உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை

விக்கிமூலம் இலிருந்து

8. அடக்குமுறை-குறள்-சிறை நிலை!
(கடிதம் 8, காஞ்சி, 8-11-64)

தம்பி!

வேலூர் சிறையில் நாங்கள் இருந்த பகுதியில், நூற்றுக்கணக்கான கிளிகள்! பெரிய பெரிய மரங்கள் அங்கு. அவைகளிலே பொந்துகளை அமைத்துக் கொண்டு, ஏராளமான கிளிகள் இருந்து வந்தன. கும்பல் கும்பலாகக் கிளம்பி, கிறீச்சிட்டபடி, அந்தக் கிளிகள் ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு பறந்துபோகும் அழகை, நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மாலை வேளைகளில், நண்பர்கள் வடிவேலு, ராஜகோபால் ஆகியோருடன் உலவும்போது, கிளிகளைக் கண்டு மகிழ்வோம்.

உட்பக்கம் உள்ளனவோ என்னவோ, இங்கு கிளிகளே இல்லை.

இத்தனைக்கும் பெரிய அரசமரமும், வேம்பும் இங்கு உள்ளன; கிளிகளைக் காணோம்!

வேலூர் சிறை, ஊருக்கு வெளியே, ஒரு சிறு குன்றுக்கு அருகே அமைந்திருப்பதால், சிறைக்குள்ளே, நிறைய மரங்கள் உள்ளன. நான்கூட, ஒரு அரசங்கன்று நட்டுவைத்தேன்; அது நன்றாக வளர்ந்திருப்பதாக, பாதுகாப்புச் சட்டபடி கைதுசெய்யப்பட்டு, சில மாதங்கள் அதேவேலூர் சிறையில் இருந்துவிட்டு வந்த கம்யூனிஸ்டு நண்பர் அனந்தநம்பியார் என்னிடம் சொன்னார்.

சென்னைச் சிறை, நெருக்கடி நிரம்பிய ஊர்ப்பகுதியில் இருக்கிறது. ஆகவே, அது, ஆட்களை அடைத்துவைக்கும் கிடங்காக மட்டுமே இருக்கமுடியும்.

காக்கைகளை மட்டுமே கண்டு சலித்துப் போனேன்—அன்பழகன்தான், ஒரு மாலை, இரண்டு மைனாக்கள் இருப்பதைக் காட்டினார். ஒவ்வொரு மாலையும், அவைகளைக் காண்பதில் சில நிமிடங்களைச் செலவிட்டு, மகிழ்ச்சி அடைகிறேன்.

கிளிகளை வளர்ப்பதில், ஆயுட்கால தண்டனை பெற்ற கைதிகளுக்கு, சிறிது சலுகை காட்டப்படுகிறது என்று தோன்றுகிறது. வேலூரிலும் பார்த்தேன், இங்கேயும் முன்பு பார்த்திருக்கிறேன், நீண்ட காலத் தண்டனை பெற்ற சிலர், கிளிகளை வளர்க்கிறார்கள். வேலூரில் ஒரு கைதி அணில் வளர்த்துக்கொண்டிருந்தார்—மணி! மணி! என்று அந்தக் கைதி குரல் கொடுத்ததும், அந்த அணில் மரத்திலிருந்து வேகமாக இறங்கி ஓடி வந்து, அந்தக் கைதியிடம் விளையாடும் விதமாகப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று இரவு, இரண்டு துணைகள்—தோழர்கள் பொன்னுவேல்—வெங்கா.

கடந்த பொதுத்தேர்தல், வரப்போகிற பொதுத்தேர்தல், தொகுதிகளின் அமைப்புகள், நிலைமைகள் ஆகியவைபற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

பொதுவாக, அரசியல் துறையில் காட்டுத்தனம் மேலோங்கிக் கொண்டு வருவதுபற்றி, காலையில் மதியழகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் கே.எம். பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னாட்டுப் பிரமுகர்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருந்தார். அதையொட்டி அந்தப் பேச்சு வளர்ந்தது. அந்த நாட்களிலே இருந்த அரசியல் பிரச்சார முறைக்கும் இப்போது அரசியல் பிரச்சாரத்திலே தரம் கெட்டுக்கொண்டு வருவதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். பொன்னுவேல், அடுத்து வரப்போகும் பொதுத்தேர்தல் குறித்துப் பேசியபோது, தனது பிடியை இழந்து கொண்டுவரும் ஆத்திரத்தில், காங்கிரஸ் கட்சியினர், வரப்போகும் பொதுத் தேர்தலில் என்னென்ன காட்டுமுறைகளைக் கட்டவிழ்த்து விடப்போகிறார்களோ என்று எண்ணி ஆயாசப்பட்டேன்.

