தமிழியக்கம்/கோயிலார்

விக்கிமூலம் இலிருந்து


௧௨. கோயிலார்

உயிர்போன்ற உங்கள்தமிழ்
    கடவுளுக்கே உவப்பாதல்
         இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ்
    உரைத்தக்கால் கடவுளதை
         ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத்
    தமிழ்மொழியைப் படுத்தவந்த
         வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும்
    தேவையினைச் சொல்லுதற்கும்
         உதவும் போலும்! 56

மடிகட்டிக் கோயிலிலே
    மேலுடையை இடுப்பினிலே
         வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
    பூசியிரு கைகட்டிப்
         பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப்
    படிக்கட்டின் கீழ்நின்று
         தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல்
    மண்ணாங்கட் டிக்குவப்பீர்
        “மந்தரம்” என்றே. 57

காற்செருப்பைப் பிறனொருவன்
    கழிவிடத்தில் தள்ளிடினும்
        பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும்
    மேற்பட்ட தன்மொழியைத்
        தமிழைத்-தீயோர்
போற்றுவதற் குரியதொரு
    பொதுவினின்று நீக்கிவைத்தால்
        பொறுப்ப துண்டோ ?
வேற்றுவரின் வடமொழியை
    வேரறுப்பீர் கோயிலிலே
        மேவி டாமே. 58

சொற்கோவின் நற்போற்றித்
    திரு அகவல் செந்தமிழில்
         இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில்
    கால்வைத்த தெவ்வாறு
         சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம்,
    திருவாய்நன் மொழியான
        தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென
    வேதபா ராயணமேன்
        திருக்கோ யில்பால்? 59

திருப்படியில் நின்றபடி
    செந்தமிழில் பெரும்படியார்
        அருளிச் செய்த
உருப்படியை அப்படியே
    ஊரறியும் படியுரைத்தால்
        படியும் நெஞ்சில்!
தெருப்படியிற் கழுதையெனச்
    செல்லும்படி யாகாத
        வடசொற் கூச்சல்
நெருப்படியை எப்படியோ
    பொறுத்திடினும் நேர்ந்தபடி
        பொருள் கண்டீரோ! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழியக்கம்/கோயிலார்&oldid=1535782" இலிருந்து மீள்விக்கப்பட்டது