சொன்னார்கள்/பக்கம் 121-128

விக்கிமூலம் இலிருந்து

முதல் தாரம் தப்பிப் போகவே என் தகப்பனர் இரண்டாம் தாரமாக வயது வந்த ஒருபெண்ணை விவாகம் செய்து கொள்ள விரும்பினார். அன்றியும் அப்பெண் சிவப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்று கூறினாராம். அப்படிப்பட்ட பெண்ணாகக் கிடைக்கவே என் தாயாரை விவாகம் செய்து கொள்ள நிச்சயித்தாராம். இவ்விவாகத்துக்கு இடையூறாக ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது. அதாவது அக்காலத்திய வழக்கத்தின்படி கலியாணப் பெண்ணின் ஜாதகத்தை வரவழைத்துச் சென்னையிலுள்ள இரண்டு மூன்று பெரிய ஜாதகத்தில் நிபுணர்களாகிய ஜோதிடர்களுக்குக் காட்ட, அவர்களெல்லாம் இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு குறைகள் இருக்கின்றன. ஒன்று அமங்கலியாய்ப் போவாள். இரண்டு, குழந்தைகள் பெறமாட்டாள். இதற்குக் கழுத்துப் பொருத்தமில்லை வயிற்றுப் பொருத்தமில்லை என்று சொன்னார்களாம். இதைக் கேட்டும் என் தாயாரையே மணக்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாய் மணம் செய்து கொண்டார். கழுத்துப் பொருத்தமில்லை என்றதற்கு நேர்விரோதமாக என் தாயார் என் தகப்பனுருக்கு ஷஷ்டி பூர்த்தி-அதாவது அறுபது வயது கலியாணம் ஆனபிறகு, ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கல்யங்களுடன் சுமங்கலியாகச் சொர்க்கம் சென்றனர். வயிற்றுப் பொருத்தமில்லை என்றதற்கு நேர் விரோதமாக என் தாயாருக்கு நாங்கள் எட்டு மக்கள் பிறந்தோம். நான்கு பிள்ளைகள், நான்கு பெண்கள். அதன் பிறகு எங்கள் விவாகத்திற்கெல்லாம் யாராவது எங்கள் ஜாதகத்தைக் கேட்டால் மேற்கண்ட கதையைச் சொல்லி ஜாதகமே வைப்பதில்லை என்று சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன்.

— நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்


நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள்.

—சாக்ரடிஸ் (கிரேக்க அறிஞர்)

நண்பனே நான் இறந்துவிட்டால், எனக்காகத் துக்கப் பாடல்களைப் பாடவேண்டாம். என் கல்லறை மீது ரோஜா செடி வேண்டாம். நிழல்தரும் மரங்களையும் நடவேண்டாம். ஆனால் பச்சைப் புல்லைப் பயிரிடுங்கள். அதன் பசுமை தங்களுக்கு என்னை ஞாபகப்படுத்தட்டும்.

— கிறிஸ்டியா தாருஸ்லெட்டி


நான் இயற்கையின் வரப்பிரசாதம் பெற்றவன் என்று இங்கே பாராட்டினார்கள். அப்படி நான் எண்ணவில்லை. உங்களில் ஒருவனாகவே நானும் பிறந்தேன். நாம் சொற்களிலும், வண்ணங்களிலும், இசையிலும், கலாசாரத்திலும், போற்றிப் புகழுகிறோமே அந்த இயற்கை, என் கனவுகளில் இல்லை! நாம் வியந்து போற்றும் அவ்வியற்கை, தனது வெப்பத்தாலும், வெள்ளத்தாலும். பூகம்பத்தாலும் வியாதியாலும் நம்மை வதைக்கிறது. இயற்கையில் குடி கொண்டிருக்கும் நமது எதிரிகள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். அப்படியானால், நான் இயற்கையின் அருள் பெற்றவன் என்று கூறமாட்டிர்கள்! பார்லி பயிரில் கூட அழகிய புல்லுருவிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள்.

—மாக்ஸிம் கார்க்கி

(1928-ல் திமிலிஸி நகரில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்)

என் மனம் உருக்குத் துண்டைப் போன்றது. அதில் எழுதுவது கடினம். ஆனால் எழுதி விட்டால், என்றுமே அழிக்க முடியாது.

