தாவிப் பாயும் தங்கக் குதிரை/12

விக்கிமூலம் இலிருந்து



மூன்று அருஞ்செயல்கள்

தங்கக் குதிரை தன் நாட்டை விட்டுப் போய்விடாது என்ற உறுதி அரசனுக்கிருந்தது. அப்படியானால், அந்த அருஞ்செயல்கள் மிகக் கடுமையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார்கள் மற்ற வீரர்கள். ஆனால் வெற்றிவேலன் அயர்ந்து விடவில்லை.

“அரசே, அந்த அருஞ்செயல்கள் என்ன என்று கூறுவீர்களா?” என்று கேட்டான்.

“சொல்கிறேன் கேள்” என்று கூறத் தொடங்கினான் அரசன்.

“என்னிடம் யாருக்கும் அடங்காத இரண்டு பெரிய எருதுகள் இருக்கின்றன. அவை மூச்சு விடும்போது நெருப்பு வெளிப்படும். நெருப்பு மூச்சுவிடும் அந்த இரண்டு எருதுகளையும் அடக்கி நுகத்தடியில் மாட்டி நான்கு காணிநிலத்தையும் உழுது தர வேண்டும்.

“இரண்டாவதாக, உழுது முடித்த அந்த நிலத்தில் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் சிலவற்றை விதையாக நடவேண்டும். நட்டவுடனே நிலத்திலிருந்து முளைத்தெழும்பும் மாய வீரர்களைப் போரிட்டு கொல்ல வேண்டும்.

“கடைசியாக, தங்கக் குதிரையின் அருகில் இருந்து இரவும் பகலும் தூங்காமல் காவல் புரியும் வேதாளத்தைக் கொன்று வீழ்த்தவேண்டும். இந்த அருஞ்செயல்களைச் செய்து முடித்தால் அந்தத் தங்கக் குதிரையை நீ அடைவதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று சொல்லி முடித்தார் அரசர்.

“எப்படியும் நான் இந்த அருஞ்செயல்களை முடிப்பேன்” என்று உறுதி மொழிந்து விட்டு வெளியேறினான் வெற்றிவேலன்.

அரச சபையில்தான் அவன் உறுதி கூறினானே தவிர, அவன் உள்ளத்திற்குள் ஒரு தளர்ச்சி ஏற்படத்தான் செய்திருந்தது. இல்லாத தெய்வங்களை யெல்லாம் வேண்டிக் கொண்டு தன் கப்பலுக்குத் திரும்பினான். அங்கே அவனுக்கு ஓர் உதவி காத்துக் கொண்டிருந்தது.

இளவரசி மேகமாலைதான் அங்கே காத்துக் கொண்டிருந்தாள். அவள் சில மாய மருந்துகள் கொடுத்தாள். அவை கையில் இருந்தால் கத்தியும் நெருப்பும் அவனை ஒன்றும் செய்ய முடியாதென்று கூறினாள். அந்தக் கொடிய எருதுகளை எப்படி அடக்க வேண்டும் என்றும், பாம்பு விதையிலிருந்து கிளம்பும் வீரர்களை எப்படி யழிக்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டு அவள் போய்விட்டாள். அவள் சென்றபிறகு வெற்றிவேலன் தன் மரக்கலத்திற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டான்.

மறுநாள் கலையில் குறிப்பிட்ட நான்கு காணி நிலத்தையும் சுற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். சாவைச் சந்திக்க வந்திருக்கும் வெளிநாட்டு வீரனைச் சந்திக்கக் காத்திருந்தார்கள். ஓர் உயர்ந்த மேடையின் மீது அரசனும் மகள் மேகமாலையும் மகன் கார்வண்ணனும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தாாகள்.

நிலத்தின் மத்தியில் அந்தப் பயங்கர எருதுகள் பலமான கயிறுகளால் கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தன அவற்றின் மூக்கிலிருந்து நெருப்பு குப்குப்பென்று வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த எருதுகளிடம் அகப்பட்டு மடிய எங்கிருந்தோ வந்திருக்கிறானே இந்த வெற்றிவேலன் என்று மக்கள் அவனுக்காக இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மேகமாலை ஒருத்தியைத் தவிர எல்லோரும் அவன் இறுதிக் காலம் வந்துவிட்டதென்றே எண்ணிக் கொண்டிருந்தார்கள்.