபூதி பூசினாலென்ன, நல்ல முகவெட்டுக்காரியிடம், மனம் தானாகச் சென்று தீரும். அதிலும், கள்ளங்கபடமற்ற குமரியிடம் காந்தசக்தி இருக்கிறது, என்பதை அவள் அறிவாள். ஆகவே செட்டியார், குமரியைக் கூப்பிட்டு அனுப்புவது போதாதென்று, மீனாவே சில சமயங்களிலே, குமரியைச் செட்டியாரிடம் போய்ச், சுண்ணாம்பு அரைத்தது சரியா இருக்கா என்று கேட்டுவா, நாளைக்குப் பிள்ளையார் பூஜைக்கு மகிழம்பூ வேண்டுமா என்று கேட்டுவா, என்று ஏதாவது வேலைவைத்து அனுப்புவாள். பாபம், ஒவ்வொரு தடவையும் குமரி தபால் எடுத்துக்கொண்டு மட்டும் போகவில்லை, மையலையும் தந்துவிட்டு வந்தாள் அந்தப் பக்தருக்கு, தன்னையும் அறியாமல். அவள் சேதியைக் கூறுவாள், அவரோ அவளுடைய சுந்தரத்தைப் பருகுவார். எவ்வளவு இயற்கையான அழகு! கண்களிலே என்ன பிரகாசம்! உடல் எவ்வளவு கட்டு! இவ்வளவுக்கும் ஏழை! அன்றாடம் வேலை! அழுக்கடைந்த புடவை! உப்பிரஜாதி (ஒட்டர்)! மாளிகையிலே உலவவேண்டிய சௌந்தரியவதி, என்று எண்ணிப் பரிதாபப்படுவார். ஒருநாள், கையில் சுண்ணாம்புக்கறை படிந்திருந்ததைக் கழுவ எண்ணி, "குமரி! கொஞ்சம் தண்ணீர்கொண்டு வரச்சொல்லு" என்றார் செட்டியார். வழக்கமாக, மேஸ்திரிதான் தண்ணீர் கொட்டுவார். அவர் முதலியார் வகுப்பு, அன்று மேஸ்திரிக்கும் மீனாவுக்கும் பலமானபேச்சு, "ஆண் உசத்தியா, பெண் உசத்தியா" என்று. ஆகவே, குமரி கூப்பிட்டும் அவர் வரவில்லை. சரேலெனத் தண்ணீர்ச் செம்பை எடுத்துக்கொண்டு குமரியே போனாள். செட்டியாரும் எங்கேயோ கவனமாக இருந்ததால், தண்ணீர் எடுத்துவந்தது யார் என்று கூடக் கவனிக்காமல் கையை நீட்டினார். குமரி தண்ணீர் ஊற்றினாள். "போதுண்டா" என்றார் செட்டியார்; அவருடைய நினைப்பு தண்ணீர் கொட்டியது மேஸ்திரி தான் என்பது. குமரி களுக்கென்று சிரித்துவிட்டாள். செட்டியாருக்கு அப்போதுதான் விஷயம் விளங்கிற்று. அதுவரை அவர் உட்பிரஜாதியான் தொட்ட தண்ணீரைத் தொட்டதில்லை. என்ன செய்வது? அவள் அன்போடு அந்தச்சேவை செய்தாள்; எப்படிக் கோபிப்பது ? நீயா? என்று கேட்டார் ஆமாங்க! மேஸ்திரிக்குத்தான் வேலை சரியாகஇருக்கே ! அதனாலேதான் நான் எடுத்துவந்தேன். தப்புங்களா? கையைத்தானே கழுவிக்கொண்டிங்க, உள்ளுக்குச் சாப்பிட்டாதானே,தோஷம்" என்று கேட்டாள். தொட்ட நீரைத் தொடுவது கூடத் தோஷம் என்பதுதான் செட்டியாரின் சித்தாந்தம். ஆனால் அந்தப் பெண், சூதுவாதறியாது சொன்னபோது என்ன செய்வார் ? செட்டியார் ஒருபடி முன்னேறினார்; உள்ளுக்குச் சாப்பிட்டாத்தான் என்னாவாம்? குடலா கறுக்கும் !" என்றார். "எல்லாம் மனசுதானுங்களே காரணம் !" என்று கொஞ்சுங் குரலில் கூறினாள் குமரி. "அது சரி ! ஆமாம்!" என்று கூறுவிட்டு! விரைவாக உள்ளேபோய் விட்டார். அவள் விட்டாளா! கூடவே சென்று, செட்டியாரின் நெஞ்சிலே புகுந்து கொண்டாள். எல்லாம் மனம் தானே! சிவப்பழமாக இருந்தால் என்ன? மனந்தானே அவருக்கும்.

