தமிழ்மொழி இலக்கிய வரலாறு/திருக்குறள்

விக்கிமூலம் இலிருந்து

8. திருக்குறள்
(1) திருவள்ளுவர் காலம்

திருக்குறளும் மணிமேகலையும்

சங்க நூல்களில் ஒன்றான மணிமேகலையில் திருவள்ளுவரால் செய்யப்பட்ட திருக்குறள் பாக்களுள் ஒன்று அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது காண்க:

தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள்-55)

இக் குறட்பா மணிமேகலையில்,

தெய்வங் தொழாஅன் கொழுகற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ ’

(மணிமேகலை, சிறைசெய் காதை, வரி 59-61)

என்று மணிமேகலை பாடிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரால் எடுத்தாளப்பட்டது. பரசுராமன் காலத்தில் வாழ்ந்த ககந்தன் என்ற பழைய சோழன் மகன் ஒருவன் மருதி' என்ற பார்ப்பன மங்கையைக் காவிரிக் கரையில் கண்டு காம உணர்ச்சியால் அழைத்தான். அவள் மனங் கலங்கி, உலகில் மழைவளந் தரும் பத்தினிப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார். நான் இவன் உள்ளம் புகுந்தேன். இதற்குக் காரணம் யாது?’ என்று சதுக்கப் பூதத்தை அணுகித் தன் மனக் கவலையை வெளியிட்டாள். அதற்கு அப்பூதம் மேற்சொன்ன மூன்று வரிகளையும் கூறியது என்பது வரலாறு. இது நிற்க.

இவ்வாறு திருக்குறள் ஒன்றை வெளிப்படையாகத் தம் நூலில் கூறி, அதனைச் செய்த ஆசிரியரைப் பொய்யில் புலவன்' என்று வியந்து பாராட்டிய மணிமேகலை ஆசிரியர் காலம் யாது என்பதை முதற்கண் ஆராய்வோம்.

மணிமேகலையின் காலம் என்ன?

1. மணிமேகலை ஆசிரியரான சாத்தனாரும், சிலப்பதி கார ஆசிரியரான இளங்கோ அடிகளும் நண்பர்கள் என்பதும், செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் இவ்விரு நூல் பாயிரங்களாலும் சிலப்பதிகார அகச் சான்றுகளாலும் அறிய லாம். இச்சாத்தனார் வாய்மொழியால் கண்ணகியின் சிறப் பறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டி வழி பட்டதற்கும், அதற்கு இலங்கை அரசனான கஜபாகு (கய வாகு) மன்னன் வந்திருந்தான் என்பதற்கும் சிலப்பதிகாரமே சான்று பகர்கிறது. கயவாகு என்னும் பெயருடைய அரசர் இருவர் முறையே கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், கி.பி. 12ஆம் நூற்றாண்டிலும் ஆண்டனர் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இவற்றுள் கி.பி. இரண்டாம் நூற் றாண்டில் ஆண்ட கயவாகுவே (கி. பி. 114-186) செங்குட்டுவன் காலத்து அரசனாதல் வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புகின்றனர். அவனே பத்தினி விழாவில் கலந்துகொண்டு தன் நாட்டிலும் பத்தினிக்குக் கோவில் கட்டியவன் ஆவான். இன்றைக்கும் சிங்களவர் பத்தினிதெய்யோ’ என்று கண்ணகியைக் கொண்டாடுகின்றனர். இலங்கையிலிருந்துதான் பத்தினியின் உருவச் சிலை இலண்டன் பொருட்காட்சிச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. .

2. மணிமேகலை 27ஆம் காதையில் கிருதகோடி’ என்னும் பெயர், வேதவியாசருடனும் சைமினி என்னும் ஆசிரியருடனும் பிரமாணங்கள் கூறுமிடத்தில் குறிக்கப் பட்டுள்ளது. கிருதகோடி’ என்பது மீமாம்சை சாத்திர

1. History of Ceylon, Vol. I, Part 1, pp. 188-185. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

மாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் போதாயனர் இயற்றிய உரை ஆகும் என்பது 'பிரபஞ்ச ஹிருதயம்' என்னும் வடமொழி நூலில் கூறப்பட்டுள்ளது. அந் நூலில், இவ்வுரை மிக விரிவாக இருந்தது பற்றி உபவர்ஷர் என்பவர் அதனைச் சுருக்கி அமைத்தனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உபவர்ஷர் கி.மு.3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. எனவே, அவருக்கு முற்பட்ட 'கிருத கோடி' உரை எழுதிய போதாயனர் அவருக்கும் முற்பட்டவர்; ஏறத்தாழக் கி.பி.முதல் நூற்றாண்டின் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர் என்று அறிஞர் கருதுகின்றனர். இதனால், 'கிருத கோடி’ ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை, அவ்வுரை பெரிதும் வழக்கிலிருந்த கி.பி.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருத இடம் தருகிறது."

 3. மணிமேகலை 29ஆம் காதையிலும், பிற காதைகளிலும் குறிக்கப்பட்டுள்ள பெளத்த சமயக் கொள்கைகள், ஏறத்தாழக் கி.பி.200-250 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராக ஆராய்ச்சியாளரால் துணியப்படும் காகார்ச்சுனர் என்பவரால் உண்டாக்கப்பட்ட மகாயான பெளத்த மதக் கொள்கைகள் அல்ல. அவை ஈனயான பெளத்தமதக் கொள்கைகள். எனவே, மணிமேகலை காலத்தில் இருந்த தமிழகத்துப் பெளத்தம், ஈனயானத்தைச் சேர்ந்த செளத்ராந்திகப் பிரிவினது என்பது தெளிவாகும்.*

2. Vedanta Commentators before Sankaracharya by P. V. Kane. Proceedings, Fifth Oriental Conference, Vol. 11.

3. Dr. S. K. Ayyangar, Manimekalai in its Historical Setting” pp 61–67.

4. "Buddhistic Studies' Compiled by B. C. Law pp. 13–17; K. A. N. Sastry, Cholas (2nd ed.). pp. 55–56.

எனவே, நாகார்ச்சுனர் கொள்கைகள் தமிழகத்தில் பரவு வதற்கு முற்பட்ட காலத்தது மணிமேகலை என்று கருதுதல் பொருந்தும்.