பிறகு, ஆப்பிரிக்க நாட்டு, 'ஜுலு' இன மக்களைப் பற்றிய தகவலைப் பின்னணியாகக் கொண்ட ஒரு கதைப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஜுலு மக்களுக்குள் மூண்டுவிடும் பகை, நடைபெறும் போர், வெட்டி வீழ்த்துவது, கொளுத்தி நாசமாக்குவது, பெண்களை இழுத்துச் செல்வது, மாடு கன்றுகளை மடக்கிக்கொண்டு போவது போன்ற சம்பவங்கள் நிரம்பிய புத்தகம் இது. ஒரு அரைமணி நேரத்துக்குள், நிரம்ப இரத்த வெள்ளம்! இன்றைக்கு இதுபோதும் என்று ஆகிவிட்டது—புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, நண்பர்களைப் பார்த்தேன்—அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்! நானும் முயற்சிக்கப்போகிறேன்—அவர்களுக்குச் சமமாக ஆக முடியவே முடியாது, என்றாலும், ஓரளவுக்காகிலும், பார்க்க வேண்டாமா! இல்லையானால், அவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்! சே! என்ன அண்ணன் இவன்? ஒழுங்காகத் தூங்கக்கூடத் தெரியவில்லையே என்று எண்ணிக் கொள்வார்களல்லவா. அதனால், தூங்கியாகவேண்டும். மணியும் ஒன்று அடித்துவிட்டது.

5—3—64

இன்று,ராணி,பரிமளம், அ.க.தங்கவேலர் மூவரும் என்னைக் காணவந்திருந்தனர். பல நாட்களாக பரிமளத்தை எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்திருந்த எனக்கு, இன்று மூவரையும் கண்டதும், மிக மகிழ்ச்சி ஏற்பட்டது. பரிமளம் வராமலிருந்ததற்குக் காரணம், இடையில் நாவலரும், கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் வந்து போனதால், தன்னை அனுமதிக்கமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டதுதான் என்று தெரியவந்தது. இனி மாதத்துக்கு ஐந்துமுறை என்னைக்காணவரலாம் என்பதைப் கூறினேன். என் பெரிய மருமகப்பெண் சென்னை வந்திருப்பதை அறிந்தேன், என்னைக் காண்பதற்காக. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வரட்டும் என்று சொல்லி அனுப்பினேன். அல்லி அச்சகம் நடத்த இளங்கோவனுக்கு அனுமதி கிடைத்துவிட்டதாகப் பரிமளம் சொல்லக் கேட்டேன். காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தல் சம்பந்தமான நிலைமைகளை அ. க. தங்கவேலர், கூறினார். என்ன காரணமோ தெரியவில்லை, அ.க தங்கவேலர் மிக இளைத்து, கருத்துப்போய்க் காணப்பட்டார். அதுபற்றி அவரிடம் கேட்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அவர், நான் இளைத்துப் போயிருப்பதாக உணர்ந்து காரணம் கேட்டார். சென்னையில் நாவலர், கருணாநிதி ஆகியோர், மேல் சபைகளுக்கான நியமனம் பற்றிய சிக்கலால் மெத்தத் தொல்லைப்பட்டுக்கொண்டிருப்பதாகப் பரிமளம் கூறக்கேட்டு, மிகவும் கவலைப்பட்டேன். எதிர்க்கட்சிகள் கொடுக்கும் மூர்க்கத்தனமான தொல்லைக்கு ஈடு கொடுத்துக் கொண்டு கழகப் பணியாற்றிவரும் இவர்களுக்கு, இந்தத் தொல்லையும் வந்து சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் அமைதி இழக்காமல், பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து பார்த்து, நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த வாரம், அனேகமாக என்னைக் காண, கருணாநிதியும் நெடுஞ்செழியனும் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.

நமது கழகத்துக்காக, சென்னை தேனாம்பேட்டையில் வாங்கியுள்ள புதிய மாடிக்கட்டிடத்தின் படம், 'நம் நாடு' இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அழகிய கட்டிடம்; எடுப்பாகவே உள்ளது: கட்டிடம் உள்ள இடமும் நல்ல 'மையமான' இடம். என்னுடன் சிறையில் உள்ள நமது தோழர்கள், படத்தைப் பார்த்து, நல்ல கட்டிடம் என்று மதிப்பிட்டுப் பாராட்டினார்கள். நான் 'பரோல்' காலம் முடிந்து, மீண்டும் சிறை புகச் சென்னை வந்த அன்று, இந்தக் கட்டிடத்தைப் பார்த்து, வாங்கலாம் என்று இசைவு அளித்திருந்தேன். 'நம் நாடு' அலுவலகத்தை ராயபுரம் அறிவகத்திலும், கழகத் தலைமைநிலையத்தை, இந்தப்புதிய கட்டிடத்திலும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

