சீனத்தின் குரல்/ஜப்பானில்

விக்கிமூலம் இலிருந்து

ஜப்பானில்

அங்கிருந்து (நேராக ஜப்பானுக்குச் சென்று, பல நண்பர்கள் உதவியால் வெடி மருந்து சாமான் களை சிமிட்டி பீப்பாய்களில் அடைத்து சைனாவுக்குக் கொண்டுவந்தார். அந்த பீப்பாய்களை சீனத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழுந்து உடைந்து. தீப்பிடித்துக்கொண்டது. உடனே பரபரப்படைந்த சுங்க அதிகாரிகள், இது சன்யாட்சன் செய்த சதிதான் என தீர்மானித்தனர். உடனே சன்-யாட் சன்னைத் தேட விரைகின்றனர். இதனால் மீண்டும் அமெரிக்காவுக்கு தலைமறைவாக ஓடிப்போகின்றார். அங்கிருந்தபடியே புரட்சிக்குப் பல ஏற்பாடுகளைச் செய்து 1911-ம் ஆண்டு சீனாவுக்குத் திரும்பி புரட்சியை வெற்றிகரமாகச் செய்து மதம் பிடித்தலைந்த மஞ்சு ஆட்சியை கவிழ்த்து விட்டார். இந்தப் புரட்சிக்குப் பெருந்துணை புரிந்தவன், மஞ்சு மகாராணியிடம் முதல் மந்திரி பதவியிலிருந்த யுவான்--ஷி--கே என்பவன்தான். இந்த மாதிரி எதிரியின் கையாளிடம் உதவி பெறுவது அரசியல் மாற்றங்களில் சர்வசாதாரணமானதாகவும், புரட்சி காலங்களில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது, மேலும் பிரதமர் யுவான்- ஷி - கே மகாராணியாரின் மந்திரியாரே தவிர சன்- யாட்-சன் வகுத்தத் திட்டங்களுக்கு விரோதியல்ல. பிற்காலத்தில் வேண்டுமானால் யுவான்-ஷி-கே சன்னுக்கு விரோதமாக மாறலாம், அதுவல்ல முக்கியம். இப்போது நடந்து கொண்டிருக்கும் புரட்சிக்கு யார் யாரிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றனவோ, அவர்கள் நண்பர்களாயிருந்தாலும் சரி, பகைவர் களாயிருந்தாலும் சரி உதவி பெற்று முக்கியமான குறிக்கோளை முடிக்க வேண்டியதுதான் அரசியலின் முக்கியமான தத்துவமாகக் கருதப்பட்டதால் இந்த உதவியை பெற்றதில் ஆச்சரியமில்லையென்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்கள் பலப் பல.

மேலும் இந்த புரட்சியில் யுவான்-ஷி-கேயின் உதவி கிடைக்காமலிருந்தால் புரட்சி படைக்கும், படையின் தலைவனுக்கும் பேராபத்து வந்திருக்கும். எப்படியோ ஒருவிதமாக மஞ்சு முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஸ்தாபித்துவிட்டார்கள். மன்னர்களாட்சியின் கடைசி ஏடு காலச்சுவட்டிலிருந்து கிழிக்கப்பட்டுவிட்டது. முடிந்தது மஞ்சு சர்க்கார். முடி துறந்தாள் மகாராணி. மக்கள் துன்பத்தை விட்டார்கள். குடியரசுக் கொடி கீழ்க்கோடியிலிருக்கும் பெரிய நாட்டில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது. புதியதாகப் பெற்றெடுத்தக் குடியரசுக் குழந்தையைப் போற்றி வளர்க்க வேண்டும். இதுதான் அன்றிருந்த அரசியல் தலைவர்களின் ஒரே கவலை. நாட்டை செப்பனிடும் நற்பணியில் ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்தால், தனக்கிருந்த குடியரசுத் தலைவர் பதவியை மகாராணியாரிடம் மந்திரியாக இருந்து கொண்டே புரட்சிக்குப் பேருதவி புரிந்த யுவான்-கி-ஷே என்பவரிடம் ஒப்படைத்தார் சன்.