சேதுபதி மன்னர் வரலாறு/i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்
கும்பெனியாருக்கு ஆண்டுதோறும் 3,20,000 ரூபாய் பேஷ்குஷ் தொகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு 21.02.1803-ல் இராமநாதபுரம் ஜமீன்தாரினியாகப் பொறுப்பேற்றார் இராணி மங்களேஸ்வரி நாச்சியார்.[1] தொடர்ந்து இவரும் தமது முன்னோர்களைப்போல ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். திருஉத்திரகோசமங்கை, பள்ளிமடம், இராமநாதபுரம், நயினார் கோவில் ஆகிய ஆலயங்களுக்கு ஏராளமான நன்கொடை வழங்கினார். மதுரையில் உள்ள மதுரை ஆதீனத்தின் திருஞானசம்பந்த மடத்தின் சீரமைப்பிற்கும் மிகவும் உதவினார். தனது வளர்ப்பு மகள் சேசம்மாளின் பெயரில் திருப்புல்லாணியை அடுத்துள்ள அகத்தியர் குட்டத்தில் சீனிவாசப் பெருமாளுக்குச் சிறிய திருக்கோயில் ஒன்றை எடுத்துத் திருப்பணி செய்ததுடன் அக்கோயிலின் பராமரிப்பிற்காக நெடிய மாணிக்கம் என்ற ஊரையும் சர்வமான்யமாக வழங்கினார்.[2] மேலும் மதுரை வழியிலுள்ள போகலூரை அடுத்து பயணிகளுக்காக அன்னசத்திரம் ஒன்றையும் அமைத்தார். (சத்திரக்குடி எனத் தற்போது இந்த ஊர் வழங்கப்படுகிறது.) வேத விற்பன்னர்களுக்காகப் பல கிராமங்களைச் சர்வமான்யமாக வழங்கியதை மங்களேஸ்வரி நாச்சியாரின் 96 தர்மாசனங்கள் என சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஆட்சிக்கு வந்த அதே ஆண்டிலேயே இவரது கணவரான இராமசாமித் தேவர் காலமாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்திலிருந்து கொழும்பு வந்த ஜார்ஜ் வாலண்டினா பிரபு என்பவர் இராமேஸ்வரம் திருக்கோயிலைப் பார்வையிட்டு விட்டு, இராமநாதபுரம் ராணியைச் சந்தித்த விபரத்தை கி.பி. 1804-ல் வெளியிட்ட அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3] இவர், தன் கணவரின் மருமகனான அண்ணாசாமி என்பவரை கி.பி. 1807-இல் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டார். அண்ணாசாமி மைனராக இருக்கும்போது ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி. 1812-இல் காலமானார்.