தாய்/27

விக்கிமூலம் இலிருந்து

27

அவள் வெளியே வந்தபோது, எங்குப் பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேக மயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும், ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புது நிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.

ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் போதித்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரை குறையாக விழுந்தாள்.

“அதோ, தலைவர்கள் போகிறார்கள்.”

“நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது.”

“நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்லவில்லையே.”

வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்;

“போலீஸார் அவர்களைப் பிடித்துக்கொண்டுபோய்விடுவார்கள், அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்”

“அவர்கள்தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே?”

ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது.

“நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார். நீ ஒன்றும் கல்யாணமாகாத தனிக்கட்டைப் பிரம்மச்சாரியில்லை”

அவர்கள் அந்த நொண்டி ஜோசிமல் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமல் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, காலை முறித்துக்கொண்டுவிட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்; தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குச் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம் தள்ளி வருபவன் அவன்.

“பாவெல்” என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டு கத்தினான் அவன். “அடே போக்கிரி! அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா. உனக்கு என்ன நேரப் போகிறது பார்!”

தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள், அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக்கொண்டான். அவள் வெகுவேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப் பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள். கொஞ்சம் கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.

பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள்கூட அவர்கள் காதில் விழவில்லை அவர்கள் அமைதியாகவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் அவர்களை பிரோனல் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திம வயது ஆசாமி, அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தான்.

“நீங்கள் கூட வேலைக்குப் போகவில்லையா, தனீலோ இவானவிச்?’ என்று கேட்டான் பாவெல்.

“இல்லை, என் மனைவிக்கு இது பிரசவ நேரம். மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே...” அவன் தனது தோழர்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டுத் தணிந்த குரலில் சொன்னான்:

“நீங்கள் இன்று தொழிற்சாலை மானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப் போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே. உண்மைதானா?” என்று கேட்டான்.

“நாங்கள் ஒன்றும் குடிகாரர்களில்லையே!” என்றான் பாவெல்.

“நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் செல்லத்தான் உத்தேசம்”என்றான் ஹஹோல். “நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்!”

“உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும்” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் மிரோனவ். “பிறகு நான்தான் எங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ! பெலகேயா நீலவ்னா! நீயுமா?’ என்று தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சத்தமிட்டான், “நீயும் இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?”

“சாவதற்கு முன்னால் நான் ஒரு முறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்லவேண்டும்!”

“அடிசக்கை! ஆனால், நீதான் தொழிற்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் கொண்டு வந்தாய் என்று அவர்கள் சொல்லிக்கொள்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.”

“யார் அப்படிச் சொன்னது?” என்று கேட்டான் பாவெல்.

“ஹூம். அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். சரி, நான் வருகிறேன். நீங்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள்.”

தாய் அமைதியோடு புன்னகை புரிந்தாள். அவர்கள் தன்னைப்பற்றி, அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்பதற்கு அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.

“நீயும் கூடச் சிறைக்குப் போவாய், அம்மா!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பாவெல்.

சூரியன் மேலெழுந்தது. வசந்த பருவத்தின் புதுமையிலே தனது கதகதப்பைப் பொழியத் தொடங்கியது. மேகங்கள் கலைந்து போய்விட்டன. அவற்றின் நிழல்கள் தெளிவற்று உலைந்து போய்விட்டன. மேகங்கள் தெருவுக்கு மேலாக மெதுவாக நகர்ந்து. வீட்டுக் கூரைகள் மீதும், மனிதர்கள் மீதும் தவழ்ந்து. அந்தக் குடியிருப்பு முழுவதையுமே தூசி, தும்பு இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்துவது போலவும், மக்களது முகங்களில் காணப்பட்ட சோர்வையும் களைப்பையும் நீக்கிக் களைத்துவிடுவது போலவும் தோன்றியது. எல்லாமே ஒரே குதூகலமயமாய்த் தோன்றியது. குரல்கள் பலத்து ஒலித்தன. ஆலையின் யந்திர ஒலத்தை மக்கள் ஆரவாரக் குரல்கள் அமுங்கடித்து விழுங்கிவிட்டன.

