சங்க இலக்கியத் தாவரங்கள்/032-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

முருங்கை
மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

அகநானூற்றில் மூன்று பாக்களில் முருங்கை மரம் பேசப்படுகிறது. இம்மரத்தை ‘நாரில் முருங்கை’ என்று இதனுடைய தாவரவியலுண்மையைச் சங்க இலக்கியம் வெளியிடுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
உலக வழக்குப் பெயர் : முருங்கை
தாவரப் பெயர் : மொரிங்கா டெரிகோஸ்பர்மா
(Moringa pterygosperma,Geartn.)

‘முருங்கை’யை ‘மொரிங்கா’ என்று தாவரவியலார் தமிழ்ச் சொல்லையே கையாண்டுள்ளதைக் காண்மின்!

முருங்கை இலக்கியம்

இம்மலரின் புல்லி வட்டம் 5 புறவிதழ்களைக் கொண்டதென்றும், இவை ஐந்தும் ஒரு குழல் போன்று இணைந்துள்ளன என்றும் பல அறிஞர்கள் கூறுமாப் போல, இவை அமைந்துள்ளன. இதன் பூத்தளம் கிண்ணம் போன்றுள்ளது. கிண்ணத்தின் மேல் விளிம்பில் புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் ஒட்டியுள்ளன. இவற்றைக் கொண்டு புல்லி வட்டத்தில் குழல் போன்ற இவ்வமைப்பு பூத்தளத்தின் குழிந்த பகுதி என்றும், புல்லி, அல்லி, மகரந்தக் கால்கள் எல்லாம் இணைந்துள்ள கிண்ணத்தின் மேற்பகுதி உள்வளைந்ததோர் தொங்கும் பகுதி என்றும், கிண்ணம் போன்ற இவ்வமைப்பை ஹைபந்தியம் (Hypanthium) என்றும் பூரி (1942) என்பவர் கருதுகின்றார். சூலகத்தைப் பற்றிய இவரது கருத்து, ஓரறையுள்ள மூவிலைச் சூலகம் மூன்று சூல்தட்டு திசுக்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சூல் ஒட்டுத் திசுவிலும் பல சூல்கள் இரண்டு வரிசைகளாக இணைந்துள்ளன-என்று கண்டோம். இரு வரிசையாக உள்ள சூல்கள் ஒவ்வொரு சூலக இலையின் இரு விளிம்புகளில் காணப்படுகின்றன என்றும், இந்த மூவிலைச் சூலகத்தில் உள்ள மூன்று சூல் ஒட்டுத் திசுக்களும் மூவிலைச் சூலகங்களின் விளிம்புகள் உள் மடிந்து இணைந்த பகுதிகளே என்றும், அதனால் இதன் சூல் ஒட்டுத் திசுக்கள் சூலகத்திற்கு வேறுபட்டவை என்றும், உட்பட்டவையன்று என்றும், சூலகத்தின் அடியில் உள்ள இக்கிண்ணம் போன்ற பகுதி சூலக அறையாகுமென்றும், இவ்வகை அமைப்பு தாவர வகைப்பாட்டியலுக்குப் பெரிதும் துணை புரிதலின் வெறும் புறவியல் அமைப்பு எனக் கோடல் கூடாது என்றும் கூறுவர்.

பெஸ்சி (Bessy) என்பவர் இக்குடும்பத்தை ரோடியேலீஸ் பகுதியில் சேர்த்தார். வெட்ஸ் டீன் (Wettstein) சிறிது ஐயப்பாட்டுடன் ரெசிடேசீ குடும்பத்திற்குப் பக்கத்தில் வைத்தார். ஹட்சின்சன் (Hutchinson) இதனைக் கப்பாரிடேசீ குடும்பத்தில் சேர்த்தார். முருங்கை மலரின் சூலக அறையின் அமைப்பை அறியாத டட்டாவும், மித்ராவும் (1947) இக்குடும்பம் வயோலேசீ குடும்பத்துடன் நெருங்கிய ஒற்றுமை உடையதென்றனர்.

பயன் : இதன் இலையும், காயும் உணவாகப் பயன்படும். இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் ‘பென்’ என்ற ஓர் எண் ணெய் உணவில் சேர்க்கப்படும். இந்த எண்ணெய் உலர்வதில்லை. மரத்தின் பட்டை, வேர் முதலியவை மருந்துக்குப் பயன்படுமென்பர்.

இனி, சங்க நூல்கள் ‘முருங்கை’ மரத்தைப் பற்றிக் கூறுவதைக் காண்போம்.