மாநகராட்சி மன்றத்தார், லாரிகள் வாங்கியது முறைகேடானது என்று பழிசுமத்திப் பேசியதோடு மட்டுமின்றி, இந்த ஏற்பாட்டைத் தடுத்திடவேண்டும் என்று கேட்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்திருந்தார்; பொது உடைமைக் கட்சியினரான பாரிஸ்டர் மோகன் குமாரமங்கலம், டாக்டர் சுப்பராயனார் மகன், கம்யூனிஸ்டு உறுப்பினர் சார்பில் வாதாடினார்—மாநகராட்சி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ள டி.செங்கல்வராயன், மாநகராட்சிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி வீராசாமி அவர்கள், லாரிகள் வாங்கப்பட்டதில் தவறோ, முறைகேடோ இல்லை என்று தீர்ப்பளித்து, கம்யூனிஸ்டு உறுப்பினர் புகுத்திய வழக்கைத் தள்ளிவிட்டார் என்ற செய்தி, இன்று பல இதழ்களில் வெளியிட்டிருந்தனர், லாரி சம்பந்தமாகப் பழிசுமத்தியே இந்தத் தேர்தலில் தி.மு. கழகத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று, மாற்றுக்கட்சியினர் மனப்பால் குடித்தனர். தேர்தல் முடிவு மட்டுமல்ல, உயர்நீதி மன்றத் தீர்ப்பும், தி.மு.கழக நிர்வாகத்திலே தவறோ முறை கேடோ இல்லை என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.

தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற 'தீர்ப்பு' கிடைத்திருக்குமானால், தேர்தல் கூட்டத்திலே வழியவிட்ட ஆபாசம், கொஞ்சம் குறைந்திருக்கக் கூடும்.

இன்று பிற்பகல், கருணாநிதி, நடராசன் ஆகியோர்மீது 'உடந்தை'யாக இருந்ததாகப் தொடரப்பட்டுள்ள வழக்கையொட்டி, சென்னை உயர்நீதி மன்றத்திலே தொடர்ந்துள்ள வழக்குபற்றி மதியிடம் பேசிக் கொண்டிருந்தேன். 107-வது பிரிவுப்படி இருவரும் குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்பதற்காக, போலீஸ் தரப்பில் என்னென்ன எடுத்துக் கூறப்படும் என்பதுபற்றி, மதி விவரமாகச் சொன்னார். எனக்கென்னமோ, அவர்கள் மதுரை சென்றதும், அறப்போர் வீரர்களைக் கண்டு பேசியதும், மாலை அணிவித்ததும் குற்றமாக முடியாது என்று பட்டது; அதுபற்றி நான் எடுத்துக் கூறினேன். உயர்நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய மிக ஆவலாக இருக்கிறோம்.

புதிதாகச் சிறை புகுந்துள்ள ராமசாமியிடம், இன்று காலை பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய சிற்றப்பாவும், என் நண்பருமான தக்கோலம் செல்லப்பாவின் நலம்பற்றிக் கேட்டறிந்து கொண்டேன்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் வரப்போகும் பொதுத் தேர்தலில், நமது கழகத்துக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிக அளவிலே இருப்பதாக ராமசாமி கூறினார்—காரணங்களையும் விளக்கினார்.

'கோட்டிக்கொளல்' என்ற சொற்றொடர், ‘அவை அறிதல்' அதிகாரத்தில் ஒரு குறளில் வருகிறது; நேற்று இரவும், இன்று பகலும், அந்தச் சொற்றொடருக்கான, பொருத்தமான பொருள்பற்றி எண்ணிப் பார்த்துத் தெளிவு பெறுவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக அன்பழகன் கூறினார்.

உலவி எனக்கு மகிழ்வளித்த புறாக்களைக் காணோம். சிறை அதிகாரி வீட்டு முற்றத்துக்கு அவை போய்ச் சேர்ந்தன என்கிறார்கள்.

கிளிகளே இங்கு இல்லையே என்பதுபற்றி இன்று அன்பழகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு கிளிகள் சில வேளைகளில் பறந்து வருவதாகவும், தான் பார்த்ததாகவும் சொன்னார். அவர் சொன்னபடியே, இன்று ஐந்துமணி சுமாருக்கு, இரண்டு கிளிகள் பறந்து சென்றிடக் கண்டேன்.

காஞ்சிபுரம் நகராட்சி மன்றத் தேர்தலில் தோல்வி கண்ட நண்பர் ராஜகோபால், இன்றுவரை, பரிமளத்தைக் காணக்கூட வரவில்லையாம். எங்கள் வீட்டுக்கும் வரவில்லையாம். விந்தையான இயல்பு! தேர்தல் தோல்வியை ஏதோ தன்னுடைய சொந்த மதிப்புக்கு ஏற்பட்டு விட்ட கேடு என்று எண்ணிக்கொண்டு மனதைக் குழப்பிக்கொள்வதுடன், தோல்வி காரணமாக எழும் எரிச்சலை எவர்மீதாவது காட்டும் இயல்பு சிலருக்கு இருக்கிறது. அந்த இயல்பின்படி ராஜகோபாலின் போக்கு அமைந்திருக்கிறது. மக்களாட்சி முறையிலே நம்பிக்கை உள்ள எவரும், தேர்தலிலே வெற்றி கிடைக்காமற் போய்விடுவதை பெரிய விபத்தாகவோ, தமது சொந்த தன்மானத்துக்கு ஏற்பட்டு விட்ட களங்கமென்றோ எண்ணிக்கொள்வது மிகத்தவறு. அந்தவிதமான எண்ணம் கொண்டு, தமது மனத்துக்குத் தாமே வேதனையைத் தேடிக்கொள்வது மிகமிகத் தவறு.

