குழந்தை இலக்கியம்/பறவைகள்

விக்கிமூலம் இலிருந்து
பறவைகள்




30. கிளி

... 63

31. கிளி II

... 65

32. புறா

... 68

33. குயில்

... 71

34. சேவல் கூவுது!

... 73

35. கோழிக் குஞ்சு

... 75

36. வாத்து

... 77

30

தென்னை ஊஞ்சல் ஆடும்
சின்னக் கிளியே, இந்தா!1

உன்னைப் போல நானும்
ஓடி ஆடி வாழ
என்ன செய்ய வேண்டும்?
எனக்குச் சொல்லு வாயே!2

கோவைப் பழத்தின் சிவப்போ,
குமரி இதழின் சிவப்போ
மேவி விட்ட துன்றன்
மூக்கில்? உண்மை விள்ளே!3

வான வில்லைப் போன்ற
வண்ண மாலை கழுத்தில்
ஏன்அ ணிந்தாய்?பெண்கள்
ஏங்கு தற்குத் தானோ?4



தலை ஆட்டிக், காலால்
தாளம் போடு கின்றாய்!
கலைவி ளக்கம் உண்டோ?
கதையும் சொல்லு வாயோ?5


கிளி - II
31

மூக்குச் சிவந்த பைங்கிளியே!
முக்கனி தாரேன்! வா! வா!வா!
பாக்கு வெற்றிலை மென்றாயோ?
பழந்தின் றலகு சிவந்தாயோ? 1

தென்னை மரந்தான் உன்வீடோ?
வீட்டுச் சிறுதொளை உன்வீடோ?
புன்னைக் காய்தான் உன்தலையோ?
பூக்காப் பருத்திக் காய்தலையோ? 2

வாழை மட்டை உன் ஊஞ்சல்
வாய்திறந் தால்ஏன் பெண்ஏசல்?
கூழையில் தென்னைப் பொந்திருந்தோ
குடிசெய் வதுதான் பெருவிருந்தோ? 3

‘அக்கா! அக்கா!’ என்றுன்னை
அடிக்கடி பேச யார்சொன்னார்?
செக்கச் சிவந்த மூக்குத்தான்
செடியிற் பழுத்த மிளகாயோ? 4



ஒருகால் தூக்கி மன்றாடும்
ஒண்டொடி போல நடக்கின்றாய்!
அருகில் இருக்குது கறும்பூனை!
அதன்மேல் நினைவும் இருக்கட்டும்! 5

பாலும் பழமும் இருந்தாலும்,
பாவை மடிமேல் தவழ்ந்தாலும்
நாலு பக்கம் அடைப்பிருக்கும்
நங்கைக் கூண்டும் வீடாமோ? 6

வான வெளிதான் உன்அரசு!
மாமரக் காடே உன்வீடு!
ஏனல் கொல்லை உன்சொந்தம்
இருப்பும் வெறுப்பும் யாரறிவார்?7

பழுக்காப் பழமும் நீபார்த்தால்
பழுத்துப் போகும் அலகிட்டால்
கொழுத்த மாவிலை உன்வாலாம்!
கீரை வேரே உன்காலாம்! 8

மக்கள் போல நீபேசி
‘வா! வா!, 'போ! போ!’ என்றாலும்,
செக்கச் சிவந்த கோவையினும்
தீம்பால் பழமும் சிறப்பாமோ? 9

தென்றல் ஆடிச் செவ்வாழைச்
செங்கனி கோதும் நல்வாழ்வை
என்றும் எவரும் கொடுப்பாரோ?
தடுப்பார் விடுதலை அளிப்பாரோ?10

32

வெடித்த இலவங் காய்போலும்,
விளைந்த தாழைப் பூப்போலும்,
ஒடித்த வாழைப் பூப்போலும்
ஒக்க இருக்கும் புறாவெல்லாம்! 1

