கொல்லிமலைக் குள்ளன்/19

விக்கிமூலம் இலிருந்து

19

கொல்லிமலைக் குள்ளனைப்பற்றியும், அதுவரையில் நடந்த சம்பவங்களைப்பற்றியும் நிதானமாகவும், விரிவாகவும் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பேராசிரியர் வடிவேலுவுக்கு ஒழிவு கிடைத்தது. அவற்றைத் தெரிந்துகொண்டதும் அவர் மேற்கொண்டு என்ன செய்வது என்பதைப்பற்றி எண்ணமிடலானார். முதலில் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திக்க வேண்டும். பரிசலில் தனியாக வந்த குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வள்ளிநாயகி மற்றொரு பரிசலில் மூன்று போலீசாரை அனுப்பினாள் அல்லவா ? அந்தப் பரிசலோடு மற்றொரு பரிசலும் சேர்ந்து ஆற்றில் சென்றதை இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள்; மற்றொரு பரிசலில் வந்தவர்கள் கொல்லி மலைக்குள்ளனின் ஆள்களாகத்தான் இருக்க வேண்டும். சாதாரணமாக அந்த ஆற்றிலே இரவு நேரங்களில் யாரும் பரிசலில் செல்லமாட்டார்கள் என்று தில்லைநாயகம் உறுதியாகக் கூறினார். அதனால், வந்தவர்கள் குள்ளனுடைய ஆள்களாகத்தான் இருக்கவேண்டும். போலீஸார் அந்த ஆள்களைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படிப் பிடித்திருந்தால் இதற்குள் கூடல் பட்டணத்திற்குச் சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர்களை ஒப்படைத்திருப்பார்கள். அதே சமயத்தில் தங்கமணி முதலியவர்கள், வந்த பரிசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்திருப்பார்கள். அந்தச் செய்தி வள்ளி நாயகிக்கு மிகுந்த கவலையை உண்டுபண்ணும். அதனால் வள்ளிநாயகியைப் போய்ச் சந்திப்பது முதலில் செய்ய வேண்டிய வேலையாகும். கூடல் பட்டணத்திற்குப் போனால் போலீஸ் இன்ஸ்பெக்டரோடு கலந்து யோசனை செய்துகொண்டு, கொல்லி மலைக் குள்ளனைப் பிடிப்பதற்கு வேண்டிய முயற்சியையும் செய்யலாம். அவன் தப்பிவிட்டானே ஒழிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதையும் மற்ற சிலைகளையும் எடுத்துச்செல்ல அவன் ரகசியமாக முயல்வான். அந்தச் சமயம் பார்த்து அவனைப் பிடித்துவிடலாம். அவனுடைய ரகசியக் குகையும் தெரிந்துவிட்டது. அதனால் அந்தப் பகுதியிலே மறைந்திருந்து அவனைப் பிடிக்க முயற்சி செய்யலாம். அவன் கிடைக்காவிட்டாலும் கடைசியில் அந்தச் சிலைகளையாவது எடுத்துச் சென்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே வடிவேலுவுக்கு வேறொரு வகையான எண்ணமும் பிறக்கலாயிற்று. ஒரு வேளை, பரிசலில் வந்த போலீசாரைக் குள்ளனின் ஆள்கள் பிடித்திருந்தால் ...... அப்பொழுது என்ன நடந்திருக்கும்? இவ்வாறு தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார். போலீசார் துப்பாக்கியுடன்தான் வந்திருப்பார்கன். அதனால் அவர்களைப் பிடித்திருப்பது நடைபெறக்கூடியதன்று. அப்படி அவர்களைப் பிடித்திருந்தாலும் குள்ளனின் ஆள்கள் அவர்களைத் தச்சுப் பட்டறைக்குத்தான் கொண்டு சென்றிருப்பார்கள். அப்பொழுது வள்ளிநாயகிக்கு ஒரு சேதியும் கிடைத்திருக்காது. போலீசாரையும் சந்திக்கமுடியாது. அவள் பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருப்பாள். அப்படிப் பார்க்கும்போதும் கூடல் பட்டணம் போய் வள்ளிநாயகியைச் சந்திப்பதே முதல் வேலையாகத் தோன்றிற்று. பிறகு, போலீஸ் இன்ஸ்பெக்டரையும் வேறு பல போலீசாரையும் அழைத்துக்கொண்டு வந்து தச்சுப் பட்டறைக்கு வரமுடியும். போலீசார் பிடிபட்டிருந்தால் அவர்களையும் விடுவிக்கலாம். பின்பு, இந்த இடத்திற்கு வந்து இங்கே குகைக்குள் அடைபட்டுக் கிடக்கும் குள்ளனின் ஆள்கள் ஐவரையும் கைது செய்யலாம். அதுவரை இவர்கள் குகைக்குள்ளேயே கிடக்கட்டும்.