முருங்கை மரத்தின் வெள்ளிய பூக்கள், கடுங்காற்றில் அடிபட்டுக் கடல் அலையின் நீர்த் துளிகள் சிதறுவன போன்று உதிர்வதைக் குறிப்பிடுகின்றார் அகநானூற்று முதற்பாடலில் மாமூலனார். இவரே மற்றொரு பாடலில் இதன் பூக்கள் ஆலங்கட்டி மழைத் துளி போல் உதிரும் என்பார். நீரில்லாது வறண்டு போன நிலத்தில், உயர்ந்த முருங்கை மரம் வெள்ளிய பூக்களோடு நிற்குமென்பார் சீத்தலைச் சாத்தனார். இம்மூன்றும் அகநானூற்றில் பாலைத் திணையைக் குறிக்கும் பாடல்கள். ஆதலால், முருங்கை மரம் பாலை நிலத்திற்குரியது என்றாயிற்று.

“சுரம் புல்லென்ற ஆற்ற அலங்குசினை
 நாரில் முருங்கை, நவிரல் வான்பூச்
 சூரல்அம் கடுவனி எடுப்ப ஆருற்று
 உடை திரைப் பிதிர்வின் பொங்கி”
-அகம். 1 : 15-18

“நெடுங்கால் முருங்கை வெண் பூத்தாஅய்
 நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை”
-அகம். 53 : 4-5

மேலும் இம்மரம் பல கிளைகளை விட்டு வளருமென்றும், இதன் கிளைகள் புல்லியன (வலியற்றன) என்றும், நீளமானவை என்றும் கூறப்படுகின்றது. இம்மரம் வலியற்றதென்பதை வலியுறுத்துவது போன்று இதனை ‘நாரில் முருங்கை’ என்றனர். மரங்களில் பொதுவாக நார்த்திசு (Fibres) இருக்கும். அதனால் மரம் வலுப் பெறும். மரம் முதிருங்கால், ‘நார்த்திசு’ வலுப் பெற்று மரத்தில் வைரம் பாயும். முருங்கை மரத்தில் நார்த்திசு இல்லையென்பது தாவரவியல் உண்மை. இதனை மாமூலனார் ‘நாரில் முருங்கை’ என்று குறிப்பிடுகின்றார். கணிமேதாவியாரும் ‘நார் இல் பூநீள் முருங்கை’ என்று கூறுவார். மரத்திலும், கிளைகளிலும் நார்த்திசு இல்லாதபடியால், முருங்கையின் கிளைகள் மிக எளிதாக முறிந்து விடும்.

தலைவியைப் பிரிந்து பாலை வழிச் செல்லத் தலைப்பட்டான் தலைமகன். இவனுடைய செலவுக்கு உடன் படாத தலைமகள், தோழியிடம் சொல்லுகிறாள்:

“கள்ளிசார் கார்ஓமை, நார்இல்பூநீள் முருங்கை
 நள்ளியவேய் வாழ்பவர் நண்ணுபவோ புள்ளிப்
 பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து ஆண்டு
 இருந்து உறங்கி வீயும் இடம்?[1]

முருங்கை மரம் முறிந்து விழும் இயல்பை மனத்திற் கொண்டு, பாலை நிலத்தில் செல்வோர் நிழல் வேண்டி இதனடியில் ஒதுங்கவும் மாட்டார் என்பது இதனால் அறியப்படும்.

முறியும் இயல்பினால் இம்மரம் முருங்கை எனப் பெயர் பெற்றதென்றும், முருங்குதல் என்பது ‘முறிதல்’, ‘ஒடிதல்’ என்னும் பொருளில் வழங்கப்படுமென்பதற்குச் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியும், முருங்கை என்பது தமிழ்ச் சொல்லேயாமென்பதை, வடமொழி, சிங்களம் போன்ற வேற்று மொழிச் சொல்லன்று என எதிர்மறையால் வலியுறுத்தியும் கவிஞர் கோவை இளஞ்சேரனார் அழகுற விளக்கியுள்ளார்.[2]

ஆகவே, முருங்கை மரம் நீரற்று, வறண்டு போன பாலை நிலத்தில் வளருமென்பதும், வெள்ளிய பூக்களை உடையதென்பதும், புல்லிய நீண்ட கிளைகளை உடையதென்பதும், மரத்தில் நார்த் திசு இல்லை என்று தாவர இயல் உண்மையைக் கூறுவதும், சங்க இலக்கியத்தில் தாவர அறிவியற் கூற்றுகள் எனலாம்.

