சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/15

விக்கிமூலம் இலிருந்து



[15]

போலீஸுக்குத் தகவல்!

அந்தக் கடிதத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே தெரியப்படுத்தி நான்கைந்து ஜவான்களோடு சப்-இன்ஸ்பெக்டரையும் உடனே மலை உச்சிக்கு வரும்படி எழுதியிருந்தது. வரும்போது ஒரு நூலேணியும் கொண்டு வந்தால் நலம் என்றும், உடனே செய்யாவிட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எழுதியிருந்தது. பாட்டியை ஜின்காவும் அவசரப்படுத்தியது.

கண்ணுப் பாட்டிக்கு மனதில் கொஞ்சம் திகில் உண்டாகியது. அதனால் அந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே ஓடினாள். சப்-இன்ஸ்பெக்டரிடமும் விவரத்தைத் தெளிவாகச் சொன்னாள்.

சப்-இன்ஸ்பெக்டர் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். ஆகவே துப்பாக்கி தாங்கிய ஐந்து ஜவான்களோடு தாமும் மலை மீது வேகமாக ஏறினார். ஜின்கா அவர்களுக்கு வழி காட்டியாக முன்னால் நடந்தது. அவர்கள் மலை உச்சியை அடைவதற்கும் அந்த நான்கு. முரடர்களும் புதையலை எடுத்துக் கொண்டு மேலே வருவதற்கும் சரியாக இருந்தது. வரைபடத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் பல இடங்களில் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள், அதனால் அவ்வளவு நேரம் ஆகிவிட்டது.

அந்த நால்வரையும் போலீசார் கைது செய்து அவர்கள் கையில் விலங்கிட்டார்கள். எப்படிப் போலீஸ் அங்கே வந்தது என்பது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.