🞸 🞸 🞸

"யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார்."

"ஏன்? என்னா விஷயம்?" "செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்."

"அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி."

"பொடியுமில்லை.மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன்தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒருபெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப் பார்க்காமே இருக்கிறான்? செட்டியார், என்னமோ கோயில் கட்டலாமென்று தான் வந்தார். அவர் கண்டாரா, இங்கே இந்த 'குண்டுமூஞ்சி' இருப்பாளென்று?"

"செட்டியார் மேலே பழிபோடாதே. அந்த ஆசாமி ரொம்ப வைதிகப் பிடுங்கல். அவ கைப்பட்ட தண்ணீரைககூடத் தொடமாட்டார். ஒரே மகன் அவருக்கு ஜாதியைவிட்டு ஜாதியிலே சம்பந்தம் செய்கிறானென்ற உடனே, போடா வெளியே என்றுகூறிவிட்டவர்."

"மவனுக்குச் சொன்னாரு, அப்பாவா இருந்ததாலே. இவருக்கு எந்த அப்பன் இருக்காரு, போ வெளியேன்னு சொல்ல?"

மேஸ்திரி, மீனாவிடமிருந்து தெரிந்துகொண்ட இரகசியத்தைச் சமயம் வரும்போது தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மேற்கொண்டு தகவல்களைக் கேட்டறிய விரும்பினான். மீனா, மேஸ்திரியின் ஆவலைத் தெரிந்துகொண்டு சிரித்தபடி, "செச்சே, நீ, அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சி போச்சின்னு நினைக்காதே. செட்டியாருக்கு அவ கிட்ட கொள்ளே ஆசை இருக்கு: ஆனா பயமோ மலையத்தனை இருக்குது. மேலும், குமரி வேடிக்கையாகப்பேசுவாளே தவிர, ரொம்ப ரோஷக்காரி. அதனாலே, செட்டியார் ஏதாவது இளிச்சா, அவ அண்ணனிடம் சொல்லிவிடுவா. சும்மா, பார்க்கறதும், சிரிச்சுப் பேசறதுமா இருக்க வேண்டியது தான்" என்று கூறினாள். உண்மையும் அதுதான். செட்டியார் குமரியின் பார்வையையே விருந்தாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஜாதிகுலபேதங்கள் அர்த்தமற்றவை என்று பழனி எவ்வளவோ ஆதாரத்தோடு கூறியும், கேட்க மறுத்த செட்டியாரின் மனத்திலே, அந்தப் பெண்ணின் ஒரு புன்னகை எவ்வளவோ புத்தம் புதுக்கருத்துக்களைத் தூவிவிட்டது. ஜாதியாம் மகாஜாதி ! இந்தப் பெண்ணுடைய இலட்சணத்துக்கும் குணத்துக்கும் ஒருவன் இலயிப்பானே தவிர, இவள் ஜாதியைக்கண்டு பயப்படுவானோ என்ன!" என்று கூட நினைத்தார். ஒரு கணம் அவ்விதம்நினைப்பார், மறுகணமே மாறிவிடுவார். "இதுதான் சோதனை —— மாயை என்னை மயக்க வந்திருக்கிறது — இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் என்று தீர்மானித்து, தேவார திருவாசகத்தையும் அடியார்கள் கதைகளையும் முன்பு படித்ததைவிட மேலும் சற்று அதிக ஊக்கமாகப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பாவையை மறந்துவிட வேண்டும் என்ற திட்டம் அவருடையது. பாபம், அவருக்கு அதுவரை தெரியாது. காதல் பிறந்தால், அதன் கனலின் முன்பு எந்தத்திட்டமும் தீய்ந்து போய்விடும் என்ற உண்மை. . "தோடுடைய செவியன்" என்ற பதிகத்தை அவர், அதற்கு முன்பு எத்தனையோ நூறுமுறை படித்ததுண்டு. அப்போதெல்லாம், இருஷபம் ஏறிக்கொண்டு, ஜடையில் பிறையுடன் சிவனார் வருவது போலவே, அவருடைய அகக்கண் முன் சித்திரம் தோன்றும்; பரமனுக்குப் பக்கத்திலே, பார்வதி நிற்பதும் தெரியும். ஆனால், அப்போதெல்லாம், ஐயனுடைய அருள் விசேஷத்தைப் பற்றியே செட்டியார் கவனிப்பார். குமரியின் மீது ஆசை உண்டான