முருங்கை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : தாலமிஃபுளோரே (Tnalamiflorae)
தாவரக் குடும்பம் : மொரிங்கேசி (Moringaceae)
தாவரப் பேரினப் பெயர் : மொரிங்கா (Moringa) (ஒரே ஒரு பேரினத்தை மட்டும் உடைய குடும்பம் )
தாவரச் சிற்றினப் பெயர் : டெரிகோஸ்பர்மா (pterygosperma)
சங்க இலக்கியப் பெயர் : முருங்கை
தாவர இயல்பு : மரம்
மண் இயல்பு : மீசோபைட் (Mesophyte)
வளருமியல்பு : 20 முதல் 30 அடி வரை உயர்ந்து, நன்கு கிளைத்துப் பரவி வளரும். இலையுதிர் மரம். வெப்பம் மிக்க பழைய உலகைச் சேர்ந்தது. புதிய உலகின் வெப்பம் மிக்க பலவிடங்களில் வளர்கிறது. கலிபோர்னியா, பிளாரிடா நாடுகளின் தென் பகுதியில் வளர்க்கப்படுகிறது. வட இந்தியாவில் தானே மிகுந்து வளர்கிறது. தென்னிந்தியா முழுவதிலும் வளர்க்கப்படுகிறது.

முருங்கை
(Moringa pterygosperma)

வேர்த் தொகுதி : பக்க வேர்கள் தடித்து வளர்கின்றன.
தண்டுத் தொகுதி : பல கிளைகளைப் பரப்பி வளரும். தண்டும் (மரம்), கிளைகளும் வலுவற்றன. எளிதில் முறிந்து விடும் இயல்புடையன. எவ்வளவு முதிர்ந்தாலும், மரத்தில் வைரம் பாய்வதில்லை. மென்மையான மரம்.
இலை : 25 முதல் 45 செ. மீ. நீளமும், 20 முதல் 30 வரை அகலமும், 2-3 முறை இறகு வடிவில் பகிர்ந்த கூட்டிலை மாற்றடுக்கு முறையில் தண்டில் உண்டாகும்.
சிற்றிலை : சிற்றிலைக் காம்புகள் 6-12 வரை எதிர் அடுக்கு முறையில் இலைக் காம்பில் 2-ஆவது 3 சிறு சிற்றிலைகளுடன் காணப்படும். சிற்றிலைகள் முட்டை அல்லது நீளமுட்டை வடிவானவை; நுனி வட்டமானவை. 10 முதல் 12 மி. மீ. நீளமும், 5 முதல் 8 மி.மீ. அகலமும் இலைச் செதில்களும், இலைச் சிறு செதில்களும் சுரப்பிகளாக மாறியிருத்தலுண்டு.
மஞ்சரி : பாணிக்கிள் (Panicle) கலப்பு மஞ்சரி இலைக் கோணத்தில் உண்டாகும்.
மலர் : பெரியது; இருபாலானது; சமச் சீரற்றது; ஐந்தடுக்குள்ளது.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் குவளை வடிவில் இணைந்துள்ளன.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5. சமமில்லாதவை. மேலிரண்டும் சிறியவை. கீழே உள்ளது மிகப் பெரியது. பக்கத்திலுள்ளவை புல்லி வட்டத்தைத் தழுவிக் கொண்டு வட்டத் தட்டு காணப்படும்.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் 5 மலட்டு மகரந்தத் தாள்களுடன் மாறி மாறி அமைந்திருக்கும். மகரந்தக் கம்பிகள் பிரிந்திருக்கும். மகரந்தப் பை ஓர் அறை உடையது; முதுகு ஒட்டியது.
சூலக வட்டம் : ஓரறை மூவிலைச் சூலகம் - சூல் பை காம்புடன் கூடியது. சூல் தண்டு குழாய் போன்றது. சூல்முடி துளைகளுடன் காணப்படும். பல சூல்கள் உள்ளன. இவை சுவரொட்டு முறையில் 3 வரிசையில் இரு பக்கமும் ஒட்டியுள்ளன.
காய் : 30 முதல் 50 செ.மீ நீளமுள்ளது. சதைப் பற்றுள்ளது. முப்பட்டையாக இணைந்து, உருண்டது.
கனி : முதிர்ந்த காய் ஒரு தக்கை போன்ற லாகுலிசைடல் காப்சூல் ஆகும். ஓர் அறை உடையது; 3 வால்வுகள்.
விதை : விதைகள் பல. விதையின் வெளியுறை தக்கை போன்றது. மூன்று மெல்லிய சிறகுடன் காணப்படும். இவை விதை பரவப் பயன்படும். இதில் முளை சூழ் தசை இல்லை. இதன் வித்திலை ஒரு புறம் தட்டையாகவும், மறுபுறம் குவிந்தும் இருக்கும். முளைக் குருத்து மிகவும் குட்டையானது. இலைக் குருத்தில் பல இலை அமைப்புகள் உள.


  1. திணைமா. நூ. 91
  2. இலக்கியம் ஒரு பூக்காடு பக். 741