இன்று, பீடர்பெனின்சன் என்பவர் எழுதிய அடக்குமுறைபற்றிய ஏட்டிலே, ஒரு பகுதியைப் படித்தேன். மனதை உருக்கும் விதமான பிரச்சினை விளக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, உலகிலே, பல நாடுகளில், தாம் இருக்கும் நாட்டு துரைத்தனம் ஏற்றுக் கொள்ளாத சில கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்துக்காகக் கொடுமைப்படுத்தப்பட்ட ஒன்பது பேருடைய வரலாற்றுத் தொகுப்பு இந்தப் புத்தகம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எனும் புனிதமான உரிமைகளை ஆதிக்க அரசுகள் எப்படி அழிக்க முனைகின்றன என்பதை எடுத்துக்காட்டி எழுதப்பட்ட புத்தகம். ஒரு தூய கொள்கைக்காக அறப்போரில் ஈடுபட்டுச் சிறைப்பட்டுள்ள என்போன்றாருக்கு, இத்தகைய ஏடுகளைப் படிக்கும்போது, புதியதோர் உறுதி ஏற்படுவது இயற்கை. கொள்கைக்காக, ஆபத்துக்களைத் துரும்பென மதித்து, வாழ்க்கையிலே பெரும் பெரும் ஆபத்துக்களைத் தாமாக வருவித்துக்கொண்டவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நான் சிறையிலே அடைக்கப் பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள இன்னல்களைப் பெரிதென்று கூற மனம் இடம் தராது. பலர் தமது கருத்துகளுக்காக, நெருப்பாற்றிலே நீந்தி இருக்கிறார்கள். அவர்களின் வரலாறுகளைப் படிக்கப் படிக்க, நாம் எத்தகைய இன்னலையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்ற உறுதி ஏற்படத்தான் செய்கிறது. தூய உள்ளத்துடனும், மனஉறுதியுடனும் அறப்போரில் ஈடுபட்டபடி இருக்கும் நமது கழகத் தோழர்களைப் பாராட்டியபடி, படுக்கச் செல்கிறேன்.

6—3—64

பறவைகளிலே சில, பொந்துகளிலே அடைபடச் செல்லாமுன்பே, எங்களை அறையில் கொண்டுவந்து அடைத்துவிட்டு, சிறைக் காவலாளிகள், 'அப்பா! தொல்லை தீர்ந்தது' என்று எண்ணிக்கொண்டு போய் விட்டனர். காலை முழுவதும் ஒருவரோடொருவர் பேசி, ஒன்றாக உலவிட இருந்த வாய்ப்பு, மாலை 6 மணிக்கெல்லாம் பறி போய்விடுகிறது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு, சிறை மேலதிகாரியிடம், மதி, நாங்கள் உள்ள பகுதியிலே உள்ள தனி இரும்புக்கம்பித் கதவை பூட்டிவிட்டு, எங்களை அறைகளிலே போட்டுப் பூட்டாமல் விட்டுவைக்கக் கூடாதா? முன்பு அவ்விதம் நிலைமை இருந்ததே என்று கேட்டார். "அது முன்பு!" என்று கூறிவிட்டுச் சென்றார் சிறை மேலதிகாரி. அந்த சொற்றொடருக்கு எத்தனையோ ஆழ்ந்த பொருள் இருக்கத்தான் செய்கிறது. சிறையின் உட்புறப் பகுதியிலேதான் பெரும்பாலான 'கைதிகள்' உள்ளனர். அங்கு இரவு 9, 10 மணிவரையில் பாட்டும் பேச்சும் பலமாக இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதியில் ஆறுமணிக்கெல்லாம் அடைத்துவிடுகிறார்களே உடனே ஒரு சந்தடியற்ற நிலை ஏற்பட்டுவிடும். பலர், இரவு பத்து மணிக்குள் தூங்கிவிடுகிறார்கள்—எனக்கோ இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ!!

வழக்கம்போல, இன்றும் காலையிலே, சிறிதுநேரம், சமையல் காரியத்தில், பார்த்தசாரதிக்குத் துணையாக இருந்தேன். சமையல்பொறுப்பு முழுவதும் பார்த்தசாரதியுடையதுதான், என்றாலும், இதையிதை இப்படி இப்படிச் செய்யலாம் என்று கூறுவதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. சிறையிலே சமையல் செய்வதற்குத் தனித் திறமை வேண்டும். வேக மறுக்கும் அரிசி, பருப்பு; காயாத விறகு சுவையும் மணமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்ட பண்டங்கள்; இவைகளைக்கொண்டு, "இன்னமுது" சமைப்பது என்றால் இலேசான காரியமல்ல. எண்ணெய் போதுமான அளவு இல்லை என்று தெரியவந்ததும், 'தாளிப்பு' ஒப்புக்கு என்றாகிவிடும். காய்கள் முற்றிப் போனதாக ஒவ்வொரு நாளைக்குத் தந்துவிடுவார்கள்—அன்று விதைகள் மிதக்கும் குழம்புதான் கிடைக்கும். என்றாலும், நாங்களே சமைத்துச் சாப்பிடுவதிலே ஒரு தனி மகிழ்ச்சி எழத்தான் செய்கிறது.

