சங்க இலக்கியத் தாவரங்கள்/003-150

விக்கிமூலம் இலிருந்து
 

பெருந்தண் சண்பகம்
மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பத்துப்பாட்டில் நக்கீரரும் கபிலரும், பரிபாடவில் நல்லந்துவனாரும் ‘பெருந்தண்சண்பகம்’ என்ற மலரைக் குறிப்பிடுகின்றனர். குறிஞ்சிப்பாட்டில் (75) கபிலர் ‘பெருந்தண்சண்பகம்’ என்று கூறுவதல்லால், சண்பக மலரைத் தனித்துரைக்கவில்லை.

மிகத் தண்ணிய உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும், ஆறாயிரம் அடி உயரத்திற்கு மேல், ‘சண்பகம்’ என்று வளர்க்கப்படும் சிறுமரம் ஒன்றுண்டு. இதில் நறுமணமுள்ள மிகப் பெரிய மலர் பூக்கின்றது. இதனையே பெருந்தண்சண்பகம் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆனால், இச்சிறுமரம் இவ்விடங்களில் வளர்க்கப்படுகின்றது. இது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது புலனாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : பெருந்தண்சண்பகம்
உலக வழக்குப் பெயர் : சண்பகம்
தாவரப் பெயர் : மக்னோலியா கிராண்டிபுளோரா
(Magnolia grandiflora, Linn.)

பெருந்தண் சண்பகம் இலக்கியம்

மக்னோலியேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் மக்னோலியா (Magnolia) என்ற ஒரு பேரினமுண்டு. இதில் 4-5 சிற்றினங்கள் இந்தியாவில் வளர்கின்றன. ‘மக்னோலியா’ கிராண்டிபுளோரா (Magnolia grandiflora) என்ற சிறுமரம் குளிர்ச்சி மிக்க நீலகிரியிலும், கொடைக்கானல் மலைகளிலும் வளர்கின்றது. இம்மரம் 10-12 மீட்டர் உயரமானது. அடர்ந்து கிளைத்து வளர்வது. மிகப் பெரிய பசிய தனியிலைகளை (10"-14" x 5"-6") எப்பொழுதும் தாங்கி நிற்பது. வடஅமெரிக்காவில் தென் பகுதியில் நன்கு வளர்வது என்பர் காம்பிள். இதன் தனி மலர் மிகப்பெரியது. ஏறக்குறைய (4" - 5") அதாவது 10-12 செ. மீ. நீளமானது. 8-10 செ. மீ. அகலமானது. வெண்ணிறமும் நறுமணமும் உடையது. இதில் இளஞ்சிவப்பு நிறமான மலருடைய சிறுமரமும் உதகையில் வளர்க்கப்படுகின்றது. புறவிதழ்கள் மூன்றும், பசிய வெண்மையான அகன்ற மடல்களாக விரியும். அகவிதழ்கள் 2-4 அடுக்காகவும், ஒவ்வொரு அடுக்கிலும் 6 முதல் 12 அகவிதழ்களும் உள்ளன. பல தட்டையான மலட்டு மகரந்தத் தாள்கள் இதழொட்டி இருக்கும். இதன் ஒருபுற வெடிகனி, ஓரிரு விதைகளை உடையது.

இதனையும் சண்பகமென்றே அழைக்கின்றனர். இது ஓர் அழகிய சிறு மரம். மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்க்கப்படுகின்றது. மலர் மிகப் பெரியது. சிறந்த நறுமணம் உடையது. பல நாள்களுக்கு இதன் மணம் வெகு தொலைவிலும் நுகரப்படும். இவ்வியல்புகளை உற்று நோக்கினால் இதனையே ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறலாம் போலத் தோன்றுகிறது. நக்கீரர். கபிலர். நல்லந்துவனார் ஆகிய மூன்று புலவர் பெருமக்களும் சண்பக மலரைத்தான், ‘பெருந்தண் சண்பகம்’ என்று கூறியுள்ளனரா என்பது சிந்திக்கற்பாற்று. ஆனால், செந்தமிழ் நாட்டில் இவ்விருமலர் மரங்களும் வளர்கின்றன. கபிலர், குறிஞ்சிப் பாட்டில் ‘பெருந்தண் சண்பகம்’ என்றார். இவர் சண்பகத்தை தனித்துரைத்தார் அல்லர். சண்பக மலர் மஞ்சள் நிறமானது. பெருந்தண் சண்பகம் வெண்மை நிறமானது. சண்பகத்தில் 6-9 இதழ்களே உள்ளன. பெருந்தண் சண்பகத்தில் 2 முதல் 4 அடுக்கும் ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு இதழ்களும் காணப்படுகின்றன. மலரும் மிகப் பெரியது. மிகத் தண்ணியவிடங்களில் மட்டும் வளர்கிறது.

இது மக்னோலியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சண்பகம் என்றே வழங்கப்படுகிறது.


பெருங்தண் சண்பகம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே
தாவரக் குடும்பம் : மக்னோலியேசி (Magnoliaceae)
தாவரப் பேரினப் பெயர் : மக்னோலியா (Magnolia)
தாவரச் சிற்றினப் பெயர் : கிராண்டிபுளோரா (grandiflora)
தாவர இயல்பு : சிறுமரம், 10-12 மீட்டர் உயரமான கிளைத்த மரம்.
தாவர வளரியல்பு : 6000 அடி உயரத்துக்கு மேல் குளிர்ந்த மலைப் பாங்கில் வளர்கிறது. மீசோபைட். எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் மர வகை.
இலை : நீண்டு அகன்ற பசுமையான தடித்த தனி இலை. 10-12 செ.மீ. X 8-10 செ. மீ.
மஞ்சரி : தனி மலர், இலைக் கோணத்தில் நுனியில் பூக்கும்.
மலர் : மிகப்பெரியது. 10-12 செ. மீ x 8-10 செ. மீ. அழகானது. நறுமணமுள்ளது. பல நாள்களுக்கு மணமிருக்கும். விரைந்து வாடாதது.

மக்னோலியா குளோபோசா (Magnolia globosa) என்ற இன்னொரு இவ்வின மலர் இமயமலைச் சாரவில் சிக்கிம் நாட்டில் 9000-10000 அடி உயரத்தில் வாழுமென்றும், இதன் மலரும் 10-12 செ.மீ. அகலமுள்ளதென்றும், ஹூக்கர் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n-114 என, சானகி அம்மாளும் (1952 சி), 2n = 112-114 என மொரிநாகா (1929) முதலியோரும் கூறுவர். மக்னோலியா குளோபோசாவிற்குக் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 38 என, சானகி அம்பாள் (1952 சி) கூறுவர்.