சுழலில் மிதக்கும் தீபங்கள்/9

விக்கிமூலம் இலிருந்து
9

நான்காம் நாள் மாலையில் கிரிஜா, பாலத்தருகில் படித்துறையில், கால்களை நீரில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். சின்னஞ்சிறு இலைப்பகுதிகளில், பூக்களின் இடையே, தீப ஒளிகள் மிதந்துவரத் தொடங்குகின்றன. ஒ... மாலை ஆரத்தி...

காவித் துறவியானாலும், கட்டழகியானாலும், பஞ்சுப் பிசிறுகளாய் நரைத்துத் தேய்ந்த கிழவியானாலும்,

இந்தத் தீப வழிபாட்டை நீர்ப்பெருக்குக் காணிக்கை யாக்குகின்றனர்.

அந்தத் தீபங்கள் இலை, மலர், சுற்றிலும் முழுக்கும் நீர், என்றாலும் இலைநடுவே சில ஒளித்திரிகள் சங்கிலியை அறுக்கும் வேக ஒட்டத்திலும் சுழிப்பிலும் அணையாமல் செல்கின்றன. பாலம் கடந்து சுழற்சியிலும் வீழ்ச்சியிலும் கூட அணையாது செல்லும் தீபங்கள் பாலம் கடந்து வந்தாலே அவற்றைக் குழந்தைபோல் வாழ்த்துகிறது உள்ளம்.

நாள்முழுதும் அவசரத்திலும் பரபரப்பிலும் திரியும் இளம் தலைமுறையினரை நினைக்கிறாள்.

கவியும் சாருவும் அறையில் எப்போதும் பரபரப்பான ‘ட்ரம்’ ஆட்டபட்ட இசையைப் போட்டுக்கொண்டு பழகுகிறார்கள். அமைதியாக இருத்தல், போர் என்று அலுப்பூட்டுவதாகக் குடைகிறது. தந்தை ‘வாக்மன்’ செட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த அமைதி கூட்டாத வெளி இசையைக் காதுக்குள் வாங்கி வேறு அநுபவிக்க வேண்டுமா? அதைப் போட்டுக் கொண்டு, பாடம் படிக்கிறாள்...அந்தக் குழந்தைகள் வாழ்க்கையாகிய இந்த நீரோட்டத்தில், எதிர்காலமாகிய ஒளித்திரியை எப்படி ஏந்திச் செல்லப் போகிறார்கள்?

‘டிச்சர்...? நீங்க கிரிஜா டீச்சரில்லே?...’

திடுக்கிட்டாற் போல கிரிஜா திரும்புகிறாள். கூப்பிட்ட இளைஞன், வற்றி மெலிந்த உடலில் முப்புரி நூல் ஒட்டாம லிருக்க ஒற்றைச் சுற்று வேட்டியுடன் காட்சியளிக்கிறான். கருவலான உடல்வாகு. மொட்டையான தலையின் உச்சியில் வட இந்தியச் சமயாசாரச் சின்னமான இரண்டொரு முடி நீட்டிக் கொண்டிருக்கிறது.

‘யாரப்பா..? எனக்குப் புரியலியே?...’

‘நீங்க கிரிஜா டீச்சர் தானே?’

‘ஆமாம்.?’

‘நான்தான் டீச்சர், தருமராஜன், நீங்க தருமம்னு கூப்பிடுவேள்... சாவித்திரி மாமி பிள்ளை... நினைப்பில்லையா...?’

‘ஒ...!’

அவனுடைய தாய் நினைவில் வருகிறாள். வரிசையாக எட்டுக் குழந்தைகளுக்குத் தாய். புரோகிதப் பரம்பரையில் வந்து, ‘சரஸ்வதி’யின் பார்வையை எந்த வகையிலும் பெறாமல், வெறும் தீனிப் பட்டறையாக வயிறு வளர்த்து, அதன் காரணமாக நோயிலே வீழ்ந்த தந்தை. அவனுடன் எட்டுக் குழந்தைகளையும் காப்பாற்ற, கல்லுரலைக் கட்டி இழுத்து, அப்பளக் குழவியை ஒட்டி, இரும்புலக்கை பிடித்து, தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த அந்த அன்னை-கிரிஜாவுக்கு அவ்வப்போது வந்து உதவுவாள். இந்தத் தருமனுக்கும் இவன் சகோதரி விமலுவுக்கும் கல்வி பயிற்றும் பொறுப்பை அவள் ஏற்றிருந்தாள்.