இவ்வாறு முடிவு செய்துகொண்டு அந்த இடத்திலிருந்து கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம் என்பதைப்பற்றித் தில்லை நாயகத்தோடு கலந்து சிந்திக்கக் தொடங்கினார். "கூடல் பட்டணத்திற்கு எப்படிப் போகலாம்?" என்று அவர் திடீரென்று தில்லைநாயகத்தை வினவினார்.

இவ்வாறு பேராசிரியர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதும், திடீரென்று கேள்வி கேட்பதும் தங்கமணிக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவன் அதுவரையில் மெளனமாக இருந்தான். சுந்தரத்திற்கும், கண்ணகிக்குந்தான் இப்படி மெளனமாக இருப்பது தொல்லையாக இருந்தது. ஜின்காவிற்கும் அது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதற்கு நாவற்பழத்தின் மேலே ஆசை ஏற்பட்டுவிட்டது. கண்ணகி வரக் கொஞ்சம் விருப்பம் காட்டியிருந்தால் அது அவளை அழைத்துக்கொண்டு போயிருக்கும். ஆனால், அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். மேலும், தங்கமணி ஏதேதோ எண்ணிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. அதனால் முக்கியமான வேலை இருப்பதாக அது உணர்ந்துகொண்டது. அதனால் அது ஓரிடத்திலே படுத்துக்கொண்டது. சுந்தரம் அதனிடத்திலே வந்து அதைத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

இந்த நிலையில்தான் வடிவேல் திடீரென்று கேள்வி கேட்டார். தில்லைநாயகத்திற்கு என்ன பதிலளிப்பது என்று தோன்றவில்லை. அவர் சற்று திகைத்தார். அதைக் கண்டு வடிவேல் "தில்லைநாயகம், நாமெல்லோரும் உடனே கூடல் பட்டணம் போயாக வேண்டும். நூலேணிக்கும் கீழே ஆற்றின் கரையில் இரண்டு பரிசல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவற்றைப் பயன்படுத்தி ஆற்று வழியாகவே கூடல் பட்டணம் போய்ச் சேரலாம். நீ ஒரு பரிசலையும், உன் மகன் மருதாசலம், ஒரு பரிசலையும் செலுத்த முடியும். ஆனால், அப்படிப் போகும் போது தச்சுப்பட்டறையில் உள்ள ஆள்களுக்குத் தெரியுமல்லவா ?" என்று கேட்டார்.

"ஆமாம், தச்சுப்பட்டறை ஆற்றின் கரையிலேயே உயரமான இடத்தில் இருக்கிறது. அங்கு இருப்பவர்களுக்கு ஆற்றில் செல்லும் பரிசல்கள் நன்றாகத் தெரியும்” என்று தில்லைநாயகம் பதிலளித்தார்.

"அதை நினைத்துத்தான் நான் வேறு வழி இருக்கிறதா என்று கேட்கிறேன்.”

"மலைக்கு மேற்புறத்திலே இறங்கி, அங்குள்ள ஏரி வழியாகப் பரிசலில் போகலாம். நான் வலிக்கும் பரிசலும் அங்கு இருக்கிறது.”