—ஆபிரகாம் லிங்கன்

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)


அரசியல் பாரம்பரியம் இருந்துதான் தீரவேண்டும் என்பதில்லை. ஒரு வகைக்கு அது இல்லாமல் இருப்பதுதான் நல்லது.

—ஈ. வி. கே. சம்பத் (1-9-1974)

உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன்.

—லார்டு மெக்காலே

(உலகப் புகழ்பெற்ற மேதை)

எனக்கு ஒரு தலைப்புத் தந்தால், அதை நான் இரவும், பகலும் ஆழ்ந்து படித்து விடுவேன். என் உள்ளமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். பிறகு என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து அனைவரும் ‘அறிவுப்பழம்’ என்று பாராட்டுவார்கள் ஆனால் அது அறிவின் பழமல்ல, உழைப்பிற்கும் சிந்தனைக்கும் விளைந்த கனியாகும்,

—எமில்டன்

(புகழ்பெற்ற பேச்சாளர்)

நான் எந்த மேடையிலும், எந்தச் சமயத்திலும் மனச் சோர்வடைவதில்லை; ஒரு காரியத்தைச் சாதிக்க முதலாவது வேண்டப்படுவது கடினமான உழைப்பு; இரண்டாவது தொடர்ந்து படித்தல்; மூன்றாவது பகுத்தறிவு.

—தாமஸ் ஆல்வா எடிசன்

(உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி)

நான் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நான்தான் மிக இளைய அங்கத்தினர் என்று உணர்ந்து கொண்டேன். அனுபவமற்ற, மற்ற இளைஞர்களைப் போல், “பேசுவதெப்படி?” என்பதை அறியாமல் திணறினேன். திக்குமுக்காடினேன். என் இளம் பருவத்தில், என் திறமைகளில் நம்பிக்கையற்றும், பேச தடுமாற்றமடைந்து கொண்டுமிருந்தேன். என் உள்ளத்தையும், ஆத்மாவையும் மிகுந்த அக்கறையோடு பண்படுத்திக் கொண்டேன்.

—ரூஸ்வெல்ட்

(முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி)

அந்தக் காலத்தில் நான் படித்த புத்தகங்களுள் என்னுடைய நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் ஒழுங்கு படுத்தியது பிர்டெளசி என்பவர் எழுதிய ஷானாமாவைத் தவிர, ஸொரோஸ்ட்ரியர்களுடைய கடமைகள் என்னும் குஜராத்தி புத்தகமுமேயாகும். மனம், வாக்கு, செய்கை ஆகிய இவைகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே நான் அவைகளிலிருந்து அறிந்து கொண்ட கற்பனைகளாகும். ஆனால் நான் அதிகமாய்ப் படித்து மகிழ்ச்சியடைந்தது ஆங்கில நூல்களே. வாட் என்பவர் எழுதியுள்ள ‘மன வளர்ச்சி’ என்னும் நூலைப் படித்ததில், எப்படி எழுதவேண்டும், எழுதுவதில் நடை எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கிற்று. அதாவது, ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் தேவையில்லாமல் பல சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, தெளிவாக எழுதுவது ஆகிய இவைகளே.

—தாதாபாய் நெளரோஜி (1904)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)

கடவுளைக் காரணமாக வைத்து இராசகோபாலன் என்று பெற்றாேர் எனக்குப் பெயரிட்டனர். நானோ, பாரதிதாசன் என்னும் கனக சுப்பு ரத்தினத்தைக் காரணமாக வைத்து சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டேன். இந்த நீண்ட பெயரை என் நண்பர்கள் யாரும் சுருக்கவில்லை. நானே சுரதா என்று சுருக்கிவைத்துக் கொண்டேன்.

—கவிஞர் சுரதா (10-3-1958)


கடவுளின் படைப்பில், முட்டை ஒன்றுதான் கலப்படம் செய்ய முடியாத ஒரு உணவு. அதற்கு அத்தகைய மூடி ஒன்று அமைந்திருக்கிறது,

— கிருஷ்ணப்பா (11-1-1958)

(யூனியன் உதவி உணவு அமைச்சர்)

1907-ஆம் ஆண்டு புதுச்சேரியில் கவி சுப்பிரமணிய பாரதியார் வீட்டில் என் அரசியல் வாழ்வு தொடங்கியது. அப்போது என் உடம்பிலிருந்த ரத்தத்தை எடுத்து ஒரு வாக்குறுதி எடுத்துக் கொண்டேன். அன்றைய தினம் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அழித்தே தீரவேண்டுமென்று வைராக்கியம் செய்து கொண்டேன். அந்தக் கொள்கையிலிருந்து இதுநாள் வரையிலும் நான் நழுவியதே கிடையாது. அதுவே எனது ஒரே நோக்கமாகவும் இருந்திருக்கிறது.

