திருக்குறளில் செயல்திறன்/பக்கம் 28-29

விக்கிமூலம் இலிருந்து

வெற்றிபெற வழி வகைகள்

மக்களாய் பிறந்தவர்கள் செயல்திறனைப் பெறுவதற்கு உரிய வழிவகைகளையும் குறள் கூறுகிறது. அது ஒரு நல்ல காரியத்தைச் செய்து வெற்றிபெறும் ஆற்றலைப் பெறவேண்டுமானால் பொருள், கருவி, காலம், வினை இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமற எண்ணிச் செய்தல்வேண்டும் என்பது. ஆகவே நீயும் அழியும் பொருளையும், ஆகும் பொருளையும், உன் கருவியையும், மாற்றான் கருவியையும், உனக்காகும் காலத்தையும், பிறர்க்கு ஆகும் காலத்தையும், உன் வலிமையையும், எதிரி வவிமையையும், நீ வெல்லும் இடத்தையும், எதிரி வெல்லும் இடத்தையும் எண்ணிப் பார்த்துச் செய். அவ்வாறு செய்தால் நீ வெற்றி பெறும் ஆற்றலை எளிதில் பெற்றுவிடுவாய்.

       பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
       இருள் தீர எண்ணிச் செயல். (675)

வேண்டியது என்ன?

செயல் திறனுக்கு வேண்டியது என்ன என்பதையும் குறள் கூறுகிறது. ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணை புரிவது அரசாங்கத்தின் உதவி அல்ல. நண்பர்களின் துணை அல்ல. உறவினர்களின் ஒத்துழைப்பு அல்ல, பணமும் அல்ல. வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது மனஉறுதியே என்று குறள் கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

        வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
        மற்றைய எல்லாம் பிற. (661)

இதுகாறும் கூறியவற்றால் திருவள்ளுவர் தமது திருக்குறளில் செயல் திறனைப்பற்றி எவ்வளவு அழகாக, ஆழமாக, விரிவாக, அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பது நன்கு விளங்கும்.

தம்பி, படித்தாயா? இன்னும் ஒருமுறை படி, நன்கு சிந்தித்து உணர். அந்த அளவோடு விட்டுவிடாதே. செயல்திறனைப் பெற்றுச் செய்யவேண்டியவைகளைச் செய்து சிறப்பெய்தி வாழ்.

என்ன பண்ணுகிறது, என்ன செய்கிறது?

என்ற சொற்களை நீ ஒருபோதும் சொல்லாதே. அவை ஒன்றும் பண்ணத் தெரியாதவர்களும், ஒன்றும் செய்யத் தெரியாதவர்களும் கூறுகிற சோம்பேறித்தனமான சொற்கள். அவர்களை வெறுத்து ஒதுக்கு; வெற்றிபெறு! நல்லதையே எண்ணு! நல்லதையே சொல்லு! நல்லதையே செய்! நல் வாழ்வு வாழ்வாய்!

                  வாழட்டும் தமிழகம்!

                வளரட்டும் செயல்திறன்!!