குன்றி மணியே இருகண்கள்!
கூர்வாய் காரைப் பெருமுட்கள்!
கன்றிய கோரைக் கிழங்கைப்போல்
காலின் விரல்கள்! விழிவிருந்தே! 2

அம்பைப் போல வான்கிளம்பி
அடிக்கடி பறக்கும் புறாக்கூட்டம்!
கம்பங் கொல்லை நெல்வயலைக்
கண்டால் இறங்கும் புறாக்கூட்டம்!3

ஆடும் பர்டும் ஒன்றிரண்டும்!
ஆடல் சுவைக்கும் பின்நின்றும்!
ஓடும் ஒன்று வால் தூக்கி!
தொடரும் ஒன்று தலைதூக்கி! 4

குட்டை குளத்தில் ஆணினங்கள்
குதித்துக் குளித்தே ஆடுதல்போல்
சட்டி நீரில் புறாக்கூட்டம்
குளித்துத் தலையுடல் நீராட்டும்! 5

கூண்டைத் தாவும் ஒருபெட்டை!
‘குடுகுடு’ப் பாடும் ஒருவட்டை!
கூண்டுக் கூரை மேல்நின்று
கூவத் தாவும் மற்றொன்று! 6

கூண்டைக் கட்டும் பெண்புறவு!
கூட உதவும் ஆண்புறவு!
கூண்டைக் கட்டி முடித்தவுடன்
கோலிக் குண்டே இருமுட்டை! 7

முட்டை காக்கும் தாய்ப்புறவு!
முறைமுறை மாற்றும் ஆண்புறவு!
முட்டை அளித்த சிறுகுஞ்சு
நனைந்த உருண்டை வெண்பஞ்சு!8

உண்ட உணவைக் குஞ்சுக்குக்
கொண்டுவந் தூட்டும் நெஞ்சுக்குள்
உண்ட பின்னும் புறாக்குஞ்சும்
ஒளிவாய் திறந்து தாய்க்கொஞ்சும்! 9

புறாவின் ஆட்டம் விழிவிருந்து!
புறாவின் பாட்டோ செவிவிருந்து!
புறாவின் நடையோ மனவிருந்து!
புறாவின் அன்போ புலன்விருந்தே ! 10






33

'குக்குக்' கென்றே கூவுகின்றாய்!
குயிலே! எங்கே இசைகற்றாய்?
பக்க மேளம் இலையெனினும்
உன்றன் பாட்டுக் கீடுண்டோ? 1

காக்கைக் கூண்டிற் பிறந்தாயே!
காக்கை விட்டேன் பிரிந்தாயே?
சாக்குப் போக்குச் சொல்லாதே!
உண்மை சொல்லத் தயங்காதே! 2

கொஞ்சிப் பழமாம் உன்கண்கள்!
குறுங்கால் கோரைக் கிழங்குகளாம்!
நெஞ்சை அள்ளும் உன்குரலின்
நேர்மை, எங்கள் தமிழ்நேர்மை! 3

புள்ளிக் குயிலே! புதரெல்லாம்
துள்ளிக் குதித்துப் பாடுவையோ?
உள்ளே குரலை அடக்கிக்கொள்!
உன்னைத் தேடுது துப்பாக்கி! 4





34

கூரை ஏறி வீரன் போலக்
கொண்டைச் சேவல் கூவுது!-தீக்
கொண்டைச் சேவல் கூவுது!
ஊரை எழுப்பி விட்டுப் பின்னும்
யாரை எழுப்பக் கூவுது!-இன்னும்
யாரை எழுப்பக் கூவுது? 1

கூரை மீது நடைந டந்து
குனிந்து நிமிர்ந்து பார்க்குது!-செங்
கொண்டை குலுக்கி ஆர்க்குது!
போருக் கேகும் மறவன் போல
யாருக் காக நடக்குது?-சேவல்
யாருக் காக நடக்குது? 2

