சங்க இலக்கியத் தாவரங்கள்/010-150

விக்கிமூலம் இலிருந்து
 

கோங்கம்
காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்

(Cochlospermum gossypium, DC.)

சங்க இலக்கியத்தில் கோங்கு எனப் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் வளரும். இதன் பொன்னிற அழகிய முகையை மகளிர் மார்பிற்கு உவமிக்காத புலவரிலர்.

சங்க இலக்கியப் பெயர் : கோங்கு, கோங்கம்
தாவரப் பெயர் : காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்
(Cochlospermum gossypium, DC.)

கோங்கம் இலக்கியம்

கபிலர் இதனை "விரிபூங்கோங்கம்" என்பார் (குறிஞ். 73).

‘விரிபூங்கோங்கம்’ என்பது குறிஞ்சிப் பாட்டுச் சொற்றொடர் (குறிஞ். 73). சங்கப் புலவர்கள் இதனைக் ‘கோங்கு’ எனவுங் ‘கோங்கம்’ எனவும் கூறுவர். கலித்தொகை ஓரிடத்தில் இதனைக் ‘கணிகாரம்’ என்று குறுப்பிடுகின்றது.

“மாவீன்ற தளிர்மேல்
கணிகாரம் கொட்கும் கொல்”
-கலி. 143:4-5

சிலப்பதிகாரத்தில் இது ‘கன்னிகாரம்’ எனப்படுகின்றது. [1] நிகண்டுகள், ‘கன்னிகாரம்’ ‘பிணர்’ ‘குயா’ ‘பவனி’ என்ற பெயர்களைக் கோங்கிற்குச் சேர்க்கின்றன.

கோங்கம் ஒரு மரம் என்றும். இதன் அடிமரம் பிணர் உடையது என்றும், இதன் இளமலர் பொன்னிறமானதென்றும் ஐங்குறுநூறு கூறும்.

“பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

-ஐங் (367-1)

கோங்கமரம் மலையிடத்து வளரும். கோங்கின் முகை, அடி பரந்து கொம்மை கொண்டது. இது வனப்புள்ள முற்றா இள முலைக்கு உவமிக்கப்படுவது. முகை விரிந்து மலரும் என்று கூறுவர் பரணர்.

“வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
 முகைவனப்பு ஏங்திய முற்றா இளமுலை”

-புறநா. 366 : 9-10

இதனை இங்ஙனமே கூறும் கலித்தொகையும்.

“................ கோங்கின்
 முதிரா இளமுலை ஒப்ப எதிரிய
 தொய்யில் பொறித்த வனமுலையாய்”
-கலி. 177 : 2-4

கோங்கம் விரிந்து மலருங்கால் திருகுப்பூ போன்றிருக்கும். கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் (திருகுப்பூ) என்னும் அணி போன்ற வடிவினவாகிப் பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலரும் என்பர் நக்கீரர்.

“கைவல் வினைவன் தையுபு சொரிந்த
 சுரிதக உருவின ஆகிப் பெரிய
 கோங்கம் குவிமுகை அவிழ”
-நற். 86 : 5-7

குவிந்த கோங்கின் முகை விரிந்து மலருங்கால், குடை போன்றிருக்கும். இதழ்கள் மெல்லியவை. புல்லியவை. இப்பூக்கள் தொடர்ந்து பூத்திருக்கும் போது, கார்த்திகைத் திங்களில் ஏற்றப்படும் விளக்கு வரிசை போலக் காட்சி தரும்.

மேலும், வானத்து ஒளிரும் விண்மீன்களின் நினைவை எழுப்பும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

“புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
 வைகுறு மீனின் நினையத் தோன்றி”
-நற். 48 : 3-4}}
“அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
 செல்சுடர் நெடுங் கொடிபோல
 பல்பூங்கோங்கம் அணிந்த காடே”
-நற். 202 : 9-11

கோங்க மலரின் உள்ளே நடுவண் அமைந்த பொகுட்டு, எலியின் வளைந்த காது போன்றதென்றார் தாமோதரனார்.

“வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
 குடந்தையஞ் செவிய கோட்டெலி”
-புறநா. 321 : 4-5

கோங்கமலரின் தாது பொன்னிறமானது. மகளிரின் பசலை நிறத்திற்கு உவமையானது. மாந்தளிர் போன்ற நிறங்கொண்ட மங்கையர் உடலில் பொன்னிறமான பசலை, மாந்தளிர் மேல் கோங்கந் தாது கொட்டியது போன்று அழகு செய்தது என்று பாடும் கலித்தொகை.

“மணிபொரு பசும்பொன்கொல் மாஈன்ற தளிரின்மேல்
 கணிகாரம் கொட்கும்கொல் என்றாங்கு
 அணிசெல மேனி மறைத்த பசலையள்”
-கலி. 143 : 4-6

கோங்கம் பூக்குங்காலம் இளவேனிலா அன்றி முதுவேனிலா என்ற ஐயமெழுகின்றது.