பிறகோ, பதிகம் பாடியானதும், பார்வதியும் பரமசிவனும் அவர் மனக் கண்முன் தோன்றுவதும், டார்வதி பரமசிவனை அன்புடன் நோக்குவதும், அந்த அன்புப் பார்வையால் ஐயனுடைய அகம் மகிழ்ந்துமுகம் மலர்வதும் ஆகிய காதல் காட்சியே அவருக்குத் தெரியலாயிற்று. பதிகம் பாடி, பிரேமையை மாய்க்க முடியவில்லை— வளர்ந்தது. ஏகாந்தமாக இருந்து பார்த்தார் — தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கிற்று. அவரையும் அறியாமல் அவர் மனத்திலே ஒருவகை அச்சம் குடி புகுந்து விட்டது. "எப்படி நான் தப்பமுடியும்" என்ற அச்சம் அவரைப் பிடித்துக்கொண்டது. துறைமுகத்தருகே நின்றுகொண்டு, தன் கப்பலின் வரவுக்காகக் காத்துகொண்டிருக்கும் வணிகர் போல, அவர் மனம் பாடுபட்டது. குமரியின் கள்ளங்கபடமற்ற உள்ளம் அவருக்குத் தெரியும். பணிவுள்ளவளாக அவள் தன்னிடம் நடந்து கொள்கிறாள்; பசப்பு அல்ல என்பதையும் அறிவார்; தம் மனத்திலே மூண்டுவிட்ட தீயை அவள் அறியாள், அறிந்தால் திகைப்பாள் என்பதும் தெரியும். கொடியிலே கூத்தாடும் முல்லையைப் பறிக்கும் நேரத்தில் வேலிப்பக்கமிருந்து தோட்டக்காரன் ஏ ! யாரது? கொடியிலிருந்து கையை எடு என்று கூவினால். எவ்வளவு பயம் பிறக்கும்? தோட்டக்காரன் கூவாமல் முல்லையே "நில்! பறிக்காதே! உனக்காக அல்ல' நான் பூத்திருப்பது !" என்று கூவினால் பயம் எவ்வளவு இருக்கும்? அவ்விதமான அச்சம் செட்டியாருக்கு. அடக்கமுடியவில்லை. அவளோ அணுவளவும் சந்தேகிக்கவில்லை. செட்டியாரின் உண்மைநிலை தெரிந்தாடு அவள் உள்ளம் எவ்வளவு வாடும் ? எவ்வளவு பயப்படுவாள்? மதிப்புத்துளியாவது இருக்குமா? "கொடியிலிருந்து முல்லை பேசுவது போல அந்தக்குமரி, ஏனய்யா! இதற்குத்தான கோயில் கட்டுகிறேன் குளம் வெட்டுகிறேன் என்று ஊரை ஏய்த்தாய்? கட்டுக்கட்டாக விபூதி-காலை மாலை குளியல்- கழுத்திலே உருத்திராட்சம்—கந்தா முருகா என்று பூஜை கல் உடைக்க வருபவளைக் கண்டால், கைபிடித்து இழுப்பது, இதுதான் யோக்யதையா? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே, உன்னுடைய வெளி வேஷத்தை நானும் நம்பினேனே! ஏதோ, வயிற்றுக்கில்லாத கொடுமையால் கூலிவேலை செய்ய வந்தேன். என்ன தைரியம் உனக்கு, வேலைசெய்ய வந்தவளை, வாடி என்று அழைக்க!" என்று கேட்டுவிட்டால்! செ! பிறகு இந்த ஜென்மத்தை வைத்துக்கொண்டும் இருப்பதா? குளம் குட்டை தேட வேண்டியதுதான். ஆண்டவனே! என் சபலம் போக ஒரு வழியும் இல்லையா?" என்று செட்டியார் சிந்திப்பார். சிவனாரைத் துதிப்பார்; நாளாகவாக, காதல் தன்னைப் பித்தனாக்கிக் கொண்டு வருவதைத் தெரிந்து பயந்தார்.

ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள்.

"என்னாங்க உடம்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க." "ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே !" "ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க" "எனக்கென்ன களைப்பு! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?" "உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன,கூலி வேலை செய்ய? நீங்க மகாராஜா." "உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம் பிராயத்திலே சேற்றிலேயும் மண்ணிலேயும் இருக்க. குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்துவிட்டா, கூலிவேலை ஏன் செய்யப் போறே பிறகு." "வேடிக்கையாப் பேசறிங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு."