விமலு தட்டிமுட்டி ஒன்பது வரை தேறி வந்தாள். இவன் ஏழையே தாண்டவில்லை.

‘அம்மா செத்துப் போயிட்டா டீச்சர். அப்பாவும் அப்பவே போயிட்டார். நாணா கல்யாணம் பண்ணிண்டு பங்களூர் போயிட்டான். விமலுதான் கான்வெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. சிவகாமி, சச்சு, ராஜூ எல்லாரும் ஊரில் இருக்கா, நான் இப்படி ஸ்வாமிகளோட வந்துட்டேன்...’

‘...இங்க நீ என்ன பண்ணுவே? வெறும சாப்பாடு போடுவாளா?’

‘இல்ல உச்சர், எடுபிடியா ஏவிய காரியமெல்லாம் செய்யனும்...நீங்க டில்லிலேந்து வந்திருக்கேளா டீச்சர்...?’

‘ஆமாம்...’

‘நீங்க ஸ்வாமிகளக் கிட்டப் பார்த்துப் பேசினேளா டிச்சர்...?’

அவள் தண்ணிரைப் பார்க்கிறாள். இந்த சத்தியங்களுக் கப்பால் எந்த நினைப்பும் எனக்கு இல்லை என்பதை எப்படிச் சொல்வது?

‘நீங்க வாங்க டீச்சர். நான் கிட்டக் கூட்டிட்டுப் போய்த் தரிசனம் பண்ணி வைக்கிறேன்...’

தன்னாலும் அவளுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற ஆர்வம், அவன் முகத்தில் ஒளிவிடுகிறது.

‘இருக்கட்டும்பா, சந்தோஷம். நான் வரப்ப சொல்றேன்...’

‘...நான்...அதோ, அந்தக் கட்டிடத்தின் முன்புற ரூமில் தான் அநேகமா இருப்பேன்...பூஜையின்போது வாங்கோ டீச்சர்...!’

வாழ்க்கை எந்தெந்த வகைகளில் மனிதர்களைத் திசை திருப்புகின்றன! இந்தப் பையனின் மனித நம்பிக்கையை மதிப்பதற்காகவேனும் அவள் அவன் சொல்லும் பூஜைக்குப் போகவேண்டும்!

அன்று கெளரியம்மாளும் கணவரும் இரவு உறங்க வர நேரமாகிறது.

‘ஏம்மா? உன்னைத் தேடினேன். காணலை, ருஷிகேசம் போயிட்டு வந்தோம். கங்கையை எங்கே பார்த்தாலும் அவ்வளவு அழகாயிருக்கு. அக்கரைக்கும் இவரை நடத்திக் கூட்டிண்டு போனேன். கோவிலெல்லாம் பார்த்தாச்சு...நாலு நாள் முழுசாயிட்டுது. ஒரே ஒரு குறைதான் ஆனால்...’

‘என்ன மாமி?...கங்கைக் கரைக்கு வந்துட்டுக் குறையோடு போறது?’

சுவாமிகளக் கிட்டத்தில் பாக்கணும். இவருக்கு ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசை. எங்க மாமனார் இருக்கறச்ச எங்க ஊருக்கு வநது பூஜையே நடந்திருக்கு. முன்சீப்போ இல்லையோ? எல்லாம் இவா கைதான். அவர் பேர் சொன்னாலே சுவாமிகளுக்குத் தெரியும். சொல்வி ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு ...’

‘ஒ, இதுதானா மாமி?...நாளக்கிக் காலம நான் ஏற்பாடு செய்யறேன். இங்க ஒரு பையன் இருக்கிறான். அவன் என் பழைய ஸ்டுடன்ட். கஷ்டமேயில்லை...!’

மறுநாள் காலையில் ஏழரை மணிக்குள் நீராடல், காபி எல்லாம் முடித்துக் கொண்டுவிட்டார்கள். தட்டில் சீப்புப் பழம், கற்கண்டு என்று காணிக்கைப் பொருட்களை ஏந்திக் கொண்டு தருமராஜன் குறிப்பிட்ட விடுதிப் பக்கம் வருகிறார்கள். கிரிஜா உள்ளே செல்கிறாள்.

‘தருமராஜன் இருக்கிறாரா...’

அது அலுவலக அறை போலிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்காரர் ஒருவர், தரைச்சாய்வு மேசையின் பக்கமிருந்து அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.

