சொல்லின் கதை\சொல்லின் வழக்கு

விக்கிமூலம் இலிருந்து


ஒரு பையனுக்குக் கருப்பையா என்று பெயர் வைக்கிறார்கள். அவனை எல்லோரும் 'கருப்பையா, கருப்பையா' என்றே அழைக்கிறார்கள். அவன் உண்மையாகவே கருப்பாக இருக்கிறான். அதனால்தான் அவனுடைய பெற்றோர்கள் அவனுடைய கருப்பு நிறம் பற்றிய அந்தப் பெயர் வைத்தார்கள். ஆனால் அவனைக் கருப்பையா என்று அழைக்கிறவர்கள் அந்த நிறத்தை அடிக்கடி நினைக்கிறார்களா? இல்லை, காரனத்தை நினைக்காமலே மற்றவர்கள் கருப்பையா என்று அழைக்கிறார்கள். ஓர் ஊமைப் பையனை நாவுக்கரசு என்று குறிப்பிடுகிறார்கள். பேச நாக்கு இல்லாதவனை நாவுக்கரசு என்று சொல்லுகின்றோமே என்று யாரும் கவலைப்படுவதில்லை. கோபாலன், முருகையன், முனிசாமி என்னும் பெயர்களைப் போல இந்தப் பெயர்களும் ஒரு வகை அடையாளமாகவே வழங்குகின்ரன. துணி வெளுப்பவர், ஒவ்வொருவருடைய துணிக்கும் ஒவ்வொருவகைக் குறி போடுகிறார். இன்னார் துணிக்கு இன்னகுறி என்று அடையாளமாக ஏற்படுகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது போல் தான் சொற்களும் முதலில் காரணத்தோடு ஏற்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், நாளடைவில் அடையாளங்களாக வழங்குகின்றன.

நாய் என்றால் ஒருவகை விலங்கு என்றும், பன்றி என்றால் மற்றொருவகை விலங்கு என்றும் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அந்தப் பெயர்கள் காரணத்தோடு ஏற்பட்டவை என்பதை நினைப்பதில்லை. நாய் என்றால் நாக்கும் நினைவு வருவதில்லை. பன்றி என்றால் பல்லும் நினைவு வருவதில்லை. பேசுவதை விட்டுவிட்டு, ஆராய்ச்சி செய்யும்போதுதான் நாயின் நாக்கையும், பன்றியின் பல்லையும் நினைக்கிறோம். நாவை நீட்டித் தொங்கவிடுவதால் நா - நாய் என்றும், கோரைப்பல் இருப்பதனால் பல்-தி-பன்றி என்றும், பெயர் ஏற்பட்டதை அறிகிறோம். இவ்வாறு, சொல் எப்படிப் பிறந்திருந்தாலும், பேச்சில் வழங்கும்போது அடையாளமாகவே பயன்படுகிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால், சொல் பிறந்த காரணத்தை மறந்துவிட்டதே நல்லது என்று தெரிகிறது. அப்படி மறக்காமல் இருந்திருந்தால் சொற்களை வேகமாகப் பேசுவதற்கு முடியாமல் போகும். 'நாய் பன்றியைக் கடித்தது' என்ற வாக்கியத்தைச் சொல்லும்போது வேகமாகச் சொல்கிறோம். நா-ய் : நாய், பல்-தி : பன்றி என்ற ஆராய்ச்சியில் இருந்தால் இவ்வளவு வேகமாகப் பேசவும் முடியாது; பொருள் தெரிந்துகொள்ளவும் முடியாது. ஆகவே, சொற்களின் பிறப்புக் காரணத்தை மறந்து அடையாளங்களாக அவற்றை வழங்குவதால்தான் நன்றாகப் பேச முடிகிறது,

