சீனத்தின் குரல்/பழக்கப் புரட்சி

விக்கிமூலம் இலிருந்து
பழக்கப் புரட்சி

அன்றிருந்த சீன மாணவர்கள் சிறிய ஜடையைப் பின்னிக் கொண்டிருப்பார்கள். அந்த ஜடையின் மூலந்தான் ஒருவனுக்கிருக்கும் ராஜவிசுவாசத்தைக் காட்டமுடியும் என்பது சீனத்தின் கொள்கை. ஆகவே எல்லா இளைஞர்களும் கண்டிப்பாக ஜடையைப் பின்னிக் கொண்டிருக்கவேண்டும். யாரும் அதைத் துண்டித்தெறியமாட்டார்கள். இந்த சியாங்-கே-ஷேக் ஒருவர்தான் தன் பின்னலை வெட்டி எறிந்துவிட்டார். இதை நாம் ஒரு சாதாரண விஷயம் என்போம். சீனத்தில் அப்படி இல்லை. இப்படித் துணிந்து செய்த இந்த மாணவனைச் சந்தேகித்தது சீன சர்க்கார். புரட்சிக்கு வித்தூன்றாவிட்டான் மாணவன் என்றறிந்தவுடன் ஒரே பரபரப்பு உண்டாய்விட்டது, பின்னலைக் கத்தரிப்பது அங்கே ஒரு சாதாரண விஷயமா என்ன. சீன தேசத்தான் ஒருவன் பின்னலை வெட்டியெறிந்தான் என்றால். மஞ்சு சர்க்காரின் மணிமுடியைத் தட்டிவிட்டான், சிங்காதனத்தைத் தூள் தூளாக்கினன், பீகிங் கோட்டையை முற்றுகையிட்டான். சிறைக் கதவுகளைத் திறந்துவிட்டு விட்டான், சட்டத்தை உடைத்தான், சர்க்காரைத் திட்டினான். சண்டமாருத இராணுவத் தமுக்கின் வாயைக் கிழித்தான் என்பதைப்போன்ற பயங்கரச் செயலாயிற்றே. ஆகவே சர்க்காரின் கண்கள் ஷேக்கின் மேல் படாத நேரமில்லை,