சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மாக்கியவெல்லியைக் கையாண்டவர்கள்

விக்கிமூலம் இலிருந்து


4. மாக்கியவெல்லியைக்
கையாண்டவர்கள்


மாக்கியவெல்லியின் ஆராய்ச்சி நூலும், முக்கியமாக அரசன் நூலும் பல தேசத்திலும் உள்ள அரசியல்வாதிகளுக்கும் பலவகைகளில் பயன்பட்டிருக்கின்றன. பல பெரிய புள்ளிகளெல்லாம் அவனுடைய நூலைத் தங்கள் காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மூலக்கருத்தைக் கொடுக்கும் கருவூலமாக மாக்கியவெல்லியின் சிந்தனையில் விளைந்த இந்த அரசியல் நூல்கள் பயன்பட்டிருக்கின்றன.

இத்தாலி தேசத்துப் பேஸிஸ்ட் ஜடாமுனியாகவும் சர்வாதிகாரியாகவும் விளங்கிய முசோலினி கல்லூரி மாணவராயிருக்கும்போது. டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு (Thesis) மாக்கியவெல்லியின் அரசன் நூலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

உலக மகாயுத்தம் தொடுத்த ஜெர்மனி தேசத்து ஆதிக்க வெறியனான ஹிட்லரின் படுக்கையறையில் அவன் படுத்துக்கொண்டே படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் மாக்கியவெல்லியின் அரசன் நூல் முக்கியமானது.

மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த இரண்டு நூல்களுக்கும் தாம் எழுதியுள்ள அருமையான முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெர்மானிய சரித்திரப் பேராசிரியர்களான ராங்கே, மெய்னிக்கே ஆகியோரும், இங்கிலாந்தின் வரலாற்றுத் துறை வல்லுனரான ஆக்டன் பிரபு அவர்களும் மாக்கியவெல்லி தான் புதிய அரசியல் விஞ்ஞானத்திற்கு அடிகோலிய முதல்வன் என்று ஒருமித்துப் பாராட்டுகிறார்கள்.

மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள "வின்ட்சரின் உல்லாச மனைவிகள்" (Merry wives of Windsor) என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம் “நான் சூது மனம் படைத்தவனா? நான் ஒரு மாக்கியவெல்லியா?” என்று கேட்பதாக ஒரு வரி வருகிறது. ஷேக்ஸ்பியர் இந்த இடத்தில் மாக்கியவெல்லியைச் சூது மனம் படைத்தவனுக்கு உவமையாகக் கூறுகிறார். இதிலிருந்து அவர் காலத்தில் மாக்கியவெல்லியைப் பற்றித் தவறான கருத்து பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

இத்தாலியில் முசோலினியின் நேர் எதிரியாக விளங்கியவர் கவுண்ட் கார்லோஸ்போர்கா (Count Carlo Sforza) அவர் மாக்கியவெல்லியின் நூல்களைச் சுருக்கி "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்" (The Living Thoughts of Mackiavelli) என்ற பெயரில் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளார். இவ்வாறு, எதிரெதிர்ப் பாசறையில் உள்ளவர்களாலும் மாக்கியவெல்லி போற்றப்படுகிறான்.

இத்தாலியின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மாஜினி தன் கொள்கையைப் பொறுத்தமட்டில் மாக்கியவெல்லியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டானே தவிர, மற்ற கருத்துக்களைத் தீவிரமாக எதிர்த்தான்.

கார்ல்மார்க்ஸ் தம்முடைய மூலாதாரக் கருத்துக்களை மாக்கியவெல்லியிடமிருந்தே பெற்றுக் கொண்டார்.

மார்லோ, ஹாப்ஸ், ஸ்பினோகா போன்ற மேதைகளிடையே மாக்கியவெல்லியின் கருத்துக்கள் செல்வாக்குடன் நடமாடியிருக்கின்றன.

“இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிசக் கொள்கை தோன்றியதிலிருந்து அங்கிருந்த பல எழுத்தாளர்கள், மாக்கியவெல்லி வல்லரசுக் கட்சியைச் சேர்ந்தவன் என்ற கூறும்படியாக அவனுடைய நூல்களுக்குப் பொருள் திரித்துக் கூறி வந்தார்கள். ஆட்சியிலிருக்கும் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்தி அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளையும் பதவிகளையும் பெறுவதற்காக அவர்கள் கையாண்ட முறையிது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்சிலும் இருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருக்கும் தங்கள் கூட்டத்தாரைக் காட்டிலும் திறமை மிகுந்தவர்கள். ஆனால் ஈனத்தனத்தில் அவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களல்ல. அதிலும் உயர்ந்தவர்களே! இவர்களைக் கேட்டால் தங்கள் எழுத்துக்களைச் சோரம் போக விடுவதைத் தவிரத் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வழியில்லை என்று கூறுகிறார்கள் என்று கவுண்ட் சார்லோஸ்போர்கா தம்முடைய "மாக்கியவெல்லியின் உயிருள்ள சிந்தனைகள்” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மாக்கியவெல்லியின் 400-வது பிறந்தநாளை 1869-ஆம் ஆண்டில் இத்தாலியர்கள் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். அவனுடைய சொந்த ஊரான பிளாரென்ஸ் நகரத்தில் உள்ள அவனுடைய கல்லறையின் மேல் உள்ள தகட்டில் இந்த வாசகங்கள், பொறிக்கப்பட்டுள்ளன.

  • டாண்டோ ரோமினி நுல்லும் பார் எலோஜியம்” இவ்வளவு பெரிய பெயருக்கு எந்தப் புகழும் ஈடாகாது.