மீண்டும் ஜன்னல்களிலிருந்தும் வாயிற் புறங்களிலிருந்தும் ஜனங்கள் பேசிக்கொள்ளும் பல்வேறு பேச்சுக்கள் தாயின் காதில் விழத்தொடங்கின. அந்தப் பேச்சுக்களில் சில விஷம் தோய்ந்ததாகவும், பயமுறுத்துவதாயும் இருந்தன. சில உற்சாகமும் சிந்தனையும் நிறைந்து ஒலித்தன, ஆனால் இந்தத் தடவை அவளுக்கு அந்தப் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டும் போக முடியவில்லை, அந்தந்தப் பேச்சுக்குத் தக்கவாறு எதிருரை கூறவும். விளக்கவும், வந்தனம் கூறவும் விரும்பினாள் அவள். பொதுவாக அன்றைய தினத்தின் பல்வேறான வாழ்க்கை அம்சங்களிலேயும் அவள் - பங்கெடுத்துக்கொள்ள விரும்பினாள்.

ஒரு சின்னச்சந்து திரும்பும் மூலையில் சுமார் நூறு பேர்கள் கூடி நின்றார்கள். அவர்களுக்கு மத்தியிலிருந்து நிகலாய் வெஸோவ்ஷிகோவின் குரல் உரத்து ஒங்கி ஒலித்தது.

“அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல், நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்” என்று சொன்னான் அவன். அவனது வார்த்தைகள் ஜனங்களது மூளையை முரட்டுத்தனமாகத் தாக்கின.

“அது சரிதான். ஆமாம்!” என்று பல்வேறு குரல்கள் ஒரே கமயத்தில் ஒலித்தன.

“இந்தப் பயல் ஏதோ தன்னாலான மட்டும் முயல்கிறான். இரு. நான் போய் அவனுக்கு உதவுகிறேன்!” என்று சொன்னான் ஹஹோல்

பாவெல் அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அவன் தனது நெடிய மெலிந்த உடலோடு, ஒரு கார்க்கைத் திருகித் துளைத்துச் செல்லும் திறப்பான்போல, அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்.


செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான். “தோழர்களே! உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டுதான்—ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கன்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம்; மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம்! ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை உடுத்தலாம்; வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரஞ்சுக்காரராகட்டும், ஜெர்மானியராகட்டும். ஆங்கிலேயராகட்டும்—அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால், அவர்களை அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள் என்பதை, அவர்கள்தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!”

கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது.

“ஆனால், அதே சமயத்தில் — தாத்தாரியனானாலும், பிரஞ்சுக்காரனானாலும் அல்லது துருக்கியனானாலும் எந்த நாட்டுத் தொழிலாளியானாலும் சரி அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ருஷியாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கிறார்களோ, அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.”

அந்தச் சந்துப் பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும் குதிக்காலால் எழும்பி நின்றுகொண்டும் ஒருவார்த்தை கூடப் பேசாது அவன் பேசுவதைக் கேட்டார்கள்.

அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்:

“வெளி நாடுகளிலுள்ள தொழிலாள மக்கள் இச்சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்துகொண்டுவிட்டார்கள், இன்று, இந்த மே மாதப் பிறப்பன்று...”

“போலீல்!” என்று யாரோ கத்தினார்கள்.

நாலு குதிரைப் போலீஸ்காரர்கள் அந்தச் சந்துக்கள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள்.

‘கலைந்து போங்கள்!’

மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டுவிட்டார்கள்.

“அடேடே! குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாருடோய்! ‘வீராதி வீரருக்கு வழிவிடு’ என்று இவை கத்துவதைக் கேளுடோய்!” என்று எவனோ உரத்துக் கத்தினான்.

ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்று கொண்டிருந்தான். இரண்டு குதிரைகள் அவன் பக்கமாக தலையை அசைத்தாட்டிக்கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்த சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றி பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.

“நீ பாவெல் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய், ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக. எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்” என்று முணுமுணுத்தாள் அவள்.

“ஆயிரம் தடவை மன்னிப்புப் போதுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.

ஒரு கனமான, பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆபாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி. அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று. மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத் தவித்தாள் அவள்.

அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள். கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக்கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக்கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்திலிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள்; வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் கும்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.

“மீத்யா!” என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. “உன்னைக் கவனித்துக்கொள்!”

‘என்னைப் பற்றிக் கவலைப்படாதே’ என்று ஒலித்தது பதில்.

சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது.

“இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக்கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு. துணிச்சல் உண்டு, சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள்தான்! அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள். அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள்; ஆனால் அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும்தான்.”

ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு, ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். ஒரு கணநேரம் எல்லோரும் வாய்மூடி கம்பென்று இருந்தார்கள். எல்லோரும் விழிப்போடு நின்றார்கள். பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.

