தம்ம பதம்/பகிண்ணக வக்கம்

விக்கிமூலம் இலிருந்து

இயல் இருபத்தொன்று

பலவகை

288. அற்ப சுகத்தை இழப்பதால் பெரிய இன்பத்தைக் காணலாம் எனின், ஞானி அற்ப சுகத்தைக் கைவிட்டுப் பெரிய இன்பத்தை நாடுவானாக. (1)

289. பிறரைத் துன்புறுத்தித் தான் இன்பமடைய விரும்புவோன், துவேஷத் தளைகளில் சிக்குண்டு, துவேஷத்திலிருந்து விடுபடுவதில்லை. (2)

290. செய்யத் தக்கதைக் கைவிட்டு, தகாததைச் செய்தால் கட்டுக்கடங்காத அத்தகைய கருத்தற்றவர்களின் ஆஸவங்கள் வளர்ந்துகொண்டேயிருக்கும். (3)

291. எவர்கள் உடலின் இயல்பை உணர்ந்து மனத்தில் எப்போதும் கவனமாயிருந்து, செய்யத் தகாதவைகளை விலக்கி, செய்யத் தக்கவைகளையே செய்து வருகிறார்களோ, அத்தகைய கருத்துடைய அறிவாளரின் ஆஸவங்கள் அழிந்தொழிகின்றன. (4)

292. உண்மையான பிராமணன் ஒருவன், தன் தாயையும், தந்தையையும், கூத்திரிய மன்னர் இருவரையும் கொன்றிருந்த போதிலும், குடிகளோடு ஒர் இராஜ்யத்தையே அழித்திருந்த போதிலும், அவன் பாவமற்றவனாவான்.[1] (5) 293. உண்மையான பிராமணன் ஒருவன் தன் தாயையும் தந்தையையும், குருமார்களாகிய கூடித்திரிய மன்னர் இருவரையும், ஐந்தாவதாக ஒரு வேதியனையும் கொன்றிருந்த போதிலும், அவன் பாவ மற்றவனாவான். (6)

294. கெளதமருடைய [2] சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் புத்தரைப் பற்றியவையே. (7)

295. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் பெளத்த தருமத்தைப் பற்றிவையே. (8) 296. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் பெளத்த சங்கத்தைப் பற்றியவையே. (9)

297. கெளதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள், இரவும் பகலும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் உடலின் தன்மையைப் பற்றியவையே. (10)

298. கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அ வர்கள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித்திருக்கும். (11)

299. கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்கள் மனம் தியானத்திலேயே திளைத்திருக்கும். (12)

300. உலக வாழ்வை விட்டுத் துறவியாதல் கஷ்டம்; அவ்வாழ்வை அநுவிப்பதும் கஷ்டம். இல்லறந்தானாக வீட்டிலிருந்து வாழ்வதும் கஷ்டம். ஆதலால் எவனும் நாடோடியாகத் திரிய வேண்டாம் , எவனும் துன்பத்தில் விழவும்வேண்டாம். (13)

301. சிரத்தையும், குணமும், புகழும், செல்வமும் பொருந்தியவன் எந்தெந்த இடத்தில் தங்கி யிருந்தாலும் அங்கங்கே போற்றப்படுகிறான். (14)

302. நல்லோர் , இமய மலையைப்போல், நெடுந்துாரத் திலிருந்தே பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் இரவின் இருளூடு எய்த அம்புகளைப்போல் கண்ணுக்கே புலனாவதில்லை. (15)

303. ஒருவன் தனியே அமர்ந்து, தனியே உறங்கி, தனியே வாழ்ந்து, மடிமையை ஒழித்துத் தானே தன்னை அடக்கி வைத்துக்கொண்டால், ஆசைகளற்ற நிலையில் அவன் இன்பம் பெறுவான். (16)

  1. உண்மையான பிராமணன் இத்தகைய பாவம் எதையும் செய்ய மாட்டான் என்பது கருத்து, இவ்வாறே அடுத்த சூத்திரத்தையும் கொள்ள வேண்டும். புத்தபகவர், தம் காலத்தில் வழங்கிய கதைகள், புராணங்கள். சாஸ்திரங்களிலிருந்து சில சிறப்புப் பெயர்களையும், சொற்களையும், கதைகளையும் எடுத்துக் கையாள்வது உண்டு. ஆனால், அவருடைய கருத்துக்களில் வேற்றுமையிருக்கும். பிரம்மா, தேவர்கள், சுவர்க்கம், நரகம் முதலிய சொற்களை அவர் உபயோகித்திருக்கிறார். சாதாரண மக்களுக்குத் தம் கருத்துக்களை எளிதாகக் கூறுவதற்காகவே அவர் இவைகளைக் கையாண்டிருக்கிறார். உலகங்கள் யாவையும் படைத்த
  2. கெளதமர்-புத்தர்.