தாவிப் பாயும் தங்கக் குதிரை/14

விக்கிமூலம் இலிருந்து



மாய வீரர்கள்

அடுத்த நாள் பொழுது விடிந்தது. ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த நான்கு காணி நிலத்தையும் சுற்றிக் கூடி நின்றார்கள். முதல் நாள் நினைத்ததுபோல் மக்கள் அன்று நினைக்கவில்லை. முதல்நாள் வெற்றிவேலன் சாகப் போகிறான் என்று நினைத்தார்கள். அன்றோ அவன் எப்படி வெல்லப் போகிறான் என்று காணவேண்டும் என்ற ஆவலோடு நின்றார்கள். அவன் வெற்றி பெறவேண்டும் என்று அவர்களின் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருந்தன.

அரசர் தன் மகளுடனும் மகனுடனும் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். சிறிது நேரத்தில் வெற்றிவேலனும் தன்னைச் சுற்றி ஐம்பது வீரர்கள் புடைசூழ்ந்துவர வந்து சேர்ந்தான். அவன் களத்திற்குள் நுழைந்தவுடனேயே அரண்மனை ஆட்கள் ஒரு கூடையைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அந்தக்கூடை நிறையப் பறக்கும் மாயப் பாம்புகளின் பற்கள் நிறைந்திருந்தன.

கூடையைக் கையில் வாங்கிய வெற்றிவேலன் அந்த மாயப் பற்ளை அந்த நான்கு காணி நிலத்திலும் ஒவ்வொன்றாக நட்டு விதைத்தான். எல்லாப் பற்களையும் அவன் நட்டு முடித்தவுடன் திடீரென்று அந்த நிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தோன்றினார்கள். மண்ணுக்குள்ளிருந்து தோன்றிய அந்த மாய வீரர்கள் அனைவரும் வெற்றி வேலனை நோக்கி ஓடிவந்தார்கள்.

வெற்றிவேலன் பெரிய பெரிய கற்களை எடுத்து அவர்கள் மீது வீசினான். அவன் ஓரிடத்தில் நில்லாமல் சுற்றிச் சுற்றி வந்து அவர்கள் மீது கற்களை வீசினான்.

அந்த மாய வீரர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. எதிரில் வருபவர்கள்தான் தங்கள் மீது கல்லை எறிகிறார்கள் என்று ஒவ்வொரு வரும் நினைத்துக் கொண்டார்கள். எனவே எதிரெதிராக வந்த வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொன்று கொண்டு செத்தொழிந்தார்கள்.

வெற்றிவேலனின் அறிவுத் திறமையினால் ஏற்பட்ட வெற்றியைக் கண்டு மக்கள் ஆரவாரித்தார்கள்.