—டாக்டர் P. வரதராசுலு நாயுடு (1-6-1947)

(தமது அறுபதாம் ஆண்டு விழாவில்)


தலைவலிக்கேகூட பல்வேறு மாருந்துகள் உண்டு. சில எரிச்சல் தரும்; சில குளிர்ச்சியாய் இருக்கும். மருந்து தடவுவதிலும் பலவகை உண்டே! வேண்டியவர்கள் தடவினால் வலியெல்லாம் பறந்துபோகும்! வேறு யாராவது தடவினால், பழைய வலியே பரவாயில்லை’ என்று சொல்லத் தோன்றும். என்னுடைய முறை, வலி பறந்து போகிற மாதிரி மெல்லத் தேய்க்கிற முறை!

—அறிஞர் அண்ணா (7-3-1967)


1865-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் நாள் சாயங்காலம், புகழ்பெற்ற காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரது பள்ளிக்கூட சபா மண்டபத்தில் கூடியசபைக்கு யானும் போயிருந்தேன். அவ்விடத்தில் அநேக கனவான்களும் பண்டிதரும் கூடி, சில நாளைக்குமுன் பெங்களூரில் ஒரு பிராம்மண சிரேஷ்டர் குடும்பத்தில் நடந்த புநர் விவாகத்தின் யுக்தா யுக்த முதலாகிய விஷயங்களைக் குறித்துப் பிரசங்கம் நடந்து கொண்டிருக்கப்பட்ட சமயத்தில், எனது புல்லறிவுக் கெட்டியிருக்கிற சங்கதிகளையும் அபிப்பிராயங்களையும் நான் அவ்விடத்தில் எடுத்துப் பேசமுடியாமல் போய்விட்டது.

சைதாபுரம் காசி விசுவநாத முதலியார் (1870)

நான் சிறு பையனாய் இருந்தபொழுது சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் குடிப்பது வழக்கம். ஒரு நாள் வீட்டில் சாராயம் இல்லை. எதிரிலிருந்த கடையில் போய்க் குடித்து வரும்படி என்னை அனுப்பினார்கள். எனக்கு அப்பொழுது அங்கே போனதில் ஏற்பட்ட அவமானத்தையும் வெட்கத்தையும், ஒரு பொழுதும் மறக்க முடியாது. அது போதும் போதுமென்று ஆய்விட்டது. பிற்பாடு சாராயக் கடையில் நான் கால் வைத்ததே கிடையாது.

—தாதாபாய் நெளரோஜி (1904)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)


நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வந்தேன். எனக்கு இஷ்டம் இருக்கிறதோ இல்லையோ சும்மா இருக்கமாட்டார்கள் என் அம்மா. என் தலையில் எண்ணெயைக் கொட்டிவிடுவார்கள்.அதனால் அப்போதெல்லாம் சரியாகவே தலைமுழுகி வந்தேன். ஆனால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்ட பிறகு, அப்படி முடியவில்லை.

—அறிஞர் அண்ணா (19-2-1966)


உயர்சாதிக்காரர்களே உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் நீங்கள் மாறவில்லையானல், எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் புத்த மதத்தில் சேரவேண்டிய நிலை ஏற்படும். என்னப் பொறுத்த வரையில் நான் புத்தமதத்தில் சேர வேண்டிய உரிய நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

—பசவலிங்கப்பா (1973)


எழுத்தாளர் உலகில் நான் யாரையும் விரோதித்துக் கொள்வதில்லை. என்னை யாராவது விரோதி என்று எண்ணிக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நான் என்ன செய்வது?

