தமிழ் இலக்கியக் கதைகள்/இன்றைக்கு மட்டும் இரு

விக்கிமூலம் இலிருந்து

10 இன்றைக்கு மட்டும் இரு!

நின்றையூரின் ஆறு போல அகன்ற வீதிகளுக்குள் நுழைந்து காளத்திநாத முதலியாரின் வீட்டைக் கண்டு பிடித்தபோது எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அவ்வளவும் அவர் ஊரிலில்லை, என்று தெரிந்ததும் ஏமாற்றமாக மாறிவிட்டது மதுர கவிராயருக்கு. மறுநாள் காலை எப்படியும் அவரை வீட்டில் பார்க்க முடியும் என்று அறிந்து கொண்டார். அப்போதுதான் மாலை நேரங் கழித்து சுற்றி இருள்படர ஆரம்பித்திருந்தது. அன்ன்றக்கு ஒரு நாள் இரவை எங்கேயாவது, எப்படியாவது கழித்துவிட்டால் மறுநாள் காலை காளத்தி நாதரைக் கண்டு வறுமை தீரப் பரிசில் பெற்றுவிடமுடியும். புலவர்க்கும் ஏழைகட்கும் பொருள் கொடுத்துக் காக்கும் இரட்சகனாக இருந்தார் காளத்திநாதர். வள்ளலென்ற தமிழ்ப் பெயர் அவருக்காகவே உண்டாகியிருக்க வேண்டுமென்று கூறினாலும் அதில் மிகை சிறிது மிருக்க முடியாது.

அழுக்கடைந்த கந்தல் ஆடை சோறு கண்டு சிலநாள் ஆகிய வயிறு. குழி விழுந்த, ஆனால் ஒளி நிறைந்த மலர்ந்த கண்கள். கலைகளின் தேஜஸ் முகத்திலே நன்றாகத் தெரிந்தது. ஓர் இடிந்துபோன சத்திரத்துத் திண்ணை முடங்கிக் கொள்ள இடமளித்தது. வறுமையோடு போராடும் அந்த ஏழைக் கவிஞனுக்கு வயிறு பசியால் முற்றிலும் வாடும்போது, உறக்கம் எங்கிருந்து வரும்? அதோடு பொழுது விடிந்தால் காளத்தி நாதரைக் கண்டுவிடலாம் என்ற ஆர்வமும் சேர்ந்துகொண்டது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை காளத்தி நாதரைப் பார்த்த பிறகு தன் நிலையைக் கற்பனை செய்தவண்ணம் ஒடியது அவன் சிந்தனை.’ இன்று வரைநம்மிடமிருந்து விலகாமல் நிழல் போலப் பின்பற்றி வாட்டும் வறுமைக்கு நாளைக் காலை நம்மிடமிருந்து விடுதலை! கவிஞர்களைப் போற்றிப் பேணுவதையே கடமையாகக் கொண்ட அந்த வள்ளல் நமக்கு உறுதியாக உதவி செய்வார். ஐயோ பாவம்! நம்மோடு விடாமற் சுற்றிச் சுற்றிக் கழுத்தறுத்த இவ்வறுமை இன்றைக்கு மட்டும் தன் சுதந்திரத்தோடு இருக்கட்டும். நாளை வைகறையில் வறுமை எங்கேயோ? நான் எங்கேயோ?’ இப்படி எண்ணங்கள் அவன் மனத்திரையில் ஒடிக் கொண்டிருந்தன.

கவியின் மனத்தில் எழும் எந்த எண்ணங்களும் எண்ணங்களாகவே தங்கிவிடுவதில்லையே? அவைகள் பாட்டுருவம் பெற்றுவிடத் தவறமாட்டா. எண்ணங்களை எண்ணி வெளியிடுவதில் சாதாரண மனிதனுக்கும் கவிஞனுக்கும் உள்ள வேறுபாடு கூட அதுதான்.அந்தக் கவிஞனுடைய எண்ணங்கள் ‘வறுமையை’ முன்னிலைப்படுத்தி அதை நோக்கியே அனுதாபத்தோடு பாடும் ஒரு வெண்பாவாக வெளிவருகின்றது.

"நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போல
நாளைக்கு இருப்பாயோ நல்குரவே-காளத்தி
நிறைக்கே சென்றக்கால் நீயெங்கோ நானெங்கோ
இன்றைக்கே சற்றே இரு”

இடிந்துபோன அந்தச் சத்திரத்தின் திண்ணையில் பல நாட்களாக உண்ணாத நிலையில் இத்தகைய வேடிக்கையான பாட்டுத் தோன்ற எப்படிப்பட்ட மனோபாவ எளிமை வேண்டும்? அது அந்தக் கவிக்குப் பூரணமாக இருந்திருக்கிறது போலும்!