4. பெளத்த சமயத்துச் சாத்திய சித்தி' பிரிவினரான அரிவர்மர் ஏறக்குறையக் கி. பி. 250 இல் வெளிப்படுத்திய அநாத்மவாதக் கொள்கை மணிமேகலையில் இல்லை." இதனாலும் மணிமேகலை கி.பி.260க்கு முற்பட்டது என்பது தெளிவாகும்.

5. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார்க்கு நண்ப னான செங்குட்டுவன், பத்தினிச் சிலைக்குக் கல் எடுக்க வடநாடு சென்றான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. அவன் எவ்வித எதிர்ப்புமின்றிக் கங்கையைக் கடந்து உத்தர கோசலத்தில் மட்டும் ஆரிய அரசரை வென்றான் என்று அந் நூல் கூறுகிறது. இங்ங்னம் தமிழரசன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் செல்லத்தக்க வசதி கி.பி. முதலிரண்டு நூற் றாண்டுகளில் இருந்ததா எனின், ஆம். ஆந்திர அரசர் கங்கை வரையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; செங்குட்டு வன் கங்கையைக் கடக்க உதவி செய்தனர். கயவாகுவின் காலம் கி. பி. 114-186 ஆதலால், செங்குட்டுவன் படை யெடுப்பும் இக்காலத்திலேயே நிகழ்ந்ததாதல் வேண்டும். இப் படையெடுப்பில் செங்குட்டுவன் நண்பரான நூற்றுவர் கன்னர் அவன் கங்கையைக் கடக்க உதவி புரிந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 'நூற்றுவர் கன்னர்' என்பது சதகர்ணி என்னும் வடமொழித் தொடரின் மொழிபெயர்ப்பு என்பதை எளிதில் உணரலாம். உணரவே, அக்காலத்து ஆந்திரப் பெருநாட்டை ஆண்ட சதகர்ணி அரசன் செங்குட்டு வனுக்கு நண்பன் என்பது பெறப்படும். அக்கால ஆந்திர அரசன் கெளதமீ புத்திர சதகர்ணி என்பவன். இவன் காலம்

5. "Manimekalai in Its Historical Setting,”

         pp. 79–95.               

கி. பி. 106-130°. எனவே, சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பட்ட நூற்றுவர் கன்னர் வரலாற்றுப் புகழ்பெற்ற 'சதகர்ணி அரசர்’ என்பது அறியத்தகும். இங்ங்னம் வரலாறு கொண்டும், சமய உண்மைகள் கொண்டும் அறிஞர் கூறியுள்ள முடிவுகளைக் காணின், சிலப்பதிகாரமும் மணி மேகலையும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பட்டனவாதல் வேண்டும் என்பது நன்கு தெளிவாகும்.

திருக்குறளின் பழைமை

 கி. பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப் பெற்றதாகத் துணியப்படும் மணிமேகலையில் திருக்குறள் ஆட்சி பெற்றது எனின், திருக்குறள் நூல் சாத்தனார் போன்ற புலவர்கள் படித்தறியத்தக்க நிலையில் நாட்டில் பெருமை பெற்றிருந்தது என்பது தெளிவாகும். ஆசிரியர் இக்குறளை ஆண்டுள்ள இடம் நன்கு கவனித்தற்குரியது. சோழ அரசருள் மிகப் பழையவனான (கரிகாலனுக்கும் முற்பட்ட) ககந்தன் காலத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதம் மருதி என்னும் பார்ப்பணியை நோக்கி,
    "தெய்வம் தொழாஅள்..................
     ..............................
     
    பொய்யில் புலவன் பொருளுரை தேராய். "

என்று கூறியதாகச் சாத்தனார் கூறியுள்ளார். ஒரு சாதாரண பார்ப்பனப் பெண்ணான மருதி இத்திருக்குறளின் கருத்தை அறிந்திருத்தல் வேண்டும் என்று சதுக்கப் பூதம் எதிர் பார்த்தது என்பது சாத்தனார் கருத்தாதல் தெளியலாம். இவ்வாறு ககந்தன் காலத்திலேயே திருக்குறள் அனைவ ராலும் அறியத்தகும் நிலையிலிருந்தது. (அஃதாவது, மணி

6. R. Sathyanatha Ayyar, History of India, Vol. 1.

      P, 207 . 

மேகலையின் காலத்துக்கு மிக முற்பட்டது திருக்குறள்). என்பதைச் சாத்தனார் சதுக்கப் பூதத்தின் வாயிலாக நமக்கு. உணர்த்தும் திறன் வியந்து பாராட்டற்குரியது அன்றோ? சாத்தனார் உணர்த்துவது உண்மை என்பதை எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்கள் திருக்குறள் சொற்களையும் தொடர்களையும் கருத்துகளையும் எடுத்து ஆளுவதிலிருந்து நன்கறியலாம்.

திருக்குறளும் சங்க நூல்களும்

 தமிழகத்தில் கி. பி. 300க்கு முற்பட்ட பல்வேறு காலங் களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய பாக்களின் தொகுதியே எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் ஆகும். இவை கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குள்ளேயோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்திலேயோ தொகுக்கப் பெற்றவை. இவற்றின் மேல் எல்லை இது என அறுதியிட்டுக் கூறத்தக்க சான்றில்லை. இப்பாடல்களைப் பாடிய புலவர் பலர் தம் பாக்களில் திருக்குறள் கருத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும் ஆண்டுள்ள உண்மை, சங்கநூற் பயிற்சியுடையார்க்கு நன்கு விளங்கும்.
  இடச்சுருக்கம் கருதி, ஒவ்வொரு நூலுக்கும் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டிச் செல்லுதலே சாலும். 

நற்றிணை 1. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.' (குறள்-40)

  7. திருக்குறட் கருத்துகளையும் தொடர்களையும் சொற்களையும் சங்கப் புலவர்கள் ஆண்டனர் என்பதற்கு மாறாக, சங்கப் புலவர்தம் பாக்களை நன்றாகப் பயின்று. அக்கருத்துகளைத் திருவள்ளுவர் தமது அறநூலில் பெய்து வைத்தார் என்று ஏன் கொள்ளலாகாது? அங்கனம் கொள்ளின், திருவள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு,  தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
"நீரின் றமையா உலகம் போலத்
   தம்மின் றமையா கங்கயங் தருளி..."    (நற்றிணை-1) 

2. "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

     வீடில்லை கட்டாள் பவர்க்கு. ’’ (குறள்-791) 
     ‘‘. . . . . . . . . . . . . . . . . . . .....பெரியோர்
     நாடி நட்பி னல்லது 
     நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே."
                                 (நற்றிணை-32) 

3. "பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். ’’ (குறள்-580)

முன்னும், சங்கப் புலவர்க்குப் பின்னும் வாழ்ந்தவராகக் கொள்ளலாமே என்று சிலர் கருதலாம்.

