சிலம்பின் கதை/இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

விக்கிமூலம் இலிருந்து

5. இந்திர விழாவும் மாதவியும்
(இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

நகர்க் காட்சி

புகார் நகர் காலையில் கவின் மிக்கதாக விளங்கியது; காலை ஒளியில் அதன் மாடங்களும், கோபுரங்களும், கோயில் தலங்களும், மற்றும் உள்ள மன்றங்களும் அழகு பெற்றுத் திகழ்ந்தன.

இந்த நகர் சுருசுருப்பாக இயங்கியது; வணிகர்கள் மிக்கு வாழ்ந்தனர்; அவர்கள் குடியிருப்புப் பெருமை தேடித் தந்தது.

மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப் பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டினப் பாக்கம் என்பது கடற்கரையை அணுகிய பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்; வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது; மற்றையது உயர் குடிமக்கள் வசித்த இடமாகும்.

மாடி வீடுகளும், அழகுமிக்க இருக்கைகளும், மான கண் போன்ற சன்னல்கள் வைத்த மாளிகைகளும், பொய்கைக் கரைகளில் கவர்ச்சிமிக்க யவனரது வீடுகளும், வேற்று நாட்டவர் வசிக்கும் நீர் நிலைகளின் கரைகளில் கட்டி இருந்த வீடுகளும் அந்நகரை வளப்படுத்தின, அழகு தந்தன.

தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தனர்; நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணிகலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்கள் குவித்து விற்றவர் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை வாசனைப் பொருள்கள் விற்போர், இரைச்சி, எண்ணெய் விற்போர், பொன் வெள்ளி செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திரவேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனார். இந்தப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப்பட்டது.

பட்டினப் பாக்கம்

அடுத்தது பட்டினப்பாக்கம்; உயர்நிலை மாந்தர் வசித்த பகுதி இது. அரசவிதி, தேர்விதி, கடைத்தெரு, வணிகர் தெரு, அந்தணர் அக்கிரகாரம், உழவர் இல்லம், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் ஆகிய இவர்கள் தனித்தனியே வசித்து வந்தனர்.

காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் இவர்கள் எல்லாம் ஒருபகுதியில் வாழ்ந்தனர்.

அரசன் அரண்மனையைச் சுற்றிப் படை வீரர்கள் குடியிருப்புகள் இருந்தன. யானை, குதிரை, தேர், காலாள் வீரர்கள் இங்குக் குடி இருந்தனர். இப்பகுதி கடற்கரையை ஒட்டி இருந்தமையால் இது பட்டினப்பாக்கம் எனப் பட்டது. முன்னது ஊர் எனப்பட்டது; இது பட்டினம் என்று பாகுபடுத்திக் காட்டப்பட்டது. இதை வைத்துத்தான் புகார் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. இதற்குப் பூம்புகார் என்றும், பூம்பட்டினம் என்றும் இருவேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

பலிக் கொடை

இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட மையப் பகுதியே சிறப்பு மிக்கதாக விளங்கியது. கடைகள் மிக்குள்ள பகுதி, பகலில் செயல்பட்டது; இது நாளங்காடி எனப்பட்டது. இங்கு எப்பொழுதும் விற்பவர் ஓசையும், வாங்குவோர் ஓசையும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

மரங்களின் அடிப்பகுதியே இவர்கள் கடைகளுக்குத் தூண்களாக விளங்கின; சோலைகள் மிக்க பகுதி அது என்று தெரிகிறது; இங்கே காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைத்திருந்தனர். அது பலிப் பீடிகை எனப்பட்டது. இந்திர விழா கொண்டாடும் நாளில் இங்குப் பூவும் பொங்கலும் இட்டு மறக்குடி மகளிர் வழிபாடு செய்தனர். வீரர்கள் தங்கள் தலைகளை அறுத்து வைத்துப் பலி இட்டனர். “சோழ அரசன் வெற்றி பெறுக” என்று வாழ்த்துகள் கூறினர்.

