திருக்குறள் செய்திகள்/105

விக்கிமூலம் இலிருந்து

105. நல்குரவு

வறுமை மிகவும் கொடியது; அதனை விடக் கொடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இல்லாமை என்னும் இந்தப் பாவகாரணி இம்மையும் வரும்; மறுமையும் தொடர்ந்து வரும்.

குடிப் புகழையும் குடிப் பண்பையும் இந்த வறுமை கெடுத்துவிடும்.

நற்குடிப் பிறந்தவரையும் நலிவுறச் செய்வது வறுமை; அவர்தம் சொற்களில் உறுதி நிற்காது; சோர்வு ஏற்படும்.

வறுமைதான் துன்பங்களுக்குத் தாய். எல்லாத் துன்பங்களுக்கும் இதுவே தொடக்கம் என்று கூறுவர்.

நற்பொருளை நன்கு உணர்ந்து சொன்னாலும் அவன் சொற்பொருள் எடுபடாது.

அறம் சாராத வறுமையைத் தாயும் வெறுப்பாள்; அவனை அந்நியனாகக் கருதுவாள்.

நேற்று வந்த நெருப்புப் போன்ற வறுமை இன்றும் வந்து வாட்டுமோ என்ற கவலையை அஃது உண்டாக்குகிறது.

நெருப்பிலும் தூங்க முடியும்; அது வெறும் சதையைத் தான் எரிக்கும். இஃது அவன் கதையையே மாற்றிவிடும்.

வறுமை வந்த பிறகு வீடு எதற்கு? வாசல் எதற்கு? அனைத்தையும் விட்டுவிட்டுச் சந்நியாசியாகி விடுக. மற்றவர்கள் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வர். அனாதை இல்லத்தில் சேர்ப்பதற்குப் பிறர் அக்கறை காட்டுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/105&oldid=1106528" இலிருந்து மீள்விக்கப்பட்டது