தஞ்சைச் சிறுகதைகள்/பேயாண்டித்தேவரும் ஒரு கோப்பை தேநீரும்

விக்கிமூலம் இலிருந்து

கனிவண்ணன்

ன்னிலம் - மருங்கூரை தாய் மண்ணாகக் கொண்ட கனிவண்ணன் பிறந்த மண்ணில் தன்னோடு வாழ்ந்த வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், மண்ணையுமே முக்கிய களமாக வைத்து நேர்த்திமிகு கலைப்படைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்.

‘...பெரும்பாலும் நேசத்திற்குரிய கிராம மனிதர்களைச் சுற்றி எதார்த்த பாணியில் எளிய நடையில் எந்தச் சிக்கலுமில்லாத கதைப்போக்கில் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பவர் கனிவண்ணன். கிராமம் என்றால் நேசத்திற்குரிய மனிதர்களின் அவலம் மட்டும் தானா? இல்லை. இந்த அவலத்திற்குக் காரணமானவர்களாகிய அரசியல்வாதிகளும், நிலப்பிரபுக்களும் கூட அடையாளம் காட்டப்படுகின்றனர். ஆர்ப்பாட்டம் அதிகமில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்குச் சார்பாக நின்று எதிர்காலம் குறித்த நம்பிக்கைத் தொனியோடு கதைகள் நடத்திச் செல்லப்படுகின்றன. பரிச்சயமான மனிதர்கள் பரிச்சயமான சம்பவங்கள், மனிதர்களையும், சம்பவங்களையும் அறிமுகப்படுத்தும் போதே அடுத்த நிகழ்ச்சி நமக்குத் தெரிந்துவிடுகிறது. எல்லாம் வெளிப்படையாக இருப்பது போன்ற தோற்றம். எதிலும் சிக்கலில்லை. மர்மமில்லை, அப்படியே மர்மமிருந்தாலும் படைப்பாளியின் தத்துவநோக்கு அவற்றைத் தோலுரித்துக் காட்டும் என்பதுதான் எதார்த்த பாணி இலக்கியத்தின் சாதனையாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய எதார்த்த பாணியிலிருந்து எள்ளளவும் வழுவாமல் கதைகளை நடத்திச் சென்றிருக்கிறார் கனிவண்ணன்...’ ஒரு கிராம சபையில்...’ சிறுகதைத் தொகுதிக்கு அ.மார்க்ஸ் மதிப்பீடு செய்யும் போது கனிவண்ணனைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.

மிகச் குறைவாக எழுதினாலும் அவர் படைப்புகள் அடர்த்தியானவை, ஆழமானவை.



பேயாண்டித்தேவரும்
       ஒரு கோப்பைத் தேநீரும்

'காலம்பற கரெக்டா ஆறு மணிக்கு வந்துடறேன்னு போனவன் இன்னும் காணல. சட்டுனு வந்துடு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துருவோம். கிட்டனுகலா இருக்குன்னு சொன்னதுக்கு அப்படி சொல்லிப்புட்டு போனான் ஆளக் காணுமே.”

இளவெயில் முதுகுக்கு இதமாக இருந்தது. முகத்தில் பட்டால் மயக்கம் வரும். வயதானதினால் தெம்பு வடிந்து அடித்துப்போட்டது போல உடம்பு இருந்தது. குளிரில் ஈரக்குலை நடுங்கியது. தொண்டையில் வலி பின்னி மூச்சுவிட சிரமமாக இருந்தது. காறித் துப்பிக் கொண்டிருந்ததில் உள்நாக்கு வலித்தது. மூக்கு வழியாக மூச்சுவிட முடியவில்லை. வாயை அகலத் திறந்து கப்கப்பென்று காற்றை உறிஞ்சி விடும்போது மார்புக் கூட்டுக்குள் ஒரு இரைப்பு எலி உட்கார்ந்திருந்தது.

சூடாக ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது.

‘அந்தப் பய மவன் வந்தா, எப்படியும் ஒரு டீ வாங்கித் தருவான். எப்ப வருவான்னு தெரியல’ -மனதுக்குள் புலம்பிக் கொண்டே பேயாண்டித் தேவர் கண்களை இறுக மூடிக்கொண்டார். நெற்றிப் பொட்டு விண் விண் என்று தெறித்தது.

“என்னா தாத்தா உக்காந்துட்டே”

குரல் கேட்டு மெதுவாக கண்களைத் திறந்தார்.

