தம்ம பதம்/அர்ஹந்த வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் ஏழு

முனிவர்

90.(ஸம்ஸார) யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்கள் அனைத்தையும் அறுத்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்குத் துன்பம் என்பதில்லை. (1)

91.கருத்துடையவர்கள் இடைவிடாத முயற்சியுடையவர்கள். அவர்கள் ஒரேயிடத்தில் ஓய்ந்து கிடப்பதில்லை! நீர் நிலையை விட்டுப் பறந்து செல்லும் அன்னங்களைப் போல், அவர்கள் இல்வாழ்வை விட்டுப் போகின்றனர். (2)

92. வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல் சேமித்து வைத்த செல்வங்கள் இல்லாமல், அறிவுக்குப் பொருத்தமான ஆகாரம் அருந்தி, பந்தங்களற்ற பரிபூர்ண விடுதலையான நிருவாணம் ஒன்றையே இலட்சியமாய்க் கொண்டவர்களுடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். (8)

93. வானத்தில் பறக்கும் பறவைகளின் சுவடுகளைக் காண முடியாது; அதுபோல், ஆஸவங்களை [1]அவித்துப் பந்தங்களற்ற பரிபூர்ண விடுதலையான நிருவானத்திலேயே நாட்டமுள்ளவருடைய வழியைப் புரிந்து கொள்ளுவதும் அரிதாகும். (4) 114. தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப்பது போலே, இந்திரியங்களை அடக்கி, அகங்காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லாதிருப்பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுவார்கள். (5)

115. பூமியைப் போன்ற பொறுமையுடனும், வீட்டு நிலை போன்ற உறுதியுடனும், சேறில்லாமல் தெளிந்த நீர் நிலை போன்ற தூய்மையுடையவனுக்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. (6)

116. உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலைபெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும்; சொல் சாந்தியாயிருக்கும்; செயலும் சாந்தியாயிருக்கும். (7)

117. இன்ப துன்பங்களில் அலட்சிய முடையவனாயும் செயல்கள் ஒடுங்கிய பிறவா நிலையாகிய நிருவாண நிலையை அறிந்தவனாயும், பந்தங்கள் அனைத்தையும் அறுத்துக்கொண்டவனாயும்: (நன்மை தீமைகளுக்குரிய) எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் முடிவு கட்டியவனாயும், ஆசைகள் யாவையும் அகற்றியவனாயுமுள்ள ஒருவனே உத்தம புருஷன். (8)

118. அருகத்துக்கள் (முனிவர்கள்) எங்கே வசிக்கிறார்களோ, அது நாடாயினும் காடாயினும், பள்ளமாயினும் மேட்டு நிலமாயினும், அதுவே இரமணீயமான இடம். (9)

119. ஆரண்யங்கள் இரணீயமானவை; ஜனங்கள் எங்கே இன்புறுவதில்லையோ அங்கே விரக்தியடைந்தவர்கள் இன்புறுகிறார்கள்; ஏனெனில் அவர்கள் காமியங்களை நாடுவதில்லை. (10)

  1. ஆஸ்வங்கள் நான்கு: காமாஸவம், பாவாஸவம், திட்டாஸவம், அவிஜ்ஜாஸவம். காமாஸ்வம்-சிற்றின்பத்தேட்டம்; பாவாஸவம்-பிறப்புக்குக் காரணமான உயிராசை; திட்டாஸவம்-கற்பனையான பொய்க் காட்சி;. அவிஜ்ஜாஸவம்-அறியாமை.