சங்க இலக்கியத் தாவரங்கள்/009-150

விக்கிமூலம் இலிருந்து
 

வேளை
கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா

(Gynandropsis pentaphylla, DC)

சங்க இலக்கியங்கள் கூறும் ‘வேளை’ என்னும் சிறு செடி, ஓராண்டுதான் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளியவை. மாலைப் பொழுதில் பூக்கும். இப்பூ மலர்வதைக் கொண்டு, மழை நாளில் மாலைப் பொழுதை-மாலை வேளையை-அறிய முடியுமாதலின், இது ‘வேளை’ எனப்பட்டது போலும். இச்செடி குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : வேளை
உலக வழக்குப் பெயர் : வேளை, நல்வேளை
தாவரப் பெயர் : கைனன்டிராப்சிஸ் பென்டாபில்லா
(Gynandropsis pentaphylla. DC)


வேளை இலக்கியம்

நாட்டுப் புறத்தில் தெருக்கள் கூடுமிடத்திலுள்ள எருக் குப்பை மேட்டில் வேளைச்செடி தழைத்து வளரும். அதன் போதுகள் கொத்தாகவும் மலர்கள் வெண்மையாகவும் பூக்கும். ஆயர் மகள் இதன் பூக்களைக் கொய்து தயிரில் இட்டுப் பிசைந்து ‘புளி மிதவை’ எனப்படும் ‘புளிக்கூழ்’ ஆக்குவாள் என்பது புற நானூற்றுப் பாட்டு. இதனை:

“ தாதுஎரு மறுகின் போதொடு பொதுளிய
 வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
 ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
-புறநா. 215:2-4

வேளைக் கீரை மிகவும் வறிய மக்களுக்கு உணவாகப் பயன்படுகிறது என்பதை நல்லூர் நத்தத்தனார் சித்திரிக்கிறார். கிணை என்ற பறையடிப்பவனின் மகள், ஒடுங்கிய நுண்ணிய மருங்குலாள். பசியுழந்து தளர்ந்தாள். குப்பை மேட்டில் தழைத்து வளர்ந்துள்ள வேளைச் செடியைப் பார்த்தாள். தனது வளைக்கையின் நகத்தால் அதன் கீரைகளைக் கிள்ளி எடுத்து வந்து வேக வைத்தாள். அதில் கலப்பதற்கு உப்பும் இல்லை. பிற மடந்தையர் காணுதற்கு நாணி வெளிக்கதவை மூடினாள். மக்களை அழைத்து, உப்பின்றி வெந்த கீரையை எல்லோரும் உண்டனர். அழிபசி தீர்ந்தது எனப் பாடுகின்றார்.

“ஓங்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
 வளைக்கை கிணைமகள் உள்உகிர்க் குறைத்த
 குப்பை வேளை உப்பிலி வெந்ததை
 மடவோர் காட்சி நாணிக்கடை அடைத்து
 இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
 அழிபசி வருத்தம் வீட... ”
-சிறுபா. 135-140

வேளைப்பூவை மான் தின்னும் போலும். தனது ஆண் மானைப் புலியிடம் பறி கொடுத்த பெண்மான், தன் குட்டியுடன் சேர்ந்து நடந்து வருகிறது. ஆள் நடமாட்டமில்லாத ஒரு பாழிடத்தில் பூளையும் வேளையும் பூத்துள்ளதைப் பார்த்துப் பசியால் வேளையின் வெள்ளிய பூக்களைக் கடித்துத் தின்னுகிறது, என்று கூறுகிறது ஒரு புறப்பாடல்:

“அருமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டென
 சிறுமறி தழீஇ நெறிநடை மடப்பிணை
 பூளை நீடிய வெருவரு பறந்தலை
 வேளை வெண்பூக் கறிக்கும்
 ஆள்இல் அத்தம் ஆகிய காடே”
-புறநா. 23:18-22

பூளைச் செடியோடல்லாமல், சுரைக் கொடி படர்ந்துள்ள பாழ்பட்டவிடத்திலும் வேளை வளருமென்பதைப் பதிற்றுப் பத்தில் காணலாம்;

“தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பில்
 வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து”

-பதிற். 15:8-9

“வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய”

- பதிற். 90: 19

இச்செடி மான் அலையும் ஆளில்லாத காட்டிலும், ஆயர் தெருக் குப்பை மேட்டிலும் வளர்வதால் இது முல்லை நிலச் செடி என்பதும், கார்காலத்தில் பூக்கும் என்பதும் அறியப்படும்.

வேளை
(Gynandropsis pentaphylla,DC.)

காப்பாரிடேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் 46 பேரினங்களும், 700 சிற்றினங்களும் உள்ளன. பெரும்பாலும் இவை உலகின் இரு வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றுள், கப்பாரிஸ் (350), கிளியோம் (200), எனும் 2 மிகப் பெரிய பேரினங்களும், கிரடேவா (20) எனும் பேரினமும், உலக வெப்ப நாடுகளிலும், ஏனையவற்றுள் 15 பேரினங்கள் ஆப்பிரிக்கா நாட்டிலும், 3 பேரினங்கள் புது உலகிலும், 7 பேரினங்கள் யுரேசியாவிலும் காணப்படுகின்றன.