எதிரே மேலத்தெரு முத்தையனின் எட்டு வயது மகள்.

“எங்க போயிட்டு வர்ற”

“டீ வாங்கிட்டு வாறேன்”

கையிலிருந்த சிறு எவர்சில்வர் தூக்கைக் காண்பித்தாள். பாத்திரத்தில் தேநீர் வழிந்து கோடுகள் இருந்தன.

“டீய தாத்தாவுக்குத் தாயேன்”

“கொடுத்துட்டு, பைப்புத் தண்ணிய புடிச்சிக்கிட்டு போவவா”

“வூட்டுக்குக் கொண்டு போறதுக்குள் ஆறிப் போயிடுமே”

“சட்டியில ஊத்தி அடுப்புல வச்சு ஒலயப் பத்த வச்சா ஒரு நிமிஷத்துல சுட்டுடும்”

“பொக நாத்தம்ல அடிக்கும்”

“எந்த நாத்தமா இருந்தா என்ன. சூடா சக்கரத் தண்ணி தொண்டையில போவுலனா அப்பாவும், அம்மாவும் எழுந்திரிக்க மாட்டாங்க”

“பழகிட்டா அப்படித்தான். நீ குடிக்கிறது உண்டா”

“வே...” முகம் கழித்துக் கொண்டாள்.

“சரி. ஒப்பன் கிட்ட சொல்லு வயசுக்கு வந்ததும் தேவர் தாத்தாவைத் தான் கட்டிக்குவேன்னு, என்ன”.

“கெளவனையா” பழிப்புக் காட்டுவிட்டு அவள் நடந்தாள். போலிருந்தது. தேநீர் குடித்து சரியாக பத்து நாட்களாயின. தினமும் அதிகாலையில் குளிரைப் பொருட்படுத்தாமல் நல்லதம்பி தேநீர் கடையில் போய் நிற்பார். அவன் அடுப்பைப் பற்ற வைத்து, பால் சட்டியைத் தூக்கி வைத்து, பாய்லரில், தண்ணீர் கொதிக்கும் வரை அமைதியாக நின்று கொண்டிருப்பார். நல்லதம்பி போடும் முதல் தேநீர் அவருக்குத்தான். முதல் போனியே கடன்தானா என்று சகுனம் பார்க்காமல் “தாத்தா இந்தா” என்று டீ கிளாசை நீட்டுவான்... கை பொறுக்காத சூட்டிலும் இரு கைகளாலும் கிளாசைப் பிடித்துக் கெர்ண்டு ஒரு ஓரமாகச் சென்று உட்காருவார். கிளாசை முகத்துக்கருகே கொண்டு போய் ஆவியை வாயில் இழுத்து நெஞ்சுக் கூட்டுக்குள் அடைத்து பின் மெதுவாக வெளியேற்றுவார். இவ்வாறு நான்கைந்து தரம் செய்தபின் நெஞ்சு பாரம் இறங்கியது போல உணர்வார். பின் மெதுவாக உதட்டருகே கிளாசைக் கொண்டு போய், டீ ஒருவாய், ஆவி ஒருவாய் என்று சூடு ஆறுமுன் உள்வாங்கிக் கொள்வார்.

பின் எழுந்து தலை முதல் முழங்கால் வரை வேட்டியால் போர்த்திக் கொண்டு, மாரியம்மன் கோவில் காட்டுக் கருவை தோப்புக்குள் போய்விட்டு நேராக பெரியகுளம் நோக்கி நடப்பார். கருவைக் குச்சியை ஒடித்து, விழாமல் இருக்கும் எட்டுப் பற்களையும் தேய்த்து சுத்தம் செய்து முகம் கழுவி நெஞ்சுச் சளியை காறி, கனைத்து, இறுமி வெளியேற்றி புத்துணர்வுடன் மீண்டும் நல்லதம்பி டீக்கடைக்கு வருவார். சூடாக இன்னொரு டீ குடித்து விட்டு வீட்டிற்குப் போவார். இப்படி தினமும் பழகிய உடம்பு.

