திருக்குறள் கட்டுரைகள்/உடையர் எனப்படுவது?

விக்கிமூலம் இலிருந்து
உடையர் எனப்படுவது...!

உடை-ஆடை, உடைமை-அணிகலன், உடையவர் -உடையவனாம் தன்மை என்றாகும். இதைப் பொருளின் மேல் ஏற்றிச் செல்வம் என்றும், அதனையுடையவர் செல்வர் என்று கூறுவதுண்டு.

வாழ்வுக்கு ஏற்றது பொருளுடைமை என்றும், அதுவும் தனியுடைமை நல்லதா? பொதுவுடைமை நல்லதா? என்றும் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். “வாழ்வுக்கு வேண்டியது பொருளே” அல்ல” என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது.

நாட்டுக்கு என்று சில உடைமைகளும், வீட்டுக்கு என்று சில உடைமைகளும் உள்ளனபோல, வாழ்வுக்கு என்று சில உடைமைகளும் உள்ளன என்று வள்ளுவர் கருதுகிறார். அவர் அவைகளைத் துருவித்தேடிக் கண்டுபிடித்து எடுத்து, முறைப்படுத்தி, வகைப்படுத்தி, தொகைப்படுத்தி நமக்குத் தந்துள்ளார். அவை அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாணுடைமை, பொறையுடைமை, பண்புடைமை என்பன. இவ்வுடைமைகளிற் பொருளுடைமை சேராமை காண்க. நிறைந்த செல்வத்தைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாழ்கின்ற வாழ்வு எதுவும் நல்வாழ்வாகாது என்பதும், மேற்கண்ட உடைமைகள் பத்தும் பெற்று வாழ்கின்ற வாழ்வே நல்வாழ்வு ஆகும் என்பதும் வள்ளுவரதுமுடிவு.

இவ்வுடைமைகள் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்துப் புள்ளிகள் வைத்தால், முழு மனிதப்பண்பு நூறு புள்ளி களாக முடியும். இதில் எந்த ஒன்று குறைந்தாலும் அவனுக்குப் பத்துப் புள்ளிகளைக் குறைத்து விடவேண்டியதுதான். ஒன்பது உடைமைகள் உள்ளவன் 90 புள்ளி உடைய மனிதன். ஐந்து உடைமைகள் உள்ளவன் ஐம்பது புள்ளி மனிதன். மூன்று உடைமைகளை உடையவன் முப்பது புள்ளி மனிதன். ஒரே உடைமை உள்ளவன் பத்துப்புள்ளி மனிதன். அதுவும் அற்றவன் மனிதனே அல்லன். அவன் வெறும் கூடு என்பது வள்ளுவரது கருத்து.

இப்பத்து உடைமைகளையும் பத்து அதிகாரங்களாக்கி ஒவ்வொன்றுக்கும் பத்துக் குறள்கள் வீதம் இவ்வுடைமைகளை ஆசிரியர் திருள்ளுவர் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். இதில் பண்புடைமையை நூறாவது அதிகரமாக வைத்திருப்பது வியப்பிற்குரியதொன்றாகும். இதிலிருந்து முழு மனிதன் பண்போடு வாழ்வான் என்று தெரிகிறது.

999 குறள்களைக் கூறி, 1000ம் என்ற எண்ணிக்கையிட்டுக் கூறியுள்ள குறள் ஒன்று மக்கள் உள்ளத்தையெல்லாம் ஊடுருவிப் பாய்வதுபோல் காணப்படுகிறது.

பால் உடலுக்கு நலம் தரும் ஒரு பொருள். இதில் மாறுபட்ட கருத்து எவருக்கும் இருக்கக் காரணமில்லை. என்றாலும் நல்ல பாலைக் கெட்ட பாத்திரத்தில் வைத்தால் என்ன ஆகும்? பண்பில்லாத மக்களிடத்தில் உள்ள செல்வம் கெட்ட பாத்திரத்தில் ஊற்றிய பாலைப்போல் திரிந்து கெடும் என்பது வள்ளுவர் கருத்து.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்யால்
கலந்தீமை யாற்றிரிங் தற்று

என்பதே அக்குறள் இக்குறளிற் பெருஞ்செல்வம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது, பெரும்பயன் விளைக்கும் திரண்ட செல்வத்தையே. பண்பில்லா மக்களிடத்துச் சேர்ந்துள்ள பெருஞ்செல்வமே கெடும் எனின், சிறு செல்வத்தைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை.

இக்குறளில் உள்ள “திரிந்த” என்ற ஒரு சொல், “பாலும் திரிந்து கெடும்; வாழ்வும் திரிந்து கெடும்” என்ற பொருளைக்குறித்து நிற்பதைக் கண்டுகளியுங்கள். இதிலிருந்து நலவாழ்வுக்கு வேண்டியது பொருள் அல்ல. பண்பு என்று நன்கு விளங்குகிறது.