"நல்ல குடும்பத்திலேதான் பிறந்தேன்; நல்லபடிதான் வளர்த்துப் பெரியவனாக்கினார்கள்; நாலு பேர் என்பேச்சைக் கேட்டு நடக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கிராமத்தில்; அந்த நிலையிலுள்ள நான், இங்கு வந்து, கட்டுப்பட்டு, காவலுக்கு உட்பட்டு இருக்க வேண்டி நேரிட்டுவிட்டது" என்று நண்பர் ராமசாமி, இன்று பார்த்தசாரதியிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். ஒரு பேச்சுக்காக அவர் அவ்விதம் சொன்னாரே தவிர, சிறையிலே ஆர்வம் குன்றாமல் தான் இருக்கிறார்.

சட்ட மன்ற அலுவலகத்திலிருந்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சம்பந்தப்பட்ட புத்தகங்களெல்லாம், அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒழுங்காகப் படித்து குறிப்புகள் எடுத்துவைத்திருக்கிறார். சிறை நிலைமைகள் பற்றியும், நீதி நிர்வாகத் துறைகளின் நிலைமைகள் குறித்தும், சட்டசபையில் பேசுவதற்கான ஒரு சிறு சொற்பொழிவே தயாரித்துவிட்டிருக்கிறார்.

இன்று பிற்பகல், அன்பழகன், சுந்தரம், பொன்னுவேல் ஆகிய மூவருடன், புரசவாக்கம் வட்டத்தின் அரசியல் நிலைமை பற்றியும், கழகத்தின் பிடிப்பு எந்தவிதம் இருக்கிறது என்பதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.

சிறையில், இதுபோல் பேசுவது உடனடியாகப் பலன் அளிக்காது என்றபோதிலும், ஒவ்வொரு வட்டத்திலும் நிலவும் அரசியல் நிலைமைகள்பற்றி, இதுபோல வெளியிலே கலந்து பேசினால், மெத்தப் பலனளிக்கும் என்பதை உணர முடிந்தது.

பொதுக்கூட்டங்களிலே பேசிவிட்டுச் செல்வதுடன் திருப்தி அடைந்துவிடாமல், அந்தந்த வட்டத்தில் பணியாற்றும் தோழர்களுடன் கலந்து பேசுவது, நிலைமைகளை உணரவும், கழக வெற்றிக்கான வாய்ப்புகளை உறுதிப் படுத்தவும், மெத்தவும் பயன்படும்.

இன்று மாலை அன்பழகனை, அவருடைய துணைவியார் வெற்றிச்செல்வி, காணவந்திருந்தார்கள். அன்பழகனுடைய மகனை, நாய் கவ்விக் கடித்துவிட்டதாகச் செய்தி கூறிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். அன்பழகனும் மிகுந்த கவலைப்பட்டபோதிலும், தமது உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, என்னிடம் இந்தச் செய்தியைக் கூறினார். மருத்துவருடைய யோசனையின்படி தக்கது செய்யும்படி துணைவியாரிடம் கூறி அனுப்பி இருக்கிறார். நாய்க்கடி, கடித்த நாய் வெறிகொண்டதாக இருந்தாலொழிய, ஆபத்தானதாகாது என்றாலும், தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்வது தான் நல்லது. அன்பழகனுடைய மைத்துனர் ராஜசுந்தரம், திறமை மிக்க மருத்துவர்; அவர் தக்க முறையை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

நேற்றுப் படித்த "கொள்கைக்காக கொடுமைக்கு ஆளானவர்கள்" பற்றிய புத்தகத்தை, இன்றும் தொடர்ந்து படித்தேன்.

நீக்ரோக்களுக்குச் சம உரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக அறநெறிக் கிளர்ச்சி நடத்தும் அமெரிக்க வெள்ளையருக்கு, நிறவெறி பிடித்த வெள்ளையர்களால் ஏற்பட்ட கொடுமைகளை நூலாசிரியர் விளக்கி இருந்தார். 'நீக்ரோக்களும் அமெரிக்கர்களே! நிறம் காரணமாக அவர்களை ஒதுக்கிவைப்பதும், தாழ்வாக நடத்துவதும் மிகக்கொடுமை! அது மனிதத்தன்மையையே மாய்த்திடும் இழிதன்மையாகும்' என்று அந்த அமெரிக்க வெள்ளையர், பல இன்னல்களுக்கிடையில், எதிர்ப்பு ஏசல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், எடுத்துக் கூறிக்கொண்டு வருகிறாராம். சம உரிமைக்காக நீக்ரோக்கள் மேற்கொள்ளும் அறப்போரில் இவர் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்; கொடுமைகள் பல இவருக்கு இழைக்கப்பட்ட போதிலும், மனம் தளராமல் தொண்டாற்றிக்கொண்டு வருகிறார்; நிறவெறி பிடித்த அமெரிக்க நாட்டு வெள்ளையர், குடிஅரசுத் தலைவர் கென்னடியைக் கொலைசெய்யும் அளவுக்குச் சென்றுவிட்டதைக்கண்ட பிறகு,கருப்பருக்குச் சம உரிமை கேட்டுக் கிளர்ச்சி செய்யும் இந்த வெள்ளையருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வியப்பளிக்கவில்லை. மோட்டாரில் எப்போதும் பயணம் செய்தபடி இருக்கிறாராம், மோட்டாரில், பிரசாரப்படம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம். உலகத்தின் படம் போட்டு, அதனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாக இரண்டு கரங்கள் தீட்டப்பட்டிருக்கிறதாம்; ஒரு கரம், கருப்பு நிறமுடையது; மற்றொன்று வெள்ளை!

