சிலம்பின் கதை/கோவலன்

விக்கிமூலம் இலிருந்து

3. கோவலன்

கோவலன் கதாநாயகன் அல்லன்; அவன் கண்ணகியின் கணவன். அவன் கொலை செய்யப்படுவது காவியத்தின் மையச் செய்தியாகிறது. இந்தக் காவியத்தில் அவன் அரிய செயல்கள் எதுவுமே ஆற்றவில்லை. காவியத் தலைவர்கள் ஆற்றும் போர்கள் வீர வசனம் இவற்றில் எதுவுமே அவனுக்கு அமையவில்லை.

செல்வ மகன் அவன் சீரழிவு அதுதான் கதையின் கருவாகிறது. அவனைப் பற்றிய அறிமுகம் அவன் புகழ் மிக்கவன் என்பது; புகழ் உடையவன் என்று கூறுவது அவன் செல்வ நிலையை ஒட்டிக் கூறப்படுகிறது. அழகன் என்பது அவன் மாதவி விரும்புவதற்குக் காரணம் என்பதாக வெளிப்படுகிறது. பேரழகன் என்றும் கூற முடியாது. பெண்கள் இவனைப் புகழ்ந்திருக்கின்றனர். இவன் அழகில் மாதவி மயங்கிக் காதலித்தாள் என்று எங்கும் கூறப்பட வில்லை. அதேபோலக் கண்ணகியும் இவனைக் கண்டு காதலித்தாள் என்று தெரிவிக்கப்படவில்லை.

'காதலன்' என்ற சொல் இவனைப் பல இடங்களில் குறிக்கின்றது. மாதவிக்கு இவன் காதலன், கண்ணகிக்கு இவன் கணவன்; இது உறவுமுறை என்று கூறலாம்.

இவன் புகழ் வெளிப்படுவதற்குக் கள்வியத்தில் நேரிடை எந்த நிகழ்ச்சியும் இடம் பெறவில்லை. புகழ் என்பது வீரம் அல்லது கொடை இந்த அடிப்படையில்தான் அமைவது 'ஈதல் இசைபட வாழ்தல்' என்பர் வள்ளுவர்.

இவன் கொடைத் திறம் மாடலனால் விரித்து உரைக்கப்படுகிறது. மணிமேகலைக்குப் பெயரிட்ட நாளில் அந்தணன் தானம் பெற வருகிறான். அவனை யானை ஒன்று தூக்கிச் செல்கிறது. அதனோடு மோதி அவனை மீட்கிறான். 'கருணை மறவன்' என்று பாராட்டப்படுகிறான். அவனுக்கு வேண்டிய தானமும் தருகின்றான். யானையிட மிருந்து மீட்டது வீரம் என்று கூறமுடியாது. மறச் செயல் என்றுதான் கூறப்படும்.துணிந்து ஆற்றும் வலிமைச் செயல்: அதனால் அது மறம் எனக் கூறப்படுகிறது. உயிரைத் துணிந்து தர முற்படுகிறான்; எனவே இதுவும் கொடைத் திறத்தின்பால் படும் என்று கூறலாம்.

மற்றும் பொய்க்கரி புகன்றவனை மீட்கச் சதுக்க பூதத்தின் பாசத்தில் அகப்படத் தன்னை அளிக்க முன் வருகிறான்; இதுவும் கொடைத் திறம் என்று கூற வேண்டும். அவன் குடும்பத்துக்குப் பெரு நிதி அளிக்கிறான்.

மற்றும் பார்ப்பனன் ஒருவன் எழுதித் தந்த வடமொழி வாசகம் அதை விலை கொடுத்து வாங்கித் தானம் செய்கிறான்; அவர்கள் குடும்பத்துக்கு நிதி. வழங்குகிறான்.

இம்மூன்று செயல்கள் அவன் புகழ் உடையவன் என்பதற்குச் சான்றுகளாக இடம்பெறுகின்றன.

இவன் வணிக மகன்; செல்வச் சிறப்பு இவனுக்குப் பெருமை தருகிறது. ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து மாதவி மாலையை வாங்கி அவளை அடைகிறான். இவன் இன்பம் நாடிச் செல்வது இவன் போக்கு எனத் தெரிகிறது.