“தோழர்களே!’ பாவெலின் செழுமையான மணிக்குரல் கணீரென ஒலித்தது. தாயின் கண்களில் கதகதப்பான நீர்த்திரை உறுத்துவது போலிருந்தது. அவன் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்றுகொண்டாள். எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள்; காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத் தூளைப் போல எல்லோரும் அவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டார்கள்.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். தைரியமும் கர்வமும் கனன்று பிரகாசிக்கும் அவனது கண்களை மட்டுமே கவனித்துப் பார்த்தாள்.

“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம்; இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை—அறிவு, நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்”

திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம். வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது: ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!

பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன, அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக்கொண்டிருந்தது.

“தொழிலாளர் வர்க்கம். நீடூழி வாழ்க!” என்று கோஷித்தான் பாவெல்.

நூற்றுக் கணக்கான குரல்கள் அந்த கோஷத்தை எதிரொலித்தன.

“சோஷல்—டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க! இதுதான் நமது கட்சி, தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று!”

ஜனக்கூட்டம் பொங்கியது: அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். எனவே மாசின், சமோய்லவ், கூ ஸெவ் சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்றுகொண்டார்கள். நிகலாய் தன் தலையைக் குனிந்து, கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக்கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.”

“உலக தொழிலாளிகள் நீடூழி வாழ்க!” என்று கோஷித்தான் பாவெல்.

உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோஷம் எதிரொலித்து விம்மியது.

தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கண்ணீர் முட்டித் ததும்பத் தொண்டை அடைத்துத் திணறினாள் அவள்: எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுநடுங்கின, துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

“என் அருமைப் பிள்ளைகளே...”

நிகலாவின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது. கொடியைப் பார்த்தவாறே அவன் எதோ முணுமுணுத்துக் கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்.

“தோழர்களே!” என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக் கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய்; “தோழர்களே! இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால், சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி லட்சியம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்கவிருக்கும் முள் கிரீடமோ [1] கையெட்டுத் தூரத்தில்தான் இருக்கிறது. சத்தியத்தின் வெற்றியில், உண்மையின் வெற்றியில் எவருக்கேனும் நம்பிக்கை குறைவாயிருந்தால், இந்தச் சத்தியத்துக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய எவருக்கேனும் தைரியம் அற்றிருந்தால், தன்னுடைய சுய பலத்திலேயே எவருக்கேனும் அவநம்பிக்கையிருந்தால், துன்பத்தைக் கண்டு எவரேனும் அஞ்சினால், தயை செய்து அவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி நிற்கட்டும். நமது வெற்றியிலே நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நாம் கேட்டுக் கொள்கிறோம். அறைகூவல் விடுக்கிறோம். எங்களது லட்சியத்தைக் காண முடியாதவர்களுக்கு எங்களோடு அணிவகுத்து முன்னேறுவதற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் துயரம்தான் காத்து நிற்கும். எங்களது அணி வகுப்பில் சேருங்கள். தோழர்களே! சுதந்திர மக்களின் விழா நாள் நீடூழி வாழ்க! மே தினம் நீடூழி வாழ்க!”

கூட்டம் மேலும் அதிகரித்துக் குழுமியது. பாவெல் கொடியைத் தூக்கிப் பிடித்தான். அவன் அதை உயரத் தூக்கியவாறு முன்னேறிச் சென்ற போது அந்தக் கொடியில் சூரிய ஒளிபட்டுப் பிரகாசித்தது: அந்தக் கொடி உவகையும் ஒளியும் நிறைந்து புன்னகை செய்தது.

பியோதர் மாசின் பாட ஆரம்பித்தான்;
போதும், போதும்! நேற்றையுலகின்
பொய்மை தன்னைப் போக்கவே....

பல்வேறு குரல்கள் அவனோடு சேர்ந்து, அந்தப் பாட்டின் அடுத்த அடியைப் பாடின;

பாத மண்ணை உதறித் தள்ளிப்
படையில் சேர வருகுவீர்!

தாய் மாசினுக்குப் பின்னால் நடந்து வந்தாள். அவளது உதடுகளில் உவகை நிறைந்த புன்னகை பளிச்சிட்டது. அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் தன் மகனின் தலையையும், கொடியையும் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறிட்டுப் பார்த்தாள். அவளைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களும் பிரகாசமான கண்களுமே தெரிந்தன: அந்த முகங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் அவளது மகன் பாவெலும் அந்திரேயும் முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பாடிக்கொண்டே செல்வதை அவளால் கேட்க முடிந்தது. அந்திரேயின் இனிமையான குரல் பாவெலது கனத்த குரலோடு கலந்து கொண்டிருந்தது;

பட்டினியும் பசியுமாகப்
      பாடுபடும் தோழர்காள்!
துயில் கலைந்து அணியில் சேர
      விரைந்து வாரும் தோழர்காள்!