சிறையில், இந்தச் சீலர் தள்ளப்பட்டார் ஒரு முறை; சிறை அதிகாரிகள், பல்வேறு குற்றங்கள் செய்ததால் சிறையில் இருந்த கயவர்களிடம், இந்த வெள்ளையன் கருப்பருக்குத் துணையாக இருக்கிறான் என்ற செய்தியைக் கூறி, நீக்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் முறையில் இருந்த ஒரு படத்தையும் காட்டினார்களாம். இதைக்கண்ட உடனே அந்தக் கயவர்கள்—கொலை, கொள்ளை, வழிப்பறி, வஞ்சகம், சூது, கற்பழித்தல் போன்ற குற்றங்களைச் செய்த பாதகர்கள், 'வெள்ளையரின் புனிதத் தன்மையை, உயர்வை, பாழாக்குபவனா இவன்' என்று உறுமி எழுந்து, பலமாகத் தாக்கிவிட்டார்களாம். இந்தப் பகுதியைப் படிக்கும்போது, உண்மையாகவே, கண்கலங்கும் நிலை ஏற்படுகிறது!

நேற்றும் இன்றும், எழுத்தாளர்கள் பிரச்சினையை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட, இரண்டு கதைப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர்களை ஏய்த்துக் கொழுத்திடும் புத்தக வெளியீட்டார் பற்றிய கண்டனத்துடன், ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஒரு நூல் எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று, சாமர்செட் மாகாம் எழுதியது; எழுத்தாளர் பற்றி மற்றோர் எழுத்தாளர் கொண்டுள்ள கருத்துகளையும், அவர்களுக்குள் ஏற்படும் தொடர்புகள் பற்றியும், புகழ்பெறுமுன்பு எழுத்தாளர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதுபற்றியும், மாகரம் எழுதியிருக்கிறார்.

இன்றைய பத்திரிகையில், சென்னை மேல்சபையில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமிரெட்டியாரும், டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரும், டில்லி மத்திய சர்க்காரின் போக்கையும், அவர்கள் ஆட்டிப்படைப்பதற்கு ஏற்றபடி கிடக்கும் மாநில சர்க்காருடைய அடிமைப் போக்கையும், மிக வன்மையாகக் கண்டித்துப் பேசியது வெளியிடப்பட்டிருந்தது. ஓமந்தூரார், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைப் பலமுறை கண்டித்திருக்கிறார். என்றாலும், முன்னாள் முதலமைச்சர் தமது தள்ளாமையைக் காரணமாகக் காட்டக்கூடு மென்றாலும், இந்தக் கருத்துகளை, சட்டசபையில் எடுத்துச் சொல்வதோடு நின்றுவிடுவது சரியல்ல—அறமுமாகாது—மக்கள் மன்றத்தில் இவைகளை எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். மக்களிடம் சென்று, அவர் இந்த ஆட்சியின் போக்கைக் கண்டித்துப் பேசினால்தான், ஆட்சியின் போக்கு மாறுவதற்கு ஒரு வழி ஏற்படும். ஏனோ அவர், தம்மால் செய்யக்கூடிய சேவையைச் செய்திடாமல், இருந்து வருகிறார். தன்னலமற்றவர் என்று நாடு கொண்டாடும் நிலைபெற்ற ஓமந்தூரார், உண்மையை ஊருக்கு எடுத்துச் சொல்லி, ஊராள்வோரைத் திருத்த ஏன் தயக்கம் காட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அனுபவம் பெற்றவர்களும், ஆற்றல் மிக்கவர்களும், இவ்விதம் தயக்கம் காட்டும் போக்கிலே இருப்பது, வேதனை அளிக்கிறது என்றாலும், ஓரோர் சமயம் சட்டமன்றத்திலேயாகிலும் அவர்கள், மனம் திறந்து பேசுவது, நாம் மேற்கொண்டுள்ள பணியினைத் தொடர்ந்து செய்வதற்கான பேரார்வத்தை ஊட்டுகிறது. இந்தி வெறி எந்த அளவுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் மிகத் தெளிவாக—துணிவாகக்கூட—எடுத்துக்காட்டி இருக்கிறார். அவர் காங்கிரசிடமிருந்து பதவியைப் பறித்துக்கொள்ள 'கட்சி' நடத்துபவர் அல்ல; தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கல்வித்துறைக்காகச் செலவிட்டுவரும் அறிவாளர். அவருடைய மேல்சபைப் பேச்சு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் எத்துணை தேவையானது என்பதை நாடும் நாமும் உணரச் செய்வதாக அமைந்திருக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்டு, காங்கிரஸ் உறுப்பினர்கள்கூட, பாராட்டுக் கைஒலி எழுப்பினர் என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. பாராட்டி என்ன பயன்? கையொலி எழுப்பி என்ன காணப்போகிறோம்! இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் துணிவு பெறவேண்டும். அவருடைய பேச்சு அமைச்சர் பெருமான்களுக்கு அந்தத் துணிவைக் கொடுத்திடவேண்டும். டாக்டர், நாம் மேற்கொண்டுள்ள போராட்ட முறைகளை ஏற்றுக் கொள்பவர் அல்ல; நாமும் அவரிடமிருந்து அதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர் பேசியிருப்பது, இந்தி ஆதிக்க உணர்ச்சி என்பது பொய்யல்ல; இட்டுக்கட்டியது அல்ல; ஏனோதானோ என்று விட்டுவிடத்தக்கது அல்ல; பெரியதோர் ஆபத்து, எதிர்காலத்தில் இருளும் இழிவும் இந்நாட்டுக்கு மூட்டிவிடக்கூடியது என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே—முறைகள்பற்றிய கருத்து எவ்விதம் இருப்பினும்—பிரச்சினையின் அடிப்படையைப் பொறுத்தவரையில், நமது கருத்து, அறிவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து அகமிக மகிழ முடிகிறது.