"எரி வழியாகப் போனால் தச்சுப்பட்டறையில் உள்ளவர் கண்ணிலும் படமாட்டோம். அதோடு அந்தப் பட்டறைப் பக்கம் போகாமலேயே கூடல் பட்டணம் போகும் வழியிருக்கிறது. அந்த வழியில் இரண்டு மைல் நடந்தால் கூடல் பட்டணம் போய்விடலாம்" என்று மருதாசலம் உற்சாகத்தோடு கூறினான்.

"தச்சுப்பட்டறைப் பக்கம் போகாமல் அதைக் கடப்பதுதான் நல்லது. குள்ளன் அங்கே போயிருந்தால் நம்மைப் பிடிக்க முயற்சி செய்யாமலிருக்கமாட்டான். அவனிடத்திலே ஆள்கள் நிறைய இருப்பார்கள். அதனால் நாம் எச்சரிக்கையாகப் போக வேண்டும். இங்கே காலதாமதம் செய்வது நல்லதல்ல. இப்பொழுதே மணி சுமார் நான்கு இருக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே வடிவேல் எழுந்தார்.

"அப்பா, அம்மாவிடம் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே கண்ணகி அவர் பக்கத்தில் சென்றாள். குள்ளனையும் பிடித்துக்கொண்டு போனால் அத்தைக்கு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே சுந்தரம் எழுந்தான். தங்கமணி மட்டும் ஒன்றும் பேசாமல் புறப்படத் தயாரானான். அவன் உள்ளத்திலே பலவகையான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. முந்தைய நாளிலும், இன்றும் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு ஒரு புதுவிதமான கிளர்ச்சியையும், பெரியதொரு துணிகரச் செயலில் ஈடுபட்ட உற்சாகத்தையும் தந்தன. அவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டே அவன் நடக்கலானான். ஜின்கா அவன் தோளின்மேல் எறாமல் அருகிலேயே நடந்து வந்தது.

“எவ்வளவு வேகமாக எரியை அடைய முடியுமோ அவ்வளவுக்கும் நல்லது. தில்லைநாயகம், குறுக்கு வழியாகக் கூட்டிக்கொண்டு போ" என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தார் வடிவேல். தில்லைநாயகம் எல்லாருக்கும் முன்னால் நடந்தான். கண்ணகியைக் கையில் பிடித்துக்கொண்டு மருதாசலம் பின்னால் நடந்தான். மலைச்சாரலிலே ஒற்றையடிப் பாதைகூட சில இடங்களில் சரியாக இருக்கவில்லை. சிற்சில இடங்களில் உயரமான பாறைகளிலிருந்து ஐந்தடி, ஆறடி ஆழத்திற்குக் கீழே குதித்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக் கீழே விட்டான். தங்கமணியும் சுந்தரமும் விளையாட்டாகக் குதித்துக் குதித்துச் சென்றார்கள். யாராவது அந்தப் பக்கத்திலே தென்படுகிறார்களா என்று உற்றுப் பார்த்துக் கொண்டே பேராசிரியர் வடிவேல் எச்சரிக்கையாக நடந்தார். அவரிடத்திலே எந்த வகையான ஆயுதமும் இல்லை. அதனால்


