சிலம்பின் கதை/அழற்படு காதை

விக்கிமூலம் இலிருந்து

22. தீக்கிரையான மதுரை
(அழற்படு காதை)

நகரத்து அழிவு

ஏவல் இட்ட தெய்வமாகக் கண்ணகி விளங்கினாள். அவள் ஏவலைக் கேட்டு எரி நெருப்பு மதுரையைத் தீய்த்தது. காவல் தெய்வங்கள் நகர்க் கதவுகளை அடைத்து ஊர்மக்கள் வெளியேறாமல் அடைத்து வைத்து விட்டு அவர்களைக் காவாமல் அவை வெளியேறி விட்டன.

பாண்டியன் தனக்கு ஏற்பட்ட பழியைத் தன் உயிர் கொடுத்து மாற்றினான்: வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்; அவன் மனைவியும் அதே அரசு கட்டிலில் உடன்கட்டை ஏறினாள். பெண்ணொருத்திக்கு இழைத்த கொடுமை அதனால் ஏற்பட்ட பழியை அவன் உயிர் கொடுத்துத் தீர்த்தான். நில மடந்தைக்கு இச் செய்தியை அறிவித்தான்.

அரசுகட்டிலில் இவ்விருவரும் துஞ்சியது அரசு அதிகாரிகள் அறிந்திலர். ஆசான். பெருங்கணி, அறக்களத்து அந்தணர், காதிப் பட்டம் பெற்ற உயர் அதிகாரிகள், அரசியல் செய்திகளை எழுதும் கணக்கர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், அந்தப்புர மகளிர் அனைவரும் ஒவியம் போல் உரை அவிந்து கிடந்தனர்.

குதிரை வீரர், யானைப்பாகர், தேர் ஊர்வோர், வாள் மறவர்கள் இவர்களும் செயலற்று நின்றனர். அவர்களும் நெருப்பைக் கண்டு அஞ்சி அகன்றனர்.

இந்த நகரைக் காத்துவந்த பூதங்கள் நகரைவிட்டு நீங்கின் அந்தண பூதமாகிய ஆதிப்பூதம், அரச பூதம், வணிகப்பூதம், வேளாண் பூதம் இவை நான்கும் இனி அங்கு இருந்து பயனில்லை என்பதால் நீங்கிவிட்டன. கண்ணகியின் கடுஞ்சூள் இது. அதனைத் தடுக்க இயலாது. என்பதை அவை உணர்ந்தன. சந்திக்கு ஒரு பூதம் என அந் நகரைக் காத்து வந்தன. அவை நீதிக்கு அடிபணிந்து நாட்டை விட்டு நீங்கின.

அந் நகரத்து வீதிகள் அனைத்தும் அழிந்தன. கூலமறுகு, கொடித்தேர்வீதி, சாதிகளின் பெயரால் பாகு படுத்தப் பட்ட விதிகள் இவை காண்டீபன் வில்லுக்கு எரிந்த காண்டவ வனம் போல் அழிந்தன. காண்டவ தகனம் என இம் மதுரை எரிந்து சாம்ப்லாயிற்று, நல்லோர் மட்டும் விதிவிலக்கு ஆயினர். அறவோரை அழிக்காமல் மறவோரை மட்டும் மாய்த்தது.

கன்றுகளும், பசுக்களும், ஆயர்தம் தெருக்களை அடைந்தன. யானைகளும், குதிரைகளும் நகரின் மதிலுக்குப் புறமாகச் சென்று உயிர் தப்பின. மகளிர் காமக் களியாட்டம் செய்வதை விடுத்து உயிருக்குப் பாதுகாப்புத் தேடினர். தாயர்கள் தம் குழந்தைகளைத் தட்டி எழுப்பி முதிய பெண்டிருடன் தப்பி ஒதுங்கினர். அவர்களை நெருப்புத் தீண்டவில்லை.

பாராட்டுரை

அறம் வழுவாத கற்புடைய மாதர் அனலைக் கண்டு

கலங்கவில்லை. “கண்ணகி தீ மூட்டியது தவறு அல்ல” என்று பேசினர்; அவள் செய்கையை வாழ்த்தினர்.

ஆடு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நின்று விட்டன; அவர்கள், “வந்தவள் யார் ? எந் நாட்டவள் ? அரசனை எதிர்த்து வென்று தீ மூட்டினாள்; அவள் வியப்புக்கு உரியள்” என்று அவர்கள் நயப்புடன் உரை நிகழ்த்தினர். ஊரில் விழாக்கள் நின்றன; வேத முழக்கம் நின்றது; செந் தீ வேட்டலும், தேவபாடலும், மகளிர் மங்கல விளக்கு ஏற்றிவைப்பதும், மாலை மகிழ்வும், முரசு அறைவும் நின்று விட்டன.

அவல நிலை

கண்ணகி என்ன ஆயினாள்? அவள் நிலை யாது? காதலனை இழந்த துன்பம் அதற்குக் கரையே காண இயலவில்லை. கொல்லன் துருத்திபோல் வெய்து உயிர்த்தாள். மறுகுகளில் மறுகினாள்; கவலை கொண்டாள்; நடப்பாள்; திடீர் என நிற்பாள்; மயங்குவாள்; தெளிவு பெற்றவள் போல் நடப்பாள் மிக்க துன்பம் உற்ற வீரபத்தினியாக நின்றாள்.

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப் பெரும் தெய்வங்கள் என அவளை மதித்து மதுராபதி தெய்வம் போற்றியது. நெருப்புக்கு அஞ்சி அவளை அடைக்கலமாகப் பின் வந்து நின்றது.