சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/14.ஊர்காண் காதை

விக்கிமூலம் இலிருந்து

சிலப்பதிகாரம்[தொகு]

இரண்டாவது மதுரைக்காண்டம்[தொகு]

14.ஊர்காண் காதை[தொகு]

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்

இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்

புலரி வைகறைப் பொய்கைத் தாமரை

மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்

வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் 5

ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப

நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்

உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்

மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்

கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் 10

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய

காலை முரசங் கனைகுரல் இயம்பக்

கோவலன் சென்று கொள்கையி னிருந்த 15

காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி

நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி

நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த

அறியாத் தேயத் தாரிடை யுழந்து

சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் 20

தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு

என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்

பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்

ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும்

கவுந்தி கூறுங் காதலி தன்னொடு 25

தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்

மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்

றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி

நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்

யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் 30

தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்

பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்

ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்

கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் 35

உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்

புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது

ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை

பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்

கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் 40

கண்டன ராகிக் கடவுளர் வரைந்த

காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு

ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்

இன்றே யல்லால் இறந்தோர் பலரால்

தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் 45

தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்

வேத முதல்வற் பயந்தோ னென்பது

நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ

வல்லா டாயத்து மண்ணர சிழந்து 50

மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்

காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி

தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்

அடவிக் கானகத் தாயிழை தன்னை

இடையிருள் யாமத் திட்டு நீக்கியது 55

வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்

சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ

அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு

பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே

வருந்தா தேகி மன்னவன் கூடல் 60

பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்

இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்

பெருங்கை யானை இனநிரை பெயரும்

சுருங்கை வீதி மருங்கிற் போகிக் 65

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு

ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு

வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்

குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின் 70

கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு

வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை

விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை

ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்

பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து 75

தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்

கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி

வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த

தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்

கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு 80


தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்

பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு

எற்படு பொழுதின் இளநிலா முன்றில்

தாழ்தரு கோலந் தகை பாராட்ட

வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு 85

அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்

குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்

சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு

நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து

குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் 90

செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்

சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்

அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு

மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்

கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் 95

காரர சாளன் வாடையொடு வரூஉம்

கால மன்றியும் நூலோர் சிறப்பின்

முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்

மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து

நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100

குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்

வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி

இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர

விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை

அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் 105

ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்

வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட

அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்

தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 110

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்

காவும் கானமும் கடிமல ரேந்தத்

தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து 115

மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்

இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று

உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு

பருவ மெண்ணும் படர்தீர் காலைக்

கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க 120

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்

காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்

கோடையொடு புகுந்து கூட லாண்ட

வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர

ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் 125

வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்

உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்

சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்

கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்

பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130

பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து

செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய

அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்

பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்

நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு 135

இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்

புலவிக் காலத்துப் போற்றா துரைத்த

காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்

நாவொடு நவிலா நகைபடு கிளவியும்

அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன 140

செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்

திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்

செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு

வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் 145

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்

முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை

வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து

மாத்திரை யறிந்து மயங்கா மரபின்

ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும் 150


கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து

நால்வகை மரபின் அவினயக் களத்தினும்

ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்

மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்

வாரம் பாடுந் தோரிய மடந்தையும் 155

தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும்

நால்வேறு வகையின் நயத்தகு மரபின்

எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு

முட்டா வைகல் முறைமையின் வழாஅத்

தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு 160

அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்

தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்

நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்

காம விருந்தின் மடவோ ராயினும்

ஏம வைகல் இன்றுயில் வதியும் 165

பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல்

எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்

வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்

மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்

அதள்புனை அரணமும் அரியா யோகமும் 170

வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்

ஏனப் படமும் கிடுகின் படமும்

கானப் படமும் காழூன்று கடிகையும்

செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்

வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் 175

வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்

புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்

வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய

அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்

காக பாதமும் களங்கமும் விந்துவும் 180

ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா

நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி

நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்

ஏகையும் மாலையும் இருளொடு துறந்த

பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் 185

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்

விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்

பூச உருவின் பொலந்தௌித் தனையவும்

தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்

இருள்தௌித் தனையவும் இருவே றுருவவும் 190

ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்

இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்

தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்

சந்திர குருவே அங்காரக னென 195

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்

கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்

திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்

வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்

பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும் 200


சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்

சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்

பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு

இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்

நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் 205

பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்

நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்

அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்

கால மன்றியும் கருங்கறி மூடையொடு 210

கூலங் குவித்த கூல வீதியும்

பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்

அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்

மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து

விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் 215

பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்

காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்

கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்.


ஊர்காண் காதை முற்றும்
பார்க்க
மதுரைக் காண்டம்
புகார்க் காண்டம்
வஞ்சிக் காண்டம்
[[]]