‘கோங்கின் பசுவீ மிலைச்சி வேனிற்காலத்தில் தேரொடு வந்தான்’ என ஐங்குறு நூறும்,‘வேனிற்கொங்கு’ என்று புறநானூறும், ‘கோங்கம் குவிமுகை அவிழ . . . . முன்றா வேனில் முன்னி வந்தோரே’ என நற்றிணையும், ‘திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழுமுகை உடையும் பொழுது’ என இளவேனிற் பத்தில் ஐங்குறுநூறும், ‘சினைப்பூங்கோங்கின் நுண்தாது இளநாள் அமையம் பொன் சொரிந்தன்ன உகுமென்று’ என அகநானூறும் கூறுகின்றமையின். ‘பருவமில் கோங்கம்’ என்ற பரிபாடல் அடிக்குக் ‘காலங்குறியாது பூக்கும் கோங்கு’ என்று பரிமேலழகர் உரை கண்டார் போலும்! கோங்க மலர் சுடர்விட்டுப் பொன்னொளி பரப்புவதாகும். மாலை விலங்கிய சுரத்திலே காற்றடிக்கும் போது கோங்க மலர் காம்பிலிருத்து கழன்று விழுகின்றது. அக்காட்சி ஒருவன் கையில் வைத்திருந்த நெருப்புச் சுடரை விட்டெறிவது போலத் தோன்றும் என்பார் இளங்குட்டுவனார்.

கோங்க மலரிதழ்கள் சற்றுத் தடித்துத் தட்டுப் போன்றவை விரிந்துள்ளன. அதற்கு மேலே மலர்ந்துள்ள குரவ மலரை உழப்பி வண்டினம் முரலும். அதனால், குரவ மலரின் வெள்ளிய இதழ்கள் கோங்க மலரின் பொன்தட்டில் உதிர்கின்றன என்பார் வடமோதங்கிழார். (அகநா. 317 : 8-9)

இதனைப் போன்ற மற்றொரு காட்சியைப் பூதப்பாண்டியனார் விளக்குகின்றார்.

கோங்க மலரின் பொன்னிறத் தாது உதிர்கின்றது. கீழே செக்கச் சிவந்த இலவ மலர் மேனோக்கி விரிந்து பவளக்கிண்ணமாகத் தோன்றுகிறது. இக்கிண்ணத்தில் பொன்துகள் நிறைகின்றன. இதனை விலை கூறி இயலுகின்றார் வேனில் என்னும் விலை கூறுவார்:

“இனச்சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
 சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர்
 பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன”
-அகநா. 25 : 9-11

கோங்க மரம் பூக்கத் தொடங்கு ஞான்று அதன் இலைகள் உதிர்ந்து விடும். இலையற்ற கிளைகளில் கோங்கின் மெல்லிய முகை அரும்பும் என்பதைக் குறுந்தொகை அறிவிக்கின்றது:

“இலையில் அஞ்சினை இனவண் டார்ப்ப
 முகையோர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
 தலையலர் வந்தன-”
-குறுந். 254 : 1-3

கோங்கம் தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிபுளோரே
தாவரக் குடும்பம் : பிக்சேசி (Віxaceae)
தாவரப் பேரினப் பெயர் : காக்ளோஸ்பர்மம் (Cochlospermum)
தாவரச் சிற்றினம் : காசிப்பியம் (gossypium)
சங்க இலக்கியப் பெயர் : கோங்கம், கோங்கு
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கணிகாரம்
பிற்கால இலக்கியப் பெயர் : கன்னிகாரம்
உலக வழக்குப் பெயர் : கோங்கிலம், கோங்க மரம், தணக்கு
தாவர இயல்பு : மரம்; உயர்ந்து மலைப் பாங்கில் வளரும்; மரத்தில் மஞ்சள் நிறமான பால் வடிவதுண்டு.
இலை : கூட்டிலை; கையன்ன பிளவுள்ளது. அடியில் நுண்மயிர் காணப்படும்;
மலர் : தனிமலர். பெரியது. காம்புள்ளது; மிக அழகானது.
முகை : பொன்னிறமானது. தென்னங் குரும்பை போன்றது. அடி பரந்து முனை குவிந்து மலர் விரிந்து பளப்பளபாகத் தோன்றும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் மெல்லிய பட்டு போன்றவை; எளிதில் உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 அகன்று தடித்த அகவிதழ்கள் முகையில் முறுக்கமைப்பில் உள்ளன. முகை விரிந்து மலருங்கால் பொன்னிறமான பளபளப்பான இதழ்கள் விரிந்து தோன்றும்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் வட்டத்தட்டில் உண்டாகும் தாதுப்பையின் மேலே குறுகிய வெடிப்பு தோன்றும். அதன் வழியாகப் பொன்னிறத் தாது உதிரும்:
சூலக வட்டம் : 3-5 செல் உடையது சூலகம். சூலறைகள் பல. சூல்கள் 3-5 விளிம்பு ஒட்டு முறையில் இருக்கும். சூல்தண்டு மெல்லியது.
கனி : 3-5 வால்வுகளை உடையது:

விதை—பல விதைகள் உண்டாகும். விதையுறையில் நீண்ட பஞ்சு இழைகள் காணப்படும்; முளைக்கரு வளைந்திருக்கும்:

இதன் மரம் பயனற்றது. பஞ்சிழைகளைப் பயன் கொள்வதில்லை. இலைகள் தோன்றுமுன்னர் மரம் முகை அரும்பத் தொடங்கும் இயல்பிற்று. இம்மரம் மலைப்பாங்கான வறண்ட மேற்குக் கடற்கரைக் காடுகளில் வளரும். மலர்ந்த இம்மரம் கண்கவரும் வனப்புள்ளது.


  1. “கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து” -சிலப். 11:110.