குப்பை சீய்த்துப் புழுவை உண்டு
குரல்கொ டுத்துக் கூவுது-வெண்கலக்
குரல்கொ டுத்துக் கூவுது!
எப்பக் கத்திற் சிப்பாய் வந்தான்?
ஏனோ இப்படிக் கூவுது ?-பின்
ஏனோ இப்படிக் கூவுது ? 3

பெட்டை யோடு நடைந டந்து
வட்டச் சேவல் கூவுது!-புள்ளி
நெட்டைச் சேவல் கூவுது!
தட்டிக் கேட்க இல்லை என்றா
தலையை ஆட்டிக் கூவுது?-கொண்டைத்
தலையை ஆட்டிக் கூவுது? 4

சிறகைத் தட்டித் தலைநி மிர்த்தித்
தீரன் போலக் கூவுது!-தமிழ்
வீரன் போலக் கூவுது!
உறவை மாய்த்த பகையும் யாதோ?
ஊரும் கிழியக் கூவுது?-சிற்
றூரும் கிழியக் கூவுது ? 5

துள்ளிப் பாய்ந்து சிறகைத் தட்டிக்
குள்ளச் சேவல் கூவுது-பாதர்
வெள்ளைச் சேவல் கூவுது!
வெள்ளை எதிர்த்த வெள்ளை யன்போல்
வேற்றான் கண்டா கூவுது?-தமிழ்
மாற்றான் கண்டா கூவுது? 6


35

ன்றிரு மயிர்மு ளைத்த
சிறகினை உதறித் துள்ளிச்
சென்றிடும் தாயி னோடு;
சிறுகாலாற் குப்பை சீய்க்கும்;
பன்முறை கழுத்தைச் சாய்த்துப்
பார்த்திடும் உழுந்துக் கண்ணால்;
கொன்றிடும் எறும்பைக் கண்டால்
தென்னம்பூ மூக்காற் கொத்தி! 1

குடித்திடும் தேங்கி நிற்கும்
குட்டைநீர் தாயைப் போலே!
முடிவேந்தர் யானை யேறி
மூதூரைச் சுற்றல் போலத்
துடுதுடுப் பான குஞ்சு
பெட்டையின் தோள்மே லேறி
நடுத்தோட்டம், வேலி, குப்பை
நல்லுலா வாரா நிற்கும்! 2

தாயினைச் சூழ்ந்து மேயும்;
தன்னுடல் வண்ணப் பஞ்சை
ஓயாமற் கோதும்; தாயின்
குரல்கேட்க அருகில் ஒடும்!
நாய்வர உடல்சி லிர்த்துச்
சீறிடும் நற்றாய்க் கோழி!
தாயன்பிற் காரே ஈடு
சாற்றிட வல்லார்? சொல்லீர்! 3

உணர்ச்சியில், அறிவில் இந்த
உலகத்தில் வாழும் ஒவ்வோர்
அணுக்களும் ஒன்றே யாகும்;
அறிந்தவர் அறிவார்! ஆனால்,
பணக்காரன் - ஏழை என்று
வேறாகப் பார்க்கும் மக்கள்
எண்ணத்திற் குஞ்சு - கோழி
இயல்புகள் தோன்றி டாதே! 4

36

வாய்க்கால் நீரில் தலையைவிட்டு
வாத்து நத்தை மேயும்!
வயல்புகுந்து நெல்லை மேய
அறுத்த தாளும் சாயும்!1

வாய்க்கால் வளையில் அலகைவிட்டு
வந்த நண்டைக் கொத்தும்!
வளையில் நண்டு வாயைக்கெளவ
வாத்தி ரைந்து கத்தும்!2

தாங்கல் நீரில் மூழ்கியுடல்
தலையைத் தூய்மை செய்யும்!
தரையில் வந்தே அந்திநேரம்
மாலை வெய்யில் காயும்! 3

மூங்கில் தட்டி முளையடித்து
வாத்தை மூடி வைப்பார்!
முட்டை இடும்; முட்டை யெலாம்
மூதூர் கொண்டே விற்பார்!