உள்ளடக்கத்துக்குச் செல்

கேரக்டர்/ஆராய்ச்சி ஆர்.வி. ராமன்

விக்கிமூலம் இலிருந்து

ஆராய்ச்சி ஆர். வி. ராமன்

"அது ஒரு கிராக்கு சார்: ஆராய்ச்சி பண்றதாம் ஆராய்ச்சி! எப்பக் கண்டாலும் வீட்டு நிறைய தழை, புல்லு, பூச்சி இதையெல்லாம் குவிச்சு வெச்சுண்டு பூதக்கண்ணாடியிலே பார்த்துண்டிருக்குது. வேளையிலே சாப்பிடறதில்லே. ராத்திரி யெல்லாம் தூங்கறதில்லே. ஏதோ பெரிசா புரட்டிடற மாதிரி ஆகாசத்தை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறது? இதான் அதுக்கு வேலை. எம்.ஏ.படிச்சிருக்கு; என்ன பிரயோஜனம்? ஒழுங்கா ஓர் உத்தியோகத்துலே சேர்த்து குடியும் குடித்தனமுமா வாழக்கூடாது? மனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டு வைத்துட்டு காடு மலையெல்லாம் அலைஞ்சுண்டிருக்குது. கேட்டால் "ரிஸர்ச்' பண்றதாம். ஏதோ பெரிசா கண்டு பிடிச்சுடப் போறதாம். மனசிலே ஐன்ஸ்டீன், சி.வி. ராமன்னு நினைப்பு! அதுக்காக ஆர். வெங்கட்ராமன்கிற தன் பெயரை ஆர்.வி.ராமன்னு சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

"ஒரு நாளைக்கு என்ன செஞ்சுது தெரியுமோ? காட்டிலே இருக்கற 'மருதாணி'த் தழையையெல்லாம் வெட்டிண்டு வந்து ஆட்டுக்கல்லுலே போட்டு அரைச்சிண்டிருந்தது.

"இதெல்லாம் என்னடான்னு கேட்டேன். அந்தக் கிராக் சொல்றது : மருதாணியை மாவா அரைச்சு உலர்த்திப் பவுடர் பண்ணி அதை க்யூடெக்ஸுக்குப் பதிலா உபயோகப்

படுத்தறதுக்கு ஆராய்ச்சி நடத்திண்டிருக்கானாம். அதை வெளிநாட்டுக்

கெல்லாம் அனிப்பிச்சா லட்சம் லட்சமாப் பணம் வருமாம். டாலர் எர்னிங் பிஸினஸாம்! எப்படியிருக்கு பார்த்தயோன்னோ இதும் புத்தி? இது உருப்படுமான்னு கேக்கறேன்.

"இதுக்கு முன்னே ஒருதடவை இப்படித்தான் இன்னோர் ஆராய்ச்சி நடந்திண்டிருந்தது. என்னடா இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனமா யிருக்கேன்னேன். 'உனக்கு ஒண்ணும் தெரியாது,மாமா! இது மட்டும் ஸக்ஸஸ் ஆகாட்டா என் தாடியை எடுத்துடறேன் பாரு'ன்னு சபதம் பண்றது!

"இது தாடியை எடுத்தால் தேவலையா? எடுக்காட்டாத் தேவவையா? ஒரு நாளைக்குத் தாடி வெச்சுண்டு வரும். இன்னொரு நாளைக்குத் தாடியை எடுத்துட்டு வரும். இதுதான் சுத்த பையித்தியமாச்சே!

"முன்னே ஒருதடவை ஊரிலே இருக்கிற பழைய 'பியூஸ்' போன பல்பெல்லாம் தெருத் தெருவா அலைஞ்சு விலைக்கு வாங்கிக்கொண்டு வர ஏற்பாடு பண்ணித்து.

"ஏதாவது பழைய 'பல்ப்' வியாபாரம்தான் பண்ணப் போறதோன்னு நினைச்சேன். இது என்ன பண்ணித்து தெரியுமோ? லட்சம் பல்பு சேர்ந்தப்புறம்தான் ரகசியத்தை வெளியே விடுவேன்னுது.

"கடைசியா ஓர் அமாவாசை அன்னிக்கு இருபது முப்பது பேரை அழைச்சுண்டு எங்கேயோ நடுக்காட்டிலே போய் அங்கே பறக்கிற மன்மினிப் பூச்சியெல்லாம் புடிச்சிண்டு வந்து காலி பல்புகளில் அடச்சு மூடிட்டுது. 'மாமா? மின்சாரமில்லாமலேயே எரியக்கூடிய மின் விளக்குகளைக் கண்டுபுடிச்சுட்டேன் இத பாரு'ன்னா மின்மினிப் பூச்சியை அடைச்ச வெச்ச பல்பைக் கொண்டுவந்து காண்பிக்கிறது.