மாச முதல் வாரத்தில், ஒரு நாள், போஸ்ட் மேன் நயினார் தேவரைத் தேடி நல்லதம்பி தேநீர்க் கடைக்கு வருவார். அந்த நேரத்தில் தன்னை எதிர்பார்த்து அவர் அங்கே குந்தியிருப்பார் என்று நயினாருக்குத் தெரியும். தேவரிடம் கைநாட்டும், நல்லதம்பியிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு, பேரன் அனுப்பிய பணத்தை நயினார் தருவார். எண்ணிப் பார்க்காமல் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு, தனக்கும் நயினாருக்கும் ஸ்பெஷல் டீ போடும்படி தேவர் கூறுவார். டீயைக் குடித்துவிட்டு, தேவரிடம் ‘கிப்ட் பணம்’ எதுவும் வாங்காமல் தபால் கட்டுகளை எடுத்துக்கொண்டு நயினார் புறப்பட்டு செல்வார்.

கடைசியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, மடியை அவிழ்த்து நூறு ரூபாய் நோட்டு அல்லது இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளாய் எடுத்து நல்லதம்பியிடம் தேவர் நீட்டுவார். மனக்கணக்காகப் போட்டு உத்தேசமாக இத்தனை தேநீர் என்று கூட்டி, பணத்தை எடுத்துக் கொண்டு மீதத்தை நல்லதம்பி தருவான். அதை வாங்கி மடியில் இருக்கும் பணத்தோடு சேர்த்துக் கொண்டு நேராக வீட்டிற்குச் சென்று பேரனின் மனைவியிடம் ஒப்படைப்பார். மகராசி அதை வாங்கி வைத்துக் கொள்வாளே தவிர எவ்வளவு பணம் வந்தது எவ்வளவு அதில் இருக்கிறது என்று ஒரு வார்த்தை இதுவரை கேட்டதில்லை.

பேயாண்டித் தேவருக்கு வேறு செலவுகள் என்றும் இல்லை. பீடி, சுருட்டுகளில் பழக்கம் இல்லை. வாலிய பிராயத்தில் கள் குடித்ததுண்டு. மருங்கூர் ஐயரிடம் பண்ணை ஆளாக இருந்தபோது மாதம் இரண்டு கலம் நெல்; மூன்று ரூபாய் கூலி. வேலை இல்லாத நாட்களில் கையில் நாலனா எடுத்துக்கொண்டு மானாம்பேட்டைக்குப் போவார். ஒரு படி கள் ஓரணா. அதிகமாகப் போனால், அதுவும் கள் புளிப்பு இல்லாமலிருந்தால், இரண்டு படி கள் குடிப்பார். ஓரணாவிற்கு வறுத்த கருவாடு. அதோடு சரி. வீடு திரும்பிவிடுவார். நாடு சுதந்திரம் அடைந்த நேரம். சாராயக்கடைகளை எடுத்துவிட்டு ஊருக்கு ஊர் தேநீர் கடைகளைத் திறந்தார்கள். கள் பழக்கத்திலிருந்து தேநீருக்குத் தாவினார் தேவர். நாளாக நாளாக, தேநீர் இல்லாமல் பொழுது விடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

வீட்டிற்குப் போய் ஒரு வாய் நீராகாரம் குடிக்கலாம் என்று எண்ணினார். இந்தக் குளிரில், நெஞ்சில் சளி பின்னிக் கொண்டிருக்கும் போது நீராகாரம் உள்ளே போனால் காய்ச்சல் வந்து படுத்துக்கொள்ள வேண்டி வரும் என்ற நினைப்பு வந்தது. அந்தப் பய வர்ற வரைக்கும் இங்கேயே குந்தியிருப்போம் என்று முடிவு செய்தார்.

பூவரசு மரத்திலிருந்து பனித்துளி மழை போல் கொட்டிக் கொண்டிருந்தது. பனியின் அடர்த்தி இன்னும் குறையவில்லை.

தேவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

பயல் இன்னும் வரவில்லை. அவனுக்கு வேறு ஏதும் அவசர ஜோலியா வர்றேன்னு சொல்லிப்புட்டு வராம இருக்க மாட்டான் பாப்போம்.’

அவன் வந்தாலும் நல்லதம்பி கடையில் போய் தேநீர் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். தாத்தா மனோபலம் இல்லாத ஆள். ஒரு பத்துநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாம வந்திட்டாரு என்று நெனைப்பான். “பேசாம துறையூருக்கு போற வழியில வேற கடையில ஒன்னுக்கு ரெண்டு டீயா குடிக்கனும் என்று எண்ணினார். இன்னொரு பக்கம், மனசு ஏன்தான் இந்த அல்லாட்டம் போடுது. எவ்வளவு வைராக்கியம் காத்த மனசு என்ற நினைப்பும் வந்தது.