நகர நம்பியர் திரிதரு மன்றத்தில்தான் கூனி இவனைச் சந்திக்கிறாள். எனவே அவன் அங்கு எப்பொழுதும் திரிந்து வந்தவன் என்று தெரிகிறது. மகிழ்ச்சியில் இவன் நாட்டம் மிக்கு உடையவன் என்பது தெரிகிறது.

‘குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல’

வண்டினொடும் இளவேனிலொடும் தென்றல் மறுகில் திரிகின்றது என்று கூறுவர்.

‘வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப்புண்டு பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ?’

என்று கூறித் தன் செயல்களைக் கடிந்து கூறுகிறான்.

சிற்றினம் சேர்ந்து சீரழிந்தவன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் அவன் இன்ப வேட்கை என்று கூறலாம்.

அன்பும் அறனும் கண்ணகிபால் கண்ட அவன் இன்பத்தை மாதவியிடம் காண்கிறான். அவன் இன்ப வேட்கை கண்ணகியின் பாராட்டுதலில் தெரியவருகிறது. காதல் இன்பத்தைக் கவின் உற எடுத்து உரைக்கின்றான். கலவியை அவளிடம் காண்கின்றான். புலவியை அவளிடம் காண முடிய்வில்லை. 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்பர் வள்ளுவர். அந்த வாய்ப்பினைக் கண்ணகியிடம் அவன் பெறவில்லை என்று தெரிகிறது. கலவியும் புலவியும் காதலனுக்கு அளித்தது மாதவி.

இவன் மாதவியிடம் கண்டது கவர்ச்சி என்று கூறலாம். 'இவன் கலைகள் அறிந்தவன்; அவற்றில் சுவைத்து மகிழ்பவன். மதுரை சென்றபோது பாணருடன் பழகி அவர்கள் இசை கேட்டு மகிழ்கிறான். கானல் வரிப் பாடல்களை இவனும் பாடுகிறான். மாதவியின் செயல்கள் அனைத்தும் நடிப்பு என்று கூறும்போது நாட்டியக் குறியீடு வைத்து அவற்றை எள்ளி நகையாடுகிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறியீடு; கண்கூடுவரி, காண்வரித் தோற்றம், உள்வரி ஆடல், புன்புறவரி, கிளர்வரிக்கோலம், தேர்ச்சிவரி, காட்சிவரி எடுத்துக் கோள்வரி எனப் பெயர்கள் தருகின்றான். எனவே மாதவிபால் இவன் நாட்டம் கொண்டதற்கு இவன் கலையுணர்வும் காரண மாகிறது.

'ஆடல் பாடல் அழகு' இம்மூன்று அவனைக் கவர்கின்றன. செல்வச் செருக்கு உடன் சேர்கின்றது. விலை கொடுத்து வாங்குவதில் அவன் முன் வருகின்றான். இவ்வளவு தொகை கொடுப்பதற்குக் காரணம் அவன் செல்வச் செருக்கு என்று கூறலாம். எனவே அவன் கலை ஆர்வம், மகிழ்வு நாடும் மனம், செல்வ மிகுதி இவையே அவன் மாதவிபால் உறவு கொள்வதற்குக் காரணம் ஆகின்றன.

மாதவி அவனை முழுவதும் காதலிக்கிறாள். 'காதலன்' என்றே அவன் கூறப்படுகிறான். அவளைக் 'காதலி' என்று எங்குமே அவன் குறிப்பிட்டதாகத் தெரிய வில்லை. இளங்கோவடிகளும் அவனுடைய காதலில் என்று மாதவியைக் கூறவே இல்லை.

'விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்' என்று கூறப்படுகிறதே அன்றி விடுதல் அறியாக் காதலன் ஆயினன் என்று கூறவே இல்லை. அவளிடம் அவன் கண்ட கவர்ச்சி மூன்றாவதாகக் குறிப்பிட்ட அழகு, அதுதான் அவனைக் கவர்கிறது. 'கோலங் கொண்ட மாதவி' என்றுதான் அவள் குறிப்பிடப்படுகிறாள். அவன் முன் அவள் அழகாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்பது தெரிகிறது.

