திருக்குறள் செய்திகள்/24

விக்கிமூலம் இலிருந்து

24. புகழ்

புகழ் என்பதே ஈகையால் வருவது; அதுவே உயிர் வாழ்வுக்கு நன்மை தரும்.

பிறர் உன்னைப் புகழ்ந்து பேச வேண்டுமென்றால் அவர்கள் உன் செல்வத்தையோ சாதனைகளைப்பற்றியோ சிறப்பித்துப் பேசமாட்டார்கள். நீ பிறர்க்கு உதவுவதைத் தான் புகழ்ந்து பேசுவார்கள். புகழே கொடையால்தான் அமைகிறது.

முத்து ஈனும் நத்தை தான் அழிவதற்கோ சாவதற்கோ தயங்குவதில்லை; வித்தகர்களும் புகழுக்காகத் தம்மை அழித்துக் கொள்வதற்கு அஞ்சுவது இலலை; புகழுக்காக எதனையும் இழக்கத் துணிவர்.

இந்த உலகத்தில் நிலைத்து நிற்பது புகழ்தான்; மற்றவை மாறிவிடும்; சில மறைந்துவிடும்.

உன் புகழ் திக்கெட்டும் பரவட்டும்; அது வானவர் செவிக்கு எட்டும்; அவர்களும் உன்னைப் பாராட்டிப் புகழ்வர்.

உலகத்தில் பிறந்தால் புகழ்பட வாழ வேண்டும்; அஃது இல்லாமல் வாழ்வது வீண் சுமையாகும். மற்றும் எந்தத் தொழிலை மேற்கொண்டாலும் அதில் நீ சிறந்து விளங்கி நற்புகழைத் தேடவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பொறுப்பை ஏற்பதில் பொருள் இல்லை.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும்; அதனைத் தவற விட்டால் மறுபடியும் அது வாய்க்காது. புகழுக்குரிய செயல்களைச் செய்து நன்மை பெற முயல வேண்டும்: எதுவுமே செய்யாமல் மற்றவர்கள் தம்மைப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமையாகும்.

இசைபட வாழ முயல வேண்டும்; வசைபட வாழ்வது பயனற்றதாகும். நீ வாழ்ந்த பிறகும் உன்னைப்பற்றி வகையாகப் புகழும்படி வாழ வேண்டும்.

பாட்டுக்குப் பண் இனிமை கூட்டுவதுபோல் வாழ்வுக்குப் புகழ் உயர்வு சேர்க்கும். இசையற்ற வாழ்க்கை இனிமை பயக்காது.

பழி நீங்கி வாழ்பவரே வழியறிந்து வாழ்பவராவர்; புகழ்பட வாழ முயல்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/24&oldid=1106310" இலிருந்து மீள்விக்கப்பட்டது