‘முடியாத காலத்துல உசிர வச்சிக்கிட்டிருக்கிறதே பெரிய கொடும. நாலு காசு சம்பாதிக்க முடியாம போனாப் பொறவு எதுக்காவ உயிர் வாழனும். பெத்த புள்ளைங்களே பாரமா நெனப்பாங்க. பேரப் புள்ள நெனக்கிறதுக்குப் கேக்கணுமா. அயோக்கியப் பய’

மூக்கை உறிஞ்சி சிந்தினார். வேட்டி முனையில துடைத்துக் கொண்டார். தலை கனம் அழுத்தியது.

‘பய மவன எப்படி வளத்தேன். அப்பனும், ஆத்தாவும் காலராவுல போன பின்னாடி, நெஞ்சிலும் தோள்லயும் போட்டு, குருவிய வளக்கிற மாதிரி ஆளாக்குனேன். உத்தூர் வாத்தியார் கால்ல விழுந்து கையில விழுந்து பள்ளிக்கொடத்துல சேத்து, என் வாயக்கட்டி வயத்தக்கட்டி படிக்க வச்சேன். என் கோவத்தத் தவிர எல்லாத்தையும் வித்து, குருக்கத்திக்கு அனுப்பி, வாத்தியாராக்கினேன். இன்னிக்கு இவன் வாங்குற சம்பளம் ரெண்டாயிரம் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க. ஒரு நாள் இவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு இந்தப் பய சொன்னதுண்டா.’

‘என்னா கெலவாடி உக்காந்திடிச்சு சாலையில் போய்க் கொண்டிருந்த குறக் கோவாலு பொஞ்சாதி கேட்டாள். சீவி முடித்து, ஒருருபாய் அகலத்திற்குக் குங்குமப் பொட்டு வைத்து, நெற்றியில் வழிந்த எண்ணை பளபளக்க அவள் நடந்த நடை.

‘எங்கடி போயிட்டு வார’

‘சிம்பு தீந்து போச்சு. மூங்கி மரம் வாங்கணும். நரிமணம் போனேன், நாயிடு இல்ல, திரும்பி வாறேன்.’

ஆளப்பாத்தா மூங்கி மரம் வாங்கப்போன மாதிரியா இருக்கு... இம். தேவர் இழுத்தார். தொடர்ந்து பேச முடியாமல் சளி அடைத்தது. ஆனாலும் அவள் வேறு மாதிரி புரிந்து கொண்டாள்.

‘போயா. வயசானாலும் புத்தி மட்டும் மாறல’ கோணல் சிரிப்புடன் நகர்ந்தாள்.

தேவருக்கு மீண்டும் பேரன் மீது இருந்த ஆத்திர உணர்வுகள் கொப்புளித்தன.

“ஊர் ஜனங்களுக்கு என்னப் பத்தி இருக்குற அக்கற இவனுக்கு இல்லியே. எவ்வளவு பாடுபட்டு வளத்தேன். என்னா கேள்வி கேட்டுட்டான், நெஞ்சில் கொள்ளிய சொருவுன மாதிரி. எம்மவன் மட்டும் உசுரோட இருந்திருந்தா இந்தப் பய இப்புடிப் பேசியிருப்பானா. எம் புள்ளைங்க வளந்துட்டானுங்க. செலவு அதிகமாவுது. நீ, ஒம்பாட்டுக்கு அம்பது, அறுவதுன்னு செலவு செய்யறத உட்டுப்புடு, இல்லாட்டி இனிம பணத்த அவ பேருக்கே எம்.ஓ. பண்ணிடுவேன். அந்தக் குட்டியும் புருஷன் பேச்சுக் கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, ஒரு வார்த்த, வயசான காலத்துல வேற என்னா செலவு செய்யுது, தாத்தா. பீடி உண்டா, வெத்தல பொகையில உண்டா, டீ தானே. குடிச்சிட்டுப் போறார்னு சொல்லியிருக்க வேணாம்.’

நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தலைக்கு மேல் வந்துவிட்டது. ஆனாலும் உறைக்கவில்லை. பள்ளிக்கூடம் விட்டுக் குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

காலையிலிருந்து வெறும் வயிற்றுடன் இருந்தபோதும் தேவருக்குப் பசியில்லை. போகிறவர்களையும், வருகிறவர்களையும் கூப்பிட்டு இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தால் பொழுது போனதும் தெரியவில்லை. வாய் மட்டும் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். மற்ற உயிரினத்திலிருந்து மனிதனைப் பிரிப்பதே வாய் வார்த்தை மட்டும்தான் என்பது தேவரின் கருத்து. வயதானக் காலத்தில் வாய் வார்த்தை ஒன்றுதான் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பது அவரது அபிப்பிராயம்.