‘தருமராஜனா? ... அப்படி இங்கு யாரும் இல்லை... நீங்க யாரு?... எங்கேருந்து வராப்பல?’

‘நா...ன் எனக்கு...டெல்லிலேந்து இப்ப வரேன்...’ அவள் தயங்கிச் சொல்லி முடிக்குமுன் உள்ளிருந்து தருமனே வந்து விடுகிறான்.

‘அடடா, வாங்க டீச்சர், வாங்க!... சுவாமிகளப் பார்க்கணுமா?’

‘இவனைத்தான் கேட்டேளா.. அவருடைய ஆர்வம் விழுந்து விடுகிறது. ஏண்டா, உன்பேர் தருமராஜனா?. இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒருபேரை ஏத்திவச்சா...?

‘நீங்க வாங்க டீச்சர் ...! அவா...எங்க டீச்சர், மாமா, பெரிய... டீச்சர். இங்க டில்லில இருக்கா...’

‘சரி சரி கூட்டிண்டுபோ.’

கிரிஜா, கெளரியம்மாள், நியம ஆசாரங்கள் துலங்கும் கோலத்துடன் அவள் கணவர் ஆகியோருடன் அவன்முன் செல்கிறாள்.

சுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி இருவர் உடன் இருக்கின்றனர். அவருக்கு முன் அடுக்கான கோப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறொருவர் அவர் வீற்றிருக்கும் பலகையின் கீழ், பணிவாக, அவர் பணிக்கும் உத்தரவுகளை ஏற்று கோப்புக் கடிதங்களுக்குப் பதில் எழுதச் சித்தமாக அமர்ந்திருக்கிறார். ஜன்னலாகத் தெரியும் வாயிலின் முன் இவர்கள் நிற்கின்றனர். கெளரியம்மாளின் கணவர், ஏதோ வடமொழி சுலோகத்தை முணமுணப்பைவிட உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சுவாமிகளுக்கு முன், பணிவும் குறுகலுமாகக் கூனிக் கைகுவித்து தருமன் நிற்கிறான். ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என்று ஒடுகின்றன. இவர்கள் நிற்பதை அறிந்தாற் போலவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. கிரிஜா தருமனின் செவியில் சுெகிசுக்கிறாள்.

‘தருமா, இப்ப நேரமில்லைன்னா, பின்னாடி பார்க்கலாமே?’ அவன் சாடையாக, ‘இப்ப முடிஞ்சிடும் டீச்சர்... என்று சொல்வதற்குள் ஒராள் ஒரு மூட்டை அரிசியைச் சுமந்து கொண்டு வந்து காணிக்கைபோல் வைக்கிறான். அந்தச் சிறு சார்ப்பில் தட்டுத்தட்டாக, ஆப்பிள், கொய்யா. மாதுளை, வாழை என்று கனிகள் வருகின்றன. கற்கண்டு, பாதாம், திராட்சை, பறங்கி, பூசணி, வெண்டை, பருப்பு, போன்ற சாமான்கள் வந்து நிறைகின்றன. கூடவே சானல் சென்ட் மணம்...ஒ...ரோஜாமாமியும் அவள் கணவரும்தான்!

கிரிஜா திடுக்கிட்டாற்போல் ஒரமாக ஒண்டிக் கொள்கிறாள். எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல் சுவாமிகள் முகம் மலரத் திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் விழுந்து வணங்குகின்றனர். ரோஜாமாமி, வயிரங்கள் டாலடிக்க, சாயம் பூசிய கூந்தல், நீராடிய ஈரத்துடன் பூ முடிச்சாய்ப் புரள, சாதியை அறிவுறுத்தும் ஆசாரச்சேலைக்கட்டுடன், பணிவாக நிற்கிறாள்.

‘மலைபோல வந்தது, ஸ்வாமி அநுக்ரகத்தால் பணிபோல போயிட்டுது...’

மாமி கண்ணிர் தழுதழுக்கக் கரைகிறாள்.

‘எல்லாரும் க்ஷேமந்தானே?’

‘ஆமாம், குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு; பெண்ணும் ஸ்டேட்ஸ்லதான் இருக்கா’

‘ராமகிருஷ்ணன்னு... யு. எஸ். ஏ. ல. இருக்கார். அவர் பொண்...பெரியவா ஆசீர்வாதம், தோணித்து, பார்க்கணும் பிட்சை பண்ணி வைக்கணும்னு...’