இப்படி ஏதாவது பேசுவாள் குமரி மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால்வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும் ஒவ்வொரு வாசகமாகத் தம் நிலையை உணர்த்துவிக்கக் கூறிவந்தார். குமரி, செட்டியாரிடம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர் பார்த்தவளல்ல. ஆகவே அவர் பேசினதன் உட்கருத்தை அவள் உணர்ந்துகொள்ளவே இல்லை.

ஒருமுறை செட்டியார், தம் சோகநிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்துபேச விரும்பிய குமரி,

"ஆமாங்க, எனக்குக்கூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை. யாரோ ஒரு துஷ்ட முண்டே, அவரைக்கெடுத்து விட்டாளாம்" என்றாள்.

"குமரி! அந்தப் பெண்ணைத் திட்டாதே. பெண்கள் என்ன செய்வார்கள்? அவன் அவள் மீது ஆசைகொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்?" என்று செட்டியார், தம் மருமகள் சார்பிலே ஆஜரானார்! மற்றோர்நாள் "உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க ஜாதியிலே பிறந்திருந்தா, உன் தலையிலே, மணல் கூடையா இருக்கும்!" என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஓர் நாள், மார்பு வலிக்குத் தைலம் தடவும்படி சொன்னார். கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் 'கல்மிஷம்' அற்ற மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ்சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்திருந்ததுபோலத் தம் அருகே உட்கார்ந்திருந்ததேயில்லை; அவள் கை, செட்டியாரின் மார்பிலே பட்டபோது புளகாங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார். அவளுடைய "மூச்சு" அவருக்குத் தென்றல் வீசுவது போலிருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு. மார்புவலிமட்டுமில்லை. செட்டியாருக்குக் குளிர் ஜூரம் என்று குமரி எண்ணிக்கொண்டாள். அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. ஜுரம், ஆம் — ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை. ஆபத்து வேளை: ஆனால் தப்பித்துக்கொண்டார் செட்டியார், மீனா அங்கு வந்ததால். "மார்வலி, தைலம் தடவினேன், ஜுரம் வரும்போலிருக்கு" என்றாள் குமரி. "பார்த்தாலே தெரியுதே" பச்சைச் சிரிப்புடன் கூறிக்கொண்டே போய்விட்டாள் மீனா.

தைலம் பூசிக் கொண்ட பிறகு, செட்டியாரின் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந்தால். எந்தநேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ, வெறி மீறி என்ன விபரீதான செயல் புரிந்துவிடும்படி நேரிட்டுவிடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங்கிருக்கக் கூடாது இரண்டோர் நாட்கள், வெளியூர் போய்வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும், அவள் பின் தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடை வீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய் சில்க் சேலையின் நேர்த்தியை அருணாசலச் செட்டியார் வாடிக்கைக்காரருக்குக் கூறுகிறார். குழந்தைவேலச் செட்டியாரோ அந்தச் சேலையைக் கண்ட உடனே அதைக் குமரிக்குக் கட்டி அழகு பார்க்கிறார்! அதாவது அந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு குமரி, தன் எதிரில் நின்று காட்சி தருவதுபோலத் தோன்றுகிறது செட்டியாருக்கு. எங்கே போனாலும், எதைக் கண்டாலும், விநாடிக்கு விநாடி அவள் வருகிறாள். ஒவ்வோர் தடவையும் ஒவ்வோர் படி அதிகரிக்கிறது அவருடைய ஆசை. பித்தம் பிடித்தவர்போல மீண்டும் மறையூர் வந்து சேர்ந்தார்.

செட்டியாரின் நிலையை மீனா நன்றாக உணர்ந்து சொண்டாள். சமயமறிந்து செட்டியாரைத் தனியாகச் சந்தித்து, வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள். அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். பிறகு இல்லை என்று கூறிப் பார்த்தார். கடைசியில் கண்களில் மிரட்சியுடன், "ஆமாம்! எனக்கு, அந்தப் பெண் மீது அமோகமான ஆசைதான்; ஆனால்............." என்று பிச்சை கேட்பதுபோலப் பேசினார்.

"பயப்படாதிங்க செட்டியாரே! அந்தப் பெண் ஒரு மாதிரி. இந்த மாதிரி காரியத்துக்குத் தலைபோனாலும் ஒப்பமாட்டாள்" என்றாள் மீனா.