—கல்கி

இப்பொழுது இளைஞர்களாய் இருப்பவர்கள்தான் நாளை பெரியோர்களாக வேண்டியவர்கள். இவர்கள்தான் இன்னும் சிலவாண்டுகளுள் நாட்டை ஆளப் போகிறவர்கள். தலைவர்களாய்த் திகழப் போகிறவர்கள். கண்ணாடி தன்னை நோக்குவார் யாரோ,அவர்தம் முகத்தைக் கள்ளங்கபடின்றிக் காட்டுகின்றது. அத்தன்மைத்தேதான் இளைஞர்களும், அவர்களை நல்வழியில் திருப்ப வேணடுமென்றால் திருப்பலாம். தீயவழியில் திருப்ப வேண்டுமென்றால் திருப்பலாம்.அவர்களை அடிமை வாழ்க்கையில் அமிழ்த்த வேண்டுமென்றால் அமிழ்த்தலாம். விடுதலை வழியில் புகுத்த வேண்டுமென்றால் புகுத்தலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த நெப்போலியன் அறிவுள்ளவனானான். வீரன்னான், ஆனால் அவன் அண்ணன் ஜோசப்போ, கோழையானான். மூடளனான். காரணம் எண்ன? நெப்போலியன் கருப்பத்திலிருந்த காலத்து அவன் தாயார் வீரத்திறன் நிகழ்ச்சிகளைப் படித்து, அவ்வீரத்திறனைக் கருப்பத்திலிருந்த நெப்போலியனுக்கு ஏற்றினாள். ஆனால் ஜோசப் கருப்பத்திலிருந்த காலத்திலோ அவள் சோம்பேறியாய் இருந்தாள். ஆகையினாற்றான் நெப்போலியனுக்கும், ஜோசப்புக்கும் அத்துணை வேற்றுமை.

—ஜே. எஸ். கண்ணப்பர் (8-5-1927)

(மாயவரம் இளைஞர் மாநாட்டில்)


என் தாய் நிரம்ப தெய்வபக்தி உள்ளவர்கள் அமெரிக்கர்கள் சந்திரனில்போய் இறங்கிய செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கக் கேட்டு மிகவும் கவலைப்பட்டுப் போனார்கள். என்னைக் கூப்பிட்டு “தம்பி நாம் வணங்கும் சந்திரனை, ஈஸ்வரன் தலையில் உள்ள சந்திரனை,அமெரிக்கர்கள் பூட்ஸ்காலால் மிதித்து விட்டார்களே!” என்று சொல்லி வருத்தப்பட்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த என்னால் முடியவில்லை.

—தொழிலதிபர் நா.மகாலிங்கம்

நான் சிறு பையனாக இருந்தபோது ‘கிரிக்கெட்’ விளையாடுவேன். அவ்விளையாட்டில் மிகவும் கெட்டிக்காரன் என்று எனக்குப் பெயரும் உண்டு. நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, வெயிலைக்கூட கவனியாமல் மத்யானம் சாப்பாட்டிற்காக விடும் அரைமணி நேரத்தில்கூட நாள்தோறும் விளையாடுவது வழக்கம்.

—தாதாபாய் நெளரோஜி (1901)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)


நான் படவுலகில் முன்னுக்கு வர நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளே காரணம். அவர்தான் துணிந்து முதலாவதாகத் தம்முடைய பராசக்தி’ என்ற படத்தில் கதாநாயகனுக நடிக்க என்னை ஏற்பாடு செய்தார். எனக்குக் கூட அவருடைய துணிவுக்குத் தெம்பூட்ட முடியுமா என்ற கவலை உள்ளூர இருந்து வந்தது.

—நடிகர் சிவாஜிகணேசன் (1-1-1957)


ஆங்கிலேயரையடுத்து உறவாடாதிருந்த தமிழ்ச் சிங்கங்கள்; நல்லூர் ஆறுமுக நாவலர், மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்து வீரக் கவிராயர். இவர்கள் கொஞ்சக் காலத்துக்கு முன்தான் தேகவியோகமாயினர். இச்சிங்கங்களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ் முனிஷிகளாக இருக்கிறார்கள்.

—டேவிட் ஜோசப் (1897)

(ராஜமந்திரம் கல்லூரிப் பேராசிரியர்)


சமயப் படிப்பை ஆதரிப்பவர்களுள் நான் ஒருவன். டாக்டர் அன்னிபெசன்ட் தோற்றுவித்த கல்வி நிலையங்களில் நான் பயின்றவன். அங்கு சமயப் படிப்பு கட்டாய பாட்மாக இருந்து வந்தது. ஆகையால் சமய அறிவின் அவசியத்தை நான் நன்கறிவேன் இன்றும்அதன்தேவையை உணர்கிறேன்.

-ஸ்ரீபிரகாசா (27-10-1956)

(முன்னாள் தமிழக ஆளுநர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_121-128&oldid=1009835" இலிருந்து மீள்விக்கப்பட்டது