கப்பாரிடேசீ, குருசிபெரே என்னும் இரு தாவரக் குடும்பங்களும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியவை. இவை பழைய பொது மூலத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும், குருசிபெரே குடும்பம் மிகப் பண்டைய கப்பாரிடேசீ குடும்பத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்றும் தாவர மரபுவழி நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். தாவரக் குடும்பங்களிலும் இரண்டறைச் சூலகமும், விளிம்பு ஒட்டு முறையில் உள்ள சூல்களும் அச்சு ஒட்டு முறைச் சூல்கள் இணைந்த நான்கறைச் சூலகத் தாவரங்களின்றும் தோன்றி இருக்கக் கூடுமென்பர்.

பயன் :

இது ‘நல்வேளை’ எனப்படும். இதன் பூ, கொழுந்துகளில் சாறு எடுத்துத் தாய்ப்பாலுடன் கொடுக்க, குழந்தைகளின் மார்புச் சளி நீங்குமென்பர். பொதுவாக, வேளை ஒரு நல்ல மருந்துச் செடி.

இதனுடைய இலைகளைக் கொய்து தயிரில் பிசைந்து, சுட வைத்துப் ‘புளிக்கூழ்’ ‘புளி மிதவை’ என்னும் உணவு ஆக்குவர் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது. இன்னுமொரு பாடல், இதனுடைய இலைகளை வேக வைத்து உப்பின்றியும் ஏழை மக்கள் உணவாகக் கொள்வர் என்று உரைக்கும்.

வேளை தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
பகுதி : பெரைய்டேலீஸ்
தாவரக் குடும்பம் : கப்பாரிடேசீ
பேரினப் பெயர் : கைனன்டிராப்சிஸ் (Gynandropsis)
சிற்றினப் பெயர் : பென்டாபில்லா (Pentaphylla,DC)
இயல்பு : ஓராண்டுச் செடி
வளரியல்பு : மீசோபைட்
உயரம் : 20 செ.மீ. முதல் 95 செ.மீ. வரை
வேர்த் தொகுதி : ஆணிவேர் 8 செ.மீ. 15 செ.மீ. கிளை வேர்களும், சல்லி வேர்களும்.
தண்டுத் தொகுதி : முழுதும் சுரப்பி மயிர்கள் அடர்ந்துள்ளன. சுரப்பிகள் பிசுபிசுப்பான பொருளைக் கக்கும்.
கிளைத்தல் : கணுக் குருத்து தடித்து வளரும். நுனிக் குருத்து மெலிந்து வளரும். 3 அல்லது 4-ஆவது கணுவில் திரும்பவும் கணுக் குருத்து தடித்து வளரும். இது சிம்போடியல் முறையில் கிளைத்தல் எனப்படும்.
இலை : அங்கை வடிவக் கூட்டிலை, தண்டின் மேல் மாற்று இலை அடுக்கத்தில் வளரும்.
இலைக்காம்பு : நீளமானது. காம்பின் நுனியில் 5 சிற்றிலைகள். மென்மையானது. நீள்முட்டை வடிவம்.
சிற்றிலை : 2 செ.மீ. முதல் 4 செ.மீ. வரை நீளம்
1 . . . . . . 4. . . . . . அகலம்
மஞ்சரி : இலைக்கோணத்தில் உண்டாகும் கணுக் குருத்து பெரிதும் இணராகும். இணர்த் தண்டின் அடியில் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகள் காணப்படும். இதன் நடுவில் உள்ள சிற்றிலை 5 மி.மீ-12 மி.மீ.நீளமும், 4.-10 அகலமும் உள்ள நீண்ட முட்டை வடிவம். அடியில் குறுகியிருக்கும். இரு பக்கங்களிலுமுள்ள சிற்றிலைகள் 5-8 மி.மீ. நீளமும், 3-5 மி.மீ. அகலமும் உடையன.
இந்தக் கூட்டிலைகளின் கட்கத்தில் மலர்கள் உண்டாகும். பிசுபிசுப்பான துணர்க் காம்பின் நுனியில், காரிம்ப் என்னும் நுனி வளராப் பூந்துணராகத் தோன்றி ரசிமோஸ் முறையில் நுனி வரை மஞ்சரியாக நீண்டு தனி மலர்கள் உண்டாகின்றன.
மலர் : இருபால் பூ ஒழுங்கானது; நான்கு அடுக்குப்பூ சமச்சீரானது. மலர்க் காம்பில் தோன்றும். வெண்மை நிறமானது. மலர்ச் செதில் உண்டு.
புல்லி வட்டம் : நான்கு மெல்லிய சிறிய பசுமையான இதழ்கள் முகையில் நேர்முறை இணைப்புடையது.
அல்லி வட்டம் : 6 வெண்மையான, சிறிய விரிந்த இதழ்கள்; நீண்ட இதழ்க் காம்பு காணப்படும்.
மகரந்தத் தாள் : 6 மகரந்தத் தாள்கள் நீளமானவை. ஆண் - பெண்ணகக் காம்பின் மேல் ஒட்டியவை. நுனி பரந்தவை. தாதுப் பைகள் இரண்டு.
தாது : மஞ்சள் நிறம்.
சூலகம் : ஒற்றை இரு சூலகம். சூலகக் காம்பும், ஆணகக் காம்பும் நீண்டு இணைந்துள்ளன. சூல் முடி-திரண்டு வட்டமாக உள்ளது. கனியிலும் நிலைத்து இருக்கும்.
கனி : நீளமானது. 4 செ.மீ. முதல் 8 செ.மீ. மலர்க் காம்புடன் 13 செ.மீ. நீளமும் உள்ளது. இருபுறமும் வெடிக்குமாயினும் அடியிலும், நுனியிலும் ஒட்டியிருக்கும்.
விதை : பல குண்டிக்காய் வடிவின. இரு சூலக அறை விளிம்பிலும் ஒட்டியிருந்து சிதறும்.