"அது தெரிந்துதானே, நான் இப்படிப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டேன்" என்று செட்டியார் கூறினார்.

"அவள் சம்மதிக்கவே மாட்டாள்; நாம்தான் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். நாளை இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பிவிடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்" என்றாள் மீனா. இஷ்டதேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை, அனுப்பினார். மீனா, ஏற்பாட்டின்படி செட்டியாரிடம் வந்தாள்; கச்சக்காய் அளவுக்கும் குறைவு ஏதோ லேகியத்தைக் கொடுத்தாள் செட்டியா ரிடம். "குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத்தைத் தின்றுவிடும்படி செய்யுங்கள். பிறகு அவள் உங்கள் பொருள்; விடிஞ்ச பிறகுதானே சொக்கன் வருவான்!" என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங்கும் கரத்திலே லேகிய உருண்டையை வாங்கிக்கொண்டு செட்டியார், "இது என்ன மருந்து? ஆபத்துக் கிடையாதே" என்று கேட்டார். இது என்ன மருந்து என்று நீங்கள் நாளைக் காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே! நான் போய் குமரியை அனுப்புகிறேன், லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நீங்களே" என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள்.

அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடிவந்தாள் கோயிலுக்கு, அறையிலே செட்டியார் உலவிக்கொண்டிருக்கக் கண்டு, "என்னாங்க உடம்புக்கு! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே, யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே " என்று கேட்டாள்.

செட்டியார், மீனாவின் தந்திரத்தைத் தெரிந்து கொண்டார். ஆமாம் குமரி! மயக்கமாக இருந்தது; இப்போது இல்லை. மணி பத்து இருக்குமே பாவம், நீ தனியாகவா இங்கு வந்தே" என்று கேட்டார்.

ஆமாங்க! மீனா சொன்னதும் எனக்கு, வந்து பார்த்துவிட்டுப் போகணும்னு தோணவே, ஒரே ஒட்டமாக ஓடிவந்தேன். நான் போகிறேனுங்க" என்றாள் குமரி. செட்டியாருக்கு ஆபத்து என்ற உடனே ஓடி வந்துவிட்டாளே தவிர, அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும், தனியாக அந்த நேரத்தில் அவருடன் இருப்பது சரியல்லவே, என்று தோன்றிற்று.

"ஏன், இந்த வேளையிலே தனியாக இருக்க........" என்று செட்டியார் கேட்டு முடிப்பதற்குள், குமரி வெட்கத்துடன், "அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க, நாம்ப இங்கே களங்கமற்றுத்தான் இருக்கிறோம்; ஆனா மத்ததுங்க அப்படி நினைக்காது பாருங்க" என்றாள். களங்கமற்ற நிலையில்தான் அவள் இருந்தாள். ஆனால் செட்டியாரின் மனநிலை அவளுக்குத் தெரியாது!

"வந்தாகிவிட்டது, குமரி! கொஞ்சம் அறையைச் சுத்தம் செய்" என்று கூறினார் செட்டியார். குமரி உடனே அந்தக் காரியத்தைச் செய்தாள். செட்டியாரே! நெல் மூட்டைகளை ஏன் இங்கேயே போட்டிருக்கிறீர்கள். எலிகள் அதிகமாகுமே" என்று கேட்டுக்கொண்டே, மூட்டைகள் இருந்த இடத்தைச் சுத்தம் செய்தாள், எலிகளைக் காணவேண்டும் என்ற அவசரத்திலே செல்பவர் போலச் செட்டியார், மூட்டைகள் இருக்குமிடம் போனார். குமரிமீது உராய்ந்தபடி! அதிலே அவருக்கு ஒரு ஆனந்தம் ! அவள் கொஞ்சம் அஞ்சினாள். சுத்தமாக்கிவிட்ட பிறகு, வியர்வையை முந்தானையால் துடைத்துக்கொண்டு நின்றாள். செட்டியார், "குமரி! இந்தா, உனக்குப் பரிசு! சாப்பிடு, ருசியாக இருக்கும், உடம்புக்கும் நல்லது" என்று கூறி லேகியத்தைக் கொடுத்தார்.