கல்வித்துறை வித்தகரும், ஆட்சித்துறை அனுபவம் கொண்டவரும், எந்தக் கேடு போகவேண்டும், கொடுமை நீக்கப்படவேண்டும் என்று எடுத்துக்கூறி, 'வாதாடி' இருக்கிறார்களோ, அதே நோக்கத்துக்காக, நாம் அறப்போரில் ஈடுபட்டு, சிறையில் கிடக்கிறோம் என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொள்ளமுடிகிறது.

'துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறார்கள்' என்று நம் மீது பழி சுமத்தும் 'பரந்த மனப்பான்மை'யினர், ஓமந்தூரார் மனம் நொந்து பேசியிருப்பதையும், டாக்டர் இலட்சுமணசுவாமி மிகக் கண்டிப்பான குரலில் பேசியிருப்பதையும் கூர்ந்து கவனிப்பார்களானால், தமது நிலை எவ்வளவு கேவலமானதாகிறது என்பதை உணருவார்கள். வெளியில் இருந்து படிப்பதைவிட, சிறைக்கு உள்ளே இருந்துகொண்டு, அந்த இரு முதியவர்களின் பேச்சுகளையும் படிக்கும்போது, தனிச் சுவையும், எழுச்சியும் பெறமுடிகிறது.

7—3—64

பொதுவாழ்க்கைத் துறையில் ஈடுபட்டு, சிறைப்பட நேரிடுபவர்களுக்கெல்லாம், கைதிகளை நல்லவர்களாக்கும் முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது—சிறையில் இருக்கும்போது. சிறையில் பலவிதமான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களிடம், பழகவேண்டிய நிலை இருப்பதும், அந்த நிலை காரணமாக, அவர்களுடன் பேசி அவர்கள் 'கதை'யைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும், அவர்கள் கூறுவது கேட்டு மனம் இளகுவதும், இங்கு இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது. சிறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதுபற்றி, இன்று மாலை, பொன்னுவேல் மெத்த ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார். பொன்னுவேல் உட்புறப் பகுதியில் இருந்த நாட்களில், தண்டனை பெற்று உள்ளே உள்ள கைதிகள், தமது தண்டனையைக் குறைக்கவேண்டுமென்றும், விடுதலை அளிக்கவேண்டும் என்றும் துரைத்தனத்துக்கு, 'மனு' அனுப்பும் காரியத்தில் தொண்டு புரிந்திருக்கிறார். சட்டக் கல்லூரியில் படித்தவர்—படித்தவர் என்று மட்டும்தான் கூற முடிகிறது—வழக்கறிஞர் என்று சொல்லும் பாக்கியத்தை, நான் பெறவில்லை. வழக்கறிஞர் ஆகாவிட்டாலும், சட்டக்கல்லூரியில் படித்ததாலும், சட்டப்புத்தகங்கள் 'கைவசம்' இருப்பதாலும், மனுக்கள் தயாரித்துக்கொடுக்க முடிந்திருக்கிறது. இதன் காரணமாக, 'கைதிகள்' வெளியே போகும்போது 'மனிதர்கள்' ஆக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதுபற்றி, ஆர்வத்துடன் பேசமுடிந்தது. இந்த ஆர்வத்தையோ, சீர்திருத்தவேண்டும் என்ற துடிப்பையோ யாரும் குறைகூற முடியாது—பாராட்டக்கூடச் செய்யலாம். ஆகவே, நானும் அந்த நோக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிரச்சினையில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விளக்கிக் கூறினேன்.