இப்பத்து உடைமைகளிலும் சிறந்து உயர்ந்து நிற்பது ஊக்கமுடைமையேயாகும். இதனை,

உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று

என்பதனால் நன்கறியலாம்.

இது ஊக்கமுடைமையிற் கூறப்பெற்றுள்ள முதற் குறள் உடைமை என்பது ஊக்கமுடைமை என்பதும், உடையவர் எனப்படுபவர் ஊக்கமுடையவர் என்பதுவும் அஃதில்லாது வேறு எதை உடையவரும் உடையவராகார் என்பதும் இக்குறளின் கருத்து. நிறைந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் ஊக்கம் இல்லாதவருக்கு அதனைக் காக்கும் ஆற்றல் இராது. ஆதலின், அதனை அவர் இழந்துவிடுவர் என்பது குறிப்பு, இதனை,

உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

என்ற குறளால் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.

ஊக்கமுடைய மக்கள் தம்மிடத்து உள்ள பொருளை இழப்பினும் வருந்துவதில்லை. ஏனெனில், அவர் அதனை விரைவில் முயன்று பெற்றுவிடுவர்.

ஊக்கமுடையவன் செல்வத்தைத் தேடித்திரிய வேண்டியதில்லை. ஏனெனில், செல்வமானது ஊக்கமுடைய மக்களின் இருப்பிடத்தைத் தானே தேடிப் போய்ச் சேரும் தன்மை வாய்ந்தது.

குளத்தில் உள்ள நீர் உயர உயர, அதில் உள்ள கொடிப் பூக்களும் உயர்ந்து காணப்படுவதுபோல, மக்களின் ஊக்கம் உயர உயர, அவர்களது வாழ்வும் உயர்ந்து காணப்பெறும்.

தீமை தம்மை நெருங்கி வந்தாலும், அழிவு தம்மை அடைய வந்தாலும், துன்பம் தம்மைத் தாக்கவந்தாலும், ஊக்கமுள்ள மக்கள் ஒருபோதும் தளர்ச்சியடைவதில்லை. உடல் முழுவதும் அம்புகளால் தாக்கப்பட்ட போதிலும் கூட, யானையானது பெருமித நடைபோடுவதில் தவறுவதில்லை.

மக்கள் என்போர் ஊக்கமுடையவர் அஃதில்லாதவர் ‘மக்கள்’ ஆகார், மக்களுக்கும் மரப்பொம்மைகளுக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு ஊக்கம் உள்ளவர்க்கும் அற்றவர்க்கும் உண்டு.

ஊக்கமுள்ள மக்கள் நல்லதை, உயர்வை, பெரியதை எண்ணி, அவைகளை அடைய முயற்சிப்பர். ஒருக்கால் தோல்வி அடையினும், அவற்றைப் பெற மீண்டும் மீண்டும் முயற்சிப்பர்.

பகைவன் அதிக வலிமையுடையவனாயினும், மிகப் பெரியவனாயினும், ஊக்கமுள்ளவனைக் கண்டால் அஞ்சியே தீர்வான் அதிக வலிமையும் பெருமித நடையும் உள்ள யானையும், ஊக்கமுள்ள புவியின் தாக்குதலால் நிலை குலைந்துவிடும்.

“மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள்” என்று பெருமை கொள்ளும் சிறப்பு ஊக்கமில்லாதவர்க்கு இல்லை. இவை வள்ளுவரது கருத்துக்கள்,

உள்ளத்தில் ஊக்கமில்லாதவர்க்குச் சுற்றுப்புறச் சூழ்நிலை நன்கு அமைந்திருந்தாலும், வாய்ப்பும் வசதியும் மிகுந்திருந்தாலும் பயனில்லை. வாழ்வில் ஒளி தோன்ற வேண்டுமானால், உள்ளத்தில் ஊக்கம் தோன்றியாக வேண்டும்.

ஆகவே, எண்ணுங்கள். நன்றாக எண்ணுங்கள். நல்லதை எண்ணுங்கள். பெரியதை எண்ணுங்கள். ஊக்கத்தோடு எண்ணுங்கள். “ஏன்?” எனில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது பொய்யா மொழி. “எப்போது?” எனில் எண்ணியவர் திண்ணியராகும் போது தான்.

படியுங்கள் மற்றொருமுறை இக்குறளை.

உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று?

எப்படி இக்குறள்? பிற குறள்களையும் படியுங்கள். அவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை யெல்லாம் உங்கள் உள்ளத்தே பதித்து வையுங்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, செய்வதை ஊக்கத்தோடு செய்து, சிறப்பெய்தி வாழுங்கள்.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!