"என்னதுங்க அது, நாவப்பழமாட்டம்!" என்று கேட்டாள் குமரி, லேகியத்தைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு. "அது மீனாட்சி பிரசாதம்" என்றார் அவர். "அப்படின்னா?" என்று குமரி கேட்டாள். "மீனாட்சி கோயிலில், சாமிக்குப் படைத்தது. சாப்பிடு, நல்லது என்று கூறிவிட்டு, வேறு ஏதோ வேலையைக் கவனிக்கப் போகிறவர் போல அறைக்கு வெளியே சென்றார். குமரி, லேகியத்தைத் தின்றாள். சுவையாகவே இருந்தது. எப்போதும் அவள் கண்டதில்லை அதுபோல லேகியத்தைத் தின்றுவிட்டு, செட்டியார் வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நெல் மூட்டை மீது சாய்ந்தபடி நின்று கொண்டே, அந்த அறையிலே இருந்த படங்களைப் பார்த்தபடி இருந்தாள். திடீரென்று அந்த அறையிலிருந்த விளக்கு மிகப் பெரிதாகவும், மிகப் பிரகாசமாகவும் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்சம் ஆச்சரியத்துடன், மறுபடி விளக்கைப் பார்த்தாள்: ஒரு விளக்கல்ல, பல விளக்குகள் இருக்கக் கண்டாள்! எலி, மூட்டைகளிடையே ஓடக் கண்டாள்; குனிந்து, கோல் ஒன்று எடுத்து விரட்டினாள். எலி ஒரு பக்கமிருந்து மற்றோர் பக்கம் ஓடிற்று. குமரி, ஓடினா விடுவேனா அம்மாடி! எவ்வளவு சாமர்த்தியம்? ஆனால் இந்தக் குமரியிடமா நடக்கும்" என்று கூறிக்கொண்டே எலியை வேட்டையாடினாள். கடைசியில் எலி தப்பிக் துக்கொண்டே ஓடிவிட்டது. 'ஒரு சுண்டெலிக்கு எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தாயா?' என்று கேட்டாள். யாரும் எதிரிலே இல்லை. 'சே! யாரும் இல்லை இங்கே, யாரிடம் பேசுகிறோம்' என்று நினைத்தாள், சிரிப்பு பொங்கிற்று. சிரித்தாள். மேலும் மேலும் சிரித்தாள். உரத்த குரலிலே சிரித்தாள். இடையிடையே பாடவுமானாள், அறை முழுவதும் ஜோதிமயமாக அவளுக்குத் தெரிந்தது. குதூகலம் ததும்பிப் பொங்கி வழிந்தது. ஆடை நெகிழ்வதையும் கூந்தல் சரிவதையும் கவனியாமல் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தாள். குமரியின் கண்கள், உருள ஆரம்பித்தன! தூக்கம் வருவது போன்ற உணர்ச்சி - கருமணி மேல் இரப்பைக்குள்ளே போய் புகுந்துகொள்வது போல், மேலுக்குப் போகிறபடி இருந்தது; என்றுமில்லாத அசட்டுத்தனமான தைரியம். லேகியம் அவளை ஆட்டி வைக்க ஆரம்பித்தது; வார்த்தைகள் குழைந்து குழைந்து வெளிவரத் தொடங்கின. செட்டியார், அந்தச் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்தார். "குமரி!" "செட்டியாரே!" "ஏன் இப்படி இருக்கறே ?" "ஏன், செட்டியாரே, ஆடிக்கிட்டே இருக்கறே? ஆமாம், ஏன் இத்தனி விளக்கு?"

ஒருசமயம் குமரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று செட்டியாருக்குத் திகில் உண்டாகி விட்டது.

"குமரி உட்கார்!" "எங்கே உட்காரவாம்!" அங்கே இருந்த நாற்காலியிலே செட்டியார் உட்கார்ந்துகொண்டு, "குமரி! இங்கே வா! இப்படி உட்கார்" ஏன்று கொஞ்சினார்.

குமரி, "என்னா அது ! ஏனய்யா, செட்டியாரே! விளையாட்டா செய்யறே !" என்று மிரட்டினாள். செட்டியார், லேகியம் குமரியின் புத்தியைக் கெடுத்து விட்டது. ஆனால் அந்த நிலையிலும் அவளை இணங்க வைக்கவில்லை" என்று நினைத்து மேலும் பயந்தார். மறு விநாடி, குமரி கலகலவெனச் சிரித்தாள். செட்டியார் அருகே போய், அவருடைய முகவாய்க் கட்டையைப் பிடித்தாட்டி, "செட்டியாரே ! செட்டியாரே !" என்று ஏதோ பாடத் தொடங்கினாள். அதற்குமேல் செட்டியாரால், பயத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவும் முடியவில்லை. "கண்ணு! குமரி!" என்று கொஞ்சியபடி, அவளை அணைத்துக்கொண்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தார், இதழையும் .......