உதாரணமாகப் பாருங்கள் : பென்சிலை எடுத்துப பேனாக் கத்தியால் தீட்டி வெள்ளைக் காகிதத்தில் எழுதுகிறோம். கருவிகள் உடனே பயன்படுகின்றன. எழுத்து வேலையும் உடனே முடிகிறது. பென்சில் செய்த தொழிற்சாலை, பேனாக்கத்தி செய்த தொழிற்சாலை, காகிதம் செய்த தொழிற்சாலை இவை எல்லாம் நினைவுக்கு வந்தால், பென்சிலை எடுத்துப் பார்ப்பதில் நேரம் செலவாகும். பேனாக் கத்தி எடுத்துத் தீட்டுவதற்குமுன் நேரம் செலவாகும். காகிதத்தை எடுத்து, அது செய்யப்பட்ட முறையை எண்ணுவதிலும் நேரம் செலவாகும். கடைசியில் எழுத்து வேலை நினைத்தபடி முடியாது. தொழிற்சாலைகளை மறந்துவிட வேண்டும். செய்யப்பட்ட முறைகளையும் மறந்துவிட வேண்டும். பென்சில், பேனாக்கத்தி, காகிதம் இவைகள் நம் வேலைக்குப் பயன்படும் கருவிகள் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். அப்போதுதான் நாம் எண்ணியபடி வேலை செய்து முடிக்க முடியும்.

சொற்களை வழங்கும் முறையும் இப்படித்தான். அவைகள் எப்படிப் பிறந்தன என்பதை மறந்துவிட வேண்டும். என்ன பொருள் உணர்த்துகின்றன என்பதை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சொற்களைத் தெளிவாகவும் வேகமாகவும் பேச்சில் வழங்க முடியும்.

இன்னொன்று பாருங்கள்: பல் இருப்பதனால் பன்றி என்று பெயர் இருப்பதை அறிந்தோம். இதெபோல் பல்லின் காரணமாகப்பெயர் பெற்ற மற்றோர் உயிரும் உண்டு. அதுதான் பல்லி. பன்றி, பல்லி ஆகிய இரண்டு சொற்கள் பிறப்பதற்கும் பல்லே காரணமாக இருக்கிறது. ஆகவே, அந்தக் காரணம் நினைவில் இருந்தால், பேசும்போது என்ன ஆகும் தெரியுமா? இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பன்றியைப் பல்லி என்று தவறிச் சொல்லி விடுவோம். பல்லியைப் பன்றி என்றும் தவறாகச் சொல்லிவிடுவோம். கடைசியில் நன்றாகப் பேசத் தெரியாதவர்கள் ஆகிவிடுவோம். ஆகவே, தெளிவாகவும், வேகமாகவும் சொற்கள் வழங்கவேண்டுமானால், அவைகள் அடையாளங்களாகவே பயன் படவேண்டும்.

அடையாளங்களாக வழங்கும்போதும், இன்னொன்று கவனிக்க வேண்டும் நேற்று ஒரு பொருளுக்கு அடையாளமாக இருந்த ஒரு சொல், இன்று கொஞ்சம் மாறி, வேறு பொருளுக்கு அடையாளமாக வழங்கலாம். நேற்று மணியின் துணிக்கு அடையாளமாக இருந்த குறி, இன்று கண்ணனுடைய துணிக்கு குறியாக மாறலாம் அல்லவா? சொற்களும் காலப்போக்கில் இப்படிப் பொருள்மாறுவது உண்டு. மரத்தால் செய்த ஓர் அளவு கருவிக்கு பழங்காலத்தில் ‘மரக்கால்' என்று பெயர். இப்போது, இரும்புத் தகட்டால் செய்த கருவிக்கு அந்தப் பெயரைச் சொல்கிறோம். இரும்பால் செய்த இந்தக் காலத்துக் கருவியைச் சொல்லும் போது பழங்காலத்து மரக்காலை நினைப்பதால் பயன் இல்லை. மரக்கால் என்பதில் உள்ள மரம் என்ற கருத்தையே மறந்துவிட வேண்டும்.

பழங்காலத்தில் எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு 'எண்ணெய்' என்று பெயர். இப்போது எண்ணெய் என்பது பொதுவான ஒரு பெயராக வழங்குகிறது. கடைக்கு போய் ‘எண்ணெய் வேண்டும்' என்று கேட்டால், கடைக்காரனுக்கு ‘எள்ளின் நெய்' என்ற பொருள் தெரியாது. ”என்ன எண்ணெய் வேண்டும்? விள்க்கெண்ணெய்யா, கடலை எண்ணெய்யா, நல்லெண்ணெய்யா” என்று திருப்பிக்கேட்பான். பழங்காலத்தைப் போல் கடலை நெய் வேண்டும், எள்ளின் நெய் வேண்டும் என்று சொன்னாலும் அவனுக்கு விளங்காது. பசுவின் நெய்தான் என்று சொல்லிவிடுவான். ஒரு காலத்தில் தைலப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருந்த நெய் என்ற சொல், இப்பொழுது பசுவின்நெய் அல்லது எருமைநெய்க்கு மட்டும் வழங்குகிறது. ஆகவே, பேசுகின்றவர்களும் எழுதுகின்றவர்களும் பழைய பொருளை மறந்துவிட்டு, இன்றைய வழக்கைமட்டும் கவனித்துப் பேசவேண்டும்; எழுத வேண்டும்.