இந்தக் காவல் பூதம் அங்கு வைக்கப்பட்டதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. முசுகுந்தன் என்னும் சோழ அரசன் இந்திரனுக்கு உதவினான்; அசுரர்களை ஓட்டினான்; அவர்கள் இவனுக்குத் தீங்கு கருதி மந்திரங்கள் சொல்லி இவனை அழிக்க முயன்றனர். அந்த அசுரர்களிடமிருந்து காக்க இந்திரன் காவல் பூதத்தை அனுப்பிவைத்தான். அப்பூதம் அசுரர் செய்த வஞ்சங்களை ஒழித்துக் கட்டியது. அங்கேயே அது நிலைத்து அந்நகருக்கு அது காவல் பூதமாக அமைந்து விட்டது.

இந்த விழா சித்திரை மாதம் சித்திரை முழுநிலவு அன்று எடுக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இவ்விரு பகுதிகளினின்றும் வீரர்கள் இங்கு வந்து விழா எடுத்துப் பலியும் தந்து கொண்டனர். இது வியத்தகு காட்சியாக விளங்கியது.

சித்திர மண்டபம்

இந்திரவிழா காண வருவோர் இப்பலிப்பீடத்தைக் கண்டு வியப்பும் மகழ்வும் அடைந்தனர். இதனை அடுத்து அந்நகரில் பார்க்கத் தகுந்த காட்சியாக விளங்கியது திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபம். அவன் வடநாடு சென்று வெற்றி கொண்டு திரும்பி வருகையில் பேரரசர்கள் அவனுக்குத் திறைப் பொருளாக மூன்று பொருள்களைத் தந்தனர். ஒன்று ‘கொற்றப் பந்தர்’; மற்றொன்று ‘பட்டிமண்டபம்’; மற்றொன்று ‘தோரண வாயில்’; வச்சிர நாட்டு அரசன் தந்தது கொற்றப்பந்தர், மகத நாட்டு அரசன் தந்தது பட்டிமண்டபம்; அவந்தி வேந்தன் அளித்தது. தோரணவாயில். இவை மானுடரால் செய்யப்பட்டவை அல்ல; தேவதச்சன் மயன் செய்து தந்தவை; இந்திரன் அவ் அரசர்களுக்கு அவ்வப் பொழுது தந்தவை அவை எனப்பட்டன. இவற்றை ஒருங்கு வைத்து ஒரே மண்டபமாகத் திருமாவளவன் சமைத்தான் என்பது வரலாறு. இது சித்திர மண்டபம் எனப்பட்டது. இந்திர விழாவுக்கு வருபவர் இதனையும் கண்டுமகிழ்ந்தனர்.

ஐம்பெரு மன்றங்கள்

மற்றும் அந்நகரில் காணத் தகுந்தவை ஐம்பெரும் மன்றங்கள் எனப்பட்டன. இவை பல்வேறு சோழர்கள் காலத்தில் இந்திரனால் அளிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

களவு செய்வோரை அவர்கள் தலையில் களவாடிய பொதிகளை அடுக்கிவைத்துச் சுற்றிவரச் செய்வது ‘வெள்ளிடை மன்றம்’ எனப்பட்டது. நோய் நொடியால் வாடுவோர் குளத்து நீரில் முழுகி எழுந்தால் அவர்கள் நோய் தீர்ந்தனர். அந்தக் குளம் உடைய மன்றம் ‘இலஞ்சிமன்றம்’ எனப்பட்டது; பித்தம் பிடித்தவர், நஞ்சு உண்டவர், அரவு தீண்டப் பெற்றவர் இவர்கள் துயர் நீங்கி உயர்வு பெற்றனர். அந்தப் பகுதிக்கு ‘நெடுங்கல்நின்ற மண்டபம்’ என்று கூறப்பட்டது. தீய ஒழுக்கத்தவர் அவர்களைப் புடைத்து உண்டு தண்டித்தது ‘பூத சதுக்கம்’ எனப்பட்டது. அரசன் நீதி தவறினாலும், மன்றங்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினாலும் கண்ணீர் உகுத்து அழுது காட்டி அநீதியை எடுத்து உரைத்தது; அது ‘பாவை மன்றம்’ எனப்பட்டது. இவை ஐம்பெரு மன்றங்கள் எனப்பட்டன. இவையும் வியத்தகு காட்சிகள் ஆயின; இவ்விழாவுக்கு வந்தவர் இவற்றைக் கண்டு வியந்தனர். விழா அழைப்பு

வச்சிரக் கோட்டம் என்பது இந்திரன் கோயில்; அதில் இருந்த முரசத்தை எடுத்து யானையின் பிடரியில் ஏற்றி வைப்பர். அதன் மீது இருந்து விழாச் செய்தியை ஊருக்கு அறிவித்தனர்.