'சே, கட்டேலே போறவனே?' என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே. காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக்கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க்கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள். "கண்ணு "
"ஏன், மூக்கு"
"இதோ பார்!"
"மாட்டேன், போ."
"ஓரே ஒரு முத்து."
"வெவ்வெவ்வே,"
இன்பவிளையாட்டு! செட்டியார் பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை விட, மிக ரம்மியமாகி விட்டது.

செட்டியார் மடிமீது தலைவைத்து அவள் சாய்வாள். செட்டியார் குனிந்து ஒரு முத்தம் தருவார்; தலையைப் பிடித்து அவள் ஓங்கிக் குட்டுவாள்; பிறகு திமிரிக் கொண்டு எழுந்திருப்பாள்; செட்டியாரைப் பிடித்திழுத்துத் தன் மடியில் தலையைச் சாய்த்துக்கொள்ளச் சொல்வாள்; செட்டியாருக்கு மூச்சுத் திணறும்படி முத்தங்கள் சொரிவாள். ஒரு ஆண்பிள்ளையின் பார்வை சற்று வேகமாகப் பாய்ந்தால் கோபிக்கும் குமரிக்கு இவ்வளவு "சரசத்தன்மை" இருக்குமென்று செட்டியார் நினைத்ததில்லை! செட்டியாருடைய முழுக்கு, பூச்சு, பக்தி, பாராயணம், ஆசாரம், சனாதனம் ஆகியவற்றைக் கண்ட எவர் தான், நள்ளிரவில், அவர் கல் உடைக்க வந்த கன்னியின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டும், கூந்தலைக் கோதிக் கொண்டும், காமுகக் குமரன் போல ஆடிக் கிடக்கக் கூடியவர் என்று எண்ணியிருக்க முடியும்! காலைமுதல் வேலைசெய்த அலுப்பினால் அவள் குடிசையிலே, கையே தலையணையாகக் கொண்டு தூங்கி இருக்கவேண்டியவள், ஒரு இலட்சாதிகாரியின் மடியிலே ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு இருக்கிறாள்! கைலாயக் காட்சியைக் கனவிலே கண்டு இரசிக்கவேண்டிய நேரத்திலே பக்திமானான செட்டியார், தம்முடைய வாலிப மகன், காதலித்தவளைக் கடிமணம் புரிவேன் என்று சொன்னதற்காக, 'காதலாம், காதல்! ஜாதியைக் கெடுத்துக்கொள்வதா, குலம் நாசமாவதா, ஆசாரம் அழிவதா, ஒரு பெண்ணின் சிநேகத்துக்காக, என்று கனல் கக்கிய செட்டியார், ஒரு பெண்ணை, கூலிவேலை செய்யவந்தவளை, நடுநிசியில், கட்டி முடியாத கோயிலில், 'கண்ணே! மணியே!' என்று கொஞ்சிக்கட்டிக் தழுவிக்கொள்கிறார், அதுவும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடும்படியாக மயக்கம் தரும் லேகியம் சாப்பிடும்படி செய்து. செட்டியாருக்கு இவைகளை எண்ணிப் பார்க்க நேரமில்லை; அவருக்கு அளவில்லாத ஆனந்தம்; எத்தனையோ நாட்களாகக் கொண்டிருந்த இச்சை பூர்த்தியாயிற்றே என்ற சந்தோஷம்! இன்ப இரவு அவருக்கு.

இன்ப இரவுக்குக் கடிகாரம் ஏது? கோட்டான் கூவினால்கூடக் குயிலின் நாதமாக வன்றோ அந்த நேரத்தில் தொனிக்கும். கருத்த மேகம் சூழ்ந்த வானமும்கூட, அன்று தனி அழகாகத்தானே காணப்படும்! இன்பத்துடன் அளவளாவும் நாள் அமாவாசையாக இருந்தாலும், பௌர்ணமியாகிவிடுகிறது என்பார்கள். செட்டியாரின் நிலை அதுதான். அவர் மனத்திலே அந்த நேரத்தில் கொஞ்சமும் பயமில்லை. "என்ன காரியம் செய்தோம்! நமது வயது என்ன! வாழ்க்கை எப்படிப்பட்டது ! எவ்வளவு பாசுரம் படித்தோம். எத்தனை திருக்கோயில் வலம் வந்தோம்? காமத்தின் கேடுபற்றி எத்தனை புண்ணிய கதை படித்திருக்கிறோம்? ஒரு கன்னியை, —அவள் நிலை தவறும்படி செய்வது தகுமா? இவ்வளவு மோகாந்த காரத்தில் மூழ்குவது சரியா?" என்று சிந்திக்கத் துளியும் முடியவில்லை.

