திருக்குறள் செய்திகள்/112

விக்கிமூலம் இலிருந்து

112. நலம் புனைந்து உரைத்தல்
(காதல் வெறி தலைக்கேறுகிறது; தலைவன் கவிஞன் ஆகிவிடுகிறான். கற்பனை நயம் அமைய அவன் உரையாடல்கள் இயங்குகின்றன.)


“அனிச்ச மலர் மற்றைய எல்லாப் பூக்களையும் விட மெல்லிது என்று சொல்லி வந்தார்கள். அதனை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தேன்; என் தலைவியின் மேனி அதனைத் தொட்டேன்! துவண்டாள்; இவள் மேனி அனிச்ச மலரைவிட மெல்லிது என்று உணர்கிறேன்.”

“புதுப் பூ ஒன்று பூத்திருந்தது; அதனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். அஃது என் தலைவியின் பொலிவைப் பெற்றிருக்கிறதா? என்று ஆராய்வேன். இப்பொழுது பூஞ்சோலைக்குப் போவது புதுப் பழக்கம் ஆகிவிட்டது. வாழ்க்கையை நேசிக்கிறேன்; பூக்கள் என்னைக் கவர்கின்றன. பூவையின் அழகை அவை காட்டுகின்றன.”

“மாந்தளிர் போன்றது அவள் கரிய நிறத்து மேனி; முறுவல் வெண்முத்து; அவள் மேனியில் தோன்றும் மணம் பூக்களை நினைவுபடுத்துகின்றன. விழி வேல்; தோள் மூங்கில்."

“குவளை இவளைக் கண்டால் நாணி நிலம் நோக்கு கிறது; இவள் அழகிய கண்களுக்கு நிகராக மாட்டோம் என்று வெட்கப்பட்டு அது தலை சாய்க்கிறது.”

“அனிச்சப் பூவைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாள். எடை கூடி விட்டது. இடை சுமக்க முடியாமல் அவளை வருத்தியது.”

‘நட்சத்திரங்கள் தம் வானவெளியில் தம் தலைவனாகிய நிலவைத் தேடின. இவள் முக அழகைக் கண்டு திகைத்து நின்றுவிட்டன. முகம்நிலவு இவற்றிற்கு வேறுபாடே தெரியாமல் கலங்கி நின்றுவிட்டன. பின் அவற்றிற்குத் தெரிந்தது மதிக்கு மறு உண்டு; முகத்துக்கு மறு இல்லை என்பது; அதனால் தம் பதியாகிய நிலவினை அவை அடைந்தன.“

“மாதர் முகம்போல நிலவே நீ ஒளிவிட முயுமா? முடியாது. பேசாமல் ஒளிந்துகொள்; தலைகாட்டாதே. ஒளிவிட முடிந்தால் உன்னை நான் பாராட்டி வாழ்த்துவேன்.”

“மலர் போன்ற கண்ணை உடைய மங்கை நல்லாளின் முகம் போல நீ ஒளிவிட விரும்பினால் நீ பலர் காண வெளியே வராதே; உனக்குப் பாதுகாவல் இருக்காது. பேரழகி என் தலைவி, அவள் முகம் அழகுக்கு நீ ஒவ்வமாட்டாய்; பலர்காண நீ வெளிப்பட்டுத் தோல்வி அடையாதே.

“அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும் மிக மென்மை யானவை; எனினும் அவை என் தலைவியைப் பொறுத்த மட்டில் அவள் பாதங்களுக்கு நெருஞ்சிப் பழம்: முட்களையுடையது நெருஞ்சிப் பழம்.”

12

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/112&oldid=1107115" இலிருந்து மீள்விக்கப்பட்டது