மாமாவும் மாமியும் விழுந்து பணிய, சுவாமிகள் குங்கும அட்சதை பிரசாதம் கொடுத்து ஆசி வழங்குகிறார்.

நெருக்கி அடித்துக் கொண்டு நிற்காமல் கிரிஜா வேறொரு பக்கம் நகர்ந்து கொள்கிறாள். இந்த அட்சதைப் பிரசாதத்தை கெளரி அம்மாளும் வாங்கிக் கொள்கிறாள்... மடமட வென்று சாமான்கள் அகற்றப்படுகின்றன.

‘எல்லாரும் நகருங்கோ சுவாமிகள் பூஜைக்குப் போகிறார்...!’ விரட்டி அடிப்பதுபோல் ஒரு காவலாளி அந்தச் சிறு சார்ப்பில் யாரும் நிற்காதபடி விலக்குகிறான்.

கிரிஜா வெளியே வந்து விட்டாள். முக்குக் கண்ணாடி எழுத்தர் யாரிடமோ சொல்வது காதில் விழுகிறது.

‘ஸ்டீல் ஸெகரிடரியா இருந்து இப்பதா ரிடயர் ஆகி எதுக்கோ சேர்மனா இருக்கார். அவா, அந்தம்மா, ரெண்டு பேருக்கும் ரொம்ப ஈடுபாடு. அந்தம்மாவும் சும்மா சொல்லக் கூடாது, எப்ப போனாலும் டில்லில சாப்பிடாம விடமாட்டா, ரொம்ப தாராளம். பணம் பதவி இருக்கிறவாகிட்ட இப்படி ஒரு குணம் பார்க்க முடியாது... என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, இப்ப ஸி. பி. ஐ. ரெய்டுன்னு ஒண்ணச் சொல்லி வேண்டாதவாளுக்கு ஒரு பேர்க்குழப்பம் கொண்டுவரது வழக்கமாப் போச்சு... இவா தெக்குத்திக்காரான்னு பொறாமை புடிச்சவன் எவனோ கிளப்பி விட்டுட்டான். ஒரு சுக்குமில்ல... கைங்கர்ய சிரோமனின்னு படடமே குடுத் திருக்கே? அவாளுக்குச் சோதனைன்னு வரதுதான் சகஜமாப் போயிட்டுது... அதான் தோணித்து, ஒடனே காரைப் போட்டுண்டு பிட்சை பண்ணி வைக்கணும்னு ஓடி வந்துட்டா...’

கிரிஜாவுக்குக் கால்கள் அங்கேயே நிலைக்கின்றன.

ஸி. பி. ஜ. ரெய்ட்...மூளையில் மின்னல்கள் பளிச்சிடுகின்றன. அந்தச் சிவப்பு வேலைப்பாட்டுப் பெட்டி-அதில் என்ன இருந்திருக்கும்? அதனால்தான் அது இவர்கள் விட்டுப் பீரோவில் இடம் பெற்றதோ? சாமுவுக்குத் தெரிந்து தான் இந்த மறைப்பு நடந்திருக்கும். பெட்டியில் இருப்பவை. பல இலட்சங்கள் அல்லது கோடி பெறத் தகுந்தவையாக இருக்க வேண்டும்-என்னவாக இருக்கும்?

திடீரென்று குளிர் சிலிர்ப்பாக ஒருணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. ரோஜாமாமி அவளைப் பார்த்திருப்பாளோ? இங்கே சந்தித்துக் குற்றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க விடுவிடு வென்று அவள் வெளியேறுகிறாள். கெளரியம்மாளையும் கணவரையும் நினைத்தால்கூடப் பிரச்னை கிளம்பிவிடுமோ என்று தோன்றுகிறது. நிச்சயமாகப் பழமை வாதியான அந்த அம்மாள், இவள் வீட்டைவிட்டு வந்திருப்பதை ஆமோதித்திருக்கமாட்டாள். இவள்மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சரிந்துவிழக்கூடிய சந்தர்ப்பம் நேரிடும். இவள் காது மூக்கில் இல்லாமல், வெறும் சங்கிலிக் கொடியுடன் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். கல்யாணமாயிருக்கோ என்று கேட்கவில்லை. கெளரி அம்மாள் இங்கிதம் அறிந்தவள்தான். தங்கள் காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அநேகமாக மறு நாளே அவர்கள் ஊர் திரும்பக்கூடும்.

இப்போது கிரிஜா என்ன செய்யப் போகிறாள்?