இப்படியே பல சொற்கள் பொருள் மாறி வழங்குவது உண்டு. கோயில் என்ற சொல் பழங்காலத்தில் அரசனுடைய அரண்மனையை உணர்த்தியது. இப்போது கடவுளை வழிபடும் இடத்தை மட்டும் குறிக்கிறது. ஒரு காலத்தில் கோயிலுக்கு 'நகர்' என்ற பெயர் இருந்தது. இப்போது 'நகர்' என்றால் சென்னை போன்ற பெரிய நகரங்களையே குறிக்கும். பழங்காலத்தில் மரம் என்ற சொல், தேக்கு, பலா, மா முதலிய உள்ளே வைரமுடைய மரங்களை மட்டும் குறித்து வந்தது. தென்னைமரம், பனைமரம், முதலியவற்றிற்கு உள்ளே வைரம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் அந்தக் காலத்தில் தென்னை மரம், பனைமரம் என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள். அவற்றை மரம் என்று சொல்லுவதே பிழையாக இருந்தது. அவைகளை எல்லாம் நம் முன்னோர்கள் புல் என்று சொல்லி வந்தார்கள். தென்னையையும், பனையையும் பார்த்துப் 'புல்' என்று சொன்னால் இந்தக் காலத்தில் எல்லோரும் சிரிப்பார்கள். உயரமாக வளராமல், தரையோடு உள்ள சிலவற்றை மட்டும்தான் இப்போது புல் என்று சொல்கின்றோம். ஒரு காலத்தில் இருந்த சொல்வழக்கு மற்றொரு காலத்தில் இல்லாமல் போவதை இவைகள் தெரிவிக்கின்றன.

பேசுகின்ற மக்கள் எப்படி மதிக்கின்றார்களோ, அப்படித்தான் சொல்லும் வழங்குகிறது. மக்கள் எதை மதிக்கவில்லையோ, அது வழக்கில் இல்லாமல் போகிறது. ஒன்று பாருங்கள். 'ஆண் யானை', 'பெண் யானை' என்று சொல்கிறோம். ஆனால் ஆண்மாடு பெண் மாடு என்று சொல்வதில்லை. பசு, எருது, மாடு என்று சொல்வதுதான் வழக்கமாக இருக்கிறது. 'பெண் மாடு', 'ஆண் மாடு' என்று சொன்னால் ஊர் சிரிக்கும். ஆனால் பெண் கோழி, ஆண் கோழி என்று கூசாமல் சொல்கின்றோம். திருவள்ளுவர், ஔவையார் இவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்கோழி, ஆண்கோழி என்று சொல்லமாட்டார்கள். பேடை, சேவல் என்றுதான் சொல்வார்கள். கிராமங்களில் சிலர் இன்னும் இப்படித்தான் சொல்கிறார்கள். யானை முதலிய மிருகங்களிலும் இப்படித்தான் பெண்ணுக்கும் ஆணுக்கும் வெவ்வேறு பெயர்கள் வழங்கியிருந்தன. மிகப் பழங்காலத்தில் பெண்யானையைப் 'பிடி' என்று சொன்னார்கள். ஆண்யானையைக் 'களிறு' என்று சொன்னார்கள். பெண்யானை, ஆண்யானை என்று சொல்வதே பிழையாக இருந்த காலம் அது. இதுபோல் எத்தனையோ சொற்களுக்கு வழக்கு மாறிவிட்டது.

