சிலம்பின் கதை/துணைப் பாத்திரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

4. துணைப் பாத்திரங்கள்

காவியத் தலைமை மாந்தர்கள் கதையை இயக்கு பவர்கள் ஆகின்றனர். இவர்கள் தொடர்பு கொள்ளும் மாந்தர்கள் துணை மாந்தர்கள் என்று கூறப்படுபவர். கோவலனுக்குப் பாங்கன் என்று யாரையுமே குறிப்பிட முடியவில்லை. வறுமொழியாளர் வம்பப் பரத்தரொடு தோழமை கொண்டிருந்தான் என்று தெரிகிறது.

காதல் செய்து இவன் திருமணம் செய்து கொள்ள வில்லை. பெற்றோர்கள் முன்னிருந்து திருமணம் செய்விக் கின்றனர். அந்த வகையில் அவர்கள் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். கண்ணகியின் தந்தை மாநாய்கன்; அவன் மழையைப் போல் கொடுக்கும் இயல்புடைய வள்ளல் என்று கூறப்படுகிறான் அவனுக்குக் கண்ணகி ஒரே மகள்;. அவள் குலக் கொடியாக விளங்குகிறாள். கோவலன் கண்ணகி மறைவுக்குப்பின் தானம் பல செய்து அறவாழ்வு மேற்கொள்கிறான்.

கோவலன் தந்தை செல்வம் மிக்கவன்; அரசன் மதிக்கும் பெருவாழ்வு பெற்றிருக்கிறான். பொருள் பிறருக்குத் தந்து புகழ் படைத்தவனாக விளங்குகிறான்; மாதவியோடு கோவலன் தொடர்பு கொண்டிருந்த நாட்களில் கண்ணகிக்கு அன்பு காட்டி அவள் துயரத்தில் பங்கு கொள்கிறான்; கண்ணகியின் வாயல் முறுவலுக்கு உள்ளகம் வருந்துகிறான்.

மாதவியின் தோழி வயந்த மாலை; பாசமும் நேசமும் கொண்டு பழகுகிறாள். இந்திர விழாவில் கடலாடு காதையில் அவள் யாழை நீட்டி மாதவியிடம் தருகிறாள். “அமளிமிசை வருந்துபு நின்ற வயந்தமாலை என்று அடிகள் குறிப்பிடுகின்றார்; அவள் வருந்தக் காரணம் என்ன? இருவருக்கும் உள்ள மனக்கசப்பை அறிந்தவள் என்ற குறிப்புத் தரப்படுகிறது. அவர்கள் நல்லிணக்கத்தில் அக்கரை கொண்டவள்; அதனால் அவள் வருந்துபு நின்றாள் என்று தெரிகிறது.

அடுத்து மாதவி தந்த முடங்கலை அவள் கோவலனிடம் தருகிறாள். அவன் மறுக்கிறான், அதற்கும் வருந்துகிறாள். வாடிய உள்ளத்து வசந்தமாலை என்று குறிப்பிடப்படுகிறாள். அவள் விரைந்து சென்று உரைக்கிறாள். பின்னால் வனசாரணி வயந்தமாலை வடிவில் தோன்றி அவளை மாதவி துறந்துவிட்டாள் என்று கூறுகிறாள். அவள் கதை முடிவு அதனோடு முடிகிறது என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் கோவலன் கண்ணகியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வழிப்பயணத்துக்குத் துணையாகிறார். சோர்ந்தபோது எல்லாம் ஆறுதல் கூறுகிறார். கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார். 'தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி' என்றும், 'கற்புடைத் தெய்வம்' என்றும் பாராட்டுகிறார். மாதவியிடம் அடைக்கலமாக இருவரையும் ஒப்படைக்கிறார். துறவியாக இருந்த அவர் சமண அற நெறிகளை மற்றவர்க்கு அறிவிப்பதும் தம் தொழிலாகக் கொள்கிறார்.

கண்ணகிக்குத் தோழி ஒருத்தி அமைகின்றாள் தேவந்தி என்பாள்; பார்ப்பனப் பெண்; பாசாண்டச் சாத்தனை மணந்து அவனால் துறக்கப்பட்டவள்; ஆறுதலைத் தர விழைகிறாள்.

சோமகுண்டம், சூரிய குண்டம் முழுகிக் காமனைத் தொழுதால் கணவனை அடைவர் என்று கூறுகிறாள். 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்துக் கூறிவிடுகிறாள்; இரண்டு கலாச்சாரங்கள் முரண்பாடு இவர்கள் உரையாடல்களில் கவிஞர் பெற வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. பின்பு கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செய்தி கேட்டுத் துடிதுடித்துக் காவற் பெண்டையும் அடித் தோழியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறாள். அங்கு ஐயையையும் அழைத்துக்கொண்டு சேரநாடு செல்கிறாள்; நெடுவேள் குன்றம் சென்று அடைகிறாள். அங்கு கண்ணகி முன் நின்று தெய்வம் உற்றுப் பேசுகிறாள்; பாசாண்டச் சாத்தன் அவள் மீது ஏறிப் பேசுகிறான்; அடுத்துக் கண்ணகி தேவந்தி மேல் வந்து இளங்கோவடிகளோடு பேச வைக்கிறார் தேவந்தியே முன்னிருந்து பூசைவழிபாடு செய்கிறாள்.