அவர் குள்ளனுடைய கண்ணில் படாமல் கூடல் பட்டணம் போய்ச் சேருவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர்கள் சுமார் 2 மணி நேரம் நடந்திருப்பார்கள். அப்பொழுது ஏரி கண்ணிலே தென்பட்டது. அது மிகவும் விசாலமான ஏரி. மழை பெய்யும்போது மலையில் இருந்து பல ஓடைகளின் வழியாக அதில் வெள்ளம் வந்து சேரும். வெள்ளம் அதிகமாக இருந்தால் அந்த ஏரியிலிருந்து நீர் வழிந்து வஞ்சியாற்றை அடையும். சாதாரணமாக அந்த ஏரி எப்பொழுதும் நீர் நிறைந்து இருக்கும். ஆனால், சுற்றிலுமுள்ள மலைக்காடுகளுக்கு இடையே இருப்பதால் அதை யாரும் எந்த வகையிலும் பயன்படுத்துவதில்லை. அந்தப் பக்கத்திலே நடமாட்டமே இராது. அதனால் அது குள்ளனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. தச்சுப்பட்டறையில் செய்த மரப்பொம்மைகளைப் பரிசலில் ஏற்றி, அதன் வழியாக மேலே இருக்கும் குகைக்கு எடுத்துச் செல்வதும், அங்கே பொம்மைகளுக்குள் திருடிய சிலைகளை வைத்து மறைத்துப் பிறகு வர்ணமடித்து எடுத்துக்கொண்டு வருவதும் அவனுக்கு எளிதாக இருந்தது. யாருக்கும் இந்த விவரம் தெரியாதபடி அவன் தன் திருட்டு வேலையைச் செய்து வந்தான். தச்சுப் பட்டறையில் வேலை செய்யும் தச்சர்களுக்குக்கூட அவனது திருட்டுத் தொழில் தெரியாது. திருட்டை நடத்த அவன் தனியாக வேறு ஆள்களை வைத்திருந்தான். அந்த ஆள்களே தச்சுப்பட்டறைக்கு வந்திருந்தனர். அவர்களைப் பற்றித் தச்சர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

குள்ளன் வர்ணம் பூசி முடித்த பொம்மைகளை எரியின் வழியாக மீண்டும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து வஞ்சியாற்றின் வழியாக எடுத்துக் கூடல் பட்டணத்திற்குச் செல்வான். அங்கிருந்துதான் ரயிலிலோ லாரியிலோ அவன் பொம்மைகளைக் கொச்சித் துறை முகத்திற்கு எடுத்துச் செல்வான். அல்லது. ரயில் வழியாக வட நாட்டிற்கும் கொண்டுசென்று, அங்கிருந்து வெளிநாட்டிற்கும் அனுப்புவான்.

வடிவேல் முதலியோர் எரிக்கரையில் பரிசல் இருந்த இடத்திற்கு வந்ததும் உடனே அதில் ஏறிக்கொண்டனர். தில்லைநாயகம் பரிசலைத் துடுப்புப்போட்டு வேகமாகத் தள்ளினான். பரிசல், எரியின் மத்திய பாகத்திற்கு வந்த போதே கொல்லிமலைக் குள்ளனுக்கும் அவன் கூட்டத்தினருக்கும் தெரிந்துவிட்டது. குள்ளனுக்கு அந்தப் பரிசல் எங்கு போய் நிற்கும் என்பது நன்றாகத் தெரியும். அந்த இடத்தில் இறங்கித்தான் கூடல் பட்டணத்திற்குத் தரைவழியாகச் செல்ல முடியும். அதனால் அவன் தன் ஆள்களை மெதுவாகவும் ஒவ்வொருவராகவும் அந்த இடத்திற்குச் சென்று பதுங்கும்படி கட்டளையிட்டிருந்தான். அவனும் அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தயாராகக் காத்திருந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிய இருட்டும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. குள்ளன் எதிர்பார்த்த இடத்திலேயே பரிசல் வந்து நின்றது. வடிவேலும் மற்றவர்களும் பரிசலை விட்டிறங்கி, எரிக்கரையை நோக்கி வரத் தொடங்கியவுடனே, குள்ளன் தனது ஆள்களுக்குச் சமிக்கை செய்தான். அடுத்த கணத்தில், குள்ளனின் ஆள்கள் பதினைந்து பேரும், குள்ளனும் வடிவேல் முதலியவர்கள் மேல் பாய்ந்தார்கள். வடிவேலின் எச்சரிக்கையெல்லாம் பயன்படாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/19&oldid=1101658" இலிருந்து மீள்விக்கப்பட்டது