தம்ம பதம்/கோத வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் பதினேழு

கோபம்

219. கோபத்தை விடு, செருக்கைக் கைவிடு, உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. நாம-உருவங்களில் தொடர்பற்றவனுக்கு, எதையும் ‘எனது’ என்று கொள்ளாதவனுக்குத் துக்கங்கள் ஏற்படுவதில்லை. (1)

220. வழிதவறிச் செல்லும் இரதம் போலப் பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன்; மற்றையோர் கடிவாளக் கயிற்றைக் (கையில்) வைத்திருப்பவர்களே. (2)

221. வெகுளியை விநயத்தால் வெல்லவேண்டும்:

தீமையை நன்மையால் வெல்லவேண்டும்;
கருமியை ஈகையால் வெல்லவேண்டும்;
பொய்யனை மெய்யால் வெல்லவேண்டும்.

(3)

222. சத்தியமே பேசு, வெகுளிக்குப் பணியவேண்டாம், யாசிப்பவர்க்கு இயன்றதைக் கொடு-இந்தமூன்று வழிகளாலும் ஒருவன் தேவர்களுடைய சந்நிதியை நிச்சயம் அடையலாம். (4)

228.முனிவர்கள் அஹிம்சையோடு இருப்பவர்கள், எப்போதும் உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். அவர்கள் நிலையான இடத்தை அடைவார்கள்; அடைந்த பின்பு அவர்கள் வருந்துவதில்லை. (5)

224. எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், அல்லும் பகலும் படித்தறிந்தவர்கள்; நிருவாண நாட்டத்திலேயிருப்பவர்கள்-அவர்களுடைய ஆஸ்வங்கள் அற்றொழியும். (6)

225. ‘மெளனமாயிருப்பவனையும் நிந்திக்கிறார்கள்; அதிகம் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்! மிதமாய்ப் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்-'ஒ அதுலா!'[1] இது இன்று தோன்றியதன்று; இது ஒரு பழங்காலத்து மொழி. நிந்திக்கப்படாதார் எவருமே உலகில் இல்லை. (7)

226. முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும் புகழப் பட்டவனும் ஒருகாலும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை, இப்போதுமில்லை. (8)

227. விவரம் தெரிந்த பெரியோர் நாள்தோறும் கவனித்து வந்து எவனைக் குற்றமற்றவன், மேதாவி என்றும், தியானமும் சீலமும் நிரம்பியவன் என்றும் புகழ்கிறார்களோ, அவனை- (9).

228. சாம்பூநதப் [2] பொன்னாற் செய்த நாணயம் போன்ற அவனை-நிந்திக்கக்கூடிய தகுதியுடையவர் யார்? தேவர்களே அவனைப் புகழ்கின்றனர்; பிரம்மாவாலும் அவன் புகழப்படுகிறான். (10)

229. உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்கவும், உடலை அடக்கி வைக்கப் பழகவேண்டும். தீய ஒழுக்கத்தை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (11) 230. வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக்காக்கவும், நா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (12)

231. மனத்தில் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். மன அடக்கத்தில் பழக வேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணி வரவும். (13)

232. உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையான நல்லடக்க முள்ளவர்கள். (14)

  1. அதுலன் ஒரு-சீடனின் பெயர்
  2. சாம்பூநதம்-நால்வகைப்பொன்னிலே சிறந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/கோத_வக்கம்&oldid=1381687" இலிருந்து மீள்விக்கப்பட்டது