சங்க இலக்கியத் தாவரங்கள்/057-150

விக்கிமூலம் இலிருந்து
 

காயா–பூவை
மிமிசைலான் எடுயூல் (Memecylon edule, Roxb.)

காயா என்னும் புதர்ச்செடியைக் ‘காயா’ எனக் கபிலரும் (குறிஞ். 70) ‘பூவை’ எனச் சீத்தலைச் சாத்தனாரும் (அகநா. 134), ‘பறவாப் பூவை’ எனக் கடுவன் இளவெயினனாரும் அழைப்பர்.

காயா பூத்திருக்கும் நிலையில் மயிற்கழுத்து போன்று பளபளப்பான நீலநிறமாக இருக்கும். இதன் மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் காணப்படும். பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த இதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும். மழையின் தண்மை கண்டு வெளிப்படும் ‘தம்பலப் பூச்சி’ எனப்படும் செந்நிறமான மூதாய்ப்பூச்சி, குறுகுறுவென அங்குமிங்கும் ஓடித் திரியும். இக்காட்சி, மணிமிடை பவளம் போல அணி மிக இருந்தது என்கிறார் புலவர். அகநானூற்றில் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் ‘நித்திலக்கோவை’ப் பகுதியில் (அகநா: 304) அமைந்துள்ளவாறு நோக்குதற்குரியது.

சங்க இலக்கியப் பெயர் : காயா
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : பூவை
பிற்கால இலக்கியப் பெயர் : காயாம்பூ
உலக வழக்குப் பெயர் : காசாம்பூ
தாவரப் பெயர் : மிமிசைலான் எடுயூல்
(Memecylon edule, Roxb.)

காயா–பூவை இலக்கியம்

‘பசும்பிடி வகுளம் பல்லிணர்க்காயா’ என்றார் குறிஞ்சிக் கபிலர் (குறிஞ். 70) ‘பல்லிணர்க்காயா’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பல கொத்துக்களை உடைய காயாம்பூ’ என்று உரை கூறினார். காயாம்பூச் செடியைச் சிறு புதர் எனலாம். இது கொத்துக் கொத்தாகப் பூக்கும். பூக்கள் மிக அழகிய பளபளப்பான நீல நிறமுள்ளவை. மலரின் அகவிதழ்களுக்கடியில் செந்நிறம் இருக்கும். இச்செடி பூத்திருக்கும் காட்சியை இடைக்காடனார் இரண்டு அகநானூற்றுப் பாடல்களில் சித்திரிக்கின்றார். முல்லை நிலத்தில் நல்ல மழை தொடங்கியுள்ளது. பெயல் பெய்து கழிந்த வைகறைப் பொழுதில் முன்னாள் பூத்த நீலக் காயா மலர்கள் விழுந்துள்ளன. மழையைக் கண்டு, மண்ணிலிருந்து வெளிப்படும் தம்பலப் பூச்சி எனப்படும் மூதாய்ப் பூச்சிகள், அவற்றினிடையே குறுகுறு என ஊர்ந்து செல்கின்றன. நீல மலர்களிடையே சிவந்த மூதாய்ப் பூச்சிகள் தோன்றும் காட்சி. ‘மணிமிடை பவளம் போல அணிமிக’ இருந்ததென்கிறார் புலவர். இங்கே ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடரை விளக்குதல் வேண்டும்.

அகநானூற்றைத் தொகுத்தவர் அதனை மூன்று பிரிவுகளாக வகுத்தார். முதல் நூற்றிருபது பாக்களுக்கும் ‘களிற்றியானை நிரை’ என்று பெயர். நூற்றிருபத்து ஒன்று முதல் முன்னூறு வரையிலான பாக்களுக்கு ‘மணிமிடை பவளம்’ என்று பெயர். முன்னூற்று ஒன்று முதல் நானூறு வரையிலான பாக்களுக்கு ‘நித்திலக் கோவை’ என்று பெயர். இவற்றுள் ‘மணிமிடை பவளம்’ என்ற சொற்றொடர் நித்திலக் கோவை என்ற பகுதியில் காணப்படுகிறது. இச்சொற்றொடரை உருவாக்கிய இடைக்காடனார், நீலமணி போன்ற காயம்பூக்களிடையே பவளம் போன்ற மூதாய்ப்பூச்சி ஊர்ந்து செல்வதைக் கூறுகின்றார்.

“பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறை
 செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
 குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
 மணிமண்டு பவளம் போல காயா
 அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய
 கார்கவின் கொண்ட காமர் காலை”

-அகநா. 374 : 10 - 15
“மணிமிடை பவளம்போல அணி மிகக்
 காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
 ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
 புலன்அணி கொண்ட கார் எதிர்காலை”

-அக. 304 : 13-16


காயாம்பூ இற்றை நாளில் காசாம்பூ என வழங்கப்படுகிறது. இதன் கருநீல நிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. இதற்கு அஞ்சனி, காசை, வச்சி என்ற பெயர்களை நிகண்டுகள் சூட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் இதன் மற்றொரு பெயர் ‘பூவை’ என்பதாகும். பூவை என்னும் சொல், நாகணவாய்ப் புள்ளையும், காயாவையும் குறிக்கும். பறக்கும் இப்புள்ளினத்தினின்றும் பிரித்துக் காட்டுதற்கு இதனைப் ‘பறவாப் பூவை’ என்றார் கடுவன் இளவெயினனார்:

“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3:73

இப்பூ முல்லை நிலத்தது; செந்நில வழியிற் பூக்கும். சிறுபான்மை குறிஞ்சியிலும் பூக்கும்; கார் காலப்பூ; காலையில் பூத்து, இரவில் உதிரும்; குற்றுச் செடியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்; இதன் முனை அரும்பு கருமையானது. மலர்ந்தால், இப்பூ மயிற் கழுத்து போன்று பளபளக்கும் நீல நிறத்தது. வீழ்ந்து வாடினால், கருமையாக இருக்கும். மலர் மெல்லியது; மணமுள்ளது; காண்போர் உள்ளங் கவர்வது என்றெல்லாம் புலவர் பெருமக்கள் விதந்து கூறுவர்.

“அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி
 காயாஞ் செம்மல் தாஅய்.”
-அகநா. 14 : 1-2

“காயாங் குன்றத்துக் கொன்றை போல”-நற். 371 : 1

“கமஞ்சூல்மா மழைக்கார் பயந்து இறுத்தென
 மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை
 செம்புற மூதாய் பரத்தலின்”
-அகநா.134 : 3-5

“புல்லென் காயப் பூக்கெழு பெருஞ்சினை
 மென்மயில் எருத்தின் தோன்றும்”
-குறுந். 183 : 5-6

“கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்
 கரிபரந்தன்ன காயாஞ் செம்மலொடு”
-அகநா. 133 : 7-8

“மெல்லிணர்க் கொன்றையும்
மென்மலர் காயாவும்”
-கலி. 103 : 1

“இது என்பூவைக்கு இனிய சொற்பூவை”-ஐங். 375 : 3

காயாம்பூ நீலநிறமானது. நீல மணி போன்றது. இது மணி என்னும் அடைமொழியுடன் கூறப்படுகின்றது.

“மணிபுரை உருவின் காயாவும்”-கலி. 101 : 5

“மணிமருள் பூவை அணிமலர்”-அகநா. 134 : 3

“பொன்கொன்றை மணிக்காயா”-பொருந. 201

பூவை எனப்படும் இக்காயா மலர் கருநீல மணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்நிறத்தையே திருமாலின் நிறத்திற்கு உவமித்தனர்.

“கார், மலர்ப்பூவை, கடலை,இருள் மணி
 அவைஐந்தும் உறமும் அணிகிளர் மேனியை”
-பரி. 13 : 42-43

“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3 : 73

“எரிமலர் சினைஇய கண்ணை பூவை
 விரிமலர் புரையும் மேனியை மேனித்
 திருஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை”
-பரி. 1 : 6-8

“நின்நாற்றமும் ஒண்மையும் பூவைஉள”-பரி. 4 : 29

“பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்”[1]

“பூவைப் பூவண்ணன் அடி”[2]

பூவைப் பூவண்ணனின் தொடர்பாகத் தொல்காப்பியத்தில் பூவை நிலை என்ற ஓர் இலக்கணத் தொடர் அமைந்துள்ளது.

“தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”
-தொல், பொருள். 63 : 10


இதற்கு உரை கூறிய இளம்பூரணர், ‘பூவை மலர்ச்சியாகக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல்; நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவைக் கண்டு கூறுதல்; உன்னங் கண்டு (நிமித்தம்) கூறினாற் போல இதுவும் ஒரு வழக்கு’ என்று இதனை ஒரு வழக்காகக் குறிப்பிட்டுள்ளார். பூத்த காயாம்பூச் செடியின் மேலேறிச் செங்காந்தள் மலர்ந்திருந்தது. அக்காட்சி திருமாலின் திருமார்பில் திருமகள் தங்கியது போன்றிருந்தது. இதனைத் திருமைலாடிச் சிறுபுறவில் யாம் கண்டு தற்குறிப்பேற்றி மகிழ்ந்ததுண்டு. காயாம்பூச் செடியில் செங்காந்தள் ஏறிப் படர்ந்து “காயா மென்சினை தோய நீடிப் பல்துடுப்பெடுத்த அலங்கு குலைக் காந்தள்

அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி”அகநா.





|தாவர இயல் வகை||: ||பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |-style="vertical-align:text-top;" |தாவரத் தொகுதி||: ||காலிசிபுளோரே, மிர்ட்டேலீஸ்
(Myrtales) அகவிதழ்கள் பிரிந்தவை. |-style="vertical-align:text-top;" |தாவரக் குடும்பம்||: ||மெலஸ்டோமேசி (Melastomaceae) |-style="vertical-align:text-top;" |தாவரப் பேரினப் பெயர்||: ||மிமிசைலான் (Memecylon) |-style="vertical-align:text-top;" |தாவரச் சிற்றினப் பெயர்||: ||எடுயூல் (edule) |-style="vertical-align:text-top;" |தாவர இயல்பு||: ||குற்றுச்செடி, புதராகவும் வளரும். |-style="vertical-align:text-top;" |தாவர வளரியல்பு||: ||மீசோபைட் |-style="vertical-align:text-top;" |இலை||: ||தனி இலை, பளபளப்பானது. தோல் போன்றது. தடித்தது. இலைக் காம்பு மிகச் சிறியது. இலை விளிம்பின் ஓரமாக இலை நரம்பு சுற்றியிருக்கும். |-style="vertical-align:text-top;" |மஞ்சரி||: ||இலைக் கட்கத்தில் கலப்பு மஞ்சரியாக வளரும். கொத்துக் கொத்தாகக் காட்சி தரும்.

|மலர்||: ||பளபளப்பான கருநீல நிறமானது. அகவிதழ்களின் உட்புறத்தி

ல் அடியில் செந்நிறமாக இருக்கும். இலையடிச் செதில்கள் உள்ளன.

|-style="vertical-align:text-top;" |புல்லி வட்டம்||: ||4. புறவிதழ்கள் இணைந்து, புனல் போன்று அடியில் குழல் போன்றது. |- |}



காயா
(Memecylon Edule)

அல்லி வட்டம் : 4 அகவிதழ்கள்-கருநீல நிறமானவை. அடியில் உட்புறமாகச் சிவந்திருக்கும். இதழ்கள் இரவில் உதிர்ந்து கருகி விடும்.
மகரந்த வட்டம் : 8 தாதிழைகள் நீளமானவை. தாதுப் பைகள் சிறியவை. தாதுப் பைகளின் இணைப்பு அடிப்புறத்தில் தடித்துக் கறுப்பாக இருக்கும்.
சூலக வட்டம் : ஒரு சூலிலைச் சூலகம். 12 முதல் 16 சூல்கள் வரை சூலறையின் நடுவே காணப்படும். சூல்தண்டு மெல்லியது.
கனி : பெர்ரி எனப்படும் சதைக்கனி; ஒரு விதை உள்ளது. எளியோர் இதனை உண்பதுமுண்டு.
விதை : பெரியது. வித்திலைகள் மடிந்து இருக்கும்.

இதன் தண்டு வலியது. விறகாகப் பயன்படும். வறண்ட பசிய இலைக் காடுகளில் வளர்கிறது. 4500 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் வளரும்.

மிமிசைலான் என்ற இப்பேரினத்தில் 18 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன.



  1. நான். க. 1
  2. திரி. 2 : 4