சங்க இலக்கியத் தாவரங்கள்/022-150

விக்கிமூலம் இலிருந்து
 

புளிமா
அவெர்கோயா பிலிம்பி (Averrhoe bilimbi,Linn.)

“கரந்தை குளவி கடிகமழ் கலிமா” (குறிஞ் : 76) என்பது கபிலர் வாக்கு. கலிமா என்பது புளிமாவாகும். ‘கலிமா’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘தழைத்த மாம்பூ’ என்று உரை கண்டார். இவ்வுரை தேமா மரத்தைக் குறிப்பது போன்று ‘மாம்பூ’ எனப்படுதலின் பெரும்பாலோர். இது தேமா மரத்தையே குறிக்குமென்பார். இது பொருந்தாது. என்னை? கபிலர் கூறியது கூறார் ஆகலின். மேலும் ‘கலித்த மாம்பூ’ என்ற இவ்வுரை புளிமாம்பூவிற்கும் பொருந்தும் என்பதைக் கூர்ந்து நோக்கி அறிதல் கூடும்.

இவ்விடத்திலன்றி ‘புளிமா’வைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. எனினும் பிற்கால நூல்களில் அதிலும் யாப்பிலக்கணத்தில் ஈரசைச் சீர் முதல் நான்கசைச் சீர் வரையில் ‘புளிமா’ இணைத்துக் கூறப்படுகின்றது.

புளிமாமரம் தேமா மரத்தினின்றும் வேறுபட்டது. ‘புளிமா’ ஒரு சிறு மரம். தழை மிகுந்து தழைத்து வளரும். காய் மிகப் புளிப்பானது. கனியாக முதிர்வதில்லை. இம்மரம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : கலிமா
பிற்கால இலக்கியப் பெயர் : புளிமா
உலக வழக்குப் பெயர் : புளிச்சா, புளி மாங்காய், புளிச்சக்காய் மரம்,
தாவரப் பெயர் : அவெர்கோயா பிலிம்பி
(Averrhoe bilimbi,Linn.)

புளிமா தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : பைகார்ப் பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஆக்சாலிடேசீ (Oxalidaceae)
தாவரப் பேரினப் பெயர் : அவெர்கோயா (Averrhoa)
தாவரச் சிற்றினப் பெயர் : பிலிம்பி (bilimbi, Linn.)
தாவர இயல்பு : சிறு மரம் 10 மீ. முதல் 15 மீட்டர் உயரமாகவும், கிளைத்துத் தழைத்தும் வளரும்.
தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : கூட்டிலை, இறகு வடிவானது. சிற்றிலைகள் 5-17 இணைகள். அடிப்புறம் நுண்மயிர் காணப்படும். 4-5 செ.மீ. 2.5-3 செ.மீ. நீள் முட்டை வடிவானது.
மஞ்சரி : நுனி வளர் பூந்துணர் அடிமரத்திலும், கிளைகளின் தண்டிலும் நேரடியாக உண்டாகும்.
மலர் : ஒழுங்கானது, ஐந்தடுக்கானது.
புல்லி வட்டம் : சிறு இலை போன்ற 5 புல்லிகள் திருகு இதழமைப்பில்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் திருகிதழமைவு, இதழ்களின் அடியில் உட்புறத்தில் செம்மை நிறத் திட்டு இருக்கும்.
வட்டத்தட்டு : 5 சுரப்பிகளாக உடைந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 10 மகரந்தத் தாள்கள். இவற்றில் 5 மலட்டு மகரந்தத் தாள்களாகக் குன்றியிருக்கும்.

புளிமா
(Averrhoa bilimbi)

கனி : 5 பட்டையாக நீண்ட சதைக் கனி, பழுக்காது மிகுந்த புளிப்புள்ளது.

தமிழ் நாட்டில் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. காய்கள் உணவுக்குப் பயன்படும். இதனை ஒத்த மற்றொரு இனம் அவர்கோயா காரம்போலா என்பது (Averrhoa carambola). தமிழ்நாட்டுத் தாவரங்களில் வளர்க்கப்படுகிறது. இவையிரண்டும் எந்த நாட்டிற்கு உரியன எனத் தெரியவில்லை.

புளிமாங்காய்
(Averrhoa bilimbi)