சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/11

விக்கிமூலம் இலிருந்து



[11]

பெட்டியின் ரகசியம்!

பாட்டி வீடு சென்றதும் சிற்றுண்டி அருந்தக்கூட அவர்களுக்கு எண்ணமில்லை. பெட்டியைத் திறந்து பார்ப்பதையே முதல் வேலையாக வைத்துக் கொண்டார்கள்.

பாட்டியிடம் ஒரு சுத்தியல் கேட்டு வாங்கி தங்கமணி பெட்டியின் பூட்டை உடைத்தான். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு அந்தக் குகையில் மறைத்து வைத்ததால் அந்த இரும்புப் பூட்டு துருப்பிடித்திருந்தது. அதனால் அது எளிதில் திறந்து கொண்டது. ஆவலோடு மூவரும் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.

உள்ளே ஒரு வரைபடந்தான் இருந்தது. “பூ, இதுதானா? இதற்கா இத்தனை இரகசியம்?” என்றான் சுந்தரம்.

“முதலில் வரை படத்தை ஆராய்ந்து பார்ப்போம். அதில் ஏதாவது உண்மை கிடைக்கும்” என்று தங்கமணி கூறிவிட்டு அப்படத்தைக் கூர்ந்து கவனித்தான். மற்றவர்களும் அப்படியே ஆவலோடு பார்த்தார்கள்.

அவர்கள் கூர்ந்து பார்ப்பதைக் கண்ட ஜின்காவும் அருகில் வந்து படத்தை உற்றுப் பார்த்தது.

“இதோ, இது புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம். சந்தேகமே இல்லை. புதையல் தானியக் கிடங்கின் ஒரு பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தை இது நன்றாகக் காட்டுகிறது. யாருக்கும் தெரியாதபடி அங்கே ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதற்குள் புதையலை வைத்து செங்கல் சுவர் வைத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி உற்சாகத்துடன் சொன்னான்.

“ஆமாம், எனக்கும் நன்றாக இப்போது விளங்குகிறது, பருப்புப் போட்டு வைக்கும் கிடங்கில் அந்த ரகசிய அறை
இருக்கிறது. நான் கண்டு பிடித்து விட்டேன்” என்று சுந்தரம் கத்தினான்.

“புதையலை அங்கே மறைத்துவிட்டு எதற்காக வரைபடத்தைக் குகையில் வைத்திருக்கிறான்?” என்று கேட்டாள் கண்ணகி.

'ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அதை நாம் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை” என்றான் தங்கமணி.

“புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரை படம் நமக்குக் கிடைத்து விட்டது. அவ்வளவு தானே வேண்டியது?” என்றான் சுந்தரம்.

“ஏண்டா இப்படிக் கத்தினாய்? யார் காதிலாவது விழப் போகிறது” என்று கண்ணகி எச்சரித்து விட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஆனால் புதையல் இருக்கும் ரகசிய அறையைப் பற்றித் தெரிந்ததும் அவர்கள் உற்சாகம் மித மிஞ்சிவிட்டது. அதைப்பற்றி மாறிமாறிப் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

“இந்தக் கோடை விடுமுறை மிகுந்த குதூகலம் தருகிறது” என்று தங்கமணியும் உரத்துக் கூவினான்.

ஜின்கா ஜிங் ஜிங் என்று குதித்தது.

கண்ணுப்பாட்டி இரவு உணவு ஆறிப் போகிறது என்று அங்கு வந்து கூறாவிட்டால் அவர்கள் பேசிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால் அவளிடத்தில் தாங்கள் கண்டு பிடித்த ரகசியத்தைப் பற்றிப் பேசவே இல்லை.

இரவு உணவு அருந்திவிட்டு, காலையிலிருந்து மலை ஏறி இறங்கிய அலுப்பால் மூவரும் உடனே தூங்கிவிட்டார்கள். ஜின்காவும் தங்கமணியின் கட்டிலில் படுத்துக் கொண்டு உறங்கலாயிற்று. இரவில் ஏதோ பட்டி நாய் குரைக்கும் சப்தம் உண்டாயிற்று. அவை யெல்லாம் அவர்கள் காதில் விழவே இல்லை. எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கும் ஜின்காவும் நன்றாக நித்திரையில் ஆழ்ந்து விட்டது. அத்தனை அலுப்பு அதற்கு.