வழியில் சந்தித்த மாங்காட்டு மறையோன், கோசிக மாணி, மாடலன் இம்மூவரும் காவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மாங்காட்டு மறையோன் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவன். திருவரங்கத்துக்கும், வேங்கடத் துக்கும் செல்லும் வேட்கையனாக விளங்குகிறான். மதுரை செல்லும் வழிகளைக் கூறுகிறான். இட்டசித்திகள் பெறும் வழிவகைகளைக் கூறுகிறான். அவன் குறுக்கு வழியில் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்தைக் கூறக் கவுந்தி அடிகள் மறுத்து உரைக்கிறார். “உழைப்பே உயர்வு தரும்: நல்வினைகள் ஆக்கம் தரும்” என்ற கருத்துகளை அவனுக்கு அறிவிக்கிறார். இங்கே மாங்காட்டு மறையவளைக் கொண்டு இரு வேறுபட்ட தத்துவங்களைப் பேச வாய்ப்பு அமைக்கிறார் கவிஞர்.

கோசிகமாணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக் கிறான். கோவலனைத் திருத்துகிறான். மாதவி தீதிலள்” என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். வருந்திய மாதவிக்கு ஆறுதல் சொல்லி அவள் தந்த கடிதம் எடுத்துச் சென்று அவளுக்கு மன நிறைவை உண்டாக்குகிறான்.

அடுத்தது மாடலன், இவன் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான். கோவலன் மாதவியோடு இருந்த காலத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான். ஆறுதல் கூறி அகல்கிறான். கண்ணகி மறைவு பற்றிய செய்தியைப் புகார் நகரில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டச் செய்கிறான். வடநாடு சென்று கங்கையில் நீராடச் செல்கிறான்.

“மாதவியின் கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று கூறி மாதவி கோவலன் உறவையும், மற்றைய செய்திகளையும், சோழநாடு பாண்டிய நாட்டுச் செய்திகளையும் அறிவிக்கிறான். செங்குட்டு வனால் இவன் மதிக்கப்படுகிறான். அவன் தன் எடை அளவு பொன் இவனுக்குத் தானமாகத் தருகிறான். சேரன் துலாபாரம் புகுந்து தானம் அளிக்கிறான்.

கனக விசயர்களைச் செங்குட்டுவன் சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் அனுப்பி வைக்கிறான் அவர்கள் எள்ளி உரையாடிய செய்தி கேட்டுச் சேரன் செங்குட்டுவன் கொதிப்பு அடைகிறான். அவன் சினத்தை ஆற்றுவித்து வேள்வி செய்யத் தூண்டுகிறான். இறுதியில் முன்னிருந்து வேள்வி நடத்தி வைத்து முடிக்கிறான்.

அரட்டன் செட்டி சிறுமியர் இருவர்; சேடக் குடும்பியின் மகள் ஒருத்தி, இவர்கள் மீது நீர் தெளித்துப் பழப்பிறப்பு உணர வைக்கிறான். பாசாண்டச் சாத்தன் இவனுக்கு அந்த நீரை ஏற்கனவே தந்திருக்கிறான். மாடலன் சேரன் செங்குட்டுவனை நல்வழிப்படுத்தி அவனை அற வாழ்வுக்குத் திருப்புகிறான்.

பொற்கொல்லன் துணைப் பாத்திரம் என்று கூற முடியாது அவன் எதிர்ப்பாத்திரம் ஆவான்; தீமையின் உறைவிடம், கயவன். அவன் செயற்பாடு சிறிது என்றாலும் கொடிதாக உள்ளது. தீமைக்கே அவன்தான் காரணமாக இருக்கிறான். அவன் மூட்டிய சிறு பொறி பெரு நெருப்பாகிறது.

நல்லவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் மாதரி, ஐயை இருவரும் ஆவர். மாதரியைப் பற்றிக் கவுந்தியடிகள் பின்வருமாறு கூறுகிறார் தீதிலள், முதுமகள், செவ்வியள்; அளியள் என்று கூறுகிறார்.

மாதரி கண்ணகி கோவலனுக்கு அடைக்கலம் தந்து ஆதரவு தருகிறாள். தங்குவதற்கு இடம், உண்பதற்கு உணவு தந்து உதவுகிறாள்; தன் மகள் ஐயையைத் துணைக்கு அனுப்பி வைக்கிறாள். கோவலன் தாய் போல் இருந்து அன்பு காட்டுகிறாள். கோவலன் கண்ணகியரைக் 'கண்ணன்' என்றும் 'நப்பின்னை' என்றும் கூறி அவர்களை மதிக்கிறாள். அவர்கள் அன்பு வாழ்க்கைக்கு இவள் அகம் குளிர்கிறாள். அவர்கள் சாவுச் செய்தி இவளை அதிர வைக்கிறது. உயிர் விட்டு விடுகிறாள்.

ஐயை கண்ணகிக்கு நாத்துண் நங்கைபோல உறவு காட்டி உடன் இருந்து உதவுகிறாள். மணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை வெறுத்துத் தனிமரமாகி நின்று விடுகிறாள். முதிர் கன்னியாக முற்றுப் பெறுகிறாள்.

இந்தத் துணை மாந்தர்கள் இவர்களோடு நெருக்கம் கொண்டு உதவுகிறார்கள். அவலத்தால் பாதிக்கப்படு கிறார்கள். இவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள், துறவிகள், அந்தணர்கள் என்று பல திறத்தவராய் விளங்குகிறார்கள்.

இந்தக் காவியத்தில் இடம் பெறும் பாண்டியன், சேரன், செங்குட்டுவன் முதலானோர் வரலாற்று மாந்தர்கள். அவர்கள் கவிஞனின் படைப்புகள் அல்லர். எனவே அவர்களைத் துணை மாந்தர்கள் என்று கூற இயலாது.

இந்தக் காவியத்தில் தீயவரே இடம் பெறவில்லை. பொற்கொல்லன் ஒருவன்தான் தீயவன் ஆகிறான்; அடுத்தது ஊழ்வினை கதைத் திருப்பங்களுக்குத் துணை செய்கிறது. காவியத்தில் ஊழ்வினை தலைமை இடம் பெறுகிறது.