கால்கோள் விழா இது தொடக்க விழா, கால்கோள் விழா முதல் கடைநிலை நிகழ்ச்சி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பற்றி நவின்றனர். மங்கல நெடுங்கொடி எடுத்து ஏற்றினர்.

நகரத்து மாளிகை முன் எங்கும் தோரணங்கள் தொங்கவிட்டனர். பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர். பாவை விளக்கும், கொடிச் சீலையும், வெண்சாமரமும், சுண்ணமும் ஏந்தி விதிகளில் பொலிவு ஊட்டினர்.

நீராட்டு விழா

ஐம்பெரும் குழுவினரும், எண்பேராயத்தினரும், அரச குமரரும், வணிக இளைஞரும் தத்தமக்கு உரிய தேர்களில் ஏறிச் சென்று, “அரசன் வெற்றி கொள்வானாக” என்று, வாழ்த்துக் கூறி இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்தினர். குறுநில மன்னர்கள், குடங்களில் காவிரிநீர் கொண்டுவந்து இந்திரனுக்கு மஞ்சனம் ஆட்டி நீர் முழுக்குச் செய்வித்தனர். இந்த நீராட்டுதலே தலைமை விழாவாகக் கருதப்பட்டது. அதனால் இது நீராட்டு விழா எனவும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

ஊர்த்திருவிழாக்கள் மற்றும் சிவன்கோவில், முருகன், பலராமன், திருமால் இக்கோவில்களில் அவரவர் மரபுப்படி பூசைகள் நடத்தினர். தேவர்க்கும், பதினெண் பூத கணங் களுக்கும் விழா எடுக்கப்பட்டன. அறச் சாலைகளில் அவர்கள் விழா எடுத்தனர். சிறைப்பட்ட பகை மன்னரை அரசன் விடுவித்தான்.

அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தென்றல் வீசும் தெருக்களில் காமக் கணிகையர் கண்களுக்கு விருந்து அளித்தனர், அவர்கள் வடிவழகில் மயங்கி ஆடவர்கள் அவர்களோடு உறவு கொண்டனர்.

இந்தக் காதற்பரத்தையர் பேரழகு ஆடவர்களைத் திகைக்க வைத்தது. வானத்துத் திங்கள் வையகத்துக்கு வந்ததோ என்று வியந்தனர். திருமகளைத் தேடித் தாமரைம்லர் இங்கு வந்து புகுந்ததோ என்று பேசினர். கூற்றுவன் பெண் உருக் கொண்டு எம்மைப் பேதமைப் படுத்துகிறானோ என்றும் அஞ்சினர்; வானத்து மின்னல் மண்ணில் வந்து புரள்கிறதோ என்று வியந்து பேசினர். இத்தகைய அழகு உடையவர்கள்பால் தம்மைப் பறிகொடுத்துக் களி மகிழ்வு எய்தினர். அவர்களோடு தோய்ந்ததால் அவர்கள் மார்பில் எழுதியிருந்த தொய்யில் இவர்கள் மெய்யில் படிய அது இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

ஊடல் கொள்வதற்கு இந்தக் காமக் கணிகையர்தம் உறவு விட்டு மகளிர்க்குக் காரணம் ஆகியது. ஊடலைத் தீர்ப்பதற்கு அவர்கள் பட்ட பாடு ஏட்டில் எழுத முடியாது; விருந்தினர் வந்தால் ஊடல் தீர்வர். அதுவும் மருந்தாக அமையவில்லை; சுவைமிக்க வாழ்க்கை

மாதவியும் கண்ணகியும்

இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? செங்கழு நீர்ப்பு தேன்சிந்தி உகுகிறது. அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால் மகிழ்வக் கண்ணீர் சொரிந்தன.

கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் அவள் கண்ணீர் உகுத்தாள்.

மாதவியின் வலக்கண் துடித்தது: கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்: மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும் காட்டினர்.