புலவர் பலர் ஒர் அறநூலிலிருந்து கருத்துகளை எடுத்துத் தம் பாக்களில் பயன்படுத்தலே பெருவழக்குடையது. அங் வனம் பயன்படுத்துவோர் அறநூல் மேற்கோளை அப்படியே கையாளலும், அதனைப் பல அடிகளால் விரித்துக் கூறலுமே இயல்பு. தொகை நூல்களில் இந்த முறையினைக் காண லாம். திருக்குறள் இரண்டடிகளால் இயன்றது. சங்ககாலப் புலவர்களோ, இரண்டடிக் (குறட்) கருத்துகளைப் பல அடி களில் விளக்கிக் கூறியுள்ளனர். இந்த உண்மையை நன்கு உளங்கொள்ளின், திருக்குறள் கருத்துகளையே பின் வந்த சங்ககாலப் புலவர் கையாண்டனர் என்பதைத் தெளியலாம்.

 மேலும், "அறம் பாடிற்றே" என்று தெளிவாகச் சங்க காலப் புலவர் தம் பாடலுள் சுட்டியிருத்தல் கவனிக்கத் தக்கது. வடமொழியிலுள்ள தர்ம சூத்திரங்கள் உரைநடை யில் இயன்றவையே தவிரப் பாட்டால் இயன்றவையல்ல. பாட்டாலியன்ற பழைமையையும் பெருமையையும் உடைய அறநூல் திருக்குறள் ஒன்றே யாதலின், அதனையே புலவர் சுட்டினாரெனக் கொள்ளுதல் ஏற்புடையது. எனவே, சங்க காலத்திலேயே திருக்குறள் சங்கப் புலவர் பாராட்டுக்கு உரியதாக இருந்தது எனக் கோடலே ஏற்புடைத்து. 

"முந்தை யிருந்து கட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் கனிமா கரிகர்."

(நற்றிணை-355)

குறுந்தொகை

1.

"மலரினும் மெல்லிது காமஞ் சிலரதன்
   செவ்வி தலைப்படு வார்."

(குறள்-1289)

"ஐதே காமம்"-காமநோய் நுண்ணியது; மெல்லியது)

(குறுந்தொகை-217)
2.

"பேதைமை யொன்றோ பெருங்கிழமை
   யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்."

(குறள்-805)

"பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ."

(குறுந்தொகை-230)
3.

"வாளற்றுப் புற்கென்ற கண்னு மவர்சென்று
   காளொற்றித் தேய்ந்த விரல்."

(குறள்-1281)

"விங்கிழை நெகிழ விம்மி யீங்கே
    எறிகட் பேதுற லாய்கோ டிட்டுச்
    சுவர்வாய் பற்றுகின் படர்......"

(குறுந்தொகை-358)

பதிற்றுப்பத்து

1. "நின் மறங்கூறு குழாத்தர்" (நான்காம் பத்து, 9.) வீரர், தம் தலைவரது வீரத்தையே எடுத்தோதி மேம்படுதல் இயல்பு. இதனை,

"என்னைமுன் கில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கன்னின் றவர்".

என்று வீரர் தம் தலைவனது சிறப்பைக் கூறும் குறளில் (771) காண்க. .

த-10

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
2. "தொலையாக் கொள்கைச் சுற்றத்தார்."
                          (ஏழாம் பத்து, 10) 

தம்மால் சுற்றப்பட்ட தலைவன் செல்வம், வலிமை முதலியன அற்றபோதும், அவனை நீங்காது பழைமை பாராட்டும் பண்பினர் ஆதலின் சுற்றத்தார் இங்ங்னம் சிறப்பிக்கப்பட்டனர். இக்கருத்தை,.

  "பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் 
   சுற்றத்தார் கண்ணே யுள. ’’ 

என்னும் குறளில் (521) காண்க.

3. "கனவினால் கல்கா தவரைக் கனவினால்

   காண்டலி னுண்டென் னுயிர்."  (குறள்-1213). 
   
   "கனவினும் பிரியா வுறையுளொடு... 
   மீனொடு புரையுங் கற்பின்
   வாணுதல் அரிவை..."     (ஒன்பதாம் பத்து-9)

பரிபாடல்

1. "காமக் கணிச்சி யுடைக்கு கிறையென்னு .

   கானுத்தாழ் வீழ்த்த கதவு.' (குறள்-1251) 
  "காமக் கணிச்சியாற் கையறவு வட்டித்துச் 
  சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர்."  
                     (பரிபாடல் 10, வரிகள் 34-35) 

2. இலனென்னும் எவ்வம் உரையாமை யிதல்

  குலனுடையான் கண்ணே யுள.' (குறள்-223). 
  "இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்  
   அல்லது வெஃகி வினைசெய்வார். ’’ 
                (பரிபாடல் 10, வரிகள் 87-88)

3. "ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டும்

   தெற்றென்க மன்னவன் கண். ’’ (குறள்-581).
டாக்டர் மா. இராசமாணிக்கனார் 147
 "புடைவரு சூழல் புலமாண் வ்ழுதி
 மடமயி லோரும் அனையவ ரோடுங் 
 கடனறி காரியக் கண்ணவ ரோடுகின் 
 சூருறை குன்றிற் றடவரை யேறி. 
             (பரிபாடல் 19, வரிகள் 20-24)

கலித்தொகை

1. "காமமும் காணு முயிர்காவாத் தூங்குமென்
   நோனா உடம்பி னகத்து." (குறள்-1163)
   "நலிதரும் காமமுங் கெளவையும் என்றிவ்
    வலிதின் உயிர்காவாத் துரங்கியாங் கென்னை 
    நலியும் விழுமம் இரண்டு.  (கலி-142)

