உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/சூரிய காந்தி

விக்கிமூலம் இலிருந்து

25. சூரியகாந்தி

ஆகாய வீதி யுலாவி வருமிந்த
     ஆதித்த னேஉன தன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்துநீ,
     விண்ணிலே கண்ணாக நிற்பதேனோ? 1

பொன்னிற முண்டு, பொலிவுண்டு, கண்டுனைப்
      போற்ற இனிய வடிவுமுண்டு ;
என்ன அரிய வரம்பெற, இன்னும் நீ
      இத்தவம் செய்வது, பூமகளே! 2

காயும் கதிரவன் மேனியை நோக்க, உன்
      கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
      நினைப்பதும் இல்லையோ? சொல், அடியே! 3

காலையி லேகதிர் வீசிவர - நிதம்
      கண்டு களித்து மகிழ்ந்திடும் நீ.
மாலையி லேமுகம் வாடித் தளர்ந்திட,
      வந்த வருத்தமும் ஏதடியே? 4

செங்கதிர் செல்லும் திசையது நோக்கி, உன்
      செல்வ முகமும் திரும்புவதேன்?
மங்கையே உன்மண வாளனாகில் - அவன்
      வார்த்தை யொன்று சொல்லிப் போகானோ? 5

ஆசை நிறைந்தஉன் அண்ணலை நோக்கிட,
      ஆயிரங் கண்களும் வேண்டுமோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி?-கொஞ்சம்
      பீத்தற் பெருமையும் வந்ததோடி? 6

மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
      மாயப் பொடிவீசி நிற்கும்நிலை
கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
      கண்ணீர் உகுக்குமோ? யாரறிவர்? 7

உன்பெயர் சூரிய காந்தியென்றார் - அதன்
      உண்மையும் இன்றே அறிந்துகொண்டேன்;
இன்பம் அளித்திடும் பூவுல கத்துனக்கு
      யாரும் இணையில்லை, இல்லையம்மா! 8