ஊடற் கொள்கையில் இருந்த அவனை மகிழ்விக்க அவள் நகைகள் பல பூண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். கவர்ச்சியில் அவனை வைத்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

கண்ணகியை அவன் பாராட்டி இருக்கிறான்; அழகுக்காக முதலில்; அவள் குணத்துக்காகப் பின்பு; மாதவியை எந்த இடத்திலும் அவன் பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் இடத்தில் அறிவைக் காண்கிறான்; அன்பை அவனால் காண முடியவில்லை. அந்த அறிவே பிணக்குக்கும் காரணமாகிறது. அவள் பாடல் கருத்துகளில் குறை காண்கிறான், அது ஊடலுக்குக் காரணம் ஆகிறது.

கோவலன் கதையே கண்ணகி மாதவி உறவு இவற்றில் அடங்கி விடுகிறது. என்றாலும் அவன் புற உலகில் நன்கு மதிக்கப்பட்டவன் என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் அவன் தோற்றத்தைக் கண்டு அவன் அறிவும், உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், கடவுள் வழிபாட்டுச் சிந்தனையும் உடையவன் என்பதை அறிய

முடிகிறது.

'உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர்!'

என்று விளிக்கின்றார்.

இடைச்சியரிடம் கண்ணகி அவன் தெய்வ வழிபாட்டுச் சிந்தனை உடையவன் என்று எடுத்துக் கூறுகிறாள். 'சாவக நோன்பி' என்று அவனைப் பற்றிக் கூறுகிறாள்.

கவுந்தி அடிகள் வறு மொழியாளனையும், பரத்தை யையும் சபித்த போது குறுக்கிட்டு அவர்களைப் பொறுக்கும்படி வேண்டுகிறான்.

“நெறியில் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்”

என்று அறிவிக்கிறான். அறிவுரை கூறும் அளவுக்கு அவன் கல்வி கற்றவன் என்பதைக் காட்டுகிறது.

பெண்ணோடு பழகியவன்; ஆனால் பெண்மையை நன்கு அறியாதவன் என்றே அவனைப் பற்றிக் கூற வேண்டி உள்ளது. மாதவியின் ஒரு பக்கம் மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அவள் ஆழ்ந்த அன்பை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் கவர்ச்சியில் ஆழ்ந்தவன்; அவள் காதலை அறியவில்லை. அவளை மாயத்தாள் என்று தவறாக முடிவு செய்கிறான். பின்பு அவள் அவனை மறக்க முடியாமல் அவன் நினைவிலேயே வாழ்வதை அறிகின்றான். அவள் விட்ட கண்ணிர் பின்புதான் அவனைச் சுடுகிறது. அவள் தீது இலள்; தான்தான் தவறு செய்தது என்று முடிவுக்கு வருகிறான்.

கண்ணகியின் அழகில் மயங்கியவன் அவள் அறக் கோட்பாடுகளை அவனால் முதலில் அறிய முடியவில்லை. அவள் பெருங்குடி வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். அவள் அருங்குணங்களைப் பேசவே இல்லை. வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறக்கிறான்.

அவள் உருவத்தையும், அழகையும், அவள் தரும் இன்பத்தையும் பற்றித்தான் பேசினான். அவள் அருங் குணங்களைப் பின்னர் அறிகின்றான். “கற்பின் கொழுந்து, நீள்நில விளக்கு” என்று எல்லாம் பின்னர்தான் பேசு கிறான். அவன் பெண்மையை அறியாதவன்; அவன் வாழ்வில் பின் கண்டது பெண்ணின் பெருமை; அதனை மாதவியிடம் கண்டு தெளிகிறான். கண்ணகியை முழுவதும் அறிகிறான். வாழ்க்கைப் பள்ளியில் அவன் தெரிந்து கொண்ட கல்வி அது; பெண்மையை அறிவிக்க அவன் கருவியாகிறான்.

குன்றுபோல் இருந்த நிதியைத் தொலைக்கிறான்; அதற்குக் காரணம் அரிய பொருள் மொழிகளை மறந்தான் எனலாம். “இலம்பாடு நாணுத் தரும்” என்ற உணர்வை வெளிப்படுத்துகிறான். மறுபடியும் அவன் பெற்றோரிடம் பொருள் பெற்று நன்றாக வாழ்ந்து இருக்க முடியும். அவன் மான உணர்வு அவனைத் தடுக்கிறது.

தானே பொருளிட்ட வேண்டும். இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிறான். புற வாழ்வில் அவன் சிந்தனை போற்றத்தக்கதாக விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்பின்_கதை/கோவலன்&oldid=937571" இலிருந்து மீள்விக்கப்பட்டது