அவளுடைய அதரம், அதன் துடிப்பு! அவளுடைய விழிகள், அவை கெண்டைபோல ஆடுவது! அவளுடைய துடியிடை! குழையும் பேச்சு! இவைகளைக் கண்டு, ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு வேறு விதமான நினைப்பு வருமா!

எந்த வாயால், "காமத்துக்குப் பலியாகி ஜாதியைக் கெடுக்கத் துணிந்தாயே, நீ என் மகனல்ல, என் முகாலோபனம் செய்யாதே, போ வீட்டை விட்டு" என்று கூறினாரோ அந்த வாயால், செட்டியார், அழகுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். காதல் கீதம்பாடிக் கொண்டிருந்தார். "இது இதழல்ல கனி; கன்னமல்ல ரோஜா; கண்ணல்ல தாமரை," என்று கவிதைகளைப் பொழிந்துகொண்டிருந்தார். தூங்கிக் கிடந்த ரசிகத்தன்மை முழுவதும் வெள்ளமெனக் கிளம்பிற்று. இன்ப இரவு அவருக்கு! அவளுக்கோ, ஏமாந்த இரவு ! அவள் அறியமாட்டாள், காமத்துக்குத்தான் பலியாக்கப் படுவதை. அவள் ஏதோ ஓர் உலகிலே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாள். அந்த உலகிலே நிற்கமுடியவில்லை; கண்கள் சுழன்றபடி உள்ளன; ஏதோ ஓர் வகைக் களிப்பிலே மூழ்கி மூழ்கி எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. காரணம் தெரியவில்லை களிப்புக்கு. ஆடலும் பாடலும் திடீர் திடீரென்று கிளம்புகிறது; லாகிரியால் ஏற்பட்ட ஆனந்த நிலைமையிலே அவள் இருந்தாள். அவள் நிலை இழந்தாள், அவர் இன்பம் பெற்றார். தாம், சூது செய்து அந்தச் சுந்தரியை அடைந்ததாகவே அவர் எண்ணவில்லை; எப்படியோ ஒன்று எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்ற திருப்தி. அதுமட்டுமில்லை, சாமர்த்தியமாக அந்தச் சரசியைப் பெற்றுவிட்டோம் என்ற சந்தோஷம். மதில் சுவரின் மீது ஓசைப்படாமல் ஏறி, மேல் வேட்டியை வீசிக் கிளையை இழுத்து, கிளையிலே கூத்தாடிய மாங்கனியை மெல்லப் பறித்தெடுத்து, முகர்ந்து பார்த்துத் தின்னும்போது, அதன் சுவையிலே இலயித்துவிடும் கள்ளனுக்கு, கனி திருடினோம் என்ற கவனங்கூட வருவதில்லை. மீறிவந்தாலும், தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்து கொள்வானே தவிர, செச்சே! எவ்வளவு சூதாக நடந்துகொண்டோம் என்று எண்ணிச் சோகிக்கமாட்டானல்லவா! கனியைக் களவாடுபவனை விட, கன்னியரைக் களவாடுபவன், கட்டுத் திட்டம், சட்டம் சாத்திரம், பதிகம் பாசுரம் ஆகியவைகளின் பிடியிலா சிக்குவான்! முள்வேலியைத் தாண்டிவிட்டோம் என்று கருதிக் களிப்பான். இன்ப இரவு. அவ்வளவு தான் அவருக்குத் தெரியும்! அவள் ஓர் அழகி, அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். அவளை அடைந்தாகிவிட்டது. அதுபோதும் அவருக்கு. குறும்புப் பார்வைக்கும் கேலிப் பேச்சுக்கும் கூடக்கோபித்துக் கொள்ளும் குமரி, குழந்தைபோலத் தூங்கிவிட்டாள். குழந்தை வேலச் செட்டியாரின் மடியில் சாய்ந்தபடி. செட்டியார், மடியில் சாய்ந்திருந்த மங்கையைப் பார்த்தபடி இருந்தார். நெடுநேரம் தூங்கவில்லை. பிறகு, அப்படியே அவரும் நெல்மூட்டைமீது சாய்ந்தபடி நித்திரையில் ஆழ்ந்தார். ஆதவன் உதித்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=குமரிக்கோட்டம்/2&oldid=1636999" இலிருந்து மீள்விக்கப்பட்டது