“தாத்தாவ்”

தொள தொளப்பான அரைக் கால் சட்டையும், திட்டுத்திட்டாக அழுக்குப் படிந்த மேல்சட்டையும் அணிந்த பேரனின் மகன் ஓடி வந்தான். “தாத்தாவ். அம்மா ஒன்னக் கூட்டியாரச் சொல்லுச்சு” மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க, படபடப்புடன் கத்தினான்.

“யேய் நீயாவே ஸ்கூல்ல இருந்து வந்துட்டியா”

“ஒன்னப் பாத்து நின்னுக்கிட்டிருந்தேன். காணும். நானா தம்பிய அழச்சிக்கிட்டு வந்துட்டேன்”

“அட பயலே”

அலுப்பு முறித்துக் கொண்டு தேவர் எழுந்தார். பின் பக்கமாக முதுகை வளைத்து நிமிர்ந்தார். எண்பது வயதுக்கு மேலாகியும் கூனல் விழாத முதுகு. மெலிந்த உடல். கூரிய பார்வை. எள் விழுந்தாலும் காது கேட்கும். சளி தொந்தரவைத் தவிர மற்றபடி பூரண ஆரோக்கியம்.

“டே பாடம் ஒழுங்கா படிச்சியா”

“ஓ”

“தம்பிப் பய அழுதானா?”

“இல்ல”

“வெளயாட்டு கிளயாட்டுனு மரம் மட்டையில ஏறாதே, என்ன. இங்கிலிசு நல்லா படிக்கிறியா?”

“ரொம்ப நல்லா புரியுது தாத்தா. நானும் அப்பா மாதிரி வாத்தியாரா ஆவப் போறேன்.”

“சரி சரி ஆவு. ஆனா கடைசி காலத்துல ஒப்பன கவனிக்காம அம்போன்னு வுட்டுடாதே, என்ன”

“போ, தாத்தா. சம்பளம் வாங்குனா அப்பன் கிட்ட தரமாட்டேன். அப்பாவ எனக்குப் புடிக்கல. ஒனக்கு நெறைய டீ வாங்கித் தருவேன்.”

“அடே கண்ணா. நீ தாண்டா என் மொவன்.” குனிந்து கொள்ளுப்பேரன் முகத்தில் முத்தமிட்டார்.

வீட்டு வாசலில் பேரனின் மனைவி உட்கார்ந்திருந்தாள். முகத்தில் வாட்டம்.

“தாத்தா, எங்க போனிங்க காலயில இருந்து உங்களக் கானோம் உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.

“சும்மா பொழுது போகணும்ல. ரோட்டடியில போயிருந்தேன்.”

“பத்து நாளா ஆளே சரியில்ல. ஒம் பேரன் வந்துட்டுப் போனதுல இருந்து முகம் வாடிக்கிடக்கு”.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.”

“டீ செலவு செஞ்சதுக்காவ திட்டினார்னு தானே வருத்தம். சொல்லணும்னு நான் ஒன்னும் சொல்லல. வரவு செலவு எழுதி வச்சிருந்த நோட்ட அவரு படிச்சிட்டாரு”

“அதனால பரவாயில்லமா’ தேவர் குரல் நடுங்கியது.

“இன்னில இருந்து நாமே டீ போட்டுத் தருவம்னு அரமாணி பால் வாங்கி வச்சேன். உங்களக் காணோம். காச்சி வச்சிருக்கேன். டீ போட்டுத் தரவா அவள் குரல் தழுதழுத்தது. அவளுக்குப் பின்புறம் நின்றிருந்த கொள்ளுப் பேரன் வேண்டாம் என்பது போல சைகை செய்தான். நான் சம்பாரிச்சு ஒனக்கு நெறைய வாங்கித் தருவேன்’ என்று அவன் விழிகள் கூறின. தேவரின் மனசுக்குள் ஆயிரம் மத்தாப்புக்கள்.

“வேண்டாம்மா. பால ஒம் புள்ளைங்களுக்குக் கொடு.” உயிர் இருக்கும் வரை இனி தேநீர் குடிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் தேவர் கூறினார். கொள்ளுப் பேரன் முகத்தில் ஆனந்தக்களிப்பு; அவர் நெஞ்சுக்குள்ளும்.