"ஏண்டா, பூச்சி செத்துப்போயிட்டா என்னடா பண்ணு வேன்னேன்? இந்தியாவிலே மின்மினிப் பூச்சிக்குப் பஞ்சமே கிடையாது. எவ்வளவு வேணுமானாலும் கிடைக்கும். அப்படியே கிடைக்காவிட்டாலும் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி பண்ற

மாதிரி மின்மினிப்பூச்சிப் பண்ணை ஒன்று நடத்தி உற்பத்தி செய்துக்கலாங்கறது. "ஏண்டா உனக்கு தலையெழுத்து! ஒழுங்கா ஒரு வேலைக்கு போயேண்டா'ன்னா, 'உனக்குத் தெரியாது, மாமா! இது மட்டும் ஸக்ஸஸ் ஆச்சுன்னா லட்சம் லட்சமாப் பணம் புரளுங்'சுறது.

"ஒரு மாசம் கழிச்சு புதுசா இப்ப என்னடா ஆரம்பிச்சிருக்கேன்னு கேட்டேன்.

"மாமா! என்கூட ஒரு ஆறு மாசம் மலபார்வே வந்து இருக்கயா?'ன்னான்.

"மலபார்லே என்னடா ஆராய்ச்சின்னேன்? அங்கே வாழைத்தோப்பெல்லாம் காண்ட்ராக்ட் எடுக்கப்போறானாம். வாழைப்பழங்களையெல்லாம் உரித்து வெயிலில் உலர்த்தி பவுடராப் பண்ணி டப்பாவில் அடைத்து அமெரிக்காவுக்கு அனுப்புவானாம். அந்தப் பவுடர்லே அவங்க தண்ணியைத் தெளிச்சா பழப்பவுடர் மறுபடியும் வாழைப்பழமாக மாறிவிடுமாம். இப்படி ஒரு திட்டம் வெச்சிருக்கேன்னு பயமுறுத்தறான்.

"இதைப்போல இன்னும் என்னென்னவோ ஐடியாவெல்லாம் இருக்காம் அவனிடம். ஒரு நாளைக்கு எருக்கஞ்செடி பக்கத்திலே போய் உட்கார்ந்துண்டிருந்தது. ஏன் தெரியுமோ? அந்தச் செடியிலேருந்து பஞ்சு வெடிச்சு வருமாம். அந்தப் பஞ்சுலேருந்து ரேயான் நூல் மாதிரி தயார் செய்து, அதுக்கு 'எருக்ரேயான்'னு பேர் வைக்கப்போறானாம். இதன் ஐடியாவிலே எருக்கை வெட்டி அடிக்க!

"அப்பளத்து மாவில் கோந்தும், பாகும், மிளகுப்பொடியும் கலந்து இண்டியன் சுயிங்கம் தயார் பண்றதுக்கு ஒரு திட்டமாம். குடமிளகாய்ச் செடிக்கு தேன் இஞ்செக்ஷன் பண்ணி ஸ்வீட் குடமுளகாய் செய்றதுக்கு ஒரு திட்டமாம்.

"வீணாகப் போகும் ரம்பத்தூளை வஜ்ரத்தில் கலந்து மர அட்டைகள் செய்வதற்கு மற்றொரு திட்டமாம்! இப்படி ஆயிரம் திட்டம் வைத்திருக்குதாம்.

"திடீர்னு? இப்போ, இருக்கிற குளத்திலேயெல்லாம் இறங்கி அங்கே இருக்கும் பாசியெல்லாம் வாரி வாரிச் சேகரம் பண்ணிண்டிருக்குது.

"இது எதுக்குடான்னு கேட்டேன். இது ஒர் ஆராய்ச்சி மாமா! குளத்துப் பாசியைக் கொண்டுவந்து ஒரு தொட்டியிலே கொட்டி மூடிவைத்தால், அதிலே பூஞ்சக்காளான் பூத்து வருமாம். அதை வைத்துக்கொண்டு பெனிஸிலின் மாதிரி ஒரு பாசிலின் மருந்து கண்டுபிடிக்கப் போறானாம். கான்ஸருக்கு இது கைகண்ட ஒளஷதமாம். இதுமட்டும் ஸக்ஸஸ் ஆயிடுத்துன்னா அவ்வளவுதான். இந்தியாவுக்கு வெளிநாட்டிலெல்லாம் ஒரே புகழ்தானாம்! பாசிலின் கண்டு பிடிச்ச ஆர்.வி. ராமனுக்கு பாரத ரத்னம் பட்டங்கூடக் கிடைக்குமாம்.

"ஜவ்வாது மலைக்குப்போய் அங்குள்ள வாசனையெல்லாம் திரட்டி அதை மாத்திரைகளாக உருட்டிண்டு வரப்போறானாம். அணுப்பிரமாணம் உள்ள அந்த மாத்திரையைச் சாக்கடையிலே போட்டால் சாக்கடை நாற்றமெல்லாம் அப்படியே பறந்து போய்விடுமாம். சாக்கடைத் தண்ணியும் ஸ்படிகம் மாதிரி சுத்தமாயிடுமாம். அதைக் கண்டு பிடிச்சுட்டால் எருமை மாடுகளெல்லாம் இறங்கிக் குளிக்கறதுக்குச் சாக்கடைத் தண்ணி இல்லாமல் போயிடுமேன்னுதான் யோசிக்கிறானாம்! இதன் ஆராய்ச்சியிலே தீயை வைக்க!"