2. "காம முழந்து வருந்தினார்க் கேம

   மடலல்ல தில்லை வலி. ’’ (குறள்-1131)
   "காமக் கடும்பகைமிற் றோன்றினேற் கேமம் 
    எழினுத லீத்தவிம் மா." (கலி-139)

3. "குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

   வடுவன்று வேந்தன் தொழில். ’’ (குறள்-5491
   "குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை 
    விடுவழி விடுவழி சென்றாங்கவர் 
    தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே."
                                             (கலி-130)

4. "துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்

   நெஞ்சத்த ராவர் விரைந்து"      (குறள்-1218)
   "தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்தும்
    பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் 
    நெஞ்சத்துள்ளோடி யொளித்தாங்கே துஞ்சாகோய் 
    செய்யும் அறனிலவன்." (கலி-144)
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அகநானூறு

1. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
   நன்கலம் நன்மக்கட் பேறு. ’’ (குறள்-60)
  "கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய 
  புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் 
  நன்ன ராட்டி......"  (அகநானூறு. 184)

2. "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

   தாமரைக் கண்ணான் உலகு. ’’ (குறள்-1103)
   "செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு
    எய்திய கனைதுயில் ஏற்றொறுங் திருகி 
    மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் 
    மிகுதிகண் டன்றோ இலனே." (அகநானூறு-379)

3. "செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுகின்

     வல்வரவு வாழ்வார்க் குரை." (குறள்-1151)
   "வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
       ..........................
    நின்றாங்குப் பெயருங் கானஞ் 
    சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே."
                                   (அகநானூறு.387)

புறநானுறு

1. "சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்(கு)

   ஆக்கம் எவனோ உயிர்க்கு.' (குறள்-31)
  "அறத்தான் வருவதே யின்பம்மற் றெல்லாம் 
   புறத்த புகழு மில." (குறள்-39)
  "சிறப்புடைமரபிற் பொருளும் இன்பமும்
   அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல..." (புறம்-31)
2. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்க்கன்றி கொன்ற மகற்கு ." (குறள்-110) 
  "நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
   செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென  
   அறம்பா டிற்றே ஆயிழை கணவ." (புறம்-34)

3. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

     அதுநோக்கி வாழ்வார் பலர்."  (குறள்-528)
    "வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
     ஈத லெளிதே மாவண் டோன்றல்
     அதுகற் கறிந்தனை யாயிற் 
     பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே." 
                                   (புறம்-121) 

4. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகனைச்

   சான்றோன் எனக்கேட்ட தாய்." (குறள்-89)
   நரம்பெழுந் துலறிய கிரம்பா மென்றோள்
    ..........................................
   ஈன்ற ஞான்றினும் பெரிதுவக் தனளே". (புறம்-278)

பத்துப் பாட்டு -

1. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

   அதுநோக்கி வாழ்வார் பலர்." (குறள்-528)
  "வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
   பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த"
          (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 217-218)

2. "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து)

   ஊதியம் இல்லை உயிர்க்கு". (குறள்-231)  
  
  "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
   திவார்மே னிற்கும் புகழ்." (குறன்-232)

".................. விழுநிதி
விதல் உள்ளமோ டிசைவேட் குவையே."

(மதுரைக்காஞ்சி, வரிகள் 204-205)

"3. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்."(குறள்-85)

"விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு."

(குறிஞ்சிப் பாட்டு, வரிகள் 206-207)

இங்ஙனம் குறட்பாக்களையும் அவற்றின் தொடர்களையும் கருத்துகளையும் தம் பாக்களில் எடுத்தாண்டவர்கள் பல்வேறிடத்தவர்-பல்வேறு காலத்தவர் ஆதலின், அவர்தம் காலத்திற்கும் முன்னரே திருக்குறள் அறப்பெரு நூலாக நாட்டில் வழக்குப் பெற்றிருந்தது என்னும் உண்மை தெற்றென விளங்கும்.

சிலப்பதிகாரமும் திருக்குறளும்

சிலப்பதிகாரத்திலும் பல இடங்களில் திருக்குறட் சொற்களும் தொடர்களும் கருத்துகளும் பயின்று வருகின்றன. அவற்றுள் இரண்டினைக் காண்க :

1. "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்."
(குறள்-319)

1"முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறுஉம் பெற்றிகாண்"
(சிலப்பதிகாரம்-வஞ்சினமாலை)

2. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை."
(குறள்-55).

"தெய்வந் தொழாஅள் கொழுகற் றொழுவாளைத்

தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்."
(சிலப்பதிகாரம்-கட்டுரை காதை)
    இங்ஙனமே சங்க காலத்திற்குப் பிற்பட்ட பெருங்கதை8, சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருட் பாடல்கள் முதலிய அனைத்திலும் குறட்பாக்களும் அவற்றின் தொடர்களும் கருத்துகளும் மிகப் பலவாகக் கையாளப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்க, இன்றுள்ள சங்கநூற் பாடல்கள் முதல், பின்னூல்கள் அனைத்திற்குமே திருக்குறள் போற்றத்தக்க அறநூலாய் விளங்கி வந்தது என்பது எளிதில் புலனாகும். 

திருவள்ளுவர் காலம்

    ஆயினும், திருவள்ளுவர் ஏறக்குறைய எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்னுங் கேள்வி எழுதல் இயல்பு. அதற்கு ஒருவாறு விடை காணல் நமது கடமை யாகும்.
    1. திருவள்ளுவர் காலம் சங்க காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று கூறுவோரும், சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவோரும், இன்றுள்ள சங்கப் பாடல்களிற் பல ஏறத்தாழக் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்பதை ஒப்புகின்றனர். இதை நோக்க, நாம் இதுகாறும் கண்ட சான்றுகளைக் கொண்டு, திருவள்ளுவர் காலம் இம்முதலிரண்டு நூற்றாண்டு கட்கும் முற்பட்டதெனக் கருதலாம். 
   2. 'ககந்தன்'9 என்ற பழைய சோழ அரசன் காலத்திலேயே திருக்குறள் அறிவைப் பொது மக்களிடம் சதுக்கப்
   8. குணாட்டியர் பைசாச மொழியில் செய்த பிருகத் கதையைக் கி. பி. 6ஆம் நூற்றாண்டின் இடையில் கங்க நாட்டு அரசனாக இருந்த துர்விநீதன்'வ்டமொழியில் இயற்றி னான், அதனைப் பின்பற்றியே கொங்கு வேளிர் என்பவர் தமிழில் பெருங்கதையைப் பாடியுள்ளார். எனவே, அத் நூலின் மேல் எல்லை ஏறத்தாழக் கி. பி. 7ஆம் நூற்றாண்டு என்னலாம் . -
  9. இப்பெயர் அப்பண்டைக்காலச் சோழனுக்கு வழங்கிய தென்பது ஐயத்திற்குரியது.                                         தமிழ் மொழி இலக்கிய வரலாறு

