சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/24.குன்றக் குரவை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து, நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்: வந்தால், மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே.

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல் மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்- அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே ;

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும், அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்- துறைமிசை நினது இரு திருவடி தொடுநர் பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே.என்று

சிலப்பதிகாரம்[தொகு]

மூன்றாவது வஞ்சிக் காண்டம்[தொகு]

24. குன்றக் குரவை[தொகு]

உரைப்பாட்டுமடை


1.
குருவியோப்பியுங் கிளிகடிந்துங் குன்றத்துச்சென்று வைகி
அருவியாடியுஞ் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினை வந்துருத்தகாலை /5/
கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலு மிறைஞ்சியஞ்சி யிணைவளைக்கை யெதிர்கூப்பி
நின்ற வெல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவருங் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
இவள்போலு நங்குலக்கோ ரிருந்தெய்வ மில்லையாதலின் /10/
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே /15/
தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
கொடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் /20/
ஒருமுலை யிழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே.


2. கொளுச்சொல்
ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண்
அஞ்சனப் பூழி அரிதாரத் தின்னிடியல்
சிந்துரச் சுண்ணஞ் செறியத்தூய்த் தேங்கமழ்ந்து
இந்திர வில்லின் எழில்கொண்டு இழுமென்று
வந்தீங்கு இழியு மலையருவி யாடுதுமே.
3.
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி
அஞ்சலோம்பு என்று நலனுண்டு நல்காதான்
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே.
சிறைப்புறம்
4.
என்றொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீன்றி வந்த புதுப்புனல்
கற்றீன்றி வந்த புதுப்புனல் மற்றையார்
உற்றாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
5.
என்னொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
முன்னாடி னோந்தோழி நெஞ்சன்றே
6.
யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடின் நோந்தோழி நெஞ்சன்றே.
பாட்டுமடை
7.

உரையினி மாதராயுண்கண் சிவப்பப்

புரைதீர் புனல்குடைந்து ஆடினோம் ஆயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி
தெய்வம் பராஅயது
8.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தினுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே. (1)
9.
அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பில் கோனேத்த மாறட்ட வெள்வேலே. (2)
10.
சரவணப்பூம் பள்ளியறைத் தாயமார் அறுவர்
திருமுலைப்பால் உண்டான் திருக்கைவேல் அன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே. (3)
பாட்டுமடை (அறத்தொடு நிலை)
11.
இறைவளை நல்லா யிதுநகையா கின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள் மற்றுஅன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடால் தான்விரும்பி வேலன்வருக என்றாள் (1)
12.
ஆய்வளை நல்லா யிதுநகை ஆகின்றே
மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனிற்
குருகுபெயர்க் குன்றங் கொன்றான் மடவன் (2)
13.
செறிவளைக்கை நல்லாய் இதுநகை ஆகின்றே
வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; (3)
14.
நேரிழை நல்லாய் நகையாம் மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்கவரும் வேலன்
தீர்க்கவரும் வேலன் தன்னினும் தான்மடவன்
கார்க்கடப்பம் தார்எம் கடவுள் வருமாயின் (4)
பாட்டுமடை
15.
வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன்வரும் வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே (5)
16.
கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியன் மடவரன் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயன்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே (6)
17.
மலைமகள் மகனைநின் மதிநுதன் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணம்அவர் படுகுவர் எனவே. (7)
18.
குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம் விடு பிழைமணம் எனவே (8)
பாட்டுமடை
19.
என்றுயாம் பாட மறைநின்று கேட்டருளி
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன் அவன்தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி.
20.
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர்
அறுமுக மில்லை அணிமயில் இல்லை
குறமக ளில்லை செறிதோள் இல்லை
கட்ன்பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்றவிச் சிறுகுடி யீரே.
பாட்டுமடை
21.
என்றீங்கு
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டு
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினான் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தாமராருங் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்.
22.
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே.
23.
பாடுற்றுப்
பத்தினிப்பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தரவு அல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே.
24.
வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்த
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.
25.
மறுதர வில்லாளை ஏத்தி நாம்பாடப்
பெறுகதில் அம்ம இவ்வூரும் ஓர்பெற்றி
பெற்றி உடையதே பெற்றி உடையதே
பொற்றொடி மாதர் கணவன் மனங்காணப்
பெற்றி உடையதுஇவ் வூர்.
26.
என்றுயாம்
கொண்டு நலை பாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தார் ஆனாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே.


இருபத்துநாலாவது குன்றக்குரவை முற்றும்.

வஞ்சிக் காண்டம்


[[]] [[]]