மக்கள் அந்தச் செங்கொடியை நோக்கி விரைந்தோடி வந்தார்கள், ஓடி வரும்போதே அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள், பின்னர் அவர்களும் அந்தப் பாட்டை உரத்தக் குரலில் பாட ஆரம்பித்தார்கள், எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல் பாடிவந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவிதத் தங்குத் தடையுமற்று, பிரம்மாண்டமான அசுர வேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது, கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப் பாதை எவ்வளவு கரடுமுரடான பாதையென்பதையும், அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலின் நிதானமான செந்தழல் உறுத்து ஒபாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்துபோன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனத்திலே ஊடாடும் புதியதின் பயபீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பொசுக்கித் தள்ளியது.

பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப் பார்த்தது. பிறகு நடுநடுங்கி உடைத்துப்போன குரலில் கேட்டது:

“மீத்யா! நீ எங்கே போகிறாய்?”

‘அவன் போகட்டும்” என்று சொன்னாள் தாய், “நீ அவனைப்பற்றிக் கவலைப்படாதே. நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால், கொடியைப் பிடித்துக்கொண்டு போகிறான் பார். அவன்தான் என் மகன்!”

“ஏ. முட்டாள்களே! எங்கேயடா போகிறீர்கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா!”

நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண்பிள்ளை தாயின் கரத்தைத் தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டாள்,

“ஆஹா! அவர்கள் பாடுவதைக் கேளம்மா. என் மகனும் கூடப் பாடுகிறான்!

“நீ ஒன்றும் பயப்படாதே” என்று சொன்னாள் தாய்; “இது ஒரு புனிதமான காரியம். நினைத்துப்பார், - கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிருஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

இந்த எண்ணம் அவள் மனத்தில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த எண்ணத்தில் பொதித்திருந்த தெளிவான, எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமாம். கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால் கிறிஸ்துவே, இருந்திருக்கமாட்டார்!” என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.

சிஸோவ் அவள் பக்கமாக வந்தான்.

“இன்று பகிரங்கமாகவே புறப்பட்டுவிட்டீர்களா?” என்று சொல்லிக்கொண்டே அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சத்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக்கொண்டான், “பாட்டா பாடுகிறார்கள்! ஆஹா, இது எவ்வளவு அருமையான பாட்டு, அம்மா!”

பேரணியில் சேர, வீரர்
ஜாரரசன் கேட்கிறான்:
ஜாரரசன் போர் நடத்தத்
தாரும் உங்கள் மக்களை!

“இவர்களுக்குக் கொஞ்சம்கூடப் பயமில்லையே!” என்றான் சிஸோவ்; “செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்....”

தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. எனவே அவள் வேகமாகச் சொல்ல முடியாமல் பின்தங்கிவிட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித்தள்ளி. ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது. அவளைக் கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அதைக் கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக; அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும் விழித்தெழுந்து போருக்குக் கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் அந்த எக்காள முழக்கம் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும் புதுமையையும் ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது. போலவும் தோன்றியது. ஒரு பக்கத்தில் அந்த, நாதம் சிலர் மனத்தில் தைரியமற்ற நம்பிக்கைகளுக்கு இடம்கொடுத்தது. சிலர் மனத்தில், அவர்களது உள்ளத்தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்து விட்டுக்கொண்டிருந்தது.

காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதோ அவர்கள் போகிறார்கள்!” என்று யாரோ தன்னை மறந்த வெறிக்குரலில் கத்தினான். “தம்பிகளா! நீங்கள் அழகாயிருக்கிறீர்களாடா!’

அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத எதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது. எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக்கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகப்பாம்பைப் போல், இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத உணர்ச்சி புஸ்ஸென்று சீறி விஷ வார்த்தைகளைக் கக்கிற்று.

“மதத் துரோகிகள்!” என்று ஒரு வீட்டு ஜன்னலிலிருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்ட்டான்.

“சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்பவதா? கலகம் செய்வதா?” என்று கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.

ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும்போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல் மேலும் மேலும் பொங்கி வந்தது. அந்தப் பாட்டினால்-தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் துடைத்துத் தூர்த்து, தனது மகத்தான சக்தியினால், நான் செல்லும் பாதையைத் தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப் பாட்டினால்—ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

தூரத்திலே தலைக்குமேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது. தன் மனக்கண் முன்னால் தன் மகனது முகத்தையும்—அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையும் ஒளியாகப் பிரகாசமுற்ற அவனது கண்களும் அவளது மனக்கண்ணில் தோன்றின.

கூட்டம் முழுவதும் அவளைக் கடந்து முன்னேறிச்சென்ற பின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள்; அவர்கள் அவசரம் ஏதுமின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள். அந்த அணி வகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப்பற்றித் தெரிந்து கொண்டவர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருகத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் ஏதேதோ விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக்கொண்டார்கள்:

“பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம். தங்கியிருக்கிறது. இன்னொரு பட்டாளம் தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக்கிறது!”

“கவர்னர் வந்துவிட்டார்.”

“அப்படியா?”

“அவரை என் கண்ணாலேயே பார்த்தேன். இப்போதுதான் வந்தார்.”

“அவர்கள் நம்மைக் கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். யோசித்துப் பார். இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?” என்று ஒருவன் சொன்னான். சொல்லிவிட்டு உற்சாகத்தோடு ஏதோ வன்மம் கூறிக்கொண்டான்.

“அருமைப் பிள்ளைகளா!” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

ஆனால் அவள் கேட்ட வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப்ட3வைபோல் இருந்தன. எனவே அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப்போவதற்காக நடையை எட்டிப்போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.

திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதிகேவமாக மோதிக்கொண்டது போலத் தோன்றியது. அந்த அணிவகுப்பு முழுவதுமே திடுக்கிட்டுப் பின்னடித்தது: பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல் லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது. இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்குவதற்காக, சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப் பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப் பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள், அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல் மட்டும் கேட்டது;

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்...
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஆனால் இந்தப் பொது முழக்கத்தில் ஒத்துழைப்பும் இல்லை உறுதி பெற்று நம்பிக்கையும் இல்லை. ஏற்கெனவே அவர்களது குரல்களில் பயபீதி புரையோடிவிட்டது.

முன்புறத்தை தாயினால் பார்க்க முடியாததாலும் என்ன நேர்ந்துவிட்டது என்பதை அறிய முடியாததாலும் அவள் அந்தக் கூட்டத்தினரை முட்டித் தள்ளிக்கொண்டு, கூட்டத்தினூடே, புகுந்து முன்னே செல்ல முனைந்தாள். அவள் முன்னேற முன்னேற ஜனக்கூட்டம் அவளைப் பின்னடித்துத் தள்ளியது. அவர்களில் சிலர் முகத்தைச் சுழித்தார்கள், சிலர் தங்கள் தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். சிலர் அசட்டுத்தனமாய்ப் புன்னகை செய்தார்கள்: இன்னும் சிலர் கேலியாகச் சீட்டியடித்துக்கொண்டிருந்தார்கள். அவள் அவர்களது முகங்களைப் பார்த்தாள். அவளது கண்கள், வினாத் தொடுத்தன, வேண்டுதல் செய்தன. அழைப்பு விடுத்தன.

“தோழர்களே!” பாலெலின் குரல் கேட்டது. “ராணுவ வீரர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான்! அவர்கள் தம்மைத் தொடமாட்டார்கள்! அவர்கள் எதற்காக நம்மைத் தொடவேண்டும். எல்லோருக்கும் பயன்பெறக்கூடிய உண்மையை நாம் எடுத்துக் கூறுவதற்காகவா? அந்த உண்மை நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அவர்களுக்கும் தேவை. அந்தத் தேவையை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து. அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை. அவர்கள் இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது முன்னணியை விடாது முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். தோழர்களே! முன்னேற வேண்டும்!’

பாவெலின் குரல் உறுதி நிறைந்து ஒலித்தது. அவனது சொற்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் ஒலித்தன. எனினும், கூட்டம் கலைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து, வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊர்வலம் கூரிய மூக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத் தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான்; அவனுக்கு மேலாக, தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப்பற்றி வேறொரு உவமை கூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது. அந்தக் கூட்டம், அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்.

குறிப்பு[தொகு]

  1. கிறிஸ்துவுக்கு முள் கீரிடம் சூட்டப்பட்டது. இங்கு உவமையாகக் கையாளப்படுகிறது - மொ-ர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/27&oldid=1293102" இலிருந்து மீள்விக்கப்பட்டது