பூதம் எதிர்பார்த்தது என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாத்தனார் கூறுவதால், திருக்குறளின் பழைமை, நன்கு புலனாகும். ஆகவே, வரலாற்றின் துணையைக் கொண்டு காலம் கூறமுடியாத ககந்தனுக்கும் முற்பட்டது. திருக்குறள் எனக் கருத இடமுண்டாகிறது.

    3. திருக்குறளைப் பாராட்டிச் சங்கப் புலவர்கள் பாடியனவாகக் கருதப்படும், திருவள்ளுவ மாலை ஆராய்ச்சிக் குரியது. அப்புலவர்கள் பாடிய தொகைநூற் பாக்களை ஆராயின், அவர்கள் பல்வேறு காலத்தவர் என்பது அறியக் கிடக்கின்றது. எனவே, பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர் பாடிய பாக்கள், பிற்காலத்தில் புறநானூறு போன்ற தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டாற்போல, பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர் பலர் திருக்குறளைப் பாராட்டிப்பாடிய பாக்களையும் பிற்காலத்தவர் * திருவள்ளுவ மாலை" என்னும் தலைப்பில் தொகுத்தனர் என்றே கருதுதல் பொருந்தும். அத்திருவள்ளுவ மாலையில் காணப்படும் பழம் புலவர்க்கு வள்ளுவர் சம காலத்தவர்' என்று கொள்ளுத லினும், அவர்க்கு முற்பட்டவராகக் கொள்வதே சால்புடைத்தாம்.புலவர் எவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவ நாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும்இல்லை. பெரும் பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும், தாமியற்றிய நூலின் மெய்ப்பெரு வலியால் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவர் உலகியல்பு, தெய்வப் பாவலராக வள்ளுவரைச்
    10. சாத்தனார் தாமறிந்த குறட்பாவைச் சதுக்கப் பூதத்தின் வாயிலாகத் தெரிவித்தாரேயன்றி வேறன்று எனக் கருதுவோரும் உளர். அங்ஙனம் சாத்தனார் கூறியிருப் பரேல், அது காலவழு (Anachronism) எனப்படும். மணி மேகலைக்கு முற்பட்ட சங்கப் பாடல்களிலேயே குறட் கருத்துகளும் சொற்களும் ஆளப்பட்டிருத்தலின், சாத்தனார் கூறியிருத்தல் காலவழு என்னும் குற்றத்தின்பாற்படாது எனக் கொள்ளலாம். டாக்டர். இராசமாணிக்கனார்

சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால், அவர்தமக்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராகவும், அவர் அறநூலின் இறவாச் சிறப்பு அங்கீகரிக்கப்படுவதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதன் அடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப் பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருத்தல் வேண்டும்."11

    4. கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கெளடில்யர் இயற்றிய பொருள் நூலில் கண்ட சில செய்தி களும் திருக்குறள் பொருட்பால் பகுதிகள் சிலவும் கருத்தில் ஒன்றுபட்டிருத்தலால், திருவள்ளுவர் கெளடில்யரது பொருள் நூலைப் படித்திருக்கலாம் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இங்ஙனம் கொண்டு, திருவள்ளுவர் காலம். கி. மு. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டதாகலாம் எனக் கூறுகின
    11. நாவலர் சோமசுந்தர பாரதியார், திருவள்ளுவர். பக்கம், 4.
    12. (1) திருக்குறளில் காணப்படும் ஒரு சில சொற்களையும், வடமொழிச் சொற்களையும், தொடர்களையும் கொண்டும், குறளில் காணப்படும் கருத்துகள் சில வடமொழி நூல்களில் காணப்படுதல் கொண்டும், குறள் க்ஷக்ஷ பிந்தியது என்றும் கூறும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் கூற்றும், அதனைப் பேராசிரியரும் பெருநாவலரும் ஆகிய டாக்டர்" சோமசுந்தர பாரதியாரவர்களும், திருப்பதி கீழ்க்கலை ஆராய்ச்சிக் கூடத்துத் தமிழாராய்ச்சித்துறை அறிஞரான திரு. பழகியப்ப பிள்ளையவர்களும் மறுத்து எழுதியுள்ள கட்டுரைகளும் எனது 'திருவள்ளுவர் காலம்' என்னும் தனி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தல் நலம்.
       (2) v. R. R. Dikshitar, Studies in Tamil Literature:
           and Hiatory, pp. 138, 150–176.  
5. திருவள்ளுவர் தொல்காப்பியத்தை வரம்பாகக் கொண்டே திருக்குறளை இயற்றினார் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க:
(1) தொல்காப்பியர், 'அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருள்கள்' என்று செய்யுளியலில் ஒரு நூற்பாவில் (102) கூறியுள்ளார்.

"அங்கிலை மருங்கின் அறமுத லாகிய

மும்முதற் பொருட்கும்உரிய வென்ப."

திருவள்ளுவர் இம்மூன்று முதற் பொருள்களை விளக்கவே திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலாக வகுத்தமைத்தார்

அறத்தினால் பொருளை ஈட்டி, அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை. தொல்காப்பியர் இக்கொள்கையையே தம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் அதனையே பின்பற்றினார்.

(2) தொல்காப்பியர்,

 "எழுத்தெனப்படுப 
  அகரமுதல்
  னகர விறுவாய்"       
                (எழுத்ததிகாரம்-1) 

என்று தமது நூலைத் தொடங்கினார். திருவள்ளுவர், 'அகரமுதல எழுத்தெல்லாம்' என்று தொடங்கி, 'கூடி முயங்கப் பெறின்' என்று னகர ஒற்றோடு திருக்குறளை முடித்தார்.