சிறையிலிருந்து வெளியே செல்பவர்கள் 'நல்லவர்களாக' மாற்றப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது—குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க, சமூகத்திலே பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுபற்றிக் கூறினேன். சென்ற கிழமை நான் படித்த சட்ட வரலாறு பற்றிய புத்தகத்திலும், குற்றங்களுக்குத் தரப்படும் தண்டனைகள், பயங்கரத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதுபற்றி, படித்திருந்தேன். அதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

தூக்குத் தண்டனையை எடுத்துவிட வேண்டுமா?வேண்டாமா? என்பதுபற்றிக் கருத்து தெரிவிக்கும்படி, துரைத்தனம் ஒரு கேள்வித்தாள் தயாரித்து சட்டசபை உறுப்பினர்களுக்கு அனுப்பி இருந்தனர். அது இன்று, சட்டசபை உறுப்பினர் ராமசாமிக்குக் கிடைத்திருந்தது. ஆகவே, தூக்குத் தண்டனை பற்றியும், பொதுவாக தண்டனை முறைகள் பற்றியும், இன்று மாலை, நாங்கள் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது.

சுந்தரத்தைக் காண, நண்பர் ராதாமணாளன் வந்திருந்தார். நாம் நடத்தும் அறப்போர் பற்றியும், நாமெல்லாம் சிறைப்பட்டிருப்பது குறித்தும், நாட்டிலே ஒருவிதமான பரபரப்பும் எழவில்லை என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும், உண்மையில், மக்கள் மனதிலே பரபரப்பு உணர்ச்சியும் பரிவும் நிரம்ப இருக்கத்தான் செய்கிறது. சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வட்டாரத்தினர்கூட இதனை உணர்ந்துவிட்டிருக்கின்றனர் என்று ராதாமணாளன் கூறியதாகச் சுந்தரம் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

தெளிவுள்ள மக்கள் இந்தி ஆதிக்கத்தால் விளையக்கூடிய ஆபத்தை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஐயம் எழுந்ததே இல்லை. அதுபோலவே நமது மனதுக்குச் சரி என்று பட்ட முறையில் மக்களுக்கு நலன் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தில், நாம் மேற்கொண்டுள்ள அறப்போர் குறித்து, மனதை அடகுவைத்துவிடாத எவரும், பாராட்டத்தான் செய்வார்கள் என்பதிலேயும் எனக்கு ஐயம் ஏற்பட்டதில்லை. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டிருப்பவரும், காங்கிரசாரிடம் தொடர்பு கொண்டுள்ளவருமான ராதாமணாளன், சுந்தரத்திடம் கூறியது, நான் ஏற்கனவே கொண்டிருந்த எண்ணத்தை உறுதிப்படுத்திற்று.

மதியைக் காண, அவருடைய துணைவியாரும் குழந்தையும் வந்திருந்தனர். மதியின் பெண்குழந்தை, இந்தச் சிறையை "அப்பாவீடு" என்று எண்ணிக் கொண்டு பேசுகிறதாம்! குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று ஆசை எழத்தான் செய்கிறது—ஆனால் எங்கே உட்புறம் பார்த்துவிடுகிறார்களோ என்று, இரும்புக் கம்பிகளை இருப்புப் பலகை போட்டு வேறு அடைத்துவைத்து விட்டிருக்கிறார்களே!!

இன்று என்னைக்காண நெடுஞ்செழியன் விரும்பியிருக்கிறார்—ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. திங்கட்கிழமை வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி கூறிவிட்டுச் சென்றார்.

புகழ்மிக்க, எச்.ஜி.வெல்ஸ் எழுதிய நூல் ஒன்று கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது—பழைய முறைகளும் கொள்கைகளும் முளைவிடும் பருவத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ள ஏடு—இன்று அந்த ஏடுதான், தூக்கம் வருகிறவரையில்.

காலையில், கலைக்களஞ்சியத்தில் சில பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் 1938-ல் சிறை புகுந்த போது, தமிழாசிரியர் சிங்காரவேல் முதலியார், தன்னந்தனியாக இருந்து தயாரித்த 'அபிதான சிந்தாமணி'யைத்தான், துணைக்குக் கொண்டிருந்தேன். சென்னை, தொண்டைமண்டல துளுவ வேளாளர் பள்ளித் தமிழாசிரியரும், என் நண்பருமான எஸ். எஸ். அருணகிரிநாதர் கொடுத்திருந்தார். கலைக்களஞ்சியம், மிகுந்த பொருட்செலவில், பலவிற்பன்னர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது—அபிதான சிந்தாமணி, ஒரே ஒரு வித்தகரின் அறிவாற்றலின் விளைவு! கலைக் களஞ்சியத்தைப் பார்த்த போது, எனக்கு, 'அபிதான சிந்தாமணி' பற்றிய எண்ணமும், அதனை ஆக்கித்தந்த சிங்காரவேலர்பற்றிய நினைவுந்தான் மேலோங்கி நின்றது.