காலப்போக்கில் வளரும் நாகரிகமும் சொல்லின் வழக்கை மாற்றிவருகிறது. சில சொற்களை உள்ளபடி வெளிப்படையாகப் பேசினால் நாகரிகம் குறைவாகத் தெரிகிறது. அதற்காக அந்தச் சொற்களை மறைத்துவிட்டு, நாகரிகமான வேறு சொற்களைச் சொல்வது உண்டு. 'கால் கழுவி வந்தான்', 'ஒன்றுக்கு இருந்தான்', 'சாணம் போட்டது' முதலிய வாக்கியங்களில் இதைக் காணலாம்.

செத்துப்போன ஒருவரைப் பற்றி, அவர் இறந்துவிட்டார் என்று சொல்லாமல் 'காலமானார்' என்று மாற்றிச் சொல்கிறோம். திருவடிநிழல் அடைந்தார், வைகுண்டம் சேர்ந்தார், பரமபதம் அடைந்தார்,சிவலோகம் சேர்ந்தார் என்று சொல்கிறோம். செத்துப் போனார் என்று சொன்னால் சொல்பவர்களுகும் நன்றாக இல்லை: கேட்பவர்களுக்கும் நன்றாக இல்லை. அதனால், அதை மாற்றிக்கொஞ்சம் மங்கலமாகச் சொல்லுகிறோஓம்.

சொல் வழங்குவதில் மொழிக்கு மொழி வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் 'அங்கிள்' என்ற ஒரு சொல் இருக்கிறது. அது, தாயோடு பிறந்த அம்மானையும் உணர்த்துகிறது: தகப்பனோடு பிறந்த சிற்றப்பன், பெரியப்பனையும் உணர்த்துகிறது. தமிழில் அதுபோல் ஒரு சொல் இல்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. ஆங்கிலத்தில் 'பிரதர்' (சகோதரர்) என்ற சொல்லை மிகுதியாக வழங்குகிறார்கள். மூத்த சகோதரன் 'எல்டர் பிரதர்', இளைய சகோதரன் 'யங்கர் பிரதர்' என்ற சொற்களை அவர்கள் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. தமிழில் அப்படி இல்லை. அவர்களுக்கு நேர்மாறாகத் தமிழர்களாகிய நாம் பேசுகிறோம். உடன்பிறந்தான் என்ற சொல்லை வழங்காமல் அண்ணன், தம்பி என்ற சொற்களையே அடிக்கடி வழங்குகிறோம்.

இவ்வாறு சொற்கள் வழங்குவதில் எவ்வளவோ மாறுதல்களும் புதுமைகளும் உள்ளன. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மை அறியாமலே ஒருவகையான சொல்நாகரிகம் வளர்ந்துவருவதை உணர்கிறோம். சொற்களின் உலகத்தில் ஒருகாலத்தில் நாகரிகமாய் இருந்தது இப்போது நாகரிகம் இல்லாமல் போகின்றது. ஒரு காலத்தில் செல்லாக் காசாக இருந்தது, இப்போது மதிப்பையும் பெற்றுவிடுகிறது. ஒரு மொழியாருக்குப் பழக்கத்தில் உள்ள ஒன்று, மற்றொரு மொழியாருக்குப் புதுமையாக இருக்கிறது. எழுதுகின்றவர்களும் பேசுகின்றவர்களும் பெரும்பாலும் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பதேயில்லை. பயிரிடும் குடியானவன் தாவரநூல் படிப்பதும் இல்லை; அந்தப் போக்கில் ஆராய்ச்சி செய்வதும் இல்லை. ஆனால், மரம் செடி கொடிகளை எப்படி வளர்க்கவேண்டும், எப்படிப் பயிரிடவேண்டும் என்பவற்றை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறான். அது போதும். அது போலவே சொல் வழக்கில், மேலே கண்ட புதுமைகளையும் மாறுதல்களையும் ஆராயாமல் இருக்கலாம். ஆனால் நம்மைச் சுற்றி வாழும் மக்கள் எந்தெந்தச் சொற்களை எந்தெந்தப் பொருளில் எவ்வெவ்வாறு வழங்குகின்றார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களைப் பின்பற்றிப் பேசினால் அதுவே போதும். ஆனாலும் குடியானவன் தாவரநூல் கற்றுக்கொண்டால் விளக்கமும் சிறப்பும் ஏற்படுவதுபோல், சொல்வழக்கு இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து தெரிந்து கொண்டால், மேலும் விளக்கமாகும்; தெளிவும் ஏற்படும்.