(3) தொல்காப்பியர்,

 "அருள்முங் துறுத்த அன்புபொழி கிளவி
  பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே" டாக்டர் மா. இராசமாணிக்கனார் 

என்று கற்பியலில் நூற்பா ஒன்று (20) செய்தார். திருவள்ளுவர் இந்நூற்பாவின் முதலடிப்பொருளை "அருளென்னும் அன்பீன் குழவி" என ஒரு குறளிற் குறித்திருத்தல் கவனிக்கத்தகும்.

    (4) தொல்காப்பியர்,
          "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 
           மறைமொழி தானே மந்திரம் என்ப"

என்று செய்யுளியலில் (171) கூறியுள்ளார்.

  திருவள்ளுவர்,
          "நிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து
           மறைமொழி காட்டி விடும்"

எனப்பாடியுள்ளார்.

இத்தகைய ஒருமைப்பாடுகளைக் கண்டே நாவலர். டாக்டர் சோமசுந்தர பாரதியார், திருக்குறள், தொல்காப்பியத்தை அடுத்துச் செய்யப்பட்டதாதல் வேண்டும் என்று கூறி யுள்ளார்.13

     6. சிறந்த கடல் வாணிகத்தில் ஈடுபட்ட ஏலேலசிங்கர் என்பவர் திருவள்ளுவர் நண்பர் என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. அந்த ஏலேல சிங்கர் இலங்கையை வென்று அரசாண்ட தமிழனான ஏழாரனாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அஃது உண்மையாயின் திருவள்ளுவர் காலம் ஏழாரன் காலமான கி. மு. இரண்டாம் நூற்றாண்டாக இருத்தல் கூடும்.14 

இவை அனைத்தையும் நோக்க, திருவள்ளுவர் இன்ன நூற்றாண்டினர் என்று உறுதியாகக் கூறத்தக்க சான்றுகள்

     13. திருவள்ளுவர் (ஆங்கில நூல்), பக் 5-18. 
     14. History of Ceylon, Vol. I, Part I, P, 207,  156                                     தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கிடைக்கும்வரை, அவர் தொல்காப்பியரை அடுத்துக் கிறிஸ்துப்பெருமானுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்று கூறுதலே பொருத்தம் என்பது தெரிகிறது.

திருக்குறளுக்கு மூல நூல்கள்

    'திருக்குறள் இன்றுள்ள சங்கப் பாக்கட்கு முற்பட்டதாயின், அதற்குரிய மூல நூல்கள் யாவை?' என்னும் கேள்வி அடுத்து எழுவதாகும்.
    தொல்காப்பியர் காலம் கி. மு. 4ஆம் நூற்றாண்டு என்பதும், தொல்காப்பியத்திற்கு முன்னரும் சமகாலத்திலும் இன்றுள்ள சங்கப் பாக்களுக்கு முன்னரே இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதும், இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பதும் சென்ற பகுதியிற் கூறப்பட்டன. "இவற்றால் தொல்காப்பியனார் தம் இலக்கணத்திற்குக் கருதிய இலக்கியங்கள் எத்துணையோ பல, அவர்க்கு முன்பே இத் தமிழ்நாட்டு வழங்கின என்றே ஒருதலையாகத் துணியலாம்.15
    எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுதல் போல இலக் கியத்திலிருந்து எடுக்கப்படுவது இலக்கணம். ஆதலால், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்களுக்குக் கருவூலங்களாகப் பல இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தோற்றமன்றோ? அவை பரந்துபட்ட காலத்தினவாதல் வேண்டும். அவற்றுள் சிலவே இறையனார் களவியலுரை முதலியவற்றில் பெயரளவில் சுட்டப்படும் நூல்கள். அப்பழைய இலக்கிய நூல்களே அறம். பொருள், இன்பம் பற்றிய பல குறிப்புகளைத் திருக்குறளுக்கு உதவியிருக்கலாம்.
    மிகப்பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்து தமிழகத்தை ஆண்டுவந்த சேர, சோழ, பாண்டியருடைய ஆட்சிமுறை

15. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 273. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 157

களைக் கொண்டும், சான்றோர் வரைந்த மேற்சொன்ன பண்டை இலக்கியங்களைக் கொண்டும் உலகத்தார் அனைவரும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் முறையில் திருவள்ளுவர் தம் அறநூலைச் செய்து முடித்தனர் எனக் கொள்ளுதலே இதுகாறும் கண்ட உண்மைகளை நோக்கப் பொருத்தமாகக் காணப்படுகிறது.

முடிவுரை

    இதுகாறும் பேசப்பட்ட உண்மைகளால்,(1) தொல் காப்பியத்துக்குப் பின்பு எழுந்த நூல் திருக்குறள் என்பதும், (2) தொல்காப்பியர் காலம் ஏறத்தாழக் கி. மு. 4ஆம் நூற்றாண்டு என அறிஞர் கருதுவதால், திருக்குறள் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதும்,(3) கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாகச் சிலரால் கருதப்படும் பெரும்பாலான தொகை நூற்பாக்களிலும், சிலப்பதிகாரம் மணிமேகலை எனப்படும் காவியங்களிலும் குறட்பாக்களின் சொற்களும் தொடர்களும் கருத்துகளும் ஆளப்பட்டிருத்தலின், அப்பாக்களுக்கு (கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு) முற்பட்டது திருக்குறள் என்பதும் தெளியலாம். தெளியவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வகையில், திருவள்ளுவர் காலம் ஏறத்தாழக் கி. மு. 1 முதல் 300க்கு உட்பட்டது என்று கோடலே அமைவுடையதாகும்.
                               (2) திருக்குறட் சிறப்பு 
    திருவள்ளுவர் தம் காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களையும், வழி வழியாக வந்த தமிழர் அரசியல் நெறியையும் நன்கு அறிந்தே திருக்குறள் நூலைச் செய்தவராவர். இந்நூற் கருத்துகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆதலின் நம் நாட்டவரும் பிறநாட்டவரும் இதனைத் தத்தம் மொழிகளில் பெயர்த்து எழுதி வைத்துள்ளனர்.16 மக்களாய்ப் பிறந்த
    16. வீரமாமுனிவர், போப்பையர் முதலிய மேனாட்டுத் தமிழ் அறிஞர் இலத்தீன், செருமன், பிரெஞ்சு, ஆங்கிலம் 158                                                 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வர்க்குக் கல்வி கற்றல், சமுதாயத்தில் பழகுதல், கைக் கொள்ள வேண்டுவன, கைவிட வேண்டுவன, மனை வாழ்க்கை, இல்வாழ்க்கைச் சிறப்பு, உழுதொழில், வாணிகம் முதலியன இன்றியமையாதவை அல்லவா? இவற்றை வற்புறுத்திக் கூறும் சிறப்புடைமையால்தான் திருக்குறள் பண்டுதொட்டுப் பெளத்த சமயப்புலவராலும், சமண சமயப் புலவராலும், சைவ வைணவப் புலவர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. பின்வந்த கிறித்தவப் புலவர்களும், முஸ்லிம் புலவர்களும் இந்நூற் கருத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும் தங்கள் செய்யுட்களில் பயன்படுத்திக்கொண்டனர்.

    வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுள் வெண்பா மிகச் சிறந்தது. இவ்வெண்பாவில் மிகச் சிறிய வகையினது குறள் வெண்பா என்பது. இஃது இரண்டே அடிகளைக் கொண்டது. இரண்டே அடிகளில் விழுமிய கருத்து ஒன்றை நன் முறையில் கூறுவதென்பது எளிதான செயலன்று. பேராற்றல் மிகுந்த புலவரே இதனைச் செய்யவல்லவர். இதிலிருந்தே இதன் அருமைப் பாட்டினை அறியலாம். இத்தகைய அரிய செயலில் ஈடுபட்டு வெற்றிகண்ட பெருநாவலரை நாம் எவ்வாறு பாராட்டுவது!
    அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இவற்றைப் பற்றி

முதலிய மேனாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர். நமது நாட்டில் திரு. எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, திரு. எஸ். எம். மைக்கேல், திரு. வி. ஆர். இராமசந்திர தீட்சிதர், திரு. எம். ஆர். இராசகோபால ஐயங்கார். திரு.வ.வே. சு. ஐயர், திரு. ஜான் லாசரஸ் ஆகிய அறிஞர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். தெலுங்கு வங்கம், கன்னடம், இந்தி முதலிய நம் நாட்டு மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 159 டாக்டர் மா. இராசமாணிக்கனார்

மக்களுக்குச் சொல்ல வேண்டுவது கற்றவர் கடமையாகும். மனிதன் பிறந்து வளர்ந்து கல்வி கற்று நேர்மையாக வாழ்வை நடத்தச் சில பண்புகள் அவனுக்குத் தேவைப் படுகின்றன. அறத்துப்பால் இப் பண்புகளை எடுத்து இயம்புகின்றது. வளர்ச்சியுற்ற இளைஞன் பலதுறை அலுவல்களில் ஈடுபடுகிறான். சமுதாயம், நாடு, அரசியல் என்பன பற்றி அவன் பல செய்திகளை அறிவது இன்றியமையாதது. ஆதலின் அவைபற்றிய விளக்கம் பொருட்பாலில் பேசப்படுகின்றது.

    இளைஞன் காதல் வாழ்வை மேற்கொண்டு காதலியோடு மனைவாழ்வை மாண்புற நடத்தச் சில உண்மைகள் தேவைப்படுகின்றன. அவ்வுண்மைகளைத் திறம்பட விளக்குவதே காமத்துப் பால். வீடு என்பது பலவகைப் பற்றுகளையும் விடுதல் என்று பொருள்படும். இளமை முதல் நேர்மையாக வாழ்க்கை நடத்திவரும் ஒருவன் தன் முதுமைக் காலத்தில் தன் குடும்பப் பொறுப்பைத் தன் மக்களிடம் ஒப்படைத்துக் குடும்பப் பொறுப்பிலிருந்து விலகி நின்று தூய உள்ளத்தோடு தன் வாழ்நாட்களைக் கழிப்பதை 'வீடு' என்று சொல்லலாம். "இவ்வுண்மையை உணர்ந்தே, இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு",என்று ஒளவையாரும் உரைத்தருளினார்.
    உலகில் இல்லறத்தில் வாழ்பவர் பலர்; இளமை முதலே துறவற நெறியை மேற்கொண்டு வாழ்வோர் மிகச் சிலர். அச்சிலரும் சமுதாய உறுப்பினராதலின் அவர்தம் சிறப்பையும் வள்ளுவர் சில இடங்களில் குறித்துள்ளார். எனவே, திருக்குறள் இல்லறம்-துறவறம் என்னும் இரண்டு நெறிகளையும் பற்றிப் பேசுகின்றது என்று கூறுதல் பொருத்தமாகும்.
   திருக்குறளில் கூறப்பெறாத பொருளில்லை; செய்தியில்லை. திருக்குறளில் அனிச்சம், மூங்கில் மரம், முள்மரம், நச்சுமரம். வற்றல் மரம், மருந்துமரம், பழமரம் முதலிய மர  தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வகைகளும், தாமரை, குவளை முதலிய நீர்ப் பூக்களும், நெருஞ்சி, பசும்புல் முதலிய படர் செடிகளும், கரும்பு, எள் முதலிய செடி வகைகளும், குன்றி ஆகிய கொடி வகைகளும் பேசப்படுகின்றன. விலங்குகளில் யானை, பசு, காளை, ஆடு, நரி, புலி, மான் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. ஆமை, முதலை, மீன் முதலிய நீர் வாழ்வனவும், காகம், கொக்கு, கோட்டான் முதலிய பறவைகளும் குறிக்கப்பட்டுள்ளன. ஆண் மக்களின் இயல்புகளும் பெண்மக்களின் இயல்புகளும் பேசப்பட்டுள்ளன. உழவு, வாணிகம், மக்களுடைய பழக்க வழக்கங்கள், ஆசிரமப் பாகுபாடுகள், சடங்குகள், போர்க்கருவிகள், உணவு, ஊர்திகள், பலவகை விளை யாட்டுகள், இசை, ஓவியம், சிற்பம் முதலிய கலைகள், உடை, அளவைப் பெயர்கள்; ஊருணி முதலிய நீர்நிலைகள், உடல் நலத்திற்கு உரியவை-எனப் பலதிறப்பட்ட செய்திகள் திருக்குறளுள் அடங்கியுள்ளன. திருமால் நெடுமாலாய் உலகளந்த வரலாறு, ததீசி வரலாறு முதலிய புராண வரலாறுகளைக் குறிக்கும் இடங்கள் இதனுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் ஏறத்தாழ 50 வடசொற்கள் இருக்கின்றன.'17

       உரையாசிரியர்

உலகப் பொதுமறையாகிய திருக்குறளுக்கு உரை கண்டவர் பதின்மர் என்று பழம் பாடல் ஒன்று தெரிவிக்கின்றது. அவருள் இப்பொழுது அறியப் பெறுபவர் மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப் பெருமாள், பரிமேலழகர் ஆகிய ஐவருமேயாவர். இவருள் பரிமேலழகர், தமது உரையில் மற்ற உரையாசிரியர் கூற்றுகளைச் சில இடங்களில் மறுத்துக் கூறியுள்ளமையால் மேலே கூறப்பெற்ற நால்வரினும் காலத்தால் பிற்பட்டவராவர். இவர் காலம் கி. பி. 13ஆம் நூற்றாண்டு என்று திரு மு. இராகவையங்கார் அவர்கள் கூறுவர்.18 ______________________________ 17. திருக்குறள் உரைவளம், காமத்துப்பால், பக். 90. 18. சாஸனத் தமிழ்க்கவி சரிதம்; பக். 121-125. டாக்டர் மா. இராசமாணிக்கனார் 161

அனைவர் உரையிலும் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என்பது தமிழறிஞர் கருத்து. திருவள்ளுவருக்கும் இவ்வுரையாசிரியர்களுக்கும் இடையில் 1300 அல்லது 1400 ஆண்டுகள் கழிந்திருக்கலாம். திருவள்ளுவர் காலத்திற்கும் உரையாசிரியர் காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட சமுதாய மாறுதல்கள் பல; அரசியல் மாறுதல்கள் பல. வள்ளுவர் காலத்தில் சாதிகள் இல்லை. சாதிகள் பல்கிப் பெருகிய காலத்தில்-ஒரு சாதிக்கு ஒரு நீதி கூறிய காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் முன்பு கூறப்பெற்ற தொல்காப்பிய உரையாசிரியர்கள் போலவே, தத்தம் சமயச் சார்பு பற்றியும் தம் காலநிலைக்கு ஏற்பவும் தாம் கற்ற நூல்களுக்கு ஏற்பவும் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளுக்கு உரை வரைந்தனர் என்பதை நாம் நன்குணர்தல் வேண்டும். இந்த உண்மையை ஒவ்வொருவர் உரையும் தமக்கு அறிவுறுத்துகின்றது.
"ஐந்தவித்தான்" என்று தொடங்கும் குறளுக்கும் * "தென்புலத்தார்" என்று தொடங்கும் குறளுக்கும் பரிமே லழகர் வரைந்துள்ள உரையின் பொருந்தானமையே மேற் கூறிய உண்மையைப் புலப்படுத்துவதாகும். ஆதலின் திருக்குறளின் கருத்தை உள்ளவாறு அறிய விரும்புவோர் அவர் காலத்திலிருந்த சங்க நூல்களையும் சமய நூல்களை யும் பிற நூல்களையும் நன்கு பயின்ற பின்னரே உரையாசிரி யர்களின் உரைகளைப் படித்துக் குறளின் கருத்தைத் தெளிதல் நல்லது.
மேற்கூறப்பெற்ற உரைகளைத் தவிர இராமாதுச கவிராயர், கோ. வடிவேலுச்செட்டியார் முதலிய பெருமக்கள் எழுதிய உரைகளும் வெளிவந்துள்ளன. இக்காலத்தில் திருக்குறள் மிக்க ஏற்றம் பெற்றுள்ளது. யாண்டும் குறட்பாக்களும், குறட்கருத்துகளும் பேசப்படுகின்றன. இக்கால அறிஞர் சிலர் திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதியுள்ளனர். அவற்றுள் டாக்டர் மு. வரதராசனார் எழுதியுள்ள தெளிவுரை நூற்.
        த-11  தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

படிகள் மட்டும் ஒரு இலட்சத்துக்குமேல் செலவாகியுள்ளன எனின், அத்தெளிவுரையின் எளிமையையும் சிறப்பையும் நன்குணரலாம்.

தருமபுர ஆதினத்துக் கயிலை-குரு மகா சந்நிதானம் அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதியார், காளிங்கர் ஆகிய ஐவருடைய உரையையும் ஒவ்வொரு குறளுக்கும் தந்து, "திருக்குறள்-உரைவளம்"என்னும் பெயரில் முப்பாலையும் மூன்று பெரிய நூல்களாக மகாவித்வான் தண்டபாணி தேசிகரைக் கொண்டு வெளியிட்டுள்ளனர். திருப்பனந்தாள் காசிமடத்தார் இம் முறையைப் பின்பற்றித் திருக்குறள்-உரைக்கொத்து’ என்னும் பெயரில்: அடக்கவிலைப் பதிப்பாக முப்பால்களையும் மூன்று நூல். களாக வெளியிட்டுள்ளனர். திருக்குறளைப் பலர் ஆங்கிலத் தில் மொழி பெயர்த்துள்ளனர். அண்மையில் திருவாசகமணி, கே. எம். பாலசுப்பிரமணியம் (பி. ஏ. , பி.எல்.) அவர்கள் மிகப் பொருத்தமாக மொழி பெயர்த்துள்ளார். ஆங்காங்கு விளக்கவுரையும் இக்காலத்திற்கேற்ற மேற்கோள் விளக்கமும் தந்துள்ளார். திருவள்ளுவர் கொண்டிருந்த கருத்துகளை இந்நூல் நன்கு வெளிப்படுத்துகின்றது என்னலாம். உலக நாட்டறிஞர்கள் திருக்குறளின் ஒப்பற்ற சிறப்பினை உள்ளவாறு அறிய இந்நூல் பெருந்துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. அறிஞர் கே. எம். பாலசுப்பிரமணியம் அவர்கட்குத் தமிழ் மக்களின் வாழ்த்தும் நன்றியும் உரியவாகும். இம் முயற்சிகள் அனைத்தும் மனமார வரவேற்